Thursday, November 8, 2012

ஹெச்.ஜி.ரசூலுடன் ஓர் உரையாடல் : தாஜ்

தாஜ் : நான் முக்கியமெனக் கருதும் தமிழ்ப் படைப்பாளிகளில் தோழர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களும் ஒருவர். தன் சிந்தையில் உராயும் மதக் கூறுகளுடன் அவர் நிகழ்த்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன்பொருட்டு அவர் எதிர் கொள்ளும் இழப்புகள் சாதாரணமானதல்ல. சொந்த மதத்துக்காரர்களால் அவர் நேர்கொண்ட இன்னல்களில், நான் அதிகமாக அலைக்கழிக்கப்பட்டேன். 'சைத்தான்' என்ற சிறுகதையினை நான் எழுத அந்த அலைக்கழிப்புதான் பெரிய காரணம்.

இம்மாதம் (நவம்பர்) 2, 3, தேதிகளில் பேஸ்புக் வழியாக அவரோடு ஓர் உரையாடல் நிகழ்த்த வழி கிட்டியது. 'ஆயிரம் மசலாவின் அற்புதவாசல்' என்கிற ஆய்வு சார்ந்த பதிவொன்றை அத் தேதிகளில் அவர் பதிய, அதையொட்டி சில வினாக்களுக்கு விடைதேடும் முகமாக அவரோடு உரையாடினேன்.

அந்த உரையாடலில், குளைச்சல் மு. யூசூஃப், பிர்தவ்ஸ் ராஜகுமாரன், பென்னேஸ்வரன், கிரிதரன், ஃபைசல்கான் போன்ற நண்பர்களும் பங்கேற்றனர். அதன் முழு வடிவத்தையும் இப்போது உங்களின் பார்வையில் வைக்கிறேன். நன்றி.


***


ஆயிரம் மசலாவின் அற்புதவாசல்
ஹெச்.ஜி.ரசூல்

மஸ் அலா அரபு மூலச் சொல்லில் இருந்தே மசலா என்ற வழக்குச் சொல் உருவாகி உள்ளது. மஸ்-அலாத் என்பதற்கு வினா என்பது பொருளாகும். இஸ்லாம் தொடர்பான வினாக்களுக்கு விடை அளிக்கும் உரையாடல் இலக்கியமே மசலா இலக்கிய வகைமையாகும்.
நூறுமசலாவினைப் போன்றதொரு மசலாஇலக்கியத்தின் பெயர் ஆயிரம் மசலா என்பதாகும். இதன் காலம் கி.பி.1572. இந்நூலை எழுதியவர் மதுரையைச் சேர்ந்த வண்ணப் பரிமளப்புலவர். இதற்கு அதிசயப் புராணம் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு.

நபிகள் நாயகம் அவர்களின் மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்த ஹிஜ்ரத் ,ஹதீஸ்கள் அடிப்படையிலான வாழ்வியல்நெறிகள் தீனியத்தான அறங்கள், வானவர்கள்.சொர்க்கம் .நரகம். என விரியும் பண்பாட்டுலகம் தொடர்பான வினாக்களாகவும் விளக்கங்களாகவும் இந்நூல் உருமாறுகிறது.. செய்யுள்வடிவிலான நடை அமைப்பு ஆயிரம் மசலாவை புரிந்து கொள்வதற்கு சிரமத்தைக் கொடுக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது.

நூறுமசலாவைப் போன்ற எளிய நாட்டுபுற மொழிநடை ஆயிரம் மசலாவில் முகுதியாகத் தென்படவில்லை.. இது அப்துல் இப்னு சலாம் நபிகள் நாயகத்திடம் விளக்கம் பெற கேட்கும் வினாக்களில் ஒன்று.
தீன் என்பது என்ன?-இதன் செய்யுள் வடிவம் இவ்வாறாக அமைகிறது..

மானாக மேவந்த மக்காவில் வாழ்
தேனாவிலே வந்த செப்போசையாய்
மீனாகமே கொண்ட மெய்த்தூதரே
தீனாவதே தென்று செப்பீர்மனே
நபிகள் நாயகம் அவர்கள் இதற்கான விடையைப் பகர்கிறார்கள்.
வீறான சூதர்க்கு மேலானவா
தேறாகு பாகொத்த தீனாவதே
சாறான கலிமா ஷஹாத்துட
னீறாத சீபத்தி லீமானுமாம்……

எது தீன் என்பதற்கு பதிலாக தேனொத்த பாகொத்த தீன் என்பது சாறான கலிமா சஹாதத் என விளக்கம் கிடைக்கிறது..ஈமான் கொள்வதையே தீன் எனவும் அறிவிக்கிறது.

இத்தகையதான ஆயிரம் வினாக்களும் அதற்கான விளக்கங்களும் தமிழ் இலக்கியத்தினல் புது அனுபவத்தின் அற்புத வாசல்களைத் திறக்கிறது.

***
தாஜ்:
என்ன இப்படி..., இதில் போய் மயங்கிக் கிடக்கின்றீர்கள்? இலக்கிய வகையே என்றாலும்... தினத்தந்தி கன்னித் தீவைவிட பாமரத்தனமானது அல்லவா அது! இதனை ஏன் போற்றனும் என்று விளக்குங்கள் பிளீஸ்.

ஹெச்.ஜி.ரசூல்:
தாஜின் பதிவுக்கு நன்றிஉன்னதமானவற்றின் மீது நீங்கள் கவனம் கொள்கிறீர்கள்..வாழ்த்துக்கள்….பாமரத்தனமானவை எனக்குப் பிடிக்கிறது..இது முஸ்லிம்களின் சபால்டன் (subaltern)அரசியலோடு சம்பந்தப்பட்டது.ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு கன்னித்தீவுகளும் சிந்துபாத்துகளும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்மையத்திற்கு மாற்றான விளிம்புகளின் குரலை இன்னும் நாம் உற்றுநோக்கவேண்டியிருக்கிறது.

தாஜ்:
அன்புடன்...
ஹெச்.ஜி.ரசூல்.
உங்களது ஹைனஸ் மீது
நான் ஏகத்துக்கும்
பெருமை கொண்டவன்.
உங்களது தீர்கமான
சில இலக்கியச் சங்கதிகளை
சிலாகித்து வாசித்தவன்.
உங்கள் மீது அபாண்டம் வந்த போதும்/
நீங்கள் நீதியின் படிகளில்,
ஏறி இறங்கி
வென்று மீண்ட போதும்
நெகிழ்ந்தும், சந்தோஷம் கொண்ட
என் இருப்பை
நீங்கள் அறிய மாட்டீர்கள்.

இணையத்தில் வெளியான
கட்டுரை ஒன்றிலும்
சிறுகதை ஒன்றிலும் கூட
அந்த என் நிலைப்பாட்டை நான்
பதிவு செய்துள்ளேன்..

உங்களை அறியாமல்
இதனை எழுதுவதாக மட்டும்
நினைத்து விடாதீர்கள்.

இப்போது
நீங்கள் சிலாகிக்கத் தொடங்கியிருக்கும்
மூத்தோர்களின்
மதப்பற்று மேவிய
மத ரீதியான சரித்திர வரிகள்
ஏனோதானோவென்று
எழுதப்பட்ட ஒன்றாகவே கருதுகிறேன்.

சிலர் அவர்களின் தேவை பொருட்டும்
மதப்பற்று பொருட்டும்
அந்த வரிகளை
ராகத்திற்குள்ளும்/ இசைக்குள்ளும்
ரசனையான கவன ஈர்ப்புக் கொண்ட
சொல்லாடல்களுக்குள்ளும்
கலந்து தந்தபோது
அது...
இலக்கியமே அறியாத
நம் பெண்களின் மத்தியில்
அவர்களின் கவனத்தை கவர்ந்தது.
மற்றபடிக்கு
அந்த சிலாகிப்பு வரிகள்
மொழி ரீதியாக
தனித்த வேறெந்த சிறப்புகளையும்
கொண்டு விளங்குவதாக நான் கருதவில்லை.

உங்களின்
இந்த ஈடுபாடு
உங்களது
அரசியல் சார்ந்த தேவைக் கொண்டதாக
இருக்கும் என்பதுதான்
என் வலுவான எண்ணம்.

இத்தனை கருணைகொண்ட நீங்கள்...
’திண்ணை’யின் உச்சத்தில்
உட்கார்ந்து கொண்டு
சின்ஸியராக எதிர்க் கவிதைகள்
எழுதிக்கொண்டிருந்த போதுதான்
இஸ்லாத்தைக் குறித்து
அதில் மிகப் பெரிய அளவில்
அபாண்ட பிரச்சாரம் நடந்தது.
உங்களுக்கே நினைவிருக்கும்
நீங்கள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது
அடுத்த எதிர்க் கவிதையினை
எழுதிக் கொண்டிருந்தீர்கள்.

அதனை நேர் நிறுத்திப் பார்க்கிறபோது
இந்த உங்களது அதீத அக்கரை
உங்களின் அரசியல் தேவை பொருட்டு
நடப்பதாக நான் கருதும்
என் எண்ணத்தை ஊர்ஜிதமாகிறது.

தவறு இருக்கும் பட்சம்
தவறாமல் குறிப்பிடுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.

அன்புடனேயே
-தாஜ்

குளச்சல் யூசுப்:
தாஜுதீனுக்கு தலை சுற்றுகிறதா? கவிஞரின் அணுக்கத் தோழனான எனக்கும் முன்பெல்லாம் இப்படி தலை சுற்றியதுண்டு.

தாஜ்:
தலைவரே.. (Kulachal Mu Yoosuf சொல்வது) புரியலை!!

ஹெச்.ஜி.ரசூல்:
பழங்குடிகளின் காலம் தவிர்த்து நவீனத்துவத்திற்கு முற்பட்ட காலம் வரை சமயமும் அரசியலும் ஒன்றாகத்தானே இருந்தன... மரபுவழி இஸ்லாம் தீவிரமாக இறுகிய வடிவெடுத்தபோது சூபிமரபு ஒருவகையில் ஜனநாயகத்தன்மையை முன்வைத்தது. இங்கு நீங்கள் விரும்பாவிடினும் கூட ஒரு சார்புநிலை எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது..

தாஜ்:
தலைவரே..., தெரியும். அதான் அரசியலா என்றேன். என்மட்டில் இஸ்லாத்தில் எந்த நிலையோடும் சமரசம் கொள்ளாதவன். மதமா.. ஓகே. அவ்வளவுதான். இங்கே எனக்கு உங்கள் மீதான கரிசனையும், உங்களை அலைக்ழிப்புக்கு உள்ளாக்கும் நபர்களும்தான் பிரச்சனை. இனி ஓகே. எதையும் எழுதலாம் நீங்கள். வாழ்த்துக்கள்.

ஹெச்.ஜி.ரசூல்:
இரண்டாவது தமிழ்- அரபு பண்பாட்டின் இணவு குறித்த எழுத்துமரபு,வாய்மொழிமரபை நாம் எவ்வாறு அணுகுவது என்பது குறித்த பிரச்சினை, படைப்பாக்கங் களின் அழகியல் என்பது கூட சார்புநிலைப்பட்டது...எதிர் அழகியல், கலக அழகியல் என நாம் பேசிக்கொண்டிருக்கும் இச்சூழலில் முஸ்லிம்களின் கிஸ்ஸா, நாமா, முனாஜாத்து போன்ற படைப்புகளின் வடிவமும் உள்ளடக்கமும் ,மொழிக் கட்டமைப்பும் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுமென கருதுகிறேன்.. இவற்றையெல்லாம் ஒழித்துக் கட்ட ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும் போது நமது மரபின் வேர்களை தேடவேண்டியிருக்கிறது, பாதுகாக்கவேண்டியிருக்கிறது, மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யவெண்டியிருக்கிறது..இது வெறும் அரசியல் சார்ந்த பிரச்சினையல்ல..பண்பாட்டுஅரசியல் சார்ந்த பிரச்சினை..இலக்கிய அரசியல் போல..மேலும் இன்று நம்மிடையே புழக்கத்திலிருக்கும் பண்பாட்டு ஆய்வுகள்..மானுடவியல்சார்ந்தும் இனவரைவியல் சார்ந்தும் நுண் அரசியல் சார்ந்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது வெறும் நவீனத்துவ நோக்கில்  விளிம்புநிலைப் பண்பாடுகளை புறந்தள்ள முடியுமா என்கிற கேள்வி எழுகிறது...

நண்பர் தாஜ் , நமக்கிடையே இருந்த இடைவெளிதான் நம்மைப்பற்ரிய புரிதல்களை நெருங்கவிடாமல் தடுத்துள்ளன.உங்களது எழுத்துக்களை மிக நீண்டகாலமாகவே வாசித்திருக்கிறேன்..ஷஆ,சாகிப்கிரான்.நீங்கள்..என பலரும் வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் அறிவேன். மட்டுமல்ல அண்மையில் கூட மைலாஞ்சி குறித்தும் அதன் அழகியல் குறித்தும் ஒரு காரசாரமான கட்டுரையை எழுதியிருந்தீர்கள்..இஸ்லாமிய தொன்மங்களை மறுபடைப்பாக்கம் செய்தல் குறித்தும் தொன்மக் கவிதைக் குறித்தும் உங்களது அபிப்பிராயங்களை முழுமையாக அறியமுடியவில்லை...அதே சமயத்தில் ஊர்விலக்கத்திற்கு எதிராக திண்ணையில் நீங்கள் எழுதிய் பதிவு முக்கியமானது என்றே நினைக்கிறேன்..நீதிமன்றம் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்.. இன்ன்மும் அப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை..ஐந்து வருடங்களாக தொடர்கிறது..உரிமையியல்நீதிமன்றத்தில ஊர்விலக்கு சட்டவிரோதமானது என தீர்ப்புவந்தது. அபீமுஅஜமாத்தினர் இதற்கு எதிராக சார்புநீதிமன்றத்திற்கு போனார்கள். அங்கும் அவர்களது அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது..இதன்பிறகு மதுரை உயர்நீதிமன்றத்திற்கு செகண்ட் அப்பீல் செய்தார்கள் அங்கும் அப்பீல் தற்போது தள்ளுபடி செய்ய்ப்பட்டுள்ளது இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடிவெடுத்துள்ளார்கள்.. இதற்கிடையே சென்ற வாரம் ஊர் சென்ரபோது அங்கு திட்டமிட்டு எனக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள் ..பிரச்சினையை கிரிமினலாக மாற்ற முயன்றுள்ளார்கள்..எல்லாவர்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது..கறுப்புபிரதிகள் வெளியிட்டுள்ள உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்..கவிதைநூல் வாசிக்க கிடைத்ததா...தற்போது உங்கள்து நூல் எதும் வெளிவந்துல்ளதா...

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்:
ரசூல்ஜி ! ஏன் உங்கள் ஜமாஅத் இவ்வளவு கீழ் தரமாக உங்கள் விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறது . இது உங்களின் படைப்பு சம்பந்தமான பிரச்சனை இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது . நீதி மன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் அவர்கள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள் .

தாஜ்:
அன்புடன் ரசூல் அவர்களுக்கு..
தாமதம் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

நம் சமூகத்தாரிடையே அரக்கத்தனமான அரிவாள் கலாச்சாரமும், அறிவின்மையின் கலாச்சரமும் மதத்தை முன்வைத்து நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் அத்தனை பேர்களும் அதிகாரத்திற்கு ஆசை கொண்டவர்கள். ஒன்றாக மேய்ந்த ஐந்து பசுவை பிரித்து, வேட்டையாடிய சிங்கத்தின் கதையை ஆரம்பப் பாடசாலையிலேயே படித்தவர்கள் நாம். இங்கே இவர்களே தங்களது சகோதர்களை பிரித்து வைத்து, பிரிந்து நின்று சிங்கத்தின் வேட்டையாடலுக்கு வழிவகுத்து தருகின்றார்கள்!

நிஜத்தில், இந்தக் கலாச்சாரம் பரவிக் கொண்டிருப்பதை காண மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஒற்றுமையின் கயிற்றைப் பற்றி பிடிக்க வேண்டும் என்று நமக்கு புத்தி போதித்துவிட்டு, இப்போது என்னைப் பற்றி பிடியுங்கள் என்கிறார்கள். கஷ்டம்.

சென்ற காலங்களில், இப்படித்தான் சுன்னத் ஜமாத் அறுபதுக்கும் மேலான கூறுகளாக சிதைந்தது என்கிற வரலாற்று உண்மையை அவர்களுக்கு உரைக்கவில்லை. எதுவொன்று முற்றினாலும் உடைவது கட்டாயமாகிப் போகும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது!

இந்த நாட்டில், அதுவும் குறிப்பாக தமிழகத்தில், தேர்ந்த ஞானிகளாலும் சூஃபிகளாலும்தான் இஸ்லாம் வளர்ந்து நிலைக்கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களை முன்வைத்து இஸ்லாத்தைத் தழுவியர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அத்தனை மக்களும் இங்கே உள்ள பிற மதத்துகாரர்கள்தான்!

அவர்கள் தங்களது பூர்வீக மதத்தின் போக்கில், அதன் அதீத செயல்பாடுகளில், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களது பிரித்தாண்ட சூழ்ச்சியில், கூடுதலான அடக்கு முறைகளில் மனம் கசந்த தருணம் அவர்களிலேயே நாம் குறிப்பிடும் ஞானிகளும் சூஃபிகளும் தோன்றி, பந்துக்களையும், மற்ற நேசிப்பாளர்களையும் திட்டுத்திட்டாய் கிராமம் கிராமமாய் அரவணைத்து இஸ்லாத்தை தழைக்கவைத்தார்கள். ஒரு நிமிட நேரம், அந்த முயற்சி கொண்டவர்கள் தினம் தினம் தாண்டிவந்த நெருப்பாற்றை இன்றைய புதுக் கலாச்சாரம் பேசுகின்றவர்கள் யோசிக்க வேண்டும். தங்களது அழைப்பை ஏற்று வந்த மக்களின் இரத்தத்தில் ஊறிபோன சிலபல சங்கதிகளுக்கு மதிப்புக் கொடுத்து, ஆனால் இறைவனின் பாதையில் இருந்து நழுவாது அரவணைத்து அழைத்து போன நிகழ்வு யோசிக்கத் தெரிந்த நம்மவர்களை நிச்சயம் மலைக்கவைக்கும்!  

நம்மைச் சார்ந்த ஞானிகளும், சூஃபிகளும் பாதை செப்பனிட்டு போட்டுவைத்துவிட்டு போன தார் ரோட்டில் வாகன சகிதமாக வந்து, நீ இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்று அதிகார அலட்டல் செய்பவர்களை காணும்தோறும் மனசு நோகவே செய்கிறது. இவர்கள், முதலில் அந்த ரோடு போட்டவனின் தன்னலமற்ற தியாகச் செயல்பாடுகளை மதிக்க வேண்டும். மதிக்காவிட்டாலும் அவர்கள் குறித்தும், இந்த மண்ணில் இஸ்லாம் வளர்ந்த சிரமத் திசை குறித்தும் யோசிக்கவாவது வேண்டும்.

இவர்களால் முடிவதெல்லாம்..., அழிவுச் செயல்பாடுகள் மட்டும்தான். மதச் சீர்த்திருத்தம் என்கிற பெயரில் நம்மவர்களை பிரித்து நிற்க வைத்திருப்பது, தர்கா வேண்டாம் என்கிர பெயரில் முஸ்லீம் இந்து ஒற்றுமைக்கு வேட்டு வைத்திருப்பது, திருமண சீர்த்திருத்தம் என்கிற பெயரில் திருமணத்தின் மணத்தையே இல்லாமல் ஆக்கியது, இறந்தவர்களுக்கான நினைவு மரியாதைகளை தத்துப்பித்தென்றாக்கியது, ஜக்காத்தில் புது முறையென்று அதனை கேள்விக் குறியாக்கியது,

மௌலதை வேண்டாம் என்று இஸ்லாமியர்களின் மனதில் காலம் காலமாக வளர்ந்து வந்த இனம்புரியாத இறை ஈர்ப்பை சிதைத்தது. தொழுகையில் சீர்திருத்தம் என்கிற பெயரில் இஸ்லாமியன் கொண்டிருந்த இறையச்சத்தில் கைவைத்தது என்று இப்படியே அவர்களின் தேவையற்ற செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இஸ்லாமிய வாழ்வு முறையினை ஆதி இஸ்லாமிய அரபித்தனம் மாறாமல் வழிநடக்கும் அந்தத் தம்பிகளில் ஒருவனை அழைத்து, பூமியை பாலைவனமாக்கி, அரபி பேசிபடிக்கு ஓட்டகத்தில் பயணம் செய்ய நாம் வலியுறுத்தும் பட்சம் நம்மை பைத்தியக்காரர்களாகவே பார்ப்பார்கள். ஆனால், வண்டிவண்டியாக புத்தி கூறியபடி நம்மை ஆதி அட்சரம் மாறாமல் நடக்க வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.

விடலைத்தனம் மாறாத இவர்களைப் பற்றி இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களுள் இஸ்லாமிய சீர்திருத்தம் என்கிற அசட்டுத் தனங்களையும்  மீறி மறைந்திருக்கும் அதிகார ஆசை, இப்போது இவர்களை தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. கோடிகளில் புரளும் தாராள சூழ்நிலை யதார்த்தமாக அவர்களை அண்டியும் இருக்கும். இதுவொன்று போதும் அவர்கள் முழுகிப் போக. அவர்களை மதித்து ரசூல் கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் எந்தவொரு இஸ்லாமியப் பண்டை இலக்கியத்தையோ, சூஃபிகளின் தர்காகாக்களையோ எதுவும் செய்ய முடியாது. இன்றைக்கு சப்தம் ஓங்கி கேட்பது நிஜம்தான். கொள்ளும் வலிகளில் நாளை தானே அது அடங்கும்.

பண்டைய இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதற்கு வலுவிருக்கும் பட்சம் அது தன்னை தானே காத்துக் கொள்ளும். வலுவற்றவைகள் மண்ணில் விழுந்து மடிவதுதான் முறையாகவும் சரியாகவும் இருக்கும். நான் இலக்கியம் படித்த எந்த மூத்தவர்களும் இந்த மீட்டுருவாக்கம் செய்ததில்லை. இந்த மீட்டுருவாக்கம் என்கிற வார்த்தையே உலக எழுத்தார் ஜெயமோகனால் கண்டு பிடிக்கப்பட்டதாகவே அறிகிறேன். பண்டைய இலக்கியங்களோடு ஒப்பிட்டு வித்தை செய்வதென்பதெல்லாம்..., முனைவருக்குப் படிக்கும் மாணவர்களின் வேலை. இலக்கியவாதிகள் எப்பவும் படைப்பை செய்கிறவர்கள். மீட்டுருவாக்கம் அவர்களுக்கு சிறப்பு தருமா என்று விளங்கவில்லை. இஸ்லாத்தின் மீது பற்று இருக்கும் பட்சம், அதை முன்வைத்து நீங்களே ஓர் படைப்பை படைக்கலாமே. உங்களது திறமை மீது உங்களைவிட அதிகமாக கருத்துக் கொண்டிருப்பவன் நான்.

இப்போ உங்களது வழக்கு குறித்து பேசலாம். எனக்கு கோர்ட்டைவிட அமர்வில் உட்கார்ந்து பேசி பேசி தீர்ப்பதில்தான் மிகுந்த நம்பிக்கை. நீங்கள் ஏன் அதனை கைநழுவி விட்டீர்கள் என்பதை நான் அறியேன். மீண்டும் கூட நீங்கள் அப்படி முயல்வதை நான் விரும்புகிறேன். நேர் பேச்சால் ஆகாதது எதுவுமில்லை. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் வருடக்கணக்கில் போர் நடக்கிற போது கூட அதனை நிறுத்துவது நாடுகளுக்கிடையே ஆன அமர்வும், சமாதான உடன்பாடும்தான். யோசியுங்கள்.

உங்களது புதிய கவிதைத் தொகுப்பு வந்திருப்பதை நான் அறியேன். வரும் புத்தகச் சந்தையில் கட்டாயம் வாங்குவேன், கட்டாயம் வாசிப்பேன், கட்டாயம் விமர்சனமும் எழுதுவேன், நன்றி.

பென்னேஸ்வரன்:
நண்பரே, இவர்களின் முகவரி கிடைக்குமா? தொடர்பு எண் ஏதாவது இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். இவர்களுடைய பாடலை டெல்லியில் நடந்த பக்தி உத்சவ் நிகழ்வில் கேட்டு இருக்கிறேன். ஏதாவது அமைப்பு மூலமாக இவர்களை டெல்லிக்கு வரவழைக்க முயற்சிக்கிறேன்.

கிரிதரன்:
இந்தப் பக்கிரிஷாக்களின் இசையும், குரல் வளமும் என்னைக் கவர்ந்திருக்கின்றன. நாகூர் ஹனிபாவுக்குப் பிறகு என்னைக் கவர்ந்தவர்கள் இந்த 'பக்கிரிஷாக்களே'.

ஃபைஸல்கான்:

அருமையானபதிவு. மலையாள மண்ணில் "துகிலுணர்த்தல்" கொண்டு,தேசமெங்கும் பாடித்திரிந்த, ஓலைக்குடை பாணர்களை ஒத்தவர்கள் பகீர் சாகிப்கள். அலியாரின் வீரத்தையும்,பாததிமாவின் இல்லற நெறியையும்,உமரின் தீரசரித்திரத்தோடு ,பெருமானாரின் சரித்திரத்தையும் பாமர இசுலாமியனின் ,நெஞ்சகத்தே பசுமரத்தாணியாய் பதியச்செய்தவர்கள் பகீர்கள் என்றால் அதில் மிகையில்லை.அர்பு தமிழ் கொண்டு ,மறைபயின்ற காலத்திலும்,இவர்களின் தப்ஃஸ் இசையோடு கூடிய இலக்கிய ஜாலங்களை காதோர்த்து நின்ற நாட்கள் இன்றும் இனிக்கிறது.இவர்களையும் ,பண்டை இலக்கியங்களையும் பழமையென்றும்,பாமரமென்றும் ஒதுக்கிவைத்ததால் தான் இன்று, இசுலாமிய அறிவுமிகுந்த(?) மேதாவி இளம் தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.நவீனமென்றும்,நாகரீகமென்றும் நம்மை ஏமாற்றிக்கொள்ளும் தருணத்தில்,நம் நாளைய தலைமுறையில் யாரேனும் திரும்பிநோக்க நேர்ந்தால்,அழிந்துபோன பாதசுவடுகளை மட்டும் விட்டு வைக்கவேண்டாம்.

***
ஃபக்கீர்ஷாக்களுக்கு நன்றி! - ஆபிதீன்
***
தொடர்புடைய ஒரு சுட்டி :மைலாஞ்சி விவாதங்கள்

No comments:

Post a Comment