Saturday, May 26, 2012

'ஜாமீன்' ராஜாவிடம் 15 கேள்விகள் - தாஜ்


மாலனின் ’2G : இதெல்லாம் யாரைக் காப்பாற்ற?’ பதிவைத் தொடர்ந்து....

***

Image courtesy : Cartoonist Satish
***

வரலாறு காணாத 2g ஊழல்:
15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த
நம்ம 'ஜாமீன்' ராஜாவிடம்
15 கேள்விகள்
- தாஜ்

***


உங்களை இப்பவும்...
மாண்புமிகு என்று அழைக்கலாம்தானே?

இப்போது நீங்கள்
மத்திய மந்திரியாக இல்லை என்றாலும்..
ஒரு மாத காலம்
பாராளுமன்றம் ஸ்தம்பித்த பின்னரே
நீங்கள் வெளியேற்றப்பட்டவர் என்றாலும்...
திகார் சிறையில் பதினைந்து மாத காலம்
சிறைப்பட்டு, ஜாமீனில் நீங்கள்
வெளிவந்தவர் என்றாலும்...
பரவாயில்லை

இன்னும்...
யார் வேண்டாம் என்றாலும்
நான் உங்களை அப்படியே அழைப்பேன்.

தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு
பலிகடா ஆக்கப்பட்டவர்
நீங்கள் என்பதால்
உங்கள் மீது இனம்புரியாத ஈர்ப்பு.

எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகும்
இத்தனை மாத சிறைவாசத்திற்குப் பிறகும்
நிஜத்தை துளியும் வெளிக்காட்டாத
உங்களது மனத் திடம் சாதாரணமானதல்ல!

மாண்பு மிகு ராஜா அவர்களே...
சென்ற பொதுத்தேர்தல் முடிந்து
மத்தியில்
கூட்டணி அமைச்சரவை அமைந்த போது,
டெல்லியில் லாபி அமைத்து
தொலைத் தொடர்பு துறைக்காக முயன்று/
பிரச்சனைகளும் செய்து/ கிட்டாததில் கோபம் கொண்டு
சென்னைக்கு திரும்பி வந்து அமர்ந்து/
பத்திரிகைகளைக் கூட்டி
மத்திய மந்திரி சபையில்
இடம் பெற மாட்டேன் என்றல்லாம் பேட்டியளித்து
விடாப்பிடியாக மீண்டும்
தொலைத் தொடர்பு துறையை கேட்டுப் பெற்ற
உங்கள் தலைவன்....
அதில் உங்களை அமர்த்திய நாட்கள் தொட்டு
நீங்கள் என் பார்வைக்கு நெருக்கம் ஆனீர்கள்.

உங்கள் தலைவர் ஒன்றைச் செய்தால்...
அதுவும் இப்படியெல்லாம்
அடம் பிடித்து செய்தால்...
அதில் ஆயிரம் அர்த்தமிருக்கும் என்று
நான் அறிவேன்.
அதனால் கூட
நான்... ,

நான் என்பது பெரிய வார்த்தை.
அதை விடுங்கள்.

நிஜத்தில்...
உங்கள் தலைவருக்கும்/
மத்திய அரசுக்கும் வேண்டாத
பெரியதோர் 'நெட் ஒர்க்'
சைலண்டாக
உங்கள் தலைவரின் இந்தக் கூத்தை
கவனம் கொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது.
நான் அவர்களில் ஒருவனாகவே
தள்ளி நின்று கவனித்தவன்
என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

இத்தனைக் கண்கள் கவனிக்கின்றன
என்கிற சுதாரிப்பில்
நீங்கள்
கூடுதல் கவனம் கொண்டிருக்கலாம்.

அன்றைக்கு மத்திய அரசில் சகலமும்
உங்கள் தலைவர் நினைத்த மாதிரிதான் நடந்தது.
கூடுதலாய்
உங்களை அப்பதவிக்கு
முன் நிறுத்துவதில்
அவர் மேலும் பலவும் நினைத்திருக்கக் கூடும்.
சரி...
அவர் என்னதான் அப்படி நினைத்தார்?

’தலித்’ என்ற கோதாவில்
உங்களை அந்த ஊழல் களத்தில் இறக்கிவிட்டு
அடுத்தவர்களின் இரக்கப் பார்வையில்
உங்களைக்கொண்டு ஆகுமானதை
செய்து கொள்வது.
தவறி சிக்கல் ஏற்படும்பட்சம் கூட
அதே யோசித்திருந்தபடிக்கு
’தலித்’ கூப்பாடு போட்டு
சற்று எளிதாக தப்பிக்க நினைப்பது.

’தலித்’ என்கிற பதம்தான்
தேசிய அளவில் செல்லுமே!
தலைவருக்கு புரியாதா என்ன?
அதனால்தான் என்னவோ
சிக்கலில் நீங்கள் வலுவாக சிக்கிய போது...
'தலித்தான ராஜாவை.....' என்று
உங்கள் தலைவர் அப்படியொரு
கூப்பாட்டைத் திரும்பத் திரும்ப
மஹா கரிசனையோடு போட்டுப் பார்த்தார்.
தழதழக்க உருகினார்.
தமிழகத்தையும் சேர்த்து
ஏக இந்தியாவிலும்
எவர் காதிலும் அது விழவே இல்லை.
குறிப்பாய் ஒரு ’தலித்’ தலைவர்களின்
காதுகளில் கூட அது விழவே இல்லை!
அதோடு... உங்களைப் பற்றிய
பொங்கி எழுந்த பெரும் கரிசனையை
சட்டென ஓர் சுதாரிப்புடன்
முற்றாய் கைகழுவிட்டார்.
இன்றுவரை கூட உங்களைப் பற்றி
எதுவும் அவர் வாய் திறப்பதில்லை.
சாணக்கியன் கணக்கு தப்பிவிட்டது.

அவர் போகட்டும்...
இங்கே
நான் முன் வைக்கும்
உங்களது தலைவர் குறித்த கேள்விகளுக்கு
ஒரேயடியாய் நீங்கள்
தெரியாது/ இல்லையென்றெல்லாம் கூறிவிட முடியாது.
என் கணிப்பை பொய்யென்றால்
என் வாதம் இன்னும் இன்னும்
பலமாகிக் கொண்டே இருக்கும்.

உங்களுக்குத் தெரியுமா?
தலையில்லாமல் வால் ஆடியதாக
சரித்திரமே இல்லை.

இந்தப் பெரும் நாடகத்தில்...
உங்களை நெருக்கத்திலும் தூரத்திலும்
கண்காணிக்கவும் கணக்கெழுதவும்
வேறொரு கோதாவில்
உங்கள் தலைவர்
தன் ரத்த சம்பந்தத்தை
அந்த டெல்லிப் பட்டணத்திற்கு
அனுப்பிவைத்த போதே
நீங்கள் சுதாரித்திருக்க வேண்டும்.
நாம் வெறும் அம்புதான் என்று
பெரும் படிப்பு படித்த உங்களுக்கு
பிடிபடாது போனதும் ஆச்சரியம்.

போகட்டும்
எல்லாம் ஆகிவிட்டது.
இந்திய எதிர்கட்சிகள்
இந்திய ஆதிக்கவர்க்கம்
இந்திய உயர் ஜாதி வட்டம்
இந்தியப் பத்திரிகைகள்
இந்தியாவின் இதர மீடியாக்கள்
இந்தியத் தணிக்கை அலுவலகம்
உங்களுக்கும் கீழ் பணி புரிந்தவர்கள்
சுப்ரீம் கோர்ட்
சி.பி.ஐ. கோர்ட்
உங்களது கட்சியில் உள்ள
பணம் படைத்தவரின் கரங்கள்
இன்னொரு திசையில்
உங்களது உயிர்த் தோழரின்
மர்ம மரணம்
பம்பாய் பணப் பறிமாற்றத்தின் ஆதாரம்
மேலும்
உங்கள் தலைவரின் பெரும் மௌனம்
இப்படி எல்லாம் ஒன்று கூடி
உங்களுக்கு பாதகமாக எழுந்து நிற்கிறது.

ஆனாலும்...
நீங்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது
நம்பிக்கை உண்டா...?
எனக்கில்லை.
அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கும் பட்சம்
நீங்கள் நிச்சயம் தப்பிக்கலாம்.

வரும் பாராளுமன்ற பொதுதேர்தலில்
உங்களது கட்சி
40க்கு 40 ஜெயித்து,
அதே நேரம் அங்கே டெல்லியில் ஜெயித்த
கட்சிகளுக்கிடையே
ஆட்சி அமைக்கும் வாய்ப்பு என்பது
தொங்கலில்
நிற்கும் நிலை ஏற்படுமெனில்
ஜெயித்த உங்கள் கட்சி
ஆட்சி அமைக்க
ஆதரவு கொடுக்கிறேன் பேர்வழியென
உங்களுக்காக...
உங்களை மீட்டெடுக்க பேரம் பேசப்படலாம்...
நீங்களும் ஜம்மென்று  
குற்றமற்றவராக வெளியே வந்துவிடலாம்!
நம்புங்கள்
இதெல்லாம் இந்திய அரசியலில் சகஜம்!

ஆனால்.... அதற்கு
அத்தைக்கு மீசை முளைக்க வேண்டும்
அத் தருணத்தில்
உங்கள் தலைவர்
தன் குடும்ப சொந்தங்களை மறந்து
உங்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
அவரோடேயே வாழும் குடும்ப முன்னேற்றம்
அவர் மனதில் எழுமேயானால்
உங்கள் கதி பரிதாபத்திற்குரியதுதான்.
அதான் சொன்னேன்...
அதிர்ஷ்டம் வேண்டும் உங்களுக்கு.

போகட்டும்..
இப்போது என் கேள்விக்கு வருகிறேன்.
மேலே வளவளவென்று
ஒருபாடு நிகழ்வுகளை
உங்களுக்கு சொல்லிக்காட்டியதற்குக் காரணம்...
இங்கே...
நீங்கள் நான் எழுப்பும் கேள்விகளுக்கு
முறையான பதிலைச் சொல்வீர்கள் என்பதினால்தான்.

தலைப்பில் நான் குறிப்பிட்டு இருந்த மாதிரி
உங்களிடம் கேட்கணும் என்று
15 கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தேன்.

உங்களது தலைவர் கூறியது போல்
’தலித்’ என்கிற காரணத்தினால்தான்
உங்களை இந்த ஊழலில் சிக்கவைத்தார்களா?

உங்களது தலைவரின் மனைவியார்
இதில் சிக்கவேண்டியிருந்தும் 
அந்தக் கைது
அவரது மகளோடு முடிந்து போனதே அது எப்படி?

உங்களது உற்ற தோழனும்
உங்களது ஊர் நபரும்
சென்னையில் பெரிய அளவில்
ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்தவரான
ஜாகீர் உசேன் அவர்கள் மர்மமான முறையில்
இறந்து போனதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உங்களது தலைவரின் பேரன்
இந்த ஊழலுக்கு கட்டியங்காரனாக இருந்தும்
அவர் இன்னும் தப்பிப்பது எப்படி?

- இப்படி,
ஒரு பதினைந்து கேள்விகள்
நான் தயார் செய்து வைத்திருந்தாலும்
அவைகளை
இப்போது உங்களிடம் கேட்க
ஏதுவான நேரமாக இது தெரியவில்லை.

இங்கே இப்ப
பதினைந்தாவது கேள்வியினை மட்டும்
உங்களிடம் கேட்க நினைக்கிறேன்.
ப்ளீஸ்...
மறைக்காமல் பதில் சொல்லுங்கள்.

உங்களுக்கு எதிராக, விசாரணை கோர்ட்டுகளில்
திரும்பத் திரும்ப
2-ஜீ ஊழலை ஊர்ஜிதப் படுத்துவதாகவே
நடவடிக்கைகள் போய்க்கொண்டு இருப்பதை
முன் வைத்தே இக்கேள்வி.

வரலாறு காணாத அந்த ஊழல் பணத்தில்
மத்திய மந்திரிகளில் இருந்து
உங்களது துறை சார்ந்த அதிகாரிகள்/
இடைத் தரகர்கள்/ பெரிய மீடியாக்கள்/
டெல்லியிலும் தமிழகத்திலும் உள்ள
எதிர்க் கட்சிகள் என்று பலருக்கும்
அந்த ஊழல் பணம் பட்டுவாடா ஆகியிருக்கக் கூடும்!
ஏன் உங்கள் பங்காகக் கூட
ஒரு குறிப்பிட்ட தொகை
உங்களுக்கும் கிடைத்திருக்கும்!
இது... அரசு சார்ந்த ஊழல் பணத்தை
பங்கு போடும்
அங்கீகரிக்கப்பட்ட முறையாகத்தான்
காலம் காலமாக நடந்தும் வருகிறது!
இங்கே
நான் குறிப்பிட்டுக் கேட்க நினைக்கும் கேள்வி...
உங்களது தலைவருக்கு அல்லது தலைமைக்கு
எந்த அளவில் எத்தனைக் கோடிகள்?
மூட்டை கட்டி கூட்ஸில் அனுப்பப் பட்டதா?
அல்லது...
ஆகாய மார்க்கமாக கார்கோவாகவா?
தொகை நிறை கொள்ளாத அளவிலானதாயிற்றே!!!
அதான் இப்படி கேட்டுவிட்டேன்.
வாழ்க ஜனநாயகம்.

சிக்கலான கேள்விதான்.
பதில் சொல்வதில் கூட
உங்களுக்கு தயக்கமும் ஏற்படலாம்.
இது உங்களது நலனை மனதில் கொண்ட கேள்வி.
அத்தனைப் பணமும் நீங்கள் ஒருவரே
முழுமையாய் எடுத்தாண்ட மாதிரி
இங்கே ஒரு பேச்சு இருக்கிறது.
அது...
இப்போது இங்கே நொறுங்கி விழவேண்டும்.
அந்தக் கரிசணையில்தான் கேட்கிறேன்.
ப்ளீஸ்.. சொல்லிவிடுங்கள்.
***




நன்றி : சீயாழி போலீஸ்   | satajdeen@gmail.com

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நல்ல கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்கள் பணி சிறக்க உங்கள் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்

    எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete