Thursday, May 3, 2012

மதுரை ஆதீனமும் சீர்காழியின் பின்னணியும் - தாஜ்

ஒரு ஜாலியான வரலாற்று ஆரம்பம்தாஜ்

முந்தைய ஆட்சிக் காலத்தில், திமுகவின் அரசியல் ஆதீனகர்த்தாவாக மதுரையில் சகல பரிபாலனமும் செய்துவந்த கருணாநிதியின் மூத்தமகன் அழகிரிக்கும், திமுகவின் நிழல் அதிகார மையமாக வலம் வரும் கருணாநிதியின் இளையமகன் ஸ்டாலினுக்கும், அவர்களது குடும்பச் சொத்தாகிப் போன கழக மடத்தின் சகல உடைமைகளுக்குமான ஏக வாரிசாக 'முடிசூட்டலை' வேண்டி அவர்களுக்குள் நடந்தேறிக்கொண்டிருக்கும் சகோதர சர்ச்சைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது, மதுரையில் சமீபத்தில் நடந்தேறிய இன்னொரு மடத்தின் வேறொரு முடிசூட்டுவிழா!

இன்றைய மதுரை ஆதீனகர்த்தாவான, 'மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக
பரமாச்சாரிய சுவாமிகள்' தனது 'மட' வாரிசாக 'ரஞ்ஜிதா புகழ்' நித்தியாவுக்கு "மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ
நித்தியானந்தா ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' என நாமகரணமிட்டு நடந்த முடிசூட்டு விழா... கோலாகல நிகழ்வாக நடந்தேறி
இருக்கிறது.

ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி என்கிற, 'நம்ம அருணகிரி' பிறந்த வளர்ந்து படித்ததெல்லாம் சீர்காழி... சீர்காழி... சீர்காழி!!! அதாவது எங்க ஊருங்க! எங்க ஊருன்னு சாதாரணமா சொல்வதும் கூட போதாது, நான் சார்ந்த தாடாளன் கோவில் வட்டத்துக்காரர் அவர்! அவர் வசித்த தாடளான் வடக்குத் தெரு எங்க பெரிய பள்ளிவாசலுக்கு ரொம்பப் பக்கம்! அவர் சைவக் குடும்பத்துப் பிள்ளை. பிள்ளைமார்.  வறுமையான பின்னணி! 'லால்பேட்டையார்' என்கிற இஸ்லாமியருக்கு சொந்தமான '10க்கு10' தொகுப்பு குடியிருப்பில் வாடகைக்கு இருந்தது அவரது குடும்பம்! மாயூரம் - தர்மபுர மடத்தின் தமிழ்க் கல்லூரியில்  கஷ்டப்பட்டு 'புலவர்' படித்தோதியவர். படிப்பு போக மீத நேரங்களில் திமுக. அனுதாபிக்குண்டான வேலைகள். காலம் 1964ஆக இருக்கும்.

திராவிட முன்னேற்றக்கழகம் 1967-ல் பதவியேறி பெரியாரோடு கைக்கோர்த்துக் கொண்டபோது, பெரியாரின் கொள்கை அலை, திமுகவில்
அநியாயத்திற்கு எதிரொலித்தது. எங்களூரிலும் அந்த அலைக்குப் பஞ்சமில்லை! குறிப்பாய் நம்ம அருணகிரி வசித்த தாடளான் வடக்குத் தெருவில்தான் அந்த அலையே சூழ்கொள்ளும்! நம்ம அருணகிரி அந்தச் சூழலில் தினைக்கும் முழுகி எழுபவர். அப்படி முழுகி எழாமலும் அன்றைக்கு திமுக-வில் யாரும் பேர் போட முடியாது. கரையோரத்தில் நால் நனைய குளித்தால் போதும் என்று எவர் அன்றைக்கு முனைந்தாலும், கட்சியில் அவர்களது 'பத்தினித்தன்மை' கேள்விக் குறியாகிவிடும்!

கல்லூரியில் தமிழ் ஓதுவது, கழக அனுதாபிகளுக்கான பணிகள் மற்றும் ஓய்வு நாட்களில் சீர்காழியை சேர்ந்த தி.மு.க. 'M.P'-யான திரு.சுப்ரவேல்
அவர்களுக்கு பணிவிடை செய்யும் பையனாக நம்ம அருணகிரி ஓடியாடியபடிக்கு இருப்பார். அந்த M.P. மூலமாக அப்போதைக்கு அவர் எதிர்
பார்த்ததெல்லாம்... தான் படித்த படிப்புக்கு ஏற்ப ஏதாவது ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் அல்லது அரசு இடைநிலைப் பள்ளியில் தமிழாசிரியர் வேலை மட்டும்தான். ஆனால் பாருங்கள், விதி அவரிடம் செல்லம் பாராட்டி விசேச விளையாட்டு விளையாடத் தொடங்கியது. அதை அவர் அப்போதைக்கு நிச்சயமாக அறியமாட்டார்! விதியைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் இங்கே அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

மதுரை மாவட்டத்தில் 1967-க்கு முந்தையக் காலக்கட்டத்தில், பிரபல வழக்கறிஞராக/ தி.மு.க.வில் முக்கியப் புள்ளியாக/ அண்ணாவாலும்
எம்.ஜி.ஆராலும் போற்றப்பட்டவராக திரு.மாதவன் விளங்கினார்! 1967-ல் திமுக வென்ற போது, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரானார்! பின்னர்
ஏதோவோர் முகாந்திரத்தில் 'தமிழ் முரசு' என்கிற நாளேட்டையும் தொடங்கி நடத்தினார். மதுரை மடத்துக்கும் அவர் ரொம்ப செல்லம் என்றும் சொல்வார்கள்!

அன்றைய மதுரை ஆதீனகர்த்தாவாக பதவிவகித்த 291-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சர் அவர்கள், தி.மு.க.வின் அனுதாபியாக
பேசப்பட்டவர்! ஒரு பொழுதில் மந்திரி மாதவனை 291-வது குருமகா சன்னிதானம் தனியே சந்திக்க நேர்கையில், 'தான் அடுத்த வருடம்
கைலாசத்திற்கு போக இருப்பதாலும் தனக்கும் வயசாகிக் கொண்டிருப்பதாலும் மடத்துக்கு அடுத்த வாரிசாக முடிச்சூட்ட தமிழோதிய நல்ல பிள்ளை ஒருவர் வேண்டும், அப்பிள்ளை நம் இயக்க அனுதாபியாகவும் இருக்க வேண்டும்' என்று சொல்ல, மாதவன் வழியே நான் குறிப்பிட விதி நம்ம அருணகிரிக்கு சூட்ட அதிர்ஷ்ட மாலையோடு புறப்பட்டது!

மதுரை ஆதீனம், நான்கு நாயன்மார்களில் ஒருவரானவரும், தேவாரம் பாடியவருமான ஸ்ரீ ஞானசம்பந்தர் வழிவந்த ஆதீனம்! ஸ்ரீ ஞானசம்பந்தர் சீர்காழி பதியில் அவதாரம் கொண்டவர். அதனால் என்னவோ மாதவன் அவர்கள், மதுரை மடத்துக்கான அடுத்த வாரிசை சீர்காழியில் தேடத் தொடங்கினார்.  தனது இயக்கத்தைச் சேர்ந்தவரும் நேர்மையாளருமான திரு.சுப்ரவேலு M.P.அவர்களிடம் 'மடத்திற்கு தகுதியான நல்ல பையன்' வேண்டும் என்றபோது, திரு.சுப்ரவேலு அவர்கள் மிகுந்த சந்தோஷமுடன் தன்னை அண்டி பணிகள் ஆற்றி கொண்டிருக்கும் 'நம்ம' அருணகிரி பையனை திரு.மாதவனிடம் அறிமுகப்படுத்துகிறார்.

பையனைக் கண்டதும், தான் தேடிவந்தப் பையனை சுளுவில் கண்டுவிட்டதாக மாதவனுக்கு மகிழ்ச்சி. என்றாலும், பையனின் சகல சைவப் புலமையையும்/ திராவிடப் பற்றினையொட்டிய திறனையும் பரிசோதிக்க வேண்டுமே?

திரு.மாதவன் அவர்கள் நம்ம அருணகிரியை கையோடு சென்னைக்கு அழைத்துப் போய் தனது பத்திரிகையில் பணியாற்றவைத்து பையனை கணிக்கத் துவங்கினார். ஓடியாடி திறம்பட பணிசெய்த நம்ம அருணகிரி 100க்கு100-ல் பாஸ்! அப்புறம் என்ன? 291-வது மதுரை ஆதீனகர்த்தாவிடம்
அறிமுகப்படுத்தப்பட்ட நம்ம அருணகிரிக்கு அடுத்து சில நாட்களிலேயே; ஓர் நல்லநாள் பார்த்து 292-வது மதுரை ஆதீனகர்த்தாவாக பட்டம்
சூட்டப்படுகிறது.

நிழல் அதிகாரத்தோடு மடத்தில் அங்கும் இங்கும் வலம் வந்துக் கொண்டிருந்த அருணகிரிக்கு அதிர்ஷ்டம் மீண்டும் விரைந்து பலமாகவும்
பலவந்தமாகவும் துணை நின்றது. காசிக்கு புறப்பட்டுப் போன மதுரை ஆதீனம் 201, போய் கொண்டிருந்த வழியிலேயே முக்தியடைந்து விடுகிறார். அந்த மரணச் செய்தி , நம்ம அருணகியை 'ஓவர் நைட்டில்' நிஜமான...'மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' ஆக்கிவிடுகிறது!

***

மேலே..., எங்கள் ஊர்/ எங்கள் வட்டத்தைச் சேர்ந்த 'நம்ம' அருணகிரியைப் பற்றியும், அவரது அடுத்த அவதாரமான 'குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ
பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி'யைப் பற்றியும் நான் எழுதியவைகள் எல்லாம், எங்கள் ஊரை சேர்ந்த கழக முக்கியப் புள்ளிகள் சொன்ன நம்பகமான
தகவல்கள் அடிப்படையிலும், பத்திரிகைகளில் படித்த செய்திகளின் அடிப்படையிலும்தான். என்றாலும், அந்தச் சின்ன வயதில் நான்; நம்ம
அருணகிரியை பார்த்த ஞாபகம் நினைவில் உண்டு. வெள்ளையில், அழுக்குபிடித்த அரைக்கைச் சட்டை கசங்கிய நாலுமுழ வேஷ்டி சகிதமாக அவரது குடும்பம் குடியிருந்த குடியிருப்பில் இருந்து வீதிக்கு வந்துப் போவதைக் கண்டிருக்கிறேன். கட்சிக்காரர்களுடனும், அவர்களது கடைகளிலும் பேசா மடந்தையாக அவர் நின்றுக் கொண்டிருந்ததையும் என்னால் நினைவுகூற முடிகிறது. பாவமான.. 'தேமே'யென்ற தோற்றம் அவரது தோற்றம் என்பதாகவும் நினைவு.

மதுரை ஆதீனத்தை தீவிரமாக நான் அனுமானிக்கத் துவங்கியது 1980-களில்தான். அப்போது அவர் 'இந்து முன்னணி' மேடைகளில்
ஏறத்துவங்கியிருந்த காலம். அந்த மேடைகளில் அவ்வப்போது தமிழின் மகத்துவம் பேசி இருக்கிறார். அப்படி பேசாமலும்தான் அவரால் எப்படியிருக்க முடியும்? தமிழ் வளர்க்கும் மடத்தின் தலையாச்சே அவர்! ஒருமுறை மேடையில் அப்படி அவர் உணர்ச்சிவசப்பட்டு தமிழின் புகழ் பாடிய போது; இந்து முன்னணி தலைவர் ஒருவர், அவரது காதருகே வந்து... 'ஸ்வாமி... இந்த மேடையில் தமிழ்... தமிழென்று பேசிக் கொண்டிருக்காதீர்கள்' எனக் கூறவும் ஆதீனத்திற்கு ஏதோ பளீரென உரைக்க, அவர்களின் மேடைகளில் ஏறுவதை அத்தோடு விட்டார்.

அத்தோடு அதை விட்டார் என்பதற்காக 'சிவனெயென்று' அவர் இருந்துவிடவில்லை. பின்னர், தி.க. / திமுக மேடைகளில் சில நேரமும், ஈழப் பிரச்சனை சார்ந்த மேடைகளில் சில நேரமும், நாயகம் பிறந்த நாள் மேடைகளிலும் புத்தக வெளியீடு மேடைகளிலும், தமிழ் தேசிய/ தமிழ் ஆர்வலர்களின் மேடைகளிலும் என்று பலதரப்பட்ட மேடைகளில் ஏறி பேச்சோ பேச்சென்று பேசிக் கொண்டிருந்தார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் ஆர்வலர்கள் மாநாடு என்று வீரமணி நெடுமாற 'சசிகலா கணவர்' நடராஜன் முதலானோரோடு தஞ்சையில் மேடையேறிய மதுரை ஆதீனம், 'நடராஜன் அடுத்த முதல்வராக வரவேண்டும்' என்று கோரிக்கை வைக்க, நடராஜன் சிரித்தபடி அப்பேச்சை வரவேற்றிருக்கிறார். இதனை கொள்ளிக் கண்களோடு கவனித்த மேலாதிக்க சமூகப் பிரதிநிதிகள் சும்மா விடுவார்களா? 'அம்மா'விடம் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். இன்றைக்கு அவ்வப்போது நடராஜன் சிறையில் காலம் கழிப்பதற்கு மூலமே ஆதீனத்தின் அந்த மேடைப் பேச்சுதானாம்! சொல்கிறார்கள். ஆதீனம் ரொம்பவுதான் உணர்ச்சிவசப் பட்டுவிடுகிறார்!

எல்லோரும் தன்னைப் பார்த்து புருவத்தை உயர்த்த வேண்டும்! ஆனால், நிச்சயமாய் அது தனது எந்தவொரு சாதனையாலும் இருந்துவிடக் கூடாது! இப்படிதான் இன்றுவரை மதுரை ஆதீனம் இருந்துவருவதாக கருதுகிறேன். அவரது பேச்சும் 'தாங்க முடியாதவோர் பேச்சு. இது, சீர்காழியின் அடிப்படை 'ஜீன்'-ஆக இருக்குமோ என்றும் தோன்றுகிறது! சில நேரம், என்னைக் கண்ணாடியில் காணும் போதும் கூட அப்படித்தான் தோன்றும். சீர்காழி பதியின்கண் தோன்றிய சில நிஜமான கீர்த்திகள் என்னை மன்னிப்பார்களாக!

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் எங்களூரில்  வீரமணி, மதுரை ஆதீனம் இருவரையும் முக்கிய பேச்சாளர்களாகக் கொண்டு 'நாயகம் பிறந்த நாள்' விழா ஒன்று விமர்சையாக நடந்தது. அந்த விழாக்குழுவில் நானும் இருந்தேன். விழாவில் வீரமணி கலந்துக் கொள்கிறார் என்கிற போது நான் இல்லாமலா? அந்த விழா மேடை, ஆதீனம் பிறந்து வளர்ந்த தெருவின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்தது. அவரது பார்வைக்கு எட்டும் தூரத்தில் அவர் வசித்த பழைய 10க்கு10 வீடு! கொஞ்சம் மேல் நோக்கி திரும்பிப் பார்த்தால்... தனது இளமையில் தினமும் அவர் கண்டு வளர்ந்த எங்களது பெரிய பள்ளிவாசலின் மனோரா!

அன்றைக்கு மேடையில் வீரமணியின் பேச்சைவிட ஆதீனத்தின் பேச்சுதான் 'ஹைலைட்!'.  மேடைகளில் வழக்கமாக ஆதீனம் உணர்ச்சிப்படுவதைக் காட்டிலும் அதிகத்திற்கு அன்று இந்த மேடையில் உணர்ச்சிவசப்பட்டார். அவரது பழைய தெருவும், குடியிருந்த பழைய வீட்டின் நிழல் முகப்பும், தினைக்கும் தான் பார்த்தும் கேட்டும் வளர்ந்த பள்ளிவாசலின் மனோராவும் பாங்கு சப்தமும் ஆதீனத்தை அன்றைக்கு அப்படி ஒரு நிலைக்கு ஆழ்ப்படுத்திவிட்டது.  அத்தனையும் அவரது பேச்சில் உண்ர்ச்சி மயமாக வெளிப்படவும் செய்தது. நிகழ்வது 'நாயகம் பிறந்த தின விழா'வாகையால், தனது பேச்சுக்கிடையில்  ஒண்ணாம் கலிமா, ரெண்டாம் கலிமான்ணு ஓதிக்காட்டவும் தொடங்கிவிட்டார். கூட்டத்தினரின் கைத்தட்டலும் சிரிப்பும் அந்தத் தெருவையே அதிரச் செய்துவிட்டது. ஆனால் எனக்குத் தெரியும் , அவர் பேச வந்ததை விட்டு, இப்படிதான் ஒண்ணுகிடக்க ஒண்ணு பேசுவார் என்று.


இன்றைக்கு, தனது ஆளுமைக்கு உட்பட்ட மதுரை மடத்தை 'ரஞ்ஜிதா புகழ்' நித்தியானந்தாவுக்கு விற்றுவிட்டதாக பி.பி.சி. செய்தியில் கேட்டேன்.
செய்தியினூடே 13 நிமிடங்களுக்கான மதுரை ஆதீனம்/ நித்தியா பேட்டியையும் ஒலிபரப்பு செய்தார்கள். வேலைமெனக்கட்டு அவசியமாக அந்தப் பேட்டியை கேட்டேன். இரண்டுப் பேர்களுமே அநியாயத்திற்கு பேத்தலோ பேத்தல் என்று பேத்தினார்கள். பி.பி.சி.யின் எந்த ஓர் கேள்விக்கும் சரியான பதிலில்லை. பேச்சில் 'லாஜிக்' வேண்டும் என்பதே இருவருக்கும் தெரியவும் இல்லை. அவர்கள் இருவரும் குழம்பி, கேட்கும் நேயர்களையும் குழப்பினார்கள். ஆனால்... இவர்களிடம்தான்... இந்த மாதிரி ஆட்களிடம்தான் கோடி கோடியென்று பணம் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது! அவர்களே போதும் என்றாலும், அதிர்ஷ்ட லெட்சுமியும் கேட்பதில்லை.  

இவர்கள் வாழ்கிற இந்த மண்ணில்தான், குன்றக்குடி அடிகளார் மாதிரியான தெளிவான பார்வையும்,  உயர்ந்த சிந்தை / வளமான சொல்லாற்றல் கொண்ட மதிப்பிற்குரிய மடாதிபதியும் வாழ்ந்தார் என்பதை கேள்வியுறும்போது... நம்ப முடியாது வியந்து போகிறோம்!

***
நன்றி : ஸ்ரீலஸ்ரீ சீர்காழி தாஜ் அவர்கள் | மின்னஞ்சலில் உதைக்க : satajdeen@gmail.com
***
தொடர்புடைய எச்சரிக்கை : 'பத்து நாட்களில் கருத்தை வாபஸ் பெறவேண்டும்' : நித்யானந்தா (தினமலர்)

5 comments:

  1. தம்பி தாஜ், மதுரை ஆதீனம் அளித்த நேர்காணலை நானும் கேட்டேன். என்ன செய்வது? உலகில் இப்படியெல்லாம் நடக்கும். நடக்காட்டித்தான் கவலைப்பட வேண்டும். பிபிசி நண்பர் மணிவண்ணனும் விட்டபாடில்லை. ஆனாலும் உண்மை கிட்டவில்லை.

    ReplyDelete
  2. ஆபிதீன்,
    தாஜுடைய கட்டுரையோடு இந்த இசையும் சேர்ந்தால் ( http://www.youtube.com/watch?v=t414gcz4gPc )எப்படியிருக்கும்? வலு சோக்கா இருக்கும்.
    ஹனீபா காக்கா

    ReplyDelete
    Replies
    1. காக்காவுக்கு
      நன்றி.
      -தாஜ்
      பின் குறிப்பு:
      விரைவில் மடல் எழுதுகிறேன்.

      Delete
  3. வெகு லாவகமாகவும் அழுத்தமாகவும் “உண்மைகளை” வெளிப்படுத்தியுள்ளீர்கள்; இருந்தாலும் அப்பாவியாகவே இருக்கிறீர்கள் - பேத்தாம எப்டி பெரிய மனுசனாகுறது? ஹனிபாக்காதான் சரி - இதெல்லாம் நடக்காம இருந்தாதான் நாம கவலைப்படணும். அருமையான கட்டுரை.

    ReplyDelete
  4. நாம பாக்க வாழ்ந்த ஒருவர் இன்று ஆடலாம், பாடலாம் கொண்டாடலாம் என்ற நிலைமைக்கு முன்னேனேனேஏறிறிறிறிக் கொண்டிருப்பது குறித்த வயித்தெரிச்சல் உங்களுக்கு.

    ReplyDelete