Thursday, September 28, 2017

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (14)


அத்தியாயம் 14

ஆபிதீன்

*
25/5/1996

Relaxation-1 கேஸட்டிலிருந்து. ('SS'ன் ஆரம்பம் 25 வருடங்களுக்கு முன்பு இருக்கிறது..!)

சர்க்கார் :
'சங்கடப்பட்ட, வேதனையான சூழல்லெ நான் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டிக்கிறேன். நான் பண்ணுனது எதுக்குண்டா சக்தியை வளர்க்குறதுக்குலாம் அல்ல, என் வேதனையை குறைக்கிறதுக்கு. எனக்கு அப்ப leisurely time நிறைய கிடைச்சிச்சி..காரணம் எனக்கு வேலை எதுவும் கிடையாது. ஃபுல் டைமும் leisure-லெ இருந்த காரணத்துனாலே அது தூக்கத்துக்கு வந்திச்சி.. என்னாலே தூங்க முடியலே.. 24 Hours..ப்யூர் நெகடிவிடி... லைஃப்லெ எனக்கு ஏற்பட்ட வேதனை, ஆக்ஸிடெண்ட்...  இதை மாத்துறதுக்கு நான் ரிலாக்சேஷன் பண்ண ஆரம்பிச்சேன். சக்தியை திரட்ட அல்ல. திரட்ட முடியலே என்னால. ஏன்னா, ரிலாக்சேஷனுக்கு ஒரு purpose வேணுமில்லே? அது என்னெட்டெ இல்லே. என்னை மறந்தா போதும். குடிச்சா மறந்துடுலாம். ஆனா அதுக்கு நான் ரெடியா இல்லே. தப்புத்தவறு செய்யவும் நான் ரெடியா இல்லெ. அந்த வகையிலெ ஆரம்பிச்சதுதான் இந்த சிகரெட். அது ஒரு சின்ன பழக்கம். அதே சமயத்துலே அது ஒரு பயங்கரமான பழக்கம். அப்ப... அந்த ரிலாக்சேஷன் பயிற்சி பண்ணுறேன். பண்ணிப்பண்ணிப் பாக்குறேன், வரலே. அந்த Devine Force அப்ப work பண்ணுனிச்சி. எனக்கு காட்டுது. அந்தக் கனவை நான் அப்புறம் சொல்றேன். அந்த still small voice என்னெட்ட பேசுது.. 'நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்க, ஒரு மாத்திரை வேண்டும்டா போட்டுக்க'ங்குது.. நான் நினைக்கலே; அது சொல்லுது. நெனைப்பு வேறே அது சொல்லுற சொல்லு வேறேண்டு அனுபவத்துலேதான் தெரியும். நல்லா தெரியும், ரொம்பத் தெளிவா தெரியும். தான் பெத்த புள்ளைய என்னா டிரெஸ் மாத்திப் போட்டாலும் எப்படி அப்பனுக்கு தெரியுமோ அப்படி. தூங்கினாபோதும் நல்லதுங்குது. தூக்கம் வரமாட்டேங்குது ஆனா..இப்படியே ரெண்டுமாசம் செய்றேன். இந்த அவதிக்கு மத்தியிலே , திடீர்ண்டு ஒரு நாளு கனவு காணுறேன். ரிலாக்சேஷனுக்கு அரபிலெ 'துமானி நிய்யத்'துண்டு பேரு. அங்கே பாரு.. 'துமானி நிய்யத்' இக்கிதுண்டு என் உஸ்தாதுமார்கள்  காட்டுறாங்க. அதாவது அவங்க குரல் அப்படி கேட்குது..

ஒரு ஆறு ஓடுதுங்க.. ரொம்ப தெளிவான ஆறு.. ஓடுற ஓட்டம் கூடக் குறைவில்லாம , ஒரேமாதிரி ஓடுது. ஒரேமாதிரி சத்தம்.. சலசலங்கிற சத்தம்.. உள்ளே மீனுடைய எத்துக்குத்தான ஓட்டம் கிடையாது.. கண்ணாடி..ப்யூர் கண்ணாடி.. கிரிஸ்டல் க்ளீயர்..! ரொம்ப ஆழமா தெரியுது.. அதுல குளிக்க வாய்ப்பு வசதி இருக்குது.. 'தோண்டி' இருக்குது..குடம் இருக்குது, ஒரு வாளி இருக்குது..ஆனா யாருமே குளிக்கலே.. குளிச்சா அவங்க அசைவாலே எனக்கு டென்சன் ஏற்படலாம். அதுக்குப் பின்னாலே ஒரு மலை இருக்கு.. பசுமையான மலை.. அதே நேரத்துலே மலைக்குப் பின்னாலே சூரியன் உதயமாயிக்கிட்டு இருக்குது.. அந்த still small voice அப்ப சொல்லுது.. 'உனக்கு காலையிலே குளிச்சாலும் குளிராது..!' . அது என் வாய்ஸ்தானே, என்னட்ட உள்ளதுதானே.? நான் காலையிலே குளிக்க மாட்டேன்லெ, பகல்லெதானே? , அதுக்கு வேற காரணம் , அதுக்கு சொல்லுது அப்படி! நான் போயி குளிக்கிறேன். மெதுவா இறங்கி - 'கை காலு எல்லாம் புண்ணாயிருந்தா எப்படி அசைவியோ அப்படி அசைச்சிக்கிட்டு குளத்துலே இறங்கு'ங்குது. முக்குளி போடுறேன். தலையைத் தூக்கி சூரியனைப் பாக்குறேன். அது கிராஜுவலா உயரமா போவுது. 'மலையைவிட்டு ஒரு ஜான் உயரம் அது வந்த உடனேயே கரையேறிடு'ண்டு அவங்க சொல்றாங்க.. கனவுதான் எல்லாம். ப்யூர் கனவு. கனவு முடியிற வரைக்கும் க்ளீயரா தூக்கம் கலையாம இருந்ததுக்கு நான் பாக்கியம் செஞ்சதாத்தான் நான் நினைக்கிறேன். உடம்புலெ ஜில்லாப்பு.. சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறிக்கிட்டு வருது. ஒரு ஜான் வந்துடிச்சி.. அப்ப அந்த ஆர்டர் வந்துடிச்சி..

இது கனவுதான்..ஆனா இதெ கனவாக நான் சொல்லலே.. ஆர்டராகத்தான் சொல்லுறேன். ஆர்டர் ஆக ஏற்றுக்கொண்டேன். ஆர்டர்தான் இது, எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்கு அனுபவம் வரும்போது இது கனவல்ல, ஆர்டர்தாங்குறது தெரியும். தூக்கமும் விழிப்புமில்லாத நடுநிலையிலே பேசப்பட்ட தெய்வவாக்கு இது..

'ஒரு முக்குளி போட்டுட்டு கரையேறு'ங்குது.. ஏறுன உடனே முழிப்பு வந்திடிச்சி..நான் என்னெத்த தேடுனேன் தெரியுமா? தலையைத் துவட்டுறதுக்கு துவாலையைத் தேடுறேன் நான்..!

என்னெப்பொறுத்தவரைக்கும் கனவுலெ ஒரு காட்சி வந்தா நான் லைஃபாகவே நெனைப்பேன் நான். கனவுலெ ஒரு பொருளைப்பார்க்க ஆசைப்பட்டேண்டு சொன்னா அந்த இடத்துக்கு கனவுண்டு தெரிஞ்சிக்கிட்டே போவேன் நான், என் அனுபவத்துலே..! கனவுண்டு நெனைச்சா உங்களுக்குலாம் கலையும். எனக்கு கலையாது. இது கனவுதான் , இப்ப முழிக்கனும்டு நெனைச்சா என்னாலே முழிக்க முடியும். கனவுலேயே எந்திரிச்சி வந்து அப்படியே மணி பார்க்க முடியும் என்னாலே..அங்கேர்ந்து நாவப்பட்டினம் வந்து நீங்க என்னா செய்யிறீங்கண்டு என்னாலே பார்க்க முடியும்.. அமெரிக்கா போவனும்டா அமெரிக்கா போவலாம். கனவுண்டு புரிஞ்சிக்கிட்டோமுலெ?! எனக்கு கலையாது.. கண்டினியூ ஆவும்.

ம்.. துவாலையைத் தேடுறேன் நான்! கனவா நான் காணலே. Actually மேலுலாம் ஜில்லுங்குது.. இன்ஸ்ட்ரக்சன் எப்படி கிடைக்கிதுண்டு பாருங்க! எனக்கு எந்த கதியும் கிடையாது, நிர்க்கதியா உள்ளவன், நான் அனாதை. எங்க உஸ்தாதுமார்கள் கொடுத்ததை வச்சித்தான் நாங்க செய்யமுடியுமே தவிர நான் சொல்றமாதிரி எங்களுக்கு அவங்க சொல்லலே. கனவுதான் எங்களுக்கு அஸ்திவாரம். அதனாலேதான் தூங்குற இடத்துலே நான் யாரையும் நெருங்க விடுறதில்லே..ஆங்.. இந்த கனவு.. கிரிஸ்டல் க்ளீயரா தெரியுது. முழிச்ச உடனேயே ..., 12 மணிக்குதான் குளிப்பேன்.. மனசு வரமாட்டேங்குது - அதுதான் காத்தால குளிச்சிடோமேண்டு நெனைப்பு வருது.. ரிலாக்சேஷன் தேவையில்லேங்குற மாதிரி Body அவ்வளவு லேசா, ரிலாக்ஸ்டா இருக்குது..அப்ப என் கூட்டாளிலுவ சொன்னானுவ.. 'என்னா சர்க்கார்.. முகம் ஒரு மாதிரியா தெளிவா இக்கிது?!' ண்டு. ஒரு சந்தோஷமும் இல்லே, இந்த கனவுதான் காரணம்! அப்புறம் அடுத்த தடவை டென்சன் வந்தப்ப ரிலாக்சேஷன் பண்ணும்போது இந்த காட்சி வந்துச்சி ' இதெ பண்ணுடா'ண்டு. படுத்துக்கிட்டேன். தன்னை மறந்தேன், காலை மறந்தேன், கையை மறந்தேன், கம்ப்ளீட்டா என்னையே மறந்தேன். நான் அல்ல இப்ப, என் Body.. என்னை வுட்டு வெளிலே வந்து தனியா என் Bodyயை உத்துப்பாத்தேன். 'தூங்குனானா அப்துல் வாஹிது?' நானே பாக்குறேன்.. ரிலாக்ஸ்டா இக்கிறான்.. மறுபடியும் bodyயிலே நானே புகுந்துடுறேன். புகுந்த உடனே அந்த ஆறு வருது.. மெதுவா தண்ணிக்குள்ளே இறங்குறேன்.. காலுலேர்ந்து எனக்கு ஜில்லாப்பு ஏறுது.. முழங்கால்.. அப்புறம் இடுப்பு.. நெஞ்சுக்கு ஏறுது.. அப்புறம் கையை நனைக்கிறேன். முக்குளிவிட்டு ,மெதுவா எந்திரிச்சி , கண்ணை தொறந்து பாக்குறேன்.. பச்சை பசுமையான மலை தெரியுது.. சூரியன் உதயமாயிக்கிட்டிக்கிது..எப்படி கனவுலெ கண்டேனோ அதை கற்பனை பண்ணிக்கிட்டேன்.. Immediate ரிஸல்ட் கிடைச்சிச்சி எனக்கு. இந்த செய்தியை டைரிலெ குறிச்சி வச்சிக்குங்க.. ஒரு டைம்லெ நான் சொல்லுவேன் ரிலாக்சேஷனுக்கு. இத யூஸ் பண்ணுங்கம்பேன்..' - 'S'
*

'மனுஷன்ட்டெதான் நெகடிவிடி இக்கிதுண்டு நெனைக்காதீங்க நீங்க. ஒவ்வொரு பொருளிலுமே நெகடிவிடி இக்கிது. ஆத்துலெ உள்ள நெகடிவிடி வேற. மிருகம் குடியிருந்த கொட்டாயின் நெகடிவிடி வேற.. தப்புத்தவறு செய்யிற மனுஷன் குடியிருந்த வீட்டோட நெகடிவிடி வேற.. ஞானிகள் அடக்கமான ஸ்தலத்தினுடைய பாசிடிவிடி வேறே.. அப்படி பார்க்கப்போனா எல்லாப் பொருள்களிலேயுமே வைப்ரேசன் இக்கிதுண்டு நான் சொல்ல வர்றேன். சூரியனிலுள்ள வைப்ரேசன், பச்சைப் பசுமையான மலையிலுள்ள வைப்ரேசன், நீரிலுள்ள வைப்ரேசன் அனைத்துக்கும் மேலே எங்க குருமார்கள் கொடுத்த ஃபோர்ஸ்.. எல்லாம் சேர்ந்து வொர்க் பண்ணும்' - 'S'
*
27.05.1996

நாளை இந்திய அரசு கவிழும் என்கிறது சேன்னல்33. பி.ஜே.பி கவிழும். ஹாங்காங்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களின் ஊடுருவல்களை ஆஸ்திரேலிய அரசு துவம்சம் செய்கிறது.. சோதனைகளின் தொடர்ச்சியாக நாளைய டி.வியில் முக்தார் அப்பாஸ் கவிழ்ந்ததையும் காட்டுவார்களா? அல்லது கம்பெனி அந்த ஹாங்காக் படகுகள் மாதிரி திசைதெரியாமல் இருத்தலில் வாழுமா? நான்கு முதலாளிகளும் ஒரு வருடப் பிரிவிற்குப் பிறகு இன்று ஒன்றுகூடினார்கள். தலை யாருக்குப் போகும், கை கால்கள் யாருக்குப் போகும் என்பது புரியவில்லை - அந்த சூடான பலுச்சி பாஷையில் . நான் பேசாமல் இறங்கி வந்துவிட்டேன். ஏழரை மணிக்கு. மொயீன்சாஹிப் இருந்தார் மேலே. அனைவருக்கு 'சஹி பாத்ஹை' சொல்ல அவர்தான் சரியான ஆள். அதனால்தான் மேனேஜர்? கிழே வந்தபிறகுதான் நினைப்பு வந்தது. 'அடடா..தண்ணீர் பாட்டிலை ஆஃபிஸ் கிச்சனிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டோமே.. மறுபடி மேலேபோனால் அந்த கூட்டத்திடம் மாட்டிக்கொள்வோமே' என்று நினைத்த அடுத்த நொடியில் டிரைவர் ஜாவித் வந்தான். ஸ்க்ரேப் எடுக்க நாளை அபுதாபி அவன் போகிறானாம். நாங்கள் பஸ்ஸில் 'தேரா' போய் வந்து கொள்ளவாம். இதைச் சொல்லத்தான் வந்தானாம். 'ஜாவேத்.. மேலே ஃப்ரிட்ஜில் தண்ணீர் பாட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்' - தயங்கிச் சொன்னேன். ஜாவேதும் பட்டான்தான். ஒரு அடிமை மாதிரி பவ்யத்துடன் மேலே ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து என் கையில் கொடுத்துவிட்டு மறைந்தான். தண்ணீர் பாட்டிலுக்கு முன் , ஆசைப்பட்ட ஒரு கேமராவும் கிடைத்தது. சென்றமுறை ஊர்போகும்போது 'Canon' வாங்கிப்போயிருந்தேன். அதன் ஆட்டோஃபோகஸ் திறனும் Mutiple Explosure வசதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் லென்ஸுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலும். ஊரில் பழிவாங்கிவிட்டது , செலவு வைத்து. ஒரு Full Manual Camera வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். Canon ரிப்பேர் செய்தவர் , நான் சொன்ன pentax K1000ம் குப்பைதான் என்றார். Nikon FM2 உட்பட இப்போது - முக்கியமாக துபாயில் - China Makeதான் கிடைக்கிறதாம். இதற்கு கொள்ளை மலிவாக Zenith வாங்கிவிடலாம் பேசாமல். அதுபாட்டுக்கு கிடக்கும். அனீஸின் பேரன்கூட யூஸ் பண்ணிக்கொள்ளலாம் ஊரில். அல்லது பூவூர் மாமாவிடம் எடைக்குக்கூட விற்றுவிடலாம். ஆனால் திரும்பி வந்துபார்த்தால் ரஷ்யர்கள் உஷாராகி இருந்தார்கள். தம்பி ஹலால்தீனிடம் ஒன்று இருந்தது. கேட்டேன். கொடுக்கவில்லை. இது இந்த மாதத்திற்குள் என் ரூமில் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இன்று ஹலால்தீன் ஃபோன் செய்து அந்த Zenithஐ எடுத்துக்கொள்ளச் சொன்னான். அவன் வேறு ஒரு நல்ல கேமராவாங்கப்போகிறானாம். Hasslebladஐ எல்லாம் அவனுக்கு சொல்லமுடியாது. Minolta X700 வாங்கு என்று சொன்னேன்.

'சரி, Zenithக்கு 100 திர்ஹம் கூட என் கையில் இல்லையப்பா..'

'வச்சிக்குங்க நானா!'

அது என் பொருள் ஹலால்தீன், நான் பார்த்து ஆசைப்பட்ட மாத்திரத்திலேயே! அந மர்கஜ் உல்.....

Canonஐ கொடுத்துவிட்டு அவனது கம்ப்யூட்டரை வாங்கிக்கொள்ளலாமா?! - என் புது யோசனை!
*

28.05.1996

முஸ்லீம்களுக்குத்தான் எவ்வளவு கொண்டாட்டம், வாஜ்பாய் ராஜினாமா கொடுத்ததில்! பர்துபாய் டெக்ஸ்டைல் பஜாரின் சிந்திகள், பாப்ரிமஸ்ஜித் இடிக்கப்பட்டபோது பகிர்ந்துகொண்ட லட்டை நினைத்துக்கொள்ளலாம் இப்போது. அவர்களும் அப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொள்ள வேண்டியதில்லை. அரசுதானே மாறியிருக்கிறது. அரசியல் அல்லவே! ஆகவே சகோதரர்களே... அடுத்த செங்கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த முஸ்லீம்களுக்கும் ரசனை உணர்ச்சியே கிடையாது. ராமருக்கு தொப்பி வைத்தால் நன்றாகத்தானே இருக்கிறது! மாற்றங்கள் இந்தியாவில் வரலாம், முக்தார் அப்பாஸில் வராது. நேற்றைய கூட்டம் ஊரின் விசாரணைக் கமிஷன்கள் மாதிரி ஆகிவிட்டது. முடிவு இல்லை. அதனால்? கம்பெனி 
அப்படியே ஓடும்.

'எதுவரைக்கிம் மொயீன்சாஹிப்?'

' பஸ்..குதா ஜான்த்தாஹை!'

அல்லா , அறிந்தவன்தான். 'அல்லா இல்லை' என்று சொல்லிக்கொண்டிருந்தவன் - சௌதியில் பட்ட அடியில் மாறி, துபாய் விசா பிரச்சனையில் தொழ ஆரம்பித்த என்னை அறிந்தவன். 'நான் திருந்திவிட்டேன்' என்று சொல்லும் சர்க்காரையும் அறிந்தவன். ஆனால் சர்க்கார் யாரையும் தொழவேண்டாம் என்று சொன்னதில்லை. தானாக திருந்தட்டும் என்று அல்ல! சர்க்காரின் ரியாலத்துகளில் இருந்துகொண்டு அதற்கு நாலுமடங்கு குறைவாக மனசைக் கூராக்கும் தொழுகையைக் கண்டு சில நாட்களாகக் குழப்பம். இன்று பகல் ரிலாக்சேஷன்-2 கேஸட்டைக் கேட்டு தெளிவடைந்தது மனசு.

இபாதத் :

'மனுஷன் செய்ற எல்லா செயலும் 'இபாதத்'தான். அல்லாஹூத்தஆலா சொல்றான்,' என்னை வணங்குவதற்காகவே மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்'ண்டு. ஜின்னைப் பற்றி நமக்குத் தெரியாது, சின்ன ராவுத்தரைப்பற்றித்தான் நமக்கு தெரியும். நாம மனுஷனைப்பத்தி பேசுவோம். அவன் தப்பு செய்ய முடியாதுல்ல? முடியுமா முடியாதா? அவன் ஏமாறுவானா?' - 'S'

'ஏமாற மாட்டான்'

'இப்ப நான் கேட்குறேன். வணங்குவதற்காக மனிதனைப் படைத்தேண்டு அல்லாஹுத்தஆலா சொன்னபிறகு மனுசன் வணங்காம போனா எதுக்காக படைச்சானோ அந்த purpose நிறைவேறவில்லைண்டுதானே அர்த்தம் ? எந்த நோக்கத்துக்காக படைச்சானோ அந்த நோக்கத்துலே அவன் ஏமாந்துட்டான்னுதானே அர்த்தம்ங்க?'

'அவன் ஏமாந்தாண்டு சொல்ல முடியாது. இவன் ஏமாத்துறான்'

'அப்ப, அல்லா ஏமாந்துட்டான்லெ?! அமைதியா யோசனை பண்ணிப்பாருங்க. அப்ப என்னா அர்த்தம்? அவன் திறமைசாலிண்டா எவனாலேயும் ஏமாத்தமுடியக்கூடாதே? ஏமாத்துனாலும் உடனே தண்டனை வந்துடுனுமே!'
'இவன் தன்னைத்தானே ஏமாத்திக்கிறான்'

சர்க்கார் கிண்டலாக சிரிக்கிறார்கள்.

'லாஜிக் பிரகாரம் பார்த்தா நீங்க சொல்றது சரிதான். ஆனால்...' - சீடர். ஆனா? 'அப்ப, ஏமாளிப்பையன் ஆண்டவங்குறீங்க!' - சர்க்காரின் சிரிப்பு தொடர்கிறது.'நான் என்னா சொல்ல வர்றேன்..., மனிதன் செய்யிற எந்த செயலும் சரி, 'இபாதத்'துக்கு அப்பாற்பட்டதல்லங்கிறேன். பாம்பு உங்களை கடிக்குதா? கடிபடுறது இபாத்துங்குறேன். பண்டியை அடிக்கிறீங்களா? அது இபாதத்துங்குறேன். வெளிக்கி உக்காந்திருக்கீங்களா? இபாதத்துங்குறேன் நான். பொண்டாட்டிகூட படுக்குறிங்களா? இபாதத்துங்குறேன் நான். தொழுவுறீங்களா? அது இபாதத்தே அல்லங்க! உலகத்துலே இபாதத் பண்ணுறதுக்குள்ள டிரைனிங் அது! அத கண்டிப்பாக செய்யத்தான் வேணும். இது செய்யலேண்டா சோத்துல உள்ள இபாதத் கட் ஆயிடும். பொண்டாட்டிய முச்சம் வுடும்போது ஏற்படுற இபாதத் கட் ஆயிடும். புள்ளய கொஞ்சும்போது படுற இபாதத் கட் ஆயிடும்.. பிசினஸ் சேர்லெ உட்கார்ந்து டெலிஃபோன் புடிக்கிம்போது பன்னுற இபாதத் கட் ஆயிடும். எனவே, தொழுகை கடமை - உங்களுக்கு! தொழுகைங்கிறது டிரைனிங். நினைப்புல வச்சுக்குங்க. அது இபாதத்தே அல்ல அது. அதனாலதான் ஹஜ்ரத் இமாம் கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி சொல்றாஹா..'யாருடைய இபாதத், யாருடைய தொழுகை அவங்க வாழ்க்கையிலே, எண்ணத்துலே மாறுதலை ஏற்படுத்தவில்லையோ அவங்க தொழவே இல்லை!'ண்டு. என்னங்க, ஆண்டவன்ற 'ரஹ்மானியத்' நம்ம நெஞ்சிலே இக்கிது, நம்ம ஏங்க தொழுவனும்? நாம் செய்யிற செயலெல்லாம் இபாத்தா இருக்கும்போது எதுக்குங்க தொழுவனும்? அப்படியான இபாதத் நம்மள்ட்டெ இல்லை. நம்மள்ட்டெ 'ஷைத்தானியத்' கலந்து நிக்கிது. 'ரஹ்மானியத்'ட ஒரு பிட் இக்கிது. நம்ம லைஃப்லெ வரக்கூடிய சீக்குக்கெல்லாம் பெரும்பான்மையான காரணம் 'நஃப்சானியத்' மனசுலெ நிக்கிறதனாலேயும் 'ஷைத்தானியத்' மிகைச்சி நிக்கிறதுனாலேயும்தான் வருது. 'ரஹ்மானியத்' மிகைச்சி நிக்கிற சமயத்துலே மனுஷன் செய்யிற எல்லா செயலுக்கும் இபாத்துண்டுதான் பேரு. அப்படி பார்க்கப்போனா மனுஷன்ற எந்த அசைவுலேயும் இபாதத் இல்லாம இல்லே.. அப்ப ஆண்டவன் ஏமாற இல்லை!' - 'S'
*

29.05.1996

Mind Wandering (from Relaxation II கேஸட்) :

'எப்ப Body ரிலாக்ஸா இக்கிம்? Mindஐ அலைய வுடுறீங்கள்லெ? அலையிறதை செக் பண்ணுனீங்கண்டு சொன்னா! எப்ப நீங்க செக் பண்ணுறீங்களோ செக் பண்ணுன காரணத்துனாலேயே அது ஒரு டிரைனிங்கா மாறிடும். இதுக்கும் , பொதுமக்கள் மனசை அலையவுடுறதுக்கும் வித்யாஸம் இக்கிது. ஜனங்க வேண்டுமென்றே கற்பனை பண்ணலே; மனசு தானா அலையுது. இப்ப நாம வேணும்டே மனசை அலையவுடுறோம். ரெண்டுக்கும் வித்யாஸத்தைப் பாருங்க. குதிரை தானா ஓடுறதுக்கும் நீங்க லகானை புடிச்சிக்கிட்டு தானா அலையவுடுறதுக்கும் வித்யாஸம் இக்கிது. எறும்பை உள்ளங்கையிலே வுட்டுக்கிட்டு எங்கே ஓடுது பார்க்கலாம்டு பார்க்குறதுக்கும், நாம தொழுவிக்கிட்டிக்கிம்போது காலு கையிலே ஏறி அது நம்ம கொட்டையிலே கடிக்கிறதுக்கும் வித்யாஸம் இக்கிதுல்ல? இதே மாதிரி வித்யாஸம்!' - 'S'
*

ஜெதபு :

'அல்லாஹ்வைப் பத்தி நெனைக்கிம்போது - 'திக்ரு' பண்ணும்போது- 'அல்லாஹூ ஹாழிர் அல்லாஹூ நாழிர்' - ஆண்டவன் 'ஹாழிர்'-ஆ இருக்கிறான், ஆண்டவன் பாத்துக்கிட்டே இக்கிறான் - இப்படி சொல்லும்போது அல்லா இருக்குறதாக கற்பனை பண்ணுங்க. பார்த்துக்கிட்டிக்கிறாண்டு கற்பனை பண்ணுங்க. கற்பனை பண்ணி கொஞ்சநேரம் ஆயிடிச்சிண்டு சொன்னா, இல்லே பக்குவம் பத்தாம கொஞ்ச நாள் ஆயிடுச்சிண்டு சொன்னா , அவன் இருக்குறதாகவே உங்களுக்கு நம்பிக்கை வந்துடும். அவன் இருந்தா Body எப்படி நடுங்குமோ அவ்வளவு நடுங்கும் உடம்பு. உதறும் அப்படியே.. என்னாங்க, ஒரு மினிஸ்டர் ரூமுலெ நமக்கு உட்கார தைரியம் இல்லே, அல்லா வந்து நிக்கிறான் , பாக்குறாண்டு சொன்னா?! எப்படி இக்கிம் நமக்கு?' - 'S'

'கற்பனை பண்ணும்போது அவனை உருவகப்படுத்திக்குனுமா?' - சீடர்

'நல்ல கேள்வி. அப்படி அல்ல. நாம ரேடியோ ஸ்டேசன்லெ பேசிக்கிட்டிக்கிம்போது நம்ம பேச்சை எத்தனை பேரு கேட்குறாங்க? தெரியுதுலெ? அதேமாதிரி , நான் டெலிஃபோன்லெ பேசறேண்டு வைங்க. அதை ஒரு ஆளு கேட்குறாங்கண்டு புரியுதுலெ? அதே மாதிரி நம்மளை பாக்குறாண்டு நெனைச்சிக்குங்கண்டு சொல்றேன். அவனை நீங்க பார்க்க சொல்லலே. அவன் உங்களை பாக்குறதா நெனைக்கலாமுல்லே? அவன் எப்படி இக்கிறாங்குற கதை வேறே. அவன் யாரு மாதிரி இருந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. ஆனா அவன் உங்களை பாக்குறான்.. Present!. நாம பேசுற பேச்சுலாம் ரிகார்ட் ஆவுது, உலகம் பூரா பரவுதுண்டா உங்களுக்கு எப்படி இக்கிம்? எவ்வளவு கரெக்டா இருப்பீங்க? அப்ப, எப்படி உட்கார்ந்திருந்திங்களோ அப்படியேதான் இருப்பீங்க. மரத்துப் பொய்டும் அப்படியே.. அசைவே இருக்காது. நீங்க நீங்களா இருக்க மாட்டீங்க. வேறொரு பொருளா இருப்பீங்க. இந்த கட்டத்துலெதான் 'ஜெதபு' வர்றது. இந்தக் கட்டத்துலெதான் காட்சிகள் தெரியிறது. முதல்லெ வட்டம் தெரியும். whole universeண்டு அர்த்தம். அப்புறம் புள்ளி தெரியும். வட்டத்துக்கு பிறகு புள்ளியும் தெரியும். நடுவே முக்கோணமும் தெரியும். தெய்வத்தன்மை materialise ஆகி- உலகுக்கு வந்து - இந்த கட்டுப்பட்ட உலக வாழ்க்கையிலே , இந்த அடிமை வாழ்க்கையிலே.. - ஆயிரக்கணக்கான பொருள்களுக்கில்ல நாம அடிமை! காத்துக்கு அடிமை, தண்ணிக்கு அடிமை, சோத்துக்கு அடிமை, சூத்துக்கு அடிமை..! - இந்த வாழ்க்கையிலே வளர்ந்து இம்ப்ரூவ்மெண்ட் ஆன உடனேயே, ஒரு குறிப்பிட்ட தகுதி வந்த உடனேயே , இது பிக்அப் பண்ணுது - மேலே உள்ளது. 'இங்கே வாடா.. நீ வளர்ந்துட்டா!'ண்டு கூப்பிடுது. 'இல்லே..எனக்குப் பத்தலே..நான் அங்கே வரப்போறேன்'டு இவன் போறான். ரெண்டும் ஒண்ணுதான். காந்தத்தை இரும்பு கூப்பிட்டாலும் சரிதான், இரும்பை காந்தம் கூப்பிட்டாலும் சரிதான். ஃபைனல் ரிஸல்ட், இணைப்பு. இரண்டறக் கலத்தல். எங்கிருந்து வந்தோமோ அங்கே இணையிறோம்..' - 'S'
*

'ஷரீஅத்' எந்தப் பாதையை காட்டுனிச்சோ , எந்த கதவைக் காட்டுனிச்சோ , அந்தக் கதவுக்கு உள்ளே உள்ள செய்தி இது.. அது கதவை காட்டுனிச்சி.. இவன் அதுல சாஞ்சிக்கிட்டு தூங்குறான்! நாம இப்ப கதவை திறந்துகிட்டு உள்ளெ போயி பாக்குறோம். அதனாலெ , பாமரர்கள்ட்டெ இந்த செய்திகள பேசிட வாணாம். பேசுனா ஒண்ணும் ஆகப்போறதில்லே.. என்னைப்பத்தி தப்பா நெனைப்பாங்க.. உங்களைப்பத்தி தப்பா நெனைப்பாங்க.. நான் பேசுறபேச்சு பூரா - எனக்கு ஒரு கடமை இக்கிது, பொறுப்பு இக்கிது, அதை எவ்வளவு சீக்கிரம் நிறைவேத்தனுமோ அதை நிறைவேத்தனும். நிறைவேத்திடுவேன் நான். அது என் கடமை. அதை நீங்க பாதுகாக்கனும். அப்பதான் அது பரக்கத் செய்யிம். 'பரக்கத் செய்யிம்'டு பொண்டுவ சொல்றமாதிரி நான் சொல்லலே. நான் உணர்ந்து சொல்றேன். ஷெய்குமார்கள் யாரும் இப்படி காட்ட (சொல்ல) மாட்டாங்க. நான் ஏன் இப்படி காட்டுறேண்டு கேட்டா நான் நம்புறேன். இப்படி விளக்கி சொல்லுவதற்கு எனக்கு அதிகாரம் இருக்குண்டு நம்புறேன். ஷெய்குமார்கள் சொல்லமாட்டாங்க; செஞ்சிப் பாருங்கண்டுதான் சொல்லுவாங்க. 'ஓதிப்பாருங்க'ம்பாங்க. 'என்னா லாபம்?'டு கேட்டா 'உனக்கு கொடுத்த 'இபாதத்' 'கட்'டுண்டு சொல்லிடுவாங்க. சோத்தைக் கொடுத்து , 'உண்ணு'ம்பாங்க. 'உண்டு என்னா லாபம்'டு கேட்டா சோத்தை புடுங்கிக்குவாங்க! பயமும் காட்டுவாஹா. 'திக்ரு' பண்ணு, கொஞ்சநாள்லெ அறிவு மழுங்கிடும்'ம்பாஹா! இந்த பயங்கரமான அவஸ்தையிலாம் உங்களுக்கு இல்லே இப்ப. நான் உரிச்சி, சுளை சுளையா தர்றேன். இப்பதான் 'கோபாலா எங்கே போறா.?' கதை வந்துடுச்சே! காலத்தோட நஸீபு, இத பத்தி சொல்ல முடியாது. உங்களுக்கு அப்படி சிரமம் இல்லே' - 'S'
*

25 வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சு. குரலில் இளமை துள்ளுகிறது. இப்போதும் அறிவின் ஆட்சிதான் என்றாலும் வயதின் நடுக்கம். ஆனால் தீராத பழத்தின் விளைந்துகொண்டேயிருக்கும் சுளைகளிலிருந்து உரித்து உரித்துக்கொடுக்கும் களைப்பற்ற தன்மை ஆச்சரியம். இதற்கு பசி காரணமா, பழம் காரணமா?
*

31.05.1996 வெள்ளி செஷன் முடிந்து.

இன்றுகாலை மஸ்தான் மரைக்கானின் ரூம் போனவுடன் 'ஜெப்பார்நானா ரெண்டுதடவை ஃபோன் பண்ணுனாஹா' என்ற செய்தி. ஏதோ சாமான் இருக்கிறது என்று சொன்னார்களாம். சர்க்காரின் புதிய கேஸட்கள் வந்திருக்குமோ, அல்லது, ரவூஃப்தான் materials அனுப்பி வைத்திருப்பானா அல்லது சர்க்கார் ஏதாவது செய்தி சொல்லியிருப்பார்களா..? போனால் , ஒருமாதத்திற்கு முன்பு ஜெப்பார்நானாவிடம் யூசுஃப் அலியின் Quran translation வேண்டும் என்று சொன்னதற்குப் பரிசு காத்திருந்தது. யூசுஃப் அலியும் வேண்டும், காசும் கொடுக்கக்கூடாது என்றால் பரிசுதானே? ஹம்ரியாவிலுள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்திலிருந்து -எனக்காகச் சொல்லி , வாங்கி வைத்திருந்து - அன்பளிப்பாகக் கொடுத்தார். இன்று இரவு சௌதி சென்றிருக்கும் ஃபரீதுக்கு ஃபோன் செய்து அங்கிருந்து கொண்டுவரச் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் யூசுஃப் அலிக்கு என் மேல் உண்மையிலேயே பிரியம் போலும். பெரியார், மார்க்ஸ், சார்த்தர் to யூசுஃப் அலி! மாற்றம்தான்! ஆசைப்பட்டது சரி, எதற்காக வேண்டும் என்று நினைத்தோம்? யூசுஃப் அலி பெரிய ஸ்காலர் என்றா? இந்த ஸ்காலர்கள்! இவர்கள் மேலுள்ள ஆச்சரியம் ஏன் மறையமாட்டேன் என்கிறது? தெய்வத்தின் குரல் சாமானியர்களுக்குப் புரியும் அளவு ஸ்காலர்களுக்குக்ப் புரியுமா? தெய்வம்தான் யாருக்கு? ஏன் 1810 பக்க சுமையை நான் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டலாம் என்றா? குழப்பத்துடன் வந்து செஷனில் அமர்ந்து சர்க்காரின் 8-12.12.95 கேஸட் கேட்டபோது சர்க்கார் பேசினார்கள்:

'எந்த பணக்காரனுக்கும் நீங்க மதிப்பு கொடுக்கக்கூடாது. எந்த ஸ்காலருக்கும் மரியாதை கொடுக்கக்கூடாது. நீங்க மதிக்க வேண்டிய ஒரே ஆள் நானாகத்தான் இருக்கனும். ஏன் அதுவும்? அப்பதான் நான் சொல்றது உங்க மனசுல இறங்கும். நான் சொல்றதுதான் தெய்வவாக்கு. அல்லா ரசூல் எல்லாம் எனக்குப் பின்னால்தான். ஏன்? அல்லாஹ் யாரு, ரசூல் யாருண்டு நான்தானே காட்டுவேன். என்னா, 'நஜாத்' மாதிரி இக்கிதுண்டு பாக்குறீங்களோ? 'நஜாத்'ஐ விட ரொம்ப ரொம்ப மேலே இது. அல்லது ரொம்ப ரொம்ப கீழே. இது 'ஷரீஅத்' அல்ல. 'தரீக்கா'. 'தரீக்கா'வும் அல்ல. 'மஹ்ரிபா'. 'ஹகீகத்' இது. உண்மை இதுதான்'
*

வியாழன் காலை ஆஃபீஸிலுள்ள 486 கம்ப்யூட்டரில் வைரஸ். மூளையால் கம்ப்யூட்டரை உருவாக்கலாம். அழிக்கவும் செய்யலாம் . பின் எதற்கு கம்ப்யூட்டர்? எனக்கு வேலை கொடுக்கவா? என்னிடம் Solomon Toolkit புது வெர்ஷன் இருந்தது. virus remover. அதில் வைரஸ் புகுந்திருந்தது! நான் பதட்டப்படாமல் முயற்சித்துக்கொண்டிருந்தேன். clean boot செய்து, A Driveல் முயற்சித்தாலும் பலனில்லாமல் இருந்தது. திடீரென்று, இதை மாலையில் செய்தால் என்ன என்று என்னுள் கேட்டது. மாலை ஆஃ·பீஸ் வந்ததும் உடனே ஆரம்பிக்காமல் 'அஸர்' தொழுதுவிட்டு, ஒரு டீ குடித்துவிட்டு , சிகரெட் குடித்துவிட்டு, பத்து நிமிடம் மொயீன்சாஹிபிடம் பாகிஸ்தான் 'பச்சை'களை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு உட்கார்ந்துபாரேன் என்றது. அதன்படியே உட்கார்ந்தேன். வைரஸ் போச்சு. Virus நான்தான் போலும்!
*

'எது செய்கிறதோ அது நமக்குள்தான் இருக்கிறது, நம்மில் ஒரு பகுதியாக இருக்கிறது, அதனுடைய ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். இதுதான் நம்ம பிரின்ஸிபிள்' - 'S'

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் - தமிழ் குர்ஆன்.
'Praise be to God. The Cherisher and Sustainer of the *Worlds' - யூசு·ப் அலி.

*
20-27.10.95 கேஸட் :

'மெமரி வீக்கா இக்கிது, அவர்ட்டெ கேட்டுக்கலாம், இவர்ட்டெ கேட்டுக்கலாம்டு இக்கிறது சரியல்ல. இது எப்படீண்டா நீங்க பீயை பேண்டுட்டு அவரை சூத்து கழுவ சொல்றது. நீங்கதான் கழுவனும்!' - 'S'
*

'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!'.. எந்த முட்டாப் பயலோ சொல்லிப்புட்டான். அந்த மனசை நீங்க லைஃப்லெ வச்சீங்க..ஒண்ணுமே செய்ய முடியாது. ஒரு மயிரையும் புடுங்க முடியாது. இப்ப ஆண்டவன் வந்து கேக்குறான், என்ன வேணும்டு. என்னா கேப்பீங்க?'

'நீயே வேணும்டு கேட்பேன்' - ஒருவர்

'ஹை, இது என்னை வெடைக்கிறது! ஒழுங்கா சொல்லுங்க'

'தீர்க்கமான தெளிவான முடிவை எடுக்கும்...'

'அதாவது உண்மையை உண்மையாகக் காட்டு, பொய்யை பொய்யாகக் காட்டு? பரவாயில்லை; பரவாத்தான் இல்லை'

'நாமும் வாழ்ந்து மத்தவங்களையும் வாழவைக்..'

'அந்த தியாக மனப்பான்மையிலாம் வாணாம். நீங்க நல்லா வாழுங்க. உங்களைப்பார்த்து அவன் காப்பியடிப்பான். இப்படிச் சொன்னஹ எத்தனையோ பேரு காணாப்பொய்ட்டாஹா. நீங்க நல்லா வாழுங்க. அந்த வாழ்க்கையோட brightness மத்தவங்களை கவரட்டும். ஆனா மத்தவங்களை கவர வாழாதீங்க; கீழே பொய்டுவீங்க. நீங்க மெழுகுவத்தியாக இருக்க வாணாம். டார்ச்லைட்டா இரிங்க. வெளிச்சத்தைக் கொடுத்துட்டு அழிஞ்சிடாதீங்கங்குறேன். நபிமார்கள் அப்படி இருந்திக்கலாம். குத்புமார்கள் அப்படியிருந்திருக்கலாம். நீங்க குத்பும் அல்ல, நபியும் அல்ல. 'யான் பெற்ற இன்பம் இவ்வையகம் முழுதும் பரவுக'. இதே தப்புங்கிறேன். 'யான் பெற்ற இன்பம்' சரி, அந்த இன்பத்தை பரப்புவதற்காகவே வாழுறோம்லெ? அங்கெதான் தப்பு வருது. அது பொய். அப்படி வாழ்ந்தா முட்டாள்தனம். இப்படி சொல்றது இஸ்லாமிக் பிரின்ஸிபிளை உடைக்கிறமாதிரி இருக்கும். நீங்க சரியா புரிஞ்சிக்கலை. 'Misunderstood Religion' அப்படீண்டு ஒரு புக் வந்திக்கிது. அதை படிச்சிப்பாரு -சும்மா சொல்றேன், படிக்காதே! - எது இஸ்லாம் அல்லண்டு நெனைச்சிக்கிட்டிக்கிறோமோ அதுதான் உண்மையான இஸ்லாம்! என்னா காரணம்? மத்த மதத்துலே ஞானத்தை அடிப்படையா போதிச்சாங்க. நாம் அதைவிட அரசியலையும் சமுதாய வாழ்க்கையையும்தான் போதிச்சோம். அப்ப ஞானம் யாருக்காக? சமுதாயத்துலெ கலந்து கலந்து போதிய அளவு டைம் உள்ளவன் ஞானத்துலெ பூரட்டும். அவன்ட்டெ சக்தி திரளும்போது , அந்த வெளிச்சத்துனாலே மத்தவங்க கவரப்பட்டு வரட்டும். அதனாலெ ஞானமார்க்கத்துலெ போறவங்க வைரக்கல்லு மாதிரி இரிப்பாங்க, கொஞ்சக்கோனு. 'டேலா' (கட்டிக்கல்) மாதிரி நிறைய இருக்க மாட்டாங்க. ஆக மொத்ததுலெ, லைஃப்லெ ஒரு குழந்தைட்டெ கேட்டா சொல்லும், கமர்கட் முட்டாய் வேண்டும்டு. அட்லீஸ்ட் அன்னக்கி உள்ளது. கிழிஞ்சி போன பட்டம் வச்சிக்கிற புள்ள நல்ல பட்டம் கேட்கும். ஒரு பிசினஸ்மேன் டாப் 1, நம்பர் 1 கம்பெனியாகனும்டு சொல்லுவான். உங்களுக்கோ பதில் சொல்லத் தெரியலே. அல்லா வேணும்டு ஞானம் பேசுறீங்க! வேதாந்தம் பேசுறீங்க. எந்த ஒண்ணுக்காக கொட்டை அரிக்கும்போதுகூட சொறியாம இக்கிறீங்களோ அதுக்காகத்தான் நீங்க வாழுறீங்கண்டு அர்த்தம். ஷோக்கான 'க்ளூ' - glue அல்ல! - குறிப்பு! பெரிய பெரிய இன்பங்களையெல்லாம் எந்த ஒண்ணுக்காக தியாகம் பண்ணுறீங்களோ அந்த ஒண்ணுக்காகத்தான் வாழுறீங்க. எந்த ஒண்ணு அது? அது இன்றைக்கு வந்து நாளைக்கி அழியக்கூடியதாக இருக்கக்கூடாது. permanentஆ இருக்கனும். ஒரு பிரச்சனையை எடுக்கனும், அது பூரா life long வந்துக்கிட்டே இருக்கனும். இருக்கா இல்லையா?'

'நிம்மதி' - ஆரி·ப்.

'ஹூம்.. என்னா ஆரிஃப்..கீழே கீழே போறீங்க..' - சர்க்கார் அலுத்துக் கொள்கிறார்கள். 'ஆறுலேயும் வரலாம் அறுபதிலேயும் வரலாம் சாவு. நிம்மதி, கையிலே வெறுமையா இருந்தாலும் வரலாம். நிறைய காசிருந்தாலும் வரலாம். நிம்மதியை சொல்லாதீங்க, எனக்கு நிம்மதியா இக்கிம்!.. என்னாங்க.. வாழ்க்கையைப் பத்தி புரிஞ்சிக்கிடாம எது வேணும்டு கேட்கத் தெரியாம, புரியாம இக்கிறீங்கண்டா நான் என்னா செய்யிறது?'

'கிடைச்ச அறிவை இழக்காம..'

'ஷர்புன் நியமத்' கூடாதுங்கிறீங்களா? நல்ல பதில்தான். நான் உங்க லைஃப்லெ மேஜர் Aim என்னாங்குறேன். சிம்பிளான கேள்வி. ஒன்னும் இதுவரைக்கிம் ஃபார்ம் ஆவலேண்டு சொல்லுங்க, how to liveங்குறதுக்கு பதில் சொல்ல முடியலேண்டாவது சொல்லித் தொலைங்க'

'எனக்கு பணம் வேணும்' - ரவூஃப்

'.... ..... .... '

'வேற ஒண்ணும் வாணாம். ஏண்டா மத்த எல்லாத்தையும் நான் கொண்டு வந்துவிட முடியும்' - தொடர்ந்தான் ரவூஃப்.

'இது உன் மனசுல ஏற்பட்டிருக்கிற காயத்தினாலே ஏற்பட்ட விளைவு. இது பதிலே அல்ல. எந்தப் பயலும் - பிசினஸ்மேன் உட்பட - பணம் கேட்க மாட்டான். பணத்தாலே ஆகக்கூடிய காரியத்தைத்தான் கேட்பான். இது பதில் அல்ல. அட்லீஸ்ட் இப்படியாச்சும் சொல்லலாமுல்லெ? 'லைஃப்லெ அப்பப்ப எனக்கு தேவைகள் இருந்துக்கிட்டிக்கிம். இன்னக்கி தேவையில்லாதது நாளைக்கு தேவையா இக்கிம். எதையும் அடையிற சக்தி எனக்கு வேணும். நினைச்சதை முடிக்கிற சக்தி எனக்கு வரணும். அதுவும் , சிரமமில்லாம நினைச்ச உடனே நடக்கனும். விரலசைச்சா அண்ட சராசரமும் அசையிற மாதிரி சக்தி வரணும்'. இதைக்கூட நான் சொல்லிக் கொடுக்கனுமா?! Specific-ஆ 'What we want'டுண்டு புரியாத வரைக்கிம் நடக்காது எதுவும். ஆண்டவன்உங்களைப்பார்த்துப்புட்டு specificஆ கேக்குறவன்ட்டெ பொய்டுவான்!' - 'S'
*

'தாஜ்மஹால் பீடி இருக்குதா?'
'இல்லே'
'Wills சிகரெட்?'
'இல்லே'
'Charminar சிகரெட் இருக்குதா, ஹைதராபாத் சின்னம் போட்டிருப்பான்லெ அது'
'இல்லே'
'மான் மார்க் சுருட்டு?'
'இல்லே' - கடைக்காரர் பரிதாபப்பட்டு ஒரு 50 பைசா சாக்லெட்டை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் போன பிறகு சிரித்தாரம் ஒரு சிரிப்பு. 'இப்படியிருக்கானுவ மனுஷனுவ!' என்றாராம்.

இந்தப் பழைய சம்பவத்தை சொல்லிவிட்டு சர்க்கார் சொன்னார்கள் : 'நீங்க அவன்மாதிரிதான் இரிக்கிறீங்க!'. 'know thyself. உன்னை உணர். இதை லட்சியமா வைக்கலாமுல்லே? அல்லாவை கட்டியணைக்கனும்குறதைவிட அழகான வார்த்தையில்லையா இது?' - 'S'
*

'உலகத்தை நாடுறவன் பொம்பளை, அவன் எல்லைக்குள்ளேயேதான் அவன் சந்தோஷப்பட்டுக்குவான். மறுமையை நாடுறவன் கோஷா. அவன் அதை அடையறதுக்கு 'குப்பி'தான் கொடுக்கனும், அதுல இன்பம் இக்கிதா இல்லையாண்டு பிறகு கேட்டுப் பார்த்துக்கலாம், இவன் இன்னக்கி இருக்குற ரொட்டியை வுட்டுப்புட்டு நாளைக்குள்ள ரொட்டியை நினைக்கிறவன். ஒரு சின்ன மிஸ்டேக்கால அது கிடைக்காமகூட பொய்டலாம். அப்ப.. ஆம்பள சிங்கம் யாரு? அல்லாஹ்வை நாடுறவண்டு ஒரு சூஃபி சொன்னாஹா. உங்க பொண்டாட்டி , 'நாளைக்கி பெருநாள் வருது, காசு தாங்க'ண்டு கேக்குறா.. 'அல்லாஹூ ஜல்ல ஜலாலஹுத்தஆலா தான் நாடிய நேரத்தில் கொடுப்பான்'டு அங்கே வேதாந்தம் பேசிப்பாருங்களேன்.! சோத்துல உப்பை அள்ளிபோட்டு விரட்டி வுட்டுடுவா!' - 'S'
*

'உன்னை உணர்'ந்த பிறகு ஆண்டவனை நீ வாண்டு கூப்பிட வேண்டியதில்லை. அவந்தான் இருக்கிறானே. கூப்பிட என்ன இருக்கு?' இதை லட்சியமா வைக்கலாமுல்லே?' - 'S'

வைக்கலாமா?

(தொடரும்)

குறிப்புகள் :
ரியாலத் - பயிற்சி
இபாதத் - இறைவனைப் பற்றிய சிந்தனை
ரஹ்மானியத் - நல்லசக்தி, இறைசக்தி
ஷைத்தானியத் - தீயசக்தி, ஷைத்தானின் குணம்
நஃப்சானியத் - பேராசை
திக்ரு - தியானம்
ஜெதபு - பரவசம்
ஷெய்கு - குரு
நஸீபு - தலைவிதி
ரசூல் - முகமது நபி (ஸல்)
நஜாத் - இஸ்லாத்தின் 'தூய்மை'வாதிகள்
ஷரீஅத் - மார்க்கச் சட்டம்
தரீக்கா - ஞானப்பாதை
மஹ்ரிபா - மெய்ஞ்ஞான நிலைகளுள் ஒன்று
ஹகீகத் - உண்மை
அஸர் - மாலைநேரத் தொழுகை
குத்பு - மெய்ஞ்ஞானிகளின் தலைவர்
குப்பி - ஓரினப்புணர்ச்சி

No comments:

Post a Comment