Wednesday, May 9, 2012

நாகூர் ரூமியின் கடிதம் (2000)


'மீண்ட பொக்கிஷம்' என்ற தலைப்பில் என் கிறுக்கல்களை நண்பர் நாகூர்ரூமி முன்பு வலையேற்றியிருந்தார். அந்தக் கடனை இப்போது தீர்க்கிறேன். நாங்கள் ஒன்றும் கி. ராஜநாராயணனோ கு. அழகிரிசாமியோ அல்ல, 'உன் சிரங்கைப் பற்றி நீ வர்ணித்தது என் சிரங்கைப் பற்றி வர்ணித்தது போலவே இருந்தது!' என்று உண்மையான கடித இலக்கியம் செய்வதற்கு (சமயம் வாய்த்தால் 'செல்லையா கு.அழகிரிசாமியானது' எனும் - 'கொல்லிப்பாவை' இதழில் வந்த - கி.ராவின் அற்புதமான கட்டுரையை பதிவிடுகிறேன் பிறகு). இழவெடுத்த  இ-மெயில் வந்தபிறகு கடிதம் எழுதும் வழக்கம் காணாமல் போய்விட்டது; இலக்கியமும் தப்பித்தது. சரி, எனது அருமை நண்பரின் பழைய கடிதத்தைப் பாருங்கள்.  'சமீபத்தில் நான் ஒரு 20/30 புதிய கவிதைகள் எழுதிவிட்டேன். எனக்கே ஆச்சரியம். All spritual poems!' என்று 'ஆல்ஃபா மாஸ்டர்' எழுதியிருப்பதை பார்க்கும்போது இன்றைக்கும் செம சிரிப்பு வருகிறது. வேறு சிலரின் முக்கியமான கடிதங்களும் இருக்கின்றன. நேரம் வரும்போது 'காட்டுகிறேன்'.  நன்றி.  - ஆபிதீன்

***



10.11.2000
இரவு 9:10

அன்புள்ள இலக்கியச் சுடருக்கு ஆன்மீக தென்றல் சற்று தாமதமாக எழுதிக் கொள்வது. என்னை இலக்கியத்திலிருந்து தாங்கள் நீக்கிவிட்டதற்காக முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியச் சுடரின் தகிப்பில் ஆன்மீகத் தென்றலும் அவிந்து போகும் நாளை வெகுவிரைவில் எதிர்பார்க்கிறேன்!

இங்கு அனைவரும் நலம்.

'ஸ்நேகா-சென்னை' எனது சிறுகதைகளை அடுத்தமாதம் வெளியிடுகிறது. First proof இப்போது எனது கையில். உமது அவசர உதவி தேவை. குட்டியாப்பா, நாகூர் ரூமி - என்று நீர் எழுதித் தந்தால் - இந்த மாதத்திற்குள் - அட்டையில் அவற்றை உபயோகிப்பேன்.

முடியவில்லையெனில், இத்துடன் எனது ஒரு சில photos அனுப்புகிறேன். அதில் ஏதாவதொன்றை வரைந்து அனுப்பினால் அட்டை பின்பக்கம் அதைப் போட்டுக் கொள்வேன். ஸ்நேகாவும் இதனை விரும்புகிறது. உடன் எனது ambur@vsnl.com என்ற முகவரிக்கு e-mail செய்யும். உமது பதில் தேவை.

H-ஐ (ஹஜ்ரத்) நீர் பார்க்காமல் வந்தது பற்றி என் கருத்து : சரியா தவறா என்ற கேள்விதான் தப்பு. உறுத்தலில்லாமலிரும். அது போதும்.

சமீபத்தில் நான் ஒரு 20/30 புதிய கவிதைகள் எழுதிவிட்டேன். எனக்கே ஆச்சரியம். All spritual poems. 'இஸ்லாத்தில் எண்ணம்' என்ற என் கட்டுரை ஒன்று மதுரையிலிருந்து வரும் 'சிந்தனைச் சரம்' என்ற மாதாந்தரியில் பிரசுரமாகியுள்ளது இந்த மாதம். பாதி மட்டும். அடுத்த மாதம் அடுத்த பாதி வரும். (நீண்ட கட்டுரை).

'மறைவானவற்றை மனிதர் அறிய முடியுமா?' என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

எனது அடுத்த கடிதத்தில் அவைகளின் Xeroxஐயும் ஆங்கிலத்தில் நானே மொழிபெயர்த்து அனுப்புகிறேன். 'நாகூர் பக்கத்தில்' வைக்கலாம்.

சமீபத்தில் ஞானக்கூத்தன் கேட்டுக்கொண்டபடி National Book Trust India வெளியீட்டில் சேர்க்க எனது ஆறு கவிதைகளை அனுப்பிவைத்தேன்.

kumudam.com-லிருந்து கடிதம் வந்தது. சில கவிதைகளும் ஒரு கவிதையும் அனுப்பி வைத்தேன்.

'ரெய்ஹான் பலகை' என்றொரு கதை விரைவில் முஸ்லிம் முரசில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.

இந்த ஆன்மீகத் தென்றலின் இலக்கியப் பணிகள் தற்போதைக்கு இவ்வளவே. இலக்கியச் சுடரின் ஆன்மீகப் பணிகள் குறித்தும் அறிய ஆசைப்படுகிறேன்.

உம் எழுத்துக்கு முன்னுரை தர எந்த காமெடி நடிகனும் தேவையில்லை. நான்தான் இருக்கிறேனே...

ஜஃபருல்லா நானாவுக்கு அநேகமாக இன்று cotaractக்கான கண் ஆபரேஷன் இந்நேரம் முடிந்திருக்கும்.

உமக்கொரு இன்ப அதிர்ச்சி: கூடிய விரைவில் இலக்கியச் சண்டமாருதம் கவிஞர் தாஜ் அவர்கள் உம்மைச் சந்திப்பார்! (அய்யோ!  - ஆபிதீன்)

ரமலானில் இந்திய நேரப்படி காலை 4:15 to 4:45 வரை தினசரி ஒளிபரப்பாகும் ராஜ் டி.வியின் ரமலான் நிகழ்ச்சியில் என் மகள் ஃபஜிலா 'இஸ்லாம் காட்டும் ஏகத்துவம்' என்ற தலைப்பில் பேசுவாள். சரியான தேதி தெரியவில்லை. அநேகமாக முதல் நாளாக இருக்கும். ·ஃபஜிலாதான் முத்லில் பேசினாள். ஷாயிஸ்தா Quiz-ல் கலந்து கொண்டாள். முடிந்தால் பாரும்.

மற்றவை உமது பதில் கண்டு,

அன்புடன்,

முஹம்மது ரஃபி

**
PB:  உமது கதைகளை எனக்கு - நம்பி - அனுப்பினால் ஸ்நேகா மூலம் வெளியிட முயல்வேன். பதில் தேவை.
***

அவ்வளவுதான். நன்றி : நண்பர் நாகூர் ரூமிக்கு . அந்த 'அய்யோ' மட்டும் இப்போது நான் சேர்த்தேன் ;-) - ஆபிதீன்

3 comments:

  1. நல்லாவே கடனை தீர்த்திருக்கிறீங்க.
    ‘ப்ராஃபிட் ரேட்’தான் (இஸ்லாமிக் பேங்க்கிங்ல இப்டித்தான் சொல்லணும்)அதிகமாக இருக்கும்போல!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete