Wednesday, April 10, 2024

ஓணான் மார்க்கம் (சிறுகதை) - ஆபிதீன்


கைலிக்குள் இருந்த பழைய கதை இது! ஆமாம், நிஜமாகவே பீரோவிலிருந்த கைலிகளுக்குள் எப்படியோ புகுந்திருந்தது. தன்னைப் பற்றிய கதை என்று தெரிந்துகொண்டு சரியான இடத்தில் மறைந்துகொண்ட அதன் புத்திசாலித்தனத்தை என்னென்பது! 

நேற்று அதை உருவும்போது, ’உருப்படாத கதை’ என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் தூக்கியெறிந்து இலக்கியத்தை நிலைநாட்டிய கவிஞர் ஒருவரின் நினைப்பும் வந்தது. நல்ல மனுசன். மவுத்தாகிவிட்டார். 

'கொஞ்சம் மாத்துனா ஓரளவு தேறும்’ என்று அவர் சொன்ன யோசனையை முடிந்தால் பிறகு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ். நல்லவேளையாக எழுதிய என் பெயர் அப்படியே இருக்கட்டும் என்றார். அல்ஹம்துலில்லாஹ். ஏனெனில், சும்மா தமாஷாக பேசிக்கொண்டிருந்தாலே நம் அனுபவம் இன்னொருவரின் பெயரில் அடுத்த நாள் வந்துவிடுகிறது.

சரி, கதையின் தலைப்பு : ஓணான் மார்க்கம்

இனி படிக்கலாம்.
***
X வடிவத்தில் இருக்கும் 'ரொஹையான் கட்டை' மாதிரி யஹ்யா மரைக்காயரின் கைகள் பின்னியிருந்தன. தாடை , மேல் விரியும் புள்ளியில் கவலையோடு உட்கார்ந்திருந்தது. முழங்கை மூட்டுக்கள் கணக்குப்பிள்ளை மேஜை போல இருக்கும் ’கல்லா’வில் ஊன்றியிருக்க, கடைத் தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார் அவர் . 

வெயிலை மறைக்கப் போட்டிருந்த மரப்புதான் அசைந்து கொண்டிருந்தது.
 
ஒரு ’கைநேஞ்சி’ கூட விற்றபாடில்லை. 'ஓணான் மார்க்' என்கிற பெயரே சரியில்லையே முதலில். சாயம் போகாதது -அல்லது - போனாலும் அடுத்த வண்ணம் வந்துவிடும் என்பதை symbolicஆக உணர்த்தத்தான் அந்த ஓணான் என்று மரைக்காயர் சொன்னார் எல்லோரிடமும். அது பச்சோந்தியல்லவா என்று கடைத்தெருவில் கேட்டபோதுதான் அவருக்குத் தன் தவறு புரிந்தது. ஆனால் அதற்குள்ளாக 'ச்சாப்பு' குத்தப்பட்டு  லேபிளும் ஒட்டப்பட்ட கைலி பண்டல்கள் வந்து இறங்கி விட்டன. உருவம் கூடுமா கூடாதா எனும் வாதங்களுக்கு காது கொடுக்காமல் 'விசில் மார்க்' லேபிள்களுக்கு தன்னுடைய ஓணான் எவ்வளவோ பரவாயில்லை என்று மரைக்காயர் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார். உண்மைதான். விசில், silhouetteல் இருக்கும்போது அசப்பில் அது தரும் உருவமும் உணர்வுமே வேறு...! வட நாட்டில் எங்கோ ஒரு கோசா (அலி) கூட  தான் விரும்பிப் பெற்ற அந்த சின்னத்தில் தேர்தலில் நின்று ஜெயித்தாள்/ர். மத்திய மந்திரியாகவும் ஆகியிருக்கக் கூடும்.

இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கடை போர்டு கூட ரெடியாகி விட்டது. விலை உயர்ந்த பிளாஸ்டிக் சைன் போர்டு அல்லதான். ஆனால் அதை விடப் பளபளப்பாக மிட்டாய் ரோஸ் கலரில் ஆர்டிஸ்ட் சையதுவாப்பா செய்து கொடுத்த தகர போர்டு. ஓணான் ஒன்பது கலரில் இருந்தது - வரைந்தவனுக்கு காசு கேட்டுக் கொண்டு.

'வுடு! எனக்கு கிடைக்கிம்டு இருந்தா நான் பண்டி பிராண்ட் போட்டு வித்தாலும் பறந்து போயிடும்' என்றார் மரைக்காயர். 

'அதுக்கு பண்டியையே வித்துக்கிட்டு இருக்க வேண்டியதுதானெ..பஜார்லே வந்து ஏன் நாத்தம் பண்ணிக்கிட்டு இரிக்கனும்? இந்தோ இக்கிது பள்ளிவாசல். அதுக்கு போவாம கடை முன்னாலேயே ஒண்ணுக்கு இருந்தா எவனாவது வருவானா வாங்க , அட, பார்க்க?' என்றார்கள் பாவா பஜாரில்.

அதற்குத்தான் அ·ப்ஜலை வேலைக்கு வைத்திருக்கிறாரே மரைக்காயர்! labelஇல் உள்ள ஓணானையும் மரைக்காரரின் ஓணானையும் அவன் ஒப்பிட்டு நோக்க ஒரு அரிய வாய்ப்பு.

அதையாவது பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் அந்த குடலைப் பிடுங்கும் மூத்திர நாற்றம்... அ·ப்ஜலுக்கு அது கொடுமையாக இருந்தது. ஏதோ பெரிய வியாதி பிடித்த உடம்பிலிருந்து வெளியாகும் மூத்திரத்தின் நாற்றம்...

வேறு கடையில் வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால் 'சொல்லு கேக்காத புள்ளெ' என்றுஅவன் உம்மாவுக்கு கோபம் வருகிறது. மரைக்காயர் அவன் வாப்பாவுக்கு தூரத்து சொந்தக்காரராம். 'என்னா ஒரு ஓணான் தாண்டுற அளவுக்கு தூரம் இக்கிமா?' என்று அ·ப்ஜல் வெடைத்தான். கோலாலம்பூரில் உள்ள அவன் வாப்பாவுக்கு கேட்டு விட்டது!

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு எல்லா நல்ல முஸ்லீம் பிள்ளைகளையும் போல அ·ப்ஜல் அரபு நாடு போவதற்காக காத்துக் கொண்டிருக்கும்போது அவன் வாப்பாவின் தற்காலிக முடிவு , சம்பளம் சரியாகக் கொடுக்கும் மரைக்காயரின் கைலிக் கடல். 

நாளுக்கு ஒன்றாய் கைலிக் கடைகள் நாவூரில் முளைக்கின்றன. கைலி மலைகளின் நடுவே ஊர் கணவாய் போல ஓடுகிறது என்று சொல்லலாம். சென்னையில் உள்ள பெரும்பெரும் கைலிக் கம்பெனிகளுக்கு ஏஜெண்டாக மாறிக் கொண்டு கண்ணை அள்ளும் வண்ணத்திலும் டிசைனிலும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கம்பெனி சின்னங்கள் கவர்ச்சிகரமாக இருந்தால் கைலிகளில் பெயர்களோ நேற்றுதான் seal உடைக்கப்பட்ட நடிகைகளின் பெயர்களில் மனதை அள்ளுகின்றன. அல்லது லேட்டஸ்ட் ஹிட் படங்களில் பெயர்கள். கம்பெனி பெயருக்கு ஒன்றும் கைலி பெயருக்கு ஒன்றுமாக ஜனங்கள் வாங்குகிறார்கள். ஒன்று இடுப்புக்கு கீழும் மற்றொன்று இடுப்புக்கு மேலுமாக இருக்கலாம். வெறும் கைலிகள் மட்டுமின்றி பனியன்கள் , ஜட்டிகள் , பெண்களுக்கான பத்தாய் கைலிகளும் வேறு... கூட்டம் நிரம்பி வழிகிறது அந்தக் கடைகளில்.

மரைக்காயரோ  விலை மலிவு என்று எங்கிருந்தோ மெஷின் தறியிலிருந்து வாங்கிவந்து கைலிக்குள் ஓணானை விடுகிறார். வியாபார மூளையாம். ஆமாம், ஓணானுக்கு மூளை இருக்கிறதா? 'ஓணானை அடித்தால் ஒன்பது நன்மை' என்று பையன்கள் சொல்வது அதற்குத் தெரியுமா ?

'அது எப்படிங்கனி அறுவதுக்கு நாப்பதும் எம்பதுக்கு எம்பதும் இருவதுக்கு இருவது மாதிரியே இக்கிது?!' என்று மரைக்காயரின் நண்பர் கேட்டார் . 'பாயடி'யும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்த அ·ப்ஜல் , மரைக்காயரின் கோபத்தைப் பார்த்து அடக்கிக் கொண்டான்.

மரைக்காயர், 'என்னட size சரியா இக்கிம்ங்கனி!' என்றார்.

'உம்மட size ஆ? 'உமர் ஹத்தாப்’ட மாதிரிலெ ஒன்றரை முழம் இக்கிம்!'

நண்பரின் கேலியை மரைக்காயர் பொருட்படுத்தவில்லை. ' XXX787 கம்பெனியை அடிக்க முடியாது' என்று சொன்ன நண்பரின் மூக்கை அறுக்க XXX787 கடையெலேர்ந்து ஒரு 54 இஞ்ச் ஒண்ணு எடுத்து வா தம்பி' என்றார் மரைக்காயர். எடுத்து வந்து ஓணான் மார்க்கோடு அளந்ததில் ஒணானின் நீளம் அதிகமாக இருந்தது. 'இல்லே... அதுக்குப் போட்டியா இக்கிற XXX785தான் சரியா இக்கிம் ' என்றார் நண்பர் விட்டுக் கொடுக்காமல் . 'அப்போ XXX785 லெ ஒண்ணு எடுத்து வா' என்றார் மரைக்காயர். அதுவும் ஓணானை விட கம்மிதான்!

நண்பருக்கு அவமானமாகப் போய்விட்டது. 'சரிதான் ரெண்டு பேருமே ஒரு சாமானுக்கு பொறந்தவனுவதானே' என்றார்.

மரைக்காயருக்கு எதையோ நிரூபித்து விட்ட திருப்தி! அவரது கைலி ஓணானுக்குப் பிறந்ததாக்கும்..

திருப்தி , எதையாவது விற்று கிடைப்பதில் வரும் லாபத்தில் அல்லவா வர வேண்டும் ? 

அ·ப்ஜலுக்கு முன்னால் கால்மாட்டு சந்திலிருந்து ஒரு சின்ன பையன் வேலைக்கு வந்தான். கடை ஆரம்பித்த புதிது. கடை ஆரம்பிக்கவே ஒரு வருடம் ஆகியிருக்கிறது. மரைக்காயர் இலேசில் யாராலும் அணுக முடியாத மனாம் சாபுவை  அணுகி , கடை திறக்கச் சொல்லும் உத்தரவு வரும் கனவுக்காக அலைந்து , கடைசியில் மனாம்சாபுவுக்கு அந்த கனவு வந்ததும்தான் கடையைத் திறந்தார். மனாம்சாபுவுக்கு உத்தரவு கொடுத்தது கூட ஓணாணாகத்தான் இருக்கும். கனவின் மூலமாக மனாம்சாபு கைலியையும் விற்க முடியுமா? அதை மரைக்காயர்தான் செய்ய வேண்டும்.

மரைக்காயர் கைலி விற்க வேண்டும் என்று கடையில் உட்காராமல் தர்காவில் உட்கார்ந்தார் நேர்ந்து கொண்டு!

அவ்வப்போது கடைக்கு வந்து பையனிடம் விசாரணை: 'என்னாங்கனி .. ஏதாவது வித்தியுமா?'

'இல்லே மாமா'

'ஹைர் !.. நடக்கும்; பாவா நடத்திக் காட்டுவாஹா!'

பத்து நாளைக்குப் பிறகு நடந்தது. 

பையன் இரண்டு ரூபாய்க்கு 'போனி’ பண்ணியிருந்தான்! அது கடை சாமானல்ல. பக்கத்து சிங்கப்பூர்க் கடை ஆள் , விற்ற பிறகு காசு தரச் சொல்லியிருக்கும் சின்னப் பிள்ளைகள் ஜட்டி. made as china ! . இதில் மரைக்காயருக்கு பாதி லாபம் இருக்கிறது என்றாலும் பக்கத்து கடைக்காரனின் வியாபார சாமர்த்தியத்தை அவரும் காட்டியிருந்தால் இடம் மாறிய சந்தோஷத்திலாவது ஓணான் ஒன்று விற்றுப் போயிருக்கும். சாமர்த்தியம் சுத்தமாகக் கிடையாது மரைக்காயருக்கு. இருந்திருந்தால் மற்ற கடைக்காரர்கள் செய்வது மாதிரி  கூரையை கடைத்தெரு பாதிவரை இழுத்து கைலிகளை தொங்கவிட்டு , கூரை நிழலின் சுகத்துக்காக ஏங்கும் டைல்ஸ் தரையும் போட்டிருப்பாரே ! எப்படியோ அவர் கல்லாவும் காசை பார்த்து விட்டது.

மரைக்காயருக்கு சந்தோசம். அதிர்ஷ்டத்தை வாங்கும் தகுதி நமக்கு இருக்கிறதா இல்லையா  என்று check பண்ணிக் கொண்டுதான் அதிர்ஷ்டம் வரும். இப்போது மரைக்காயருக்கு தகுதி வந்து விட்டது. இனிமேல் கடைக்கு முன் தேங்கியுள்ள மூத்திரக் குட்டை ஓடி மறைகிற மாதிரி ஒரு பெரிய மழை வரத்தான் போகிறது.

கல்லாவில் முதன் முதலாக காசை பார்த்து சந்தோஷத்தில் 'என்னடா வித்தே..?' என்றார் பையனிடம் செல்லமாக. கெட்டிக்கார பையன். ஆனால் அநியாய மறதி. 

'ம்..ம்... ஒண்ணு வித்தேன் மாமா..' என்றான்.

'அதுதான் எதுண்டு கேக்குறேன்'

'இல்லே மாமா...ஒரு பொம்பளை வந்தாஹா.. 'பாபா செட்' இக்கிதாண்டு கேட்டாஹா.. இல்லேண்டேன்.. அப்புறம் வெறெ என்னமோ ஒண்ணு கேட்டாஹா. அதை வித்தேன். அது.. அது...'

'பரவாயில்லே.. ரெண்டு ரூவாயா இந்தாலும் கணக்குலே எளுதனும்லே நான்?. இப்படி இஞ்சிப் பேயன் மாதிரி இரிக்கக் கூடாது. யோசிச்சி வை. நான் தொழுவிட்டு வந்துடுறேன்..'

அசருக்கு போன மரைக்காயர் இஷாவையெல்லாம் முடித்து விட்டு கடை கட்டுகிற நேரத்தில் வந்து சேர்ந்தார். பையனிடம் கேட்டார் : 'நினைப்புக்கு வந்திச்சிலே ? சொல்லு..என்ன வித்தா ?'

'ஒண்ணு வித்தேன் மாமா ரெண்டு ரூவாய்க்கி. அது.. அது என்னாண்டுதான்..' - பையன் இழுத்தான் எச்சிலை விழுங்கிக் கொண்டே.

'செல்லக்கனி சாபுட்டெ கணக்கு போட்டு பாக்கனுமோ?'

'இல்லே மாமா..ஒண்ணு வித்...'

'சரி ! நீ எழுது. நான் சொல்றேன் என்னா சாமாண்டு..' - கணக்கு புத்தகத்தைத் தூக்கி பையன் முன் போட்டார் மரைக்காயர்.

'ம்... எழுது... உம்மாட பப்பான் - ரெண்டு ரூவா!'

பையன் எப்படி இருப்பான் ?

அப்படி ஏதாவது ஏடாகூடாமாக சொல்லி விடுவாரோ என்று அ·ப்ஜலுக்கும் பயமாக இருந்தது. தவிர எதையாவது விற்றால் அல்லவா சம்பளம் கொடுப்பார்? அல்லது கைலி ஒன்றை சம்பளமாகக் கொடுத்து விடுவாரா?
 கடை இந்த வள்ளலில் இருக்கும்போது அ·ப்ஜலின் புரட்சிக்கார சென்னை நண்பன் ஒரு நாள் வந்தான். மரைக்காயர் , ஒரு பார்வைக்கு வேலைக்காரன் மாதிரிதான் இருப்பார். அதற்காக தன் நண்பனுடன் உட்கார்ந்திருப்பவர் யார், என்ன என்று கூட யோசிக்காமலா கணேஷ் பேசுவது?

'திருடனும் ! நாம எடுக்கப் போற art filmக்கு இந்த கடையிலிருந்து வர்ற சம்பளம் மட்டும் சரி வராது.  தெரியுமா, மெஸ்னியாவ்ஸ்யாகி கூட கேமராவை திருடித்தான்டா படம் எடுத்தான்..'

கெடுத்தானே பாவி!

மரைக்காயரின் முகம் மூத்திரம் குடித்த ஓணான் மாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சந்தோசம் இருக்கும் என்பது அ·ப்ஜலின் அனுமானம். ஏதோ ஒன்று கடையில் இருக்கப் போய்தானே திருடச் சொல்கிறான் ?

ஒரு சல்லி கூட விற்காத கடையில் ஓணானைத்தான் திருட வேண்டும் - 'அல்லாஹும்ம சல்லி வ சல்லி' என்று சொல்லிக் கொண்டு. 
ஒரே ஒரு முறை கைலி விற்றதுதான். ஆனால் காசு வரவில்லை. வீட்டிலிருந்து கொண்டு அனுப்பச் சொன்னார் ஒரு மேலத்தெரு காக்கா. அவர் ·போனில் சொன்னபடியே ஒரு ரெட்டை மூட்டுக் கைலியை , கடனுக்கு தைத்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அ·ப்ஜல் காசுக்கு நின்றான். 'நாளைக்கி கடைத்தெரு வரும்போது 'பச்சை' (டாலர்)ஐ மாத்தி தரேங்கனி... யஹ்யாட்டெ சொல்லும்..' என்றார் அவர். அடுத்த நாள் அவருடைய மைய்யத்துதான் 'கலிமா..ஷஹாதா.!' என்று மூமின் certificate வாங்கியபடி பஜாரில் கடந்து போனது. போனது எளிமையான 'சந்துக்'. மரப்பெட்டி அல்ல. டாலர் இன்னும் மாற்றப் படவில்லை போலும்...

விற்ற ஒரே கைலிக்கும் காசு கிடைக்காத வருத்தத்தை விட 'ஓணானைக் கட்டியதால்தான் அவர் மெளத்..' என்று XXX785 கைலி கடைக்காரன் கிளப்பிய பிஸாது யஹ்யா மரைக்காயரை ரொம்பவும் பாதித்தது. 'எந்த நேரத்துலே இதை சொல்றான் பாரு...! ஒரு தொழுவாளியெ மனம் கசங்க வைச்சவனை அல்லாஹ் சும்மா வுட மாட்டான்.. பாத்துக்கிட்டே இரு..' என்றார் அ·ப்ஜலிடம். பிஸாதை மாற்ற ,  மெளத்தானவர் எப்போதும் ஓணானைத்தான் கட்டுவார் பிரியமாக என்று சலாம் கொடுக்க வந்த அத்தனை பேரிடமும் சொல்லிக் மரைக்காயர் புலம்பிக் கொண்டிருந்தில் வேறு எல்லோருக்கும் தெரிந்து போனது !

அன்றிலிருந்து வாடிக்கையாளின் வருகைக்காக மரைக்காயரின் முகம் வானத்தை வானத்தைப் பார்த்துக் கொண்டு ஓணான் போலவே இருந்தது.  நாக்கு திடீரெரென்று நீண்டு ஒருநாள் கிராக்கியைப் பிடித்தே விட்டது - தெரிந்த ஒரு சாபு மூலம். ஜியாரத்திற்கு வந்த பாம்பேகாரன். 'க்யா தாம் ஹே?' என்று கேட்டான் ஒரு கைலியைப் பார்த்து. 'தாம்' (dhaam) என்றால் விலை என்று சாபுக்கு தெரியவில்லை. அவருக்குத் தெரிந்தது அடுத்து கிராக்கியை முடி இறக்கக் கூட்டிக் கொண்டு போவதுதான். அ·ப்ஜலுக்கும் தெரியவில்லை. செளதி போகும் ஏற்பாட்டிற்காக பாம்பே சென்று திரும்பி வரும்போது ரயிலில் ஒரு கிழவி அவனிடம் கேட்டாள். 'பாம்பே கயா?'. அர்த்தம் தெரியாமல் பேமுழி முழித்துக் கொண்டு காது செவிடானவன் போல நடித்தவன் அவன். 'தாம்' தெரியுமா இப்போது ? மரைக்காயர்தான் உதவிக்கு வந்தார். கைலி பாஷையில் 'டாம்' என்றால் கட்டம் என்று அர்த்தம். ஹ, இது தெரியாதா அவருக்கு?

'யே படா படா டாம் ஹை !'.

பாம்பேகாரன் ஏற இறங்க அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு ஓடினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

மரைக்காயரின் சோகத்தைப் போக்க அவர் வீட்டு மனுஷர்கள் கைலி வாங்கினால்தான் உண்டு. ஆனால் அவர் வீட்டுப் பெண்களோ 'கைலிண்டா ஒரு ’ஜீமத்’ இக்கெ வாணாம்? இஹல்ட்டெ கைலி வாங்கி உடுத்துனா பேண்டவன் கூட எந்திரிக்க மாட்டான் பாத்து!' என்கிறார்கள். பேலுபவன் முன்னால் இவர்கள் ஏன் போக வேண்டும் ? 

நம் மதிப்பு நமக்கு எப்போதுமே தெரிவதில்லை. மனசெல்லாம் வெளியில்தான் பெருமை காண்கிறது. 

மனாம் சாபுக்கும் இந்த கதிதான். வெளியூர் ஜனங்கள் அவர் கனவு கண்டு சொல்லும் உத்தரவுக்காக மண்டுகிறார்கள். ஆனால் அவர் வீட்டு பெண்களோ தன் வீட்டு பையன் அரபுநாடு போவானா என்று கணக்கு போட்டுப் பார்க்க குஞ்சுக்கொல்லை ஹஜ்ரத்தைப் பார்க்கப் போகிறார்கள் . சமயத்தில் அரபுநாடே போய் விடுகிறார்கள்!

உள்ளூர் என்றாலே உதவாதது என்று பார்த்தால் வெளியூர் ஆட்கள் வந்து நாவூர் ஓணானைப் பிடித்துக் கொண்டு போக வேண்டுமே.. ஏன் வாங்கவில்லை? எப்படிப் பார்த்தாலும் கைலி டிசைன்கள் நாவூரில் கிடைப்பதுபோல அவர்கள் ஊரில் கிடைக்குமா? ஒவ்வொரு வருடமும் கைலிகளுக்கு புது டிசைன் அறிமுகப்படுத்துவதே நாவூர் கந்தூரியில்தானே.. என்னென்ன வகை கட்டங்கள்..! சட்டைத் துணியாகக் கூட உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் மரைக்காயரோ புதுமை என்று 'கம்பம்' இல்லாத கைலிகளை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறார். ' கைலிட பின்பக்கம்டு தெரிய ஒரு டிசைனா ? அட..போங்கப்பா' என்கிறார் பெருமை வழிய.

'இது என்ன பெரிய நூதனமா ?' என்று பஜாரில் கேட்டார்கள். அவர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. பட்டுப் புடவைகளுக்கு வருகிற மாதிரி அடியில் பார்டர் போட்டெல்லாம் புதுமைகள் வருகிறபோது மரைக்காயரின் புதுமை தூசு அல்லவா?

'அப்ப முன்னாலேயும் பின்னாலேயும் ஒட்டை போட்டுத்தான் விக்கெனும்..' என்றார் மரைக்காயர்.

நினைத்துப் பார்த்தாலே சிரிப்பாக இருந்தது அ·ப்ஜலுக்கு. 'இவர்களுக்கு மட்டும் தடை இல்லை என்றால்..' என்று டி.வியில் இரட்டைத்தொப்பி மார்க் கைலி விளம்பரம் வரும். வக்கீல், டிரா·பிக் போலீஸ், டாக்டர் எல்லோரும் கைலிகளோடுதான் அலைவார்கள் டூட்டி நேரத்தில். அவர்கள் எல்லாரும் மரைக்காயர் சொன்ன யோசனை படி கைலி கட்டியிருந்தால் ஜோராக இருக்கும் இல்லையா ? 'நல்ல வேளை ஜனாதிபதியை வுட்டுப்புட்டானுவ!..' என்று கிண்டல் செய்தாலும் 'விளம்பரம் நல்லாத்தான் இக்கிது..' என்று சொன்ன மரைக்காயரை அசத்த, 'படிச்ச புள்ளெ'யான அ·ப்ஜலும் ஒரு caption போட்டான். ஆறுமுகம் பிரெஸ்ஸில் 1000 நோட்டிஸ் அடித்தார்கள்.

கைலிகளை வாங்காதீர்கள் !

அசத்தலாக இல்லை ? அதாவது தரமில்லாத கைலிகளை வாங்காதீர்கள்; ஓணான் மார்க் கைலிகளையே வாங்குங்கள் ! இது நோட்டிஸ் அடியில் சின்ன எழுத்தில் வரும். ஆனால் யாருக்கு அவனது விளம்பர யுக்தியையெல்லாம் கவனிக்க நேரமிருக்கிறது ? ஜும்ஆ தொழுதுவிட்டு ஓடிவருபவர்கள் , நேர்ந்துகொண்டு பவுருவதற்கு காத்திருக்கும் பாலைப் பார்ப்பார்களா அல்லது பிரயோஜனமில்லாத நோட்டிஸ்களையா ? முதல் வரியில் மட்டும் கண்ணை ஒட்டி வேறு ஏதாவது படம் தெரிகிறதா என்று பார்த்து விட்டு ஓணானைப் பார்த்ததும் கசக்கி கீழே எறிந்து விடுகிறார்கள்.

மரைக்காயர் அதற்கப்புறம் விளம்பரம் பற்றி ஏதும் அவனிடம் பேசுவதில்லை.

பக்கத்து கிராமங்களுக்கு சைக்கிளில் சரக்கை எடுத்துச் சென்று கடனில் கொடுத்து வாங்கும் முறை பற்றி அவன் சொன்னதையும் காதில் வாங்கவில்லை. ஒரு விளம்பரத்திலேயே திறமையைப் பார்த்து விட்டார்.

பிரபலமாக இருக்கிற XXX பிராண்டுகளில் கொஞ்சம் வாங்கிப் போடலாம் கூடவே. ஆனால் அவர்கள் கடனுக்கு கொடுக்க மாட்டார்கள். பணத்திற்கு மரைக்காயர் எங்கே போவார் ? குவைத்தில் இருக்கிற அவர் மகன் , மலேயா சபரை முடித்துவிட்டு ஊருக்கு வந்த தன் வாப்பாவுக்காக இரக்கப்பட்டு அனுப்பிய பணத்தில் இந்த சரக்கு வாங்கவே அவருக்கு மூச்சு வாங்கி விட்டது.  தர்கா கடையாக இருப்பதால் வாடகை கம்மியாக இருப்பதாலும் ஓணான் எப்படியோ ஓடுகிறது. ஓடுகிறது என்று சொல்வது கூட தப்புதான். 

ஒன்றிரண்டாவது விற்க கந்தூரி சமயத்தில்தான் கடையை திறந்திருக்க வேண்டும். ஆனால் சார்மினார், தாஜ்மஹால் போன்ற பிரமாண்டமான வடிவங்களில் ஸ்டால் போட்டு கூடவே பிளாஸ்டிக் வாளிகளும் இனாமாகத் தந்து பெரிய கம்பெனிகள் தூள் பறத்தும் போது மரைக்காயரின் ஓணான் என்ன செய்து விட முடியும்? அந்தக் காலத்தில் பீடி கம்பெனிகள் விளம்பரத்திற்காக பெரிய பெரிய ஆட்டக்காரிகளையெல்லாம் கொண்டு வந்து தங்களின் vanக்கு மேல் குட்டைப் பாவாடையோடு ஆட விடுவார்கள் - கீழிருந்து பார்ப்பவர்களின் பீடி நன்றாக புகைவதற்காக. அது போல் செய்தால்தான் உண்டு. அப்போதும் ஓணான் விற்குமா என்று சந்தேகம்தான்

பேசாமல் இந்த கைலிகளை யாரிடமாவது தள்ளி விட்டுவிட்டு சிங்கப்பூர் கடையாக மாற்றி விடவேண்டும். அந்த காலம் மாதிரியா கஸ்டம்ஸ் பிரச்சனை எல்லாம்? விற்பவர்களை ஓட ஓட  விரட்டி அடித்து, பூட்ஸால் மிதித்த அதே கஸ்டம்ஸ் ஆபீஸர்கள்தானே  வகை வகையாய் ·பாரின் சாமான்களுக்கு தேடி வருகிறார்கள் இப்போதெல்லாம். அரசாங்கம் மாதிரியே சட்டமும் வேடிக்கையானது.  யோசித்த அ·ப்ஜல், மரைக்காரரிடம் சொன்னான்.

'அட, நல்ல ஐடியாதாங்கனி..!' என்று அவனை ஆச்சரியமாக பார்த்தார். தன் நண்பனின் மகனா புத்திசாலித்தனமாக பேசுவது !

'வைக்கலாம்தான்... ஆனா யஹ்யாவுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்றார் பொன்னம்பலம். தையற்காரர். தமாஷானவர். பக்கத்து கடை வாசலில்அவரது மெஷின் இருக்கிறது. அது எந்நேரமும் கைலி தைப்பதில் பிஸியாக இருப்பதால் மரைக்காயருக்கு பொறாமை உண்டு.

'ஏன் அண்ணே..' என்று கேட்டான் அ·ப்ஜல்.

'விக்கெ வர்ற பொம்பளைட்டே 'ஐட்டத்தைக் காட்டுங்க..' ண்டு சொல்லனுமே !'  

கைலிக்கடைகாரர்களும் சாதாரணமானவர்களா ? ஆண்கள் இல்லா வீட்டிலிருந்து கைலி எடுக்க வரும் பெண்களிடம் அலாதியான கரிசனத்துடன் 'விரிக்கவா?' என்று சொல்வார்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே. கையில் கைலிகள் ஆடும், எச்சரிக்கையாக.

அருவருப்பாக பேசுகிறார் என்று பொன்னம்பலத்தை தள்ளி விட்டுவிடவும்  முடியாது. அவர் வேறொரு கைலிக்கடை பக்கம் மெஷினை கொண்டு போனால் கைலியை தைக்க வருபர்களின் கருணைப் பார்வையையும் இழந்து விட வேண்டியிருக்கும். பஜாரில் இரண்டு தையற்காரர்கள் இருந்தாலும் பொன்னம்பலத்தின் தையல்தான் பிரபலம். 

கைலிகள் ஏன் தைக்கப்பட்டே கம்பெனிகளிலிருந்து வருவதில்லை என்பது ஒரு புதிர். கைலியை வாங்கி , பிறகு தைப்பதற்கு என்று 3 ரூபாய் ஏன் கொடுக்க வேண்டும்? ஒருவேளை கைலிக்கடைக்காரர்களே இப்படி ஒரு ஏற்பாடு செய்து கொண்டு கமிஷன் அடித்துக் கொள்கிறார்களா? இந்த வியாபார நுணுக்கங்கள் இருக்கட்டும். பொன்னம்பலம் , வேட்டிபோல பிரிந்தே வரும் கைலியை மூட்டும்போது பட்டியின் அகலம் அத்தனை மெல்லிசாக - கைலியின் அகலம் மோசமாகக் கெடாமல் -இருக்கும். உடுத்தும்போது குப்புறக் கவிழ்த்த V மாதிரி அமைந்து எதுவும் தனியாக முன்னால் தூக்கிக் கொண்டு வராது. விஷேசமான தையல். ஏதோ கோட்டு சூட்டு தைப்பவன் மாதிரி 'தையற் கலைஞர்' என்று அவர் போர்டு வைத்திருப்பதை இதற்காக மன்னித்து விடலாம்.

ஆனால் கைலிகளை தைத்து பிழைப்பை ஓட்டும் இவருக்கு கைலி கட்டுவது பிடிக்காது ! அதுதான் வேடிக்கை. 'வழிப்பதற்கு எது வாகானது?' என்று பட்டிமன்றமே நடக்கும் அவருக்கும் மரைக்காயருக்கும்.

நடக்கும்போது விலகி விலகி தொடைகளில் காற்று படவைக்கும் வேட்டிதான் தமிழன் பொன்னம்பலத்திற்கு உயர்வு. அது அவர் கம்கட்டு அழுக்கு மாதிரி மஞ்சள் பிடித்துப் போயிருந்தாலும் வேட்டி வேட்டிதான்.

பக்கத்து மோகப்பட்டினத்தில் உள்ள வங்கிகள், அரசாங்க அலுவலகங்கள் போவதற்கு வேட்டிதான் கண்ணியம். கைலியை உடுத்திக் கொண்டு போனாலே 'பதினொன்னு' (11) என்று நாவூர் பெண்கள் கேலி செய்யும் இந்த பேண்ட் போட்ட ஊழியர்களின் பார்வையே மாறி விடுகிறது - 'வந்துட்டானா மடமரைக்கான் நாவூர்லேர்ந்து' என்று. என்னதான் அரைக் கலரோ அல்லது வெள்ளைக் கைலியோ கட்டினாலும் வேட்டிக்கு ஈடாகுமா ?  அதனால்தான் இப்போது நாவூரின் பணக்கார காக்காக்களெல்லாம் எல்லாம் எளிமையின் சின்னமாம் கதர் வேட்டி கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். கருநீல வண்ண வெல்வெட் தொப்பியைப் போட்டுக் கொண்டு ஒரு வெள்ளை வேஷ்டியையும் கட்டி, கையில் ஒரு விரிக்காத குடையுடன் வலம் வருவது  நன்றாகத்தான் இருக்கிறது! வெள்ளைத் துப்பட்டிகள், கறுப்பு புர்காவாக மாறி வருவதைப் போல இதுவும் ஒரு மாற்றம்தான். சில ஊர்களில் 4 முழ வெள்ளை வேஷ்டியையே புர்காவாக பயன் படுத்துகிறார்களே அழகாக!  நாவூரிலோ அது தம்பலத்தனம்..

'அட போடா!' என்றார் மரைக்காயர். செல்லமாக அப்படி கூப்பிடுவார். அ·ப்ஜலும் செல்லம் காட்டலாம்தான். ஆனால் வாப்பாவுக்கு தெரிந்து விடும். செளதி போக பணம் கிடைக்காது.

' வெளங்காதவந்தான் அப்படி உடுத்துவான். தொப்பிக்கு கைலிதான் கரெக்ட். அதான் இஸ்லாமானவன் மாதிரி இக்கிம். அதோட ஒரு கோட்டும் மாட்டிக்கிட்டுப் போனா எப்படி இக்கிம் ?!' என்று கற்பனை தந்த பரவசத்தில் மரைக்காயர் சொன்னார்.

துருக்கி தொப்பி போட்டுக் கொண்டு கோட்டு-கைலி- மிதிரிக்கட்டை சகிதமாக பெருநாள் தினங்களில் காட்சி தந்து பிள்ளைகளுக்கு 25 பைசாவுக்கு மேல் கொடுக்காத அந்த காலத்து குடும்பத்துப் பெரியவர்கள் அவனது நினைவில் வந்தார்கள். சகிக்கவில்லை.

ஆனால் உண்மையை சொல்ல முடியுமா ஒரு முதலாளியிடம்? 

'நல்லாயிக்கிம் மாமா!' என்றான்

'கைலி நம்ம ஓணான்தான் . அதுதான் எடுப்பு. 'டர்ர்'ண்டு கட்டு உடாது சீக்கிரத்துலெ!'

'பின்னே ?'

'அப்படிச் சொல்லு. ஆனா நம்ம ஓணானைப் பத்தி எவனுக்கும் தெரியமாட்டேங்குதே...'

'தெரியும். கொஞ்சம் சபுர் செய்யனும்'

'இல்லே.. கடையை XXX787 காரண்டெ கொடுத்துட்டேன் - சரக்கோட..'

'எப்ப மாமா ?' - அதிர்ச்சியுடன் கேட்டான் அவன். அல்லாஹ் மரைக்காயரையும் சும்மா விடவில்லை போலிருக்கிறதே...

'ஹொத்துவா பள்ளிலெ பேசி முடிச்சாச்சுப்பா. எல்லாத்தையும் வித்த பொறவு எனக்கு காசு கொடுப்பான் , இன்ஷா அல்லாஹ்.'

'நான் ?' 

'இந்த கடையிலேயே வேலை பாரு...சம்பளம் கொடுக்குற முதலாளி வந்தா நல்லதுதானே..? வாப்பாவுக்கு எழுதிப் போடு...' - யஹ்யா மரைக்காயர் வேதனையுடன் சொல்லிவிட்டு வீட்டிற்குப் போனார். இரவு , கடை வாசல் சுத்தமாகக் கழுவப்பட்டு  மணத்தது. மரைக்காயர் இனி பஜார் பக்கம் வருவார் என்று தோன்றவில்லை.

அடுத்த நாள்  காலை அ·ப்ஜல் தன் புது முதலாளி வீட்டிற்குப் போய் சாவி வாங்கி விட்டு கடை திறக்கப் போகும்போது ஷட்டரை இழுக்கும் பிடியில் ஒரு செத்த ஓணான் மாட்டியிருந்ததைப் பார்த்தான். எந்த ஹராமி செய்த வேலை இது ? ஓணான் எதனாலோ கொடூரமாக பலமுறை அடித்து நசுக்கப்பட்டு குடல் கும்பியெல்லாம் வெளியேறி இருந்தது. 'க·பன்' போல அதன் மேல் ஒரு கிழிந்த துணி வேறு. துணி மூத்திர நாற்றம் அடித்தது. ஏதோ பெரிய வியாதி பிடித்த உடம்பிலிருந்து வெளியாகும் மூத்திரத்தின் நாற்றம்...

(முடிந்தது)

எங்கே முடிந்தது? கொஞ்சம் டீடெய்ல் சேர்க்கனுமாம். இப்போதெல்லாம் மூட்டியே வரும் கைலிகளின் உட்புறத் தையல், வெளியில் தெரிகிறது. கன்றாவி! ‘உடுத்தத் தெரியாதவன்’ என்று நாவூரில் சொல்வார்கள்; பனியன் ஜட்டியைத் திருப்பிப் போடுவது மாதிரியான செயல். இதைக் குறிப்பிடலாமா என்றால் கவிஞர் ஒத்துக்கொள்ளவில்லை. சினிஃபீல்டில் நுழைய முயற்சி செய்துகொண்டிருக்கிறவர் ஏதாச்சும் புதுமையா சொல்வார். பார்க்கலாம்.

சொன்னார் : இப்படிச் செய்யும். அந்தப் புது முதலாளி பெரும் கோடீஸ்வரரா ஆயிட்டதா.

எப்படீ? 

யாரையோ புடிச்சி (ஏதோ ஒரு இயக்கத்தின் பெயர் சொன்னார்; ஞாபகமில்லை) ’கல்ஃபு’க்கு கைலி எக்ஸ்போர்ட் செய்றாரு, அவராலேயே நம்பமுடியாம பயங்கர சேல்ஸ்.

நெசமாவா!

கேளும். லேபிள்ல ஒரு சின்ன மிஸ்டேக். ’ஓணான் மார்க்’ங்குறது ‘ஓலான் மார்க்’ன்னு பிரிண்ட் ஆயிருக்கு!
(end)
*
அருஞ்சொற் பொருள்:

ரொஹையான் கட்டை -  திருக் குர்ஆன் வைத்து ஓத உதவும் பலகை
60x60 , 80x80, பாயடி, மூட்டு  - கைலி வகைகள்
அஸர் , இஷா - தொழுகை நேரங்கள்
பிஸாது - புறம் பேசுவது
ஜியாரத் - இறை நேசர்களின் சமாதியை வழி படுவது
ஜீமத் - அழகு
ஜூம்ஆ - வெள்ளியன்று நடக்கும் கூட்டுத் தொழுகை
சபர் - பிரயாணம்
சபுர் -பொறுமை
க·பன் - இறந்த உடலின் மேல் போடப்படும் துணி

Monday, October 2, 2023

சிங்காவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், ரியாஸ்! - கவிஞர் சாம்ராஜ்

அனிஷா மரைக்காயர் (Mohamed Riyas) எழுதிய ‘சிகரி மார்க்கம்’ நூல் பற்றி எழுத்தாளர் சாம்ராஜின் விமர்சனம். ரியாஸின் ‘சிங்கா’ என்றதும் ஏதோ  சாமான் என்று நினைத்தேன். அல்ல, அது ஒரு சிறுகதை! - AB

*


பொதுவாக இஸ்லாமிய வாழ்வு, பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த எழுத்துகள் தமிழில் குறைவு. தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகிர் ராஜா, மீரான் மைதீன், ஆபிதீன் என்று உண்டென்றாலும் மொத்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் தொகையோடு ஒப்பிடுகையில் இஸ்லாமிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

பிரதானமாக, இஸ்லாமிய எழுத்தாளர்கள் மாத்திரமே அவர்கள் எழுத்தை எழுதும் சூழல் உள்ளது. மலையாள சினிமாவில் காட்டப்படும் இஸ்லாமிய வாழ்வு அளவிற்குகூட இங்கு அது மையநீரோட்டத்தில் இல்லை. அங்கு ஒரு சாதாரண வெகுஜன சினிமாவில்கூட இஸ்லாமியப் பாத்திரங்கள் இயல்பாய் வந்து​போகும். இன்றும் இங்கு அதுவொரு ‘தனித்த’ பாத்திரம்தான்.சினிமாவே இப்படியிருக்க, இலக்கியம் இன்னும் தூரத்தி​லிருக்கிறது.

இப்படியான சூழலில் ரியாஸ் எழுதவருகிறார். இது அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு ‘அத்தர்’ சீர்மை வெளியீடாக வந்து கவனம் பெற்றது.

மொத்தம் ஒன்பது கதைகள் கொண்ட இந்த இரண்டாவது தொகுப்பில் எட்டு கதைகள் சமகாலத்திலும், ‘சிங்கா’ என்ற ஒரு கதை மாத்திரம் கடந்த காலத்திலும் நிகழ்கின்றன.

ரியாஸின் கதை உலகம் இஸ்லாமிய வாழ்வும் அதில் பெரும்பாலும் பாவப்பட்டவர்களின் பாடுகளுமாய் இருக்கின்றன. அப்படி ஒற்றைப் படையாய் சுட்டுவது ரியாஸின் மீதான வன்முறைதான்.பாவப்பட்டவர்களின் துயரத்தோடு, ‘உள்ளவர்களின்’ துயரமும் உள்ளது.

ரியாஸின் தனித்தன்மை முதன்முறையாக காவிரிப் பாசனத்திலிருந்து சற்று கீழே இருக்கும் கடற்புர இஸ்லாமிய வாழ்வை அதன் நுணுக்கங்களோடு துல்லியமாக முன்வைப்பதும், அதனோடு நின்றுவிடாமல் அந்த பிரதேசத்துக்காரர்களின் ஓட்டம்போல சிங்கப்பூர், மலேசியா என்று தன் கதைக்களத்தை விரித்துக் கொள்வதும்தான்.

பொதுவாக, பிழைப்புக்காக புலம்பெயர்ந்தவர்கள் எழுதும் கதைகளில் ஊர் குறித்தான ஏக்கங்களும், அங்கு ஒரு பொன்னுலகம் இருந்ததற்கான பாவனைகளும் இருக்கும். வாழும் நாட்டைப் பற்றிய ‘நான்காம் மாடி’ அவதானிப்பு கொண்ட கதைகளே அதிகம்.

நான்காம் மாடி அவதானிப்பென்பது, நான்காம் மாடி பலகணியில் நின்றுகொண்டு சாலையில் நடப்பவர்களை அவதானிப்பது.பொத்தாம் பொதுவான மனிதாபிமானக் கதைகள். சிங்கப்பூரில் உமா கதிரின் ‘ரோவெல் தெரு’ சிறுகதைத் தொகுப்பு இதற்கு ஒரு இனிய விதிவிலக்கு. தரையில் இருப்பவனை தரையிலிருந்தே பார்ப்பவை அவரது கதைகள்.

ரியாஸ் தன் கதைகளில் ஊர் குறித்தோ, தான் வாழும் நாட்டைக் குறித்தோ அப்படி எந்த மனமயக்கமும் பெருமிதமும் இன்றியே வாழ்வை முன்வைக்கிறார். அந்த வகையில், ரியாஸும் உமா கதிரும் ஒரு சாலை மாணாக்கர்கள். நுட்பமான விவரிப்புக்களைக் கொண்டது ரியாஸின் கதை உலகம்.

... கணக்குப்பிள்ளை நாசர் மூர்ச்சையாகிக் கிடந்தார். உடலை பள்ளிவாசலில் இருந்து தருவித்த மய்யத்துக்கான கட்டிலில் மாற்றி வைத்தவன், மய்யத்தைத் குளிப்பாட்டப் போவதாகவும் பெண்கள் அனைவரும் முற்றத்தை நீங்கும்​படியும் சத்தமாகக் கத்தினான் பெம்பலா. அவன்தான் இலந்தை இலை ஊறவைத்த அண்டா தண்ணீரில் சிறிது ஜம்ஜம் தண்ணீர் கலந்து கணக்குப்பிள்ளையின் உடலுக்கு ஏதுவாக வெந்நீர் கலந்து, நாள்பட்டுப் படுக்கையில் கிடந்த நாசரின் உடலை அவரின் முதுகுப் புண்களைக் கிழித்துவிடாத அளவு குவளையில் தண்ணீரை அள்ளி உடல் முழுதும் அள்ளி ஊற்றினான். நாசர் உடலை பின்பக்கம் திருப்பி ஆசனவாய்க்குள் தனது பெருவிரலை விட்டு நோண்டினான். ஆசனவாயில் இருந்து சிறிய மல உருண்டையை எடுத்து எறிந்தான். அவர் உடலை இறைவனிடம் பரிசுத்தமாக அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் தன் விரலை ஆசனவாய்க்குள் விட்டவாறு குவளைத் தண்ணீரை ஊற்றிக்கொண்டே கூறினான், ‘அஷ்ஷஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்’.

... செவத்தகனி கொழும்பு மருதானையில் படித்த காலத்தில்​தான் அலிமாப்பூ அவருக்கு அறிமுகம். செவத்தகனி வாப்பாவின் தாஜ் டீ ஹவுஸ் வெள்ளவத்தையில் வெகு செல்வாக்கு செலுத்தியிருந்த காலம். செவத்தகனி சிங்கள ஆக்களைப் போல் படிக்க வேண்டும் என்று செவத்த​கனியை கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார் செவத்தகனி வாப்பா. ஆனால் ஒருநாள் சிலோனில் இருந்து கோட்டை​யூருக்கு வரும் சரக்குப் படகு நெய்னார் சர்வீசில் செவத்த​கனியும் அலிமாப்பூவும் ஜோடியாய் வந்திறங்கினர். காங்கேசந்துறையில் இருந்து கோட்டையூருக்கு வந்திறங்கும் சரக்கு மெயிலில் செவத்தகனி ஜோடியாக வந்திறங்கினார் என்று செவத்தகனி வாப்பா அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

... வழமையான நேரமாக இருந்தால் இந்நேரம் சர்க்கஸ் கூடாரம் களைகட்டியிருக்கும். க்ளோன் சேர், ரசியன் ரோப், காமிக் ஜாக்கிங், புல் பெண்ட் ரோலிங், அக்ரோபேட் ஸ்டேச், சைனீஸ் வாக்கிங் லேடர், டெத் குளேப், ரிங் ஷிப்-அப், டெத் எட்ஜ், ஸ்கை வாக், ஆப்பிரிக்கன் நெருப்பு நடனம், ரசியன் டிராம்போ, பிரமிட் இப்படி எண்ணற்ற கலைகளோடு மிருக வித்தைகளையும் மக்கள் கண்டுகளித்திருப்பார்கள். சிங்கம் காணாமல் போனதிலிருந்து பதட்டம் இருந்தாலும் அரசாங்கம் தினசரி புதிய கட்டுப்பாடுகளுடன் இரண்டு காட்சிகளை நடத்த அவர்களுக்கு அனுமதி தந்திருந்தது.

விசிலடித்ததும் தன் கால்களைத் தூக்கி மக்களுக்கு சலாம் போடும் பாமரனியன், டால்மியன், பாண்ட் நாய்கள், பாரசீகப் பூனைகள், ஓநாய்கள், நீர்யானை, வரிக்குதிரை, பஃபூன் குரங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாஷையில் பேசிக்கொண்டிருந்தது.

... பயம், தெய்வீகம் இரண்டும் கலந்த ஒன்றாக சங்கரனின் சர்க்கஸ் கூடாரச் சிங்கம் அந்நிய நிலத்தில் மாறிக்​கொண்டிருந்தது. சீன கம்போங்கிலோ கதை வேறு மாதிரி உருவெடுத்தது. புராணத்தில் வரும் நியென் மிருகம் மீண்டும் உலவுவதாக நம்பினார்கள். வீடுகளில் சிவப்பு விளக்கை ஏற்றிவைத்தார்கள். அவர்களது கிராமத்தை கொள்ளை நோய் ஆட்டியது. நோயில் மடிந்து​கொண்டிருந்​தவர்களில் சிலர் குணம் பெற்றது சர்க்கஸ் சிங்கம் தப்பித்துப்போன நாள்களில் நிகழ்ந்தது. முற்றாக அவர்கள் குணம்பெற்ற அடுத்தடுத்த நாள்களில் அம்மக்களே சர்க்கஸ் சிங்கத்திற்கு தாமாக முன்வந்து வைத்த பெயர்தான் ‘சிங்கா’.

... எந்த நாளில் இவ்வளவு கறார்தன்மையை உருவேற்றிக்​கொண்டாள் என்று தெரியவில்லை. மூன்றுமுறை கருத்​தரித்தும் கறுப்பும் சிவப்புமாக இரத்தக் கட்டிகள் வெளியாகி​விட்ட ஏதோ ஒரு நாளிலா? ஏப்புக்காட்டும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று தோன்றிய ஒரு நாளிலா? யாரையோ எடுத்து வளர்ப்பதற்கு பதிலாக தன் அண்ணன் மகனையே எடுத்து வளர்த்தாள். ஆசையசையாய் அவனுக்கு புதிய துணிமணிகள் வாங்கிப்போட்டு ‘செல்லான், செல்லான்’ என்றழைத்தவளை, அவன் பெரியவனானதும் ‘இங்கிரு மாமி... என்ன அங்கின உக்காராதே, இதை செய்யாதேனு பெரிய சட்டம் போடுற? நீ ஒன்னும் என்னய பெத்த உம்மா கிடையாது’ என்று சொன்னதும் அழுகையும் விம்மலுமாக ஹலிமா மனம் உடைந்து சுக்குநூறாக உடைந்துபோன ஒரு நாளிலா?

... பாதாம் துறைமுகத்தைச் சுற்றியும் கடல். தூரத்தில் எங்கோ பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு. தான் தவறவிட்ட பாதை கடலுக்குள் ஒரு பச்சை மினாரா நோக்கிச் செல்கின்றது.அவனுடைய அத்தா பள்ளிவாசலின் உள்விதானம் நிழல் படியும் தரையில், ஒரு விரிப்பில் முழங்காலிட்டுப் பிரார்த்திப்பவராகத் தெரிகின்றார். கடலின் ஓரத்தில் படகில் இருந்த மீனவன், வலையைத் தூக்கி கடலுக்குள் எறிகின்றான். வலை முக்காலத்திற்கும் அப்பால் போய் விழுகிறது. இனி என்றும் மீட்க முடியா தூரத்தில் போய் அவனுக்குள் விழுகின்றது. பாதை மெல்ல கடலுக்குள் சரிகின்றது. உண்மையில் மனிதனுக்கு இரக்கம், அன்பு, கருணை ஆகியவை அவனைத் தீண்டும்போது மனிதன் பலவீனமடைந்துவிடுகிறான்.

இப்படி நுட்பமாய் சிறுகதைகளை நெய்வதன் வழி ரியாஸின் கதை உலகம் நமக்கு அணுக்கமாகிறது.

இந்த தொகுப்பிலுள்ள ஒன்பது கதைகளின் சுருக்கத்தையும், பழைய ‘B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்’ வெளியீடுபோல விவரித்துக்கொண்டு போவதில் எனக்கு உவப்பில்லை. சாரமாக ரியாஸ் கதைகள் என்ன முன் வைக்கின்றன என்பதை சொல்வதே சரி. ரியாஸின் கதை உலகு துரோகம், கருணை, வன்மம், மிகுபுனைவு, வீழ்ச்சி, வாய்மொழி வரலாறு என விரிகிறது.

புதுமைப்பித்தன் 99 கதைகள் எழுதினார். அதற்குப் பின் வந்த எல்லோரும் அந்த நூறாவது கதையைத்தான் எழுத முயல்கிறோம் எனப் பகடியான வரியுண்டு. ரியாஸும் அந்த நூறாவது கதையை எழுத விரும்புகிறார் என்றே நான் நம்புகிறேன்.

நமக்கு கலையில் என்னதான் வேண்டும்? எது நம்மை ஈர்க்கிறது?  இந்தக் கேள்விகள் பதில் சொல்ல முடியாத அத்வைதக் கேள்வி​களோ இருப்பியல் கேள்விகளோ அல்ல.

கலை நம்மை ஆட்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். அவை நமக்கு உள்ளே போய் நம்மை தொந்தரவுசெய்ய வேண்டுமென விரும்புகிறோம். அந்நிய நிலத்திலோ அருகிலோ சிந்தப்படும் குருதியில் நம் இரத்தமும் இருப்பதாக உணர விரும்புகிறோம். நம்மைத் தேடுகிறோம். பிரபஞ்சத்திற்குப் பொதுவான, மறுக்க முடியாத, நிரந்தரமான அறத்தைத் தேடுகிறோம். அங்கு ஏசு சிலுவையில் அறையப்பட்டால், நாம் வலப்பக்கம் பாரபாஸைத் தொங்கவிட விரும்புகிறோம்.

அப்பொழுதில் விமர்சகர்கள் வேண்டுமானல் ஏரோது மன்னனாக நின்று வேடிக்கை பார்க்கட்டும். நாம் கண்ணீர் விட விரும்பு​கிறோம். நம் கண்ணீரை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி அதைப் பரிசோதித்து வகைப்படுத்துவது பேதமை மிகுந்த விமர்சகனின் பணி.

நாம் கலையில் சரணடைய விரும்புகிறோம். அது-நாம் என்ற வேறுபாடின்றி அதனோடு கலக்க விரும்புகிறோம்.

தஸ்தயேவ்ஸ்கியை விட இவ்வுலகில் யார் மீது கூடுதலாக கண்ணீர் சிந்தப்பட்டிருக்கும்?! இன்றும் அவரின் கல்லறையில் கண்ணீர் நதியில்தான் நாம் மிதந்துகொண்டிருக்கிறோம்.

சிங்கா, நகுதா, ஏழாவது வானத்தில் வீடு, பெம்பலா — இந்த நான்கு கதைகள்தாம் என்னைப் பொறுத்தவரையில் இத்தொகுப்பில் ஆகச் சிறந்தவை.

கலையில் ஒரு கொடூர விதியிருக்கிறது. அதாவது, ஆக மோசமான வறுமையைக் கூட மிகுந்த கலையுணர்வுடனும் அழகியலுடனும்​தான் நாம் முன்வைக்க வேண்டும்.

கலைஞன் டப்பிங் ஆர்டிஸ்ட் அல்லன். அவன் அழவைக்க வேண்டுமேயொழிய அவனே அழக்கூடாது. டப்பிங் ஆர்டிஸ்டுகள் நிறைந்த இக்காலத்தில் மிகுந்த கவனமாய் இருக்க வேண்டி​யிருக்கிறது. குழந்தையைக் கிள்ளிவிட்டு கிள்ளியவர்களே அழும் காலம் இது.

இந்தக் கதைகளில் ரியாஸ் நம்மை தொந்தரவு செய்கிறார். கதையை வாசித்த பின், அன்றாடத்திற்குள் நம்மால் உடனடியாக நுழைய முடியவில்லை. நாம் கோட்டையூர் தர்காவின் வாசலிலோ, 1950​களின் சிங்கப்பூரில் விமலா சர்க்கஸிலோ நிற்கிறோம். பெரியம்மா நம் கைபிடித்து சந்தனக்கூட்டிற்கு அழைத்துப் போகிறாள். சீனன் வளர்க்கும் மலைப்பாம்பு நம் மீது ஊர்ந்துசெல்ல, பெம்பலா நம் காதருகே வந்து புலம்புகிறான். துரோகத்தின் நாணயங்களை வீசி எறிய ஹலீமா எதிரே வந்துகொண்டிருக்கிறாள்.

நிழல் சிறுகதை நாவலாய் விரிய வேண்டியது. மலே பாஜு சிறுகதை இந்த தொகுப்பின் குழுப் புகைப்படத்தில் கூச்சப்பட்டுக் கொண்டு நிற்கிறது. ரியாஸிடம் நாம் எதிர்ப்பார்ப்பது மலே பாஜுக்களை அல்ல.

ரியாஸ் நமக்கு புதிய நிலப்பரப்புகளையும், வாழ்முறைகளையும், பிரச்சனைகளையும் காட்டுகிறார். அவை தமிழுக்குப் புதியவை. கலையின் நியாயத்தைக் கைவிடாதவையாகவும் இருக்கின்றன. அதுவே ரியாஸிடம் நம் எதிர்ப்பார்ப்பைக் கூட்டுகிறது.

1950களில் நிகழும் சிங்கா கதையில் தொலைந்த சிங்கம் கடைசிவரை பிடிபடாமல் ஓரு தொன்மாக மாறிவிடுகிறது. சந்தா சாகிபு வீட்டில் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கையுண்டு. அந்த சிங்கம் சந்தா சாகிப் வீட்டிலிருந்து தப்பி ரியாஸ் வீட்டில் தலைமறைவாக அல்லது குரல் மறைவாக வாழ்வதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த தொன்ம சிங்கம் ரியாஸுக்கு இன்னும் நிறைய கதைகளை வழங்கட்டும். அந்த சிங்காவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ரியாஸ். சிங்கா இருக்கும்வரைதான் நாம். அல்லது, நாம் இருக்கும் வரைதான் சிங்கா.

மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ரியாஸ்!

ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/sigari-maarkkam

📞 வாட்ஸ்அப்பில் ஆர்டர் செய்ய: +91-755017476

*

நன்றி : கவிஞர் சாம்ராஜ்






*

தொடர்புடைய ஒரு சிறுகதை :

நகுதா - முஹம்மது ரியாஸ்