Thursday, July 6, 2017

சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள் (02)

சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள்

அத்தியாயம் 01

அத்தியாயம் 02

ஆபிதீன்

*

சென்ற வருடப் பிறப்பன்று (01.01.95, 01:30 am) சர்க்கார் பேசியதிலிருந்து:

இந்த வருடத்தில் நீ என்ன செய்வாய் என்று கேட்கிறார்கள். குழம்பிக் குழப்பவே சீடர்கள் இருக்கிறார்கள். 'Specificஆ என்ன வேணும்டு தெரியினும்பா' என்று சொல்லிவிட்டுச் சொல்கிறார்கள்: 'Financial Security - First & Best. Most Important. அது இல்லாம ஞானம் பலிக்காது. நாம சந்தோஷமா இருக்கனும்; நாலு பேருக்கு உதவனும்; கடன் இருக்கக்கூடாது. ஒரு 50 பவுன் நகை, குறைஞ்சது. ஆனா அது பேங்க்லெ அடமானத்துக்கு போயிடக்கூடாது' என்று சொல்லி , 'சரி, நீ என்னா செய்வா' - ஒருவரைக் கேட்கிறார்கள். 

'வூடு கட்டுவேன் சர்க்கார்'. 

'எது? இந்த குஸ்திலெ கட்டுவாஹலே... அந்த வூடுதானே? எட்டுவூடு பத்துவூடுண்டுலெ கட்டுவாஹா அதுலெ. நீ எவ்வளவு கட்டப்போறா?'

'நாலு அஸ்திவாரம் போட்டு ஒரு வூடு கட்டுவேன் சர்க்கார்'. '

அட , என்னெட்ட உள்ள ஒரு கெட்ட குணத்தை நீக்குவேன், ஒரு நல்ல குணத்தை உண்டாக்குவேண்டு சொல்லேம்பா! ஏன் பணத்தைப் பத்திப் பேசுறேண்டா அதுதான் எல்லாருக்கும் மெயின் பிரச்சனையா இக்கிது'

*

'எதைபத்தி உங்களாலெ கற்பனை பண்ணமுடியலையே அதை அடைய முடியாது. தூங்கப்போகும்போது வரும் எண்ணம் விழிக்கும்போதும் வந்து, அந்த எண்ணம் Dominating Forceஆகவும் அது Businessஆகவும் இருந்தால் - Businessman ஆகலாம் -  இந்த Burning Desireஐக் கொண்டு. What a Human mind can conceive and believe it can surely achieve. When you are ready for a thing it is sure to happen. 

பணம் மட்டும் போதுமா? பத்தாது. செல்வாக்கு வேணும். மொதல்ல பொண்டாட்டி மதிக்கனும் நம்மளை. அவளை சந்தோஷப்படுத்தனும். அப்பத்தான் புள்ளையிலுவ நல்லா இக்கிம். பொண்டாட்டிய அரவணைச்சிக்கிட்டே போவனும். பொஞ்சாதி 'துஆ பரக்கத்' ஸ்ட்ராங்கா இருக்கனும். 'Backing force' அவதான். 

செல்வம் நமக்காகத்தானே தவிர செல்வத்துக்காக நாமல்ல. பணத்தை வேலைக்காரனா மதி. அப்ப செல்வம் தானா வரும். 

Something for Nothing என்று எதுவும் கிடையாது. 

சமுதாயத்தோடு கலந்து பேசும்போது நடியுங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுங்கள். நம் Philosophyஐ வெளியில் சொல்ல வேண்டாம். கல்லால் அடிபட வேண்டிவரும். அதாவது , இரண்டு வாழ்க்கை தேவை. சமுதாய வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை. சமுதாய வாழ்க்கைக்கு செல்வாக்கு கொடுப்பதே அந்தரங்க வாழ்க்கைதான். 

Cigarett Lighterஐ கொளுத்தாம இருந்தா வீணாப் போவுது. கார் ஓடலைன்னா சக்கரம் வீணாப் போவுது. மனசு அப்படியல்ல. சும்மா இருந்தா நெகடிவ் விஷ வித்துக்கள் வளரும். அதனால்தான் திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும் - மேன்மையாக. 

ஆண்டவன் ஒருவன் என்று பெயர். எத்தனை கோடி இதயங்கள் உண்டோ அத்தனை கோடி ஆண்டவன் இருக்கிறான். 

ஆசை ஸ்ட்ராங்கா இருந்தா தனக்குத்தானகவே காரியம் நடக்கும் - இதை உருப்போடுங்க. 

Succes Philosophyல் Dependable Memory அவசியம். இதற்கு  Subconsciousஐ Strengthen பண்ணனும். அதுக்கு திரும்பத் திரும்ப பழைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டும் - இரவு படுக்கப்போகும்போது. Dependable Memoryயும் வரும். Subconscious-ம் ஸ்ட்ராங்கா ஆகும். 

அவசியமா அது? இப்ப அவசியமா? இவ்வளவுக்குத்தான் செய்யனுமா? என்று 3 முறை கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்று நெகடிவ்வாக இருந்தாலும் அந்தக் காரியம் செய்ய வேண்டாம். (பணம் செலவு செய்வது பற்றி). 

நானும் ஹோம்வொர்க் பண்ணிக்கிட்டுத்தான் இக்கிறேன். நான் இப்ப சொல்றது அஞ்சாம் கிளாஸ் பையன் நாலாங்கிளாஸ் பையனுக்கு சொல்ற மாதிரி. இப்படித்தான் வாழனும். ஒரு கை , மேலேயுள்ள அறிவைப் பெற. மறு கை, கீழே உள்ளவனை தூக்கி விட. இரண்டு கையையும் மேலே தூக்குனா சுயநலம். ரெண்டு கையையும் கீழே கொண்டுவந்தா இழுத்துப் போட்டுடுவான், ஜாக்கிரதை. இதுதான் லைஃப். 

பெரும் பணக்காரனுக்கு நோய்வர என்ன காரணம்? பணம் பணம் பணம்டு பொய்ட்டான். பணத்தோட சேர்த்து லைஃபையும் சேத்து நெனைச்சிருந்தாக்கா பணம் பணமா இருக்கும். செல்வாக்கு செல்வாக்கா இருக்கும். உடல் ஆரோக்கியமா இருக்கும். 

என் Principleஐ வச்சித்தான் நீங்க வளர முடியும். என் Principle என் Principle அல்ல, பெரிய தலைகள் எல்லாம் வளர்ந்தது இந்த Principleஐ வச்சித்தான்'

*

1995 புதுவருடப் பேச்சு கேஸட் இன்று - 19.01.1996  - மஞ்சனூர் ஜெப்பார்நானா மூலம் காலையில் கிடைத்தது. 

வெள்ளி 'செஷனுக்கு' உட்காரும் சமயத்தில் இதைக் கேட்டேன், எழுத. பழசை எத்தனை முறைதான் கேட்பது என்று புதுசு. இந்தக் கேஸட்கள் ஒரு காலத்தில் கனவாகப் பேசப்பட்டு வந்தன. என்னால் நினைக்கப்பட்டும் வந்தன. அவர்களை விமர்சித்த காலங்களில் அவர்களின் 'Business' பற்றிய கேஸட்டைப் பெற நாடினேன். ஆனால் முடியவில்லை. இப்போது சர்க்காரை நாடிவிட்டபோது முயல நினைத்தாலே போதுமானது. 'இதெயே போன வருஷம் கேட்டிந்தா கொடுத்திருக்க மாட்டேன். இப்ப செட்டுலெ இருக்கீங்க. பொண்டாட்டிட்ட கூட கொடுக்காதது இந்த கேஸட்கள்.. எடுத்துட்டுப்போயி கேளுங்க ' என்று சொல்லியே ஜெப்பார்நானா கொடுத்தார்.

'நானா.. அந்த பிசினஸ், ஹிப்னாடிஸம் பத்தின கேஸட்..'

'அது ஊருலெ இக்கிது. போய் எடுத்துட்டு வர்றேன்'

கிடைக்கும். ஆனால் செஷன்-ன் தொடர்ச்சிதான் கிடைக்கவில்லை. துபாய் வந்து ஒன்றரை மாதமாகிறது. ரவூஃப், என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறாய்? அனுப்பினாயா? யாருக்கு?

*

அடுத்த கேஸட் 29 to Jan 95 என்று போட்டிருக்கிறது. டிசம்பர் 94ஐச் சொல்கிறதா ஜனவரி 95ஐ சொல்கிறதா?

'மேலே வர்ற Improvement எல்லாம் கீழே வரனும் முதல்லெ. கீழே வர்ற Improvement-லாம் மனசுல வரனும். மனசுல வந்தாத்தான் செயலே மாறும். அதனாலே , நீங்க தொழுதுகிட்டே இக்கிறீங்க, உங்க லைஃப்லெ மாத்தம் வரலைண்டா ஒண்ணு நீங்க தொழவே இல்லே, இல்லே உங்க 'நெகடிவிடி' , தொழுகையினால வர்ற இம்ப்ரூவ்மெண்ட்டை விட ஸ்ட்ராங்கா இருக்கு. அதனாலெ நாலு நாள் அல்ல, நாப்பது நாள் தொழுவுங்க. 

இப்பவும் சொல்றேன், அப்பவும் சொல்றேன், எப்பவும் சொல்றேன், சுடுகாடு சுவனமா மாறுவதற்கு நாப்பது நாள். பிச்சைக்காரன் கோடீஸ்வரனாக நாப்பது நாள். நாப்பது நாள்தான். இப்பவும் சொல்றேன்.  Only நாப்பது நாள். 

எந்தப் பயிற்சியும் செய்ய முடியும். ஆனா, நீங்க ரெடியா இருக்கனும்..எல்லாத்தையும் control  பண்ணனும். எதை? சின்னச் சின்ன செயல்களை Control பண்ணுங்க. Control ஆவுதா? Mind திரளுதுண்டு அர்த்தம்'


அரேபியா :

'அரேபியாவுக்கு ஏன் போவ வாணாங்குறேன்? உங்க இளமை, உங்க ஆரோக்கியம், உங்க மகிழ்ச்சி, நீங்க கொஞ்சுறது, வெளையாடுறது...எல்லாத்துக்கும் மேலே ஆண்மை... அந்த சூட்டுலெ ஆண்மை பொய்டும்! எல்லாத்தையும் உட்டுப்புட்டு ஒரு ஈஸி சேர், ரெண்டு கட்டு சுருட்டு, மூணு காராபூந்தி பொட்டலம்; சும்மா 'கூல்' பண்ணி உட்டுடுலாம். இதுக்குப் போயி மாஞ்சி மாஞ்சி வுழுவுது ஜனங்க!'

ஊர் :

'மனுஷன் நல்லவனா கெட்டவனா என்பது முக்கியமல்ல. திறமைசாலியா என்பதுதான் முக்கியம். தெருவுக்கு ஒரு தலைவன் தேர்ந்தெடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த உலமாக்கள் ஊருக்கு அவசியம்' - போலீஸ் ஸ்டேஷன் இல்லாத நிலைவர என்று பேசும்போது.

வாய்:

'நான் ஏன் (டிவி'யில்) சினிமா போடுறேண்டு கேட்டா படம் பாக்குறதுக்கு அல்ல, நீங்கள்லாம் கேள்வி கேட்காம இருக்குறதுக்கு!'

பீ :

சர்க்கார் கொடுக்கும் பயிற்சிகளைக் கடைப்பிடித்து வந்தால்? சர்க்கார் சொல்கிறார்கள்:

'நடக்குற முறை, அசையிற முறை, 'ஸ்மோக்' பண்ணுற முறை , ஏன் - தண்ணி குடிக்கிற முறை.. (எல்லாம் மாறும்)- பீ பேலுற முறையை நாம பாக்க முடியாது, பேண்ட பீயை வேண்டா பாக்கலாம் - நம்ம வூட்டுலெ முடியாது, FlushOutஆ இல்லாம இருந்தா பாக்கலாம் - அதுல பெஸ்ட் பீ பேலுறது சிஹாபு நானாதான். கரெக்டா குழா மாதிரி பேலுவாஹா. லேசா அமுக்கி வுட்டுடுவாஹாண்டு நெனைக்கிறேன். லேசா, ரிலாக்ஸ்டா பேலனும். சுஹமா பீ பேலனும்.'

நான்:

சர்க்கார் , என் பத்துவருட அரபுநாட்டு வாழ்க்கையில் ரெண்டு சுருட்டு கட்டு வாங்கிவிட்டேன். அஸ்மா, தன் நகையை அடகுவைத்து எப்படியும் முன்று காராபூந்தி பொட்டலம் வாங்கிவிடக்கூடும். அந்த ஈஸி சேர், அதற்குத்தான் இந்த துபாய் அல்லது வரவிருக்கிற லண்டன் அல்லது பாரீஸ்! சிங்கப்பூரில் வாங்குவதும் நல்லதுதான், சீக்கிரம் ஊருக்கு கொண்டு வந்து விடலாம். அங்கே போகவா?

*

'எண்ணத்துல மாத்தம் வந்திச்சின்னா செயல் மாறும். Thought Habit மாறும்போது எதையும் செய்யலாம். முடியாதுண்டு தோணுதா? லேசா படுத்துக்கிட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க. அதை திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப நெனைச்சிக்கிட்டே இருங்க. அப்படியே பயம் தெளிஞ்சிக்கிட்டு வந்து, சாத்தியம்தான் இதுவரைக்கிம் சாத்தியம்தாண்டு தோணும். Positivity வந்திடுச்சிண்டு அர்த்தம். அப்புறம் at the reach of our hand என்று தெரிய ஆரம்பிக்கும். அப்ப.. reachக்கே வந்துடும். நீங்க செய்ய வேண்டியது என்னா? மனசை சுத்தமாக்கி வைங்க. எப்படி சுத்தப்படுத்துறது? இரண்டு வழி இருக்கு. அமைதியை உண்டாக்கிவிட்டு வாழ்வது ஒரு வழி. அமைதி உள்ள மாதிரி நடிக்கிறது மறு வழி. ஊருக்கு நடிக்கிறதுக்கு அல்ல, உங்களுக்கு நீங்களே நடிச்சிக்கனும்.' 

'நிற்கும்போது கோவம் வந்தா உக்காந்துக்க. பெரிய வேலையை செய்யாதே..உட்கார்ந்திருக்கும்போது கோவம் வந்தா படுத்துக்க, ஹதீஸ் இது. கோவம் வரும்போது நம் மாற்றுவழி போல நடிக்க வேண்டும் (உட்கார்ந்து->படுப்பது) அதாவது எண்ணத்துல மாற்றம் உண்டாக்கிட்டு செயலில் உண்டு பண்ணலாம்- ஒரு வழி. செயலில் வேண்டுமென்றே மாற்றம் ஏற்படுத்துவதால் எண்ணம் மாற ஆரம்பிக்கும், மறு வழி'.

*

சர்க்காரின் மச்சான் தாவுதுவாப்பா ஒரு கேள்வி கேட்டார்களாம்: 'ஏன் மச்சான், நீங்க காலேஜிலேயே கால் வைக்காத ஆளு. நான் M.Aலெ டபுள் டிகிரி. உங்களுக்கு Grasping Force அதிகம்!'

'நீங்க வந்தது என்ன காரணம்ட்டு.. நீங்களா எப்படி முடிவுக்கு வந்தீங்க? நீங்க புஸ்தகத்தை பொரட்டிக்கிட்டு இக்கிறீங்க. நான் புஸ்தகம் எழுதுனவன்ற மண்டைய பொரட்டிக்கிட்டிக்கிறேன்' - சர்க்காரின் பதில்.

*

'படிப்பு வேறே மரியாதை வேற அந்தஸ்து வேற Mental Force வேற. ஒரு பரப்பயலுக்கு வரட்டும் - பரப்பயல்ண்டு பொருளாதாரத்திலே 'வீக்'குண்டு அர்த்தத்துல சொல்றேன் , மனுஷனை குறை சொல்லலே - அந்த Mental Force வந்தா Top Class Peopleலோட மேலே பொய்டுவான்.' 

'என்ன வேண்டும் கேள் , உடனே தருகிறேன்' என்று அல்லா கேட்டபோது ஒருவன் கேட்டானாம், 'என்னுடைய பேரனுடைய பேரன் என் பரம்பரைக்கே சொந்தமா மூணு அடுக்கு மாளிகையில் ஓடி விளையாடுவதை என் கண்களால் பார்த்து நான் ஓடிக்கொண்டே ரசிக்க வேண்டும்!' இப்படி 'துஆ' கேட்கனும். அப்படி கேட்க தெரியலையா? கேட்காதே, சும்மா இரி. பிறகு என்னா செய்யிறது? சக்தியை வளர்த்துக்கிட்டே இரி. கத்தியை கூராக்கிட்டே இரி. உபயோகிக்கிற சந்தர்ப்பம் தானா வரும். எப்படிண்டு மட்டும் கேட்க வாணாம்'

*. 

நல்ல செய்தி பேசக்கூடியதும் சொர்க்கலோகத்து தோட்டங்களில் ஒன்று - ஹதீஸ்.

*

'ஒத்திப் போடுறதுக்கு காரணம் Inferiority Complex. எங்கே வளர்ந்துடுவோமோங்கற பயம் காரணம். வெற்றியைப் பார்த்து பயப்படுற குணம் காரணம். தாழ்வு மனப்பான்மையுடைய காரணம் Past Failures.'

'ஞானப்பாதை என்ன கொடுவா கருவாடா? கஷ்டப்படனும்.. உஸ்தாதுமார்களை Daily  பார்க்கனும், 'துல்லிபிரியாணி' சாப்பிட அல்ல. பாக்கனும், அவ்வளவுதான். 'தொழுவுங்க வாப்பா, நோம்பு புடிங்க வாப்பா'ண்டு சொல்றவனுக்கு போய் கொட்டுறானுவ.. ஒரு மயக்கத்துலெ, Hypnotic Forceலெ வாழுறான் மனுஷன்.. Illusion.. பாரபைத்தியம். எனக்கு என்னா, என்னை நம்பிக்கிட்டிக்கிற புள்ளையிலுவள தூக்கி வுட்டுடனும். இல்லேண்டா ஆத்மா சாந்தியடையாது. அட தூக்கி வுடுறதுக்கு மாத்தமா அமுக்கிக்கிட்டே ஒக்காந்திருந்தா என்னா செய்யிறது?'

ஒரு சீடனுக்கு திட்டு : 'எத்தனை தடவை சொல்லியிக்கிறேன், பத்திரிக்கை படிக்காதே, வெளிப்பேச்சு கேட்காதேண்டு! குறள்-ஐ refer பண்ணுறான்.. 'யேய்.. என் புஸ்தகத்தையே படிக்காதேங்குறேன்.. குறளை சொல்றியே'ண்டு அடிச்சா அதுக்கு ஒரு மறு குறள் சொல்லுறான் டக்குண்டு! புரியலை, புரியிற 'நியமத்' இல்லே.. யாருக்கு ஆண்டவனின் முத்திரை நெஞ்சில் இல்லையோ , அல்லது யாருடைய முத்திரையை உடைக்க முடியுமோ , அல்லது யாருடைய முத்திரையை சூடு காமிச்சி - இதயத்துக்கு பழுதில்லாம - கரைக்க முடியுமோ அவங்களுக்குத்தான் நான் ஹெல்ப் பண்ண முடியும்.'

சர்க்காரின் 'ஸ்டார்' சின்னம்: 

'தெய்வத்தன்மை கீழே வந்து, வளர்ந்து, ஞானப் பாதையிலெ மறுபடி cross பண்ணி , அங்கே சமுதாயத்துக்கு தொண்டு செஞ்சிட்டு, அப்புறம் தெய்வத்தன்மைக்கே மேலே பொய்டுது. அதுதான் 'ஸ்டார்'ண்டு Symbolஆ பேர் வச்சிக்கிறோம். வட்டம் என்பது அண்ட சராசரம். அண்ட சராசரத்தை துளைச்சிக்கிட்டு போற 'ஸ்டார்'. சக்தி படைச்சது இந்த 'ஸ்டார்'. அதனாலதான் கூம்பை முன்னாலெ போட்டேன்!.

*

பேசாதே : 

சர்க்காரிடம் ஏச்சு வாங்காமல் தப்பிப்பது கடினம். முக்கால்வாசி ஏச்சு நம் முந்திரித்தனத்தால் கிடைக்கும். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் நமக்கு ஆயிரத்தெட்டு சந்தேகம் வந்தாலும் கேட்கக்கூடாது. 'Flaw வச்சித்தான் ஒவ்வொண்ணையும் சொல்றேன். நீங்க கேட்கனும்' என்று சொல்வது , அவர்கள் பேசி முடித்த பிறகு. 'ஒவ்வொரு செய்கையையும் உணர்ந்து, ரசித்து செய்ய வேண்டும் - அந்த செயலைச் செய்கிற பிரக்ஞையோடு - உதாரணமாக டீ குடிப்பதை இந்த அளவு நிதானத்தோடு...' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடையில் நான் பாய்ந்தேன் பொறுக்கமாட்டாமல் . 'ஜப்பானில்கூட தேநீர் வைபவம் ஒன்று இருக்கிறதாம்..அங்கே ஒரு டீயை குடிக்க 3 மணி நேரம் ஆகுமாம்' என்று புகுந்தேன். ஜானகிராமனின் பயணக்கட்டுரை ஒன்றில் அவர் வியந்து - வழக்கம்போல- பேசுவார். அந்த ஞாபகம்.

'ஹராம்! நீங்க இப்படி பேசுறது ஹராம். வுட்டுடுங்க இதை'

'சர்க்கார், வந்து...'

'ஆக்கபூர்வமான, சரியான உதாரணம்தான். ஆனா அத நான் பேசி முடிச்சபொறவு சொல்லனும். இப்படி குறுக்கே விழக்கூடாது. நான் சொல்லும்போது உங்களுக்கு பலதையும் சொல்லத்தோணும். ஆசை கொப்பளிச்சிக்கிட்டு வரும். அடக்குங்க'

சரி, பேசாமலும் இருக்கலாமா? 'நான் பேசுற பாணியே கேள்வி கேக்குறமாதிரிதான் இருக்கும். நீங்க உங்க பதிலை சொல்லி என்னையும் எல்லோரயும் குழப்பி வுட்டுடாதீங்க' என்பார்களே என்று பிள்ளைகள் பேசாமல் இருந்தாலும் தொலைந்தது.

'நீங்கள்லாம் அவுலியா மாதிரி.. எது சொன்னாலும் பேசாம இருப்பீங்க' என்பார்கள்.

எப்படியோ சர்க்கார் வாயால் 'அவுலியா' பட்டம் என்று பிள்ளைகள் சந்தோஷப்படலாமோ?

'அவுலியாவெல்லாம் கழுதை மாதிரி!' - சர்க்கார் சரியாகவே முடிப்பார்கள் எப்போதும்.

கேள் : 

'பேசும்போது கேட்கனும்..அதுதான் நம்ம பிரின்ஸிபிள். சம்பந்தப்பட்டவர்கள்தான் கேட்கலாம். உங்களுக்கு ஞாபகம் வர்றதையெல்லாம் சொல்லக்கூடாது என்னெட்ட. உங்களுக்கு வரக்கூடிய எந்தக் கேள்வியும் சரி, எனக்கு வந்ததுதான். எல்லாரையும் 'அனலைஸ்' பண்ணிப்பார்த்த பிறகுதான் நான் பேசுறேன். எந்த தராசுலேயும் நிக்கிம் என் பேச்சு. படிக்கிற காலத்துலெ என் ஹஜ்ரத் என்னெட்ட ஒண்ணு சொல்லிக்கிட்டிருக்கும்போது 'இதுதானே ஹஜ்ரத் அல்லா சொல்றான் குர்ஆன்லெ' என்று நான் சொன்னதுக்காக மூணு மாசம் என்னோட பேசலை அஹ. இதை சொன்னப்போ 'டக்'குண்டு பதில் சொன்னாஹா, 'இதை அல்லா சொன்னபோது நான் வெளிலே போயிருந்தேன்பா'ண்டு. மூணு மாசம்.. உருக்கி உருக்கிப் பாத்துக்கிட்டு சும்மா இருக்காஹா! என் முகத்தைப் பாக்கவே இல்லை.. கதறுனேன். அப்ப என்னா சொன்னாஹா தெரியுமா, 'அல்லா இதெத்தான சொல்றாண்டு கேக்குறியே.. அல்லா யாருண்டு தெரியுமா? அல்லா யாரு, ரசூல் யாருண்டு தெரியாமதான என்னெட்டெ வந்திக்கிறா நீ? என் தோள் மேலேயா கை போடுறா? என் கூட்டாளியா நீ? என்ன, கலந்தா உரையோடுறோம்? பேச்சு கேட்க உட்கார்ந்திரிக்கிறியா, இல்லே, கலந்து உரையாடவா?' . அப்பத்தான் என் தப்பு தெரிஞ்சது.

'நான் சொல்லும்போது நீங்க ஒண்ணு சொன்னா கேட்கிற இன்னொருவருக்கு மனசுல ரெண்டு செய்தியும் ஒண்ணா ரிகார்ட் ஆகும். நாளைக்கி அவர் 'ரிபீட்' பண்ணும்போது என் செய்தியாக அவர் செய்தி வெளிவரும். நான் , பேசனுமே என்கிறதுக்காக கொஞ்சம் சும்மா இருப்பேன்..அவர் 'சர்க்கார் ஆமோதிச்சிட்டாஹா' என்பார். பேச்சுல எவ்வளவு Difficulties இக்கிதுண்டு சொல்றேன். ஒரு தனி ஸ்கூல் இது, மொத்தத்திலே. பத்தாயிரம் தடவை சொன்ன செய்தியை உங்கள்ட்ட சொல்றேன். ஒரு உஸ்தாது கிட்டே சிஷ்யப்பிள்ளை கேட்டாராம். 'நான் எங்கே போவ?'

'சிரியாவுக்கு போ'

'ஏஃபில் மஷூக் ஹூனாக்?' (எப்படி வாழுறது அங்கே?). சரிதானே? அறிமுகம் இல்லை. பழக்க வழக்கம் இல்லை.

'சந்தேகம் வந்துவிட்டது. என் அட்வைஸ் வேலை செய்யாது' - உஸ்தாத் சொன்ன பதில்.

ஆக , சொன்னா செஞ்சிடனும். அவ்வளவுதான். Geometryலெ ஒரு புள்ளி வச்சா One Dimension. பக்கத்துலெ இன்னொரு புள்ளி வச்சா Two Dimension. அதுக்கு மேலே ஒரு புள்ளி வச்சா 3 Dimension. இதை நம்பனும் முதல்லே. எப்படிண்டு கேக்கக்கூடாது. ஒத்துக்கிட்டா கால்குலேசன் பூரா கம்ப்ளிட்டா இருக்கும். அதனால்தான் Open Heartness & Open Mindnessஓடு இங்கெ வரணும். நீங்க பெத்துகிட்ட அறிவு பூரா கரைஞ்சி போறத கண்ணால பாக்கலாம். அதுக்காக , முன்னாடி தூக்கி வைக்கக்கூடாது - கரைச்சி வுடுங்கண்டு. உங்க அறிவு அறிவே அல்ல. அறிவுக்கு பேரு Knowledge. நாங்க சொல்றதுக்கு பேரு Wisdom. ஞானம். இது 'இர்ஃபான்', இது 'மஅரிஃபா'. இது ஜெனெரலா கொடுக்குற 'Talk' அல்ல. சோறல்ல. நோய்க்கு கொடுக்குற மருந்து. ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு மாதிரியா இருக்கும். இங்கே ஒவ்வொரு ஆளும் அப்பப்ப சில கேள்விகள் கேட்டு அதை உங்களுக்கு சூட்டபிளா அமைச்சிக்கனும். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு மாதிரி கொடுப்பேன், ஆளோட நோய்க்கு தகுந்தமாதிரி. ஆனா எல்லா மாத்திரையையும் கொடுத்துடுவேன், அதுதானே முறை!' - 'S'

*

03-08.01.95 கேஸட் :

'ஜனங்கள்ட்டெ வேதாந்தம் மாறனும். 'இது ஆகாது , இதோட விளைவுதான் அது' என்று நம்புற மனப்பான்மை மாறனும். மனசை சுத்தமாக்கி வச்சிக்கிட்டு டெஸ்ட் பண்ணி பாக்கனும்டு பாத்தா லைஃப் பத்தாது. எனவே டெஸ்ட் பண்ணி அதுக்காகவே லைஃபை அர்ப்பணிச்சிக்கிறவங்க பேச்சைக் கேட்கனும். அவ்வளவுதான்.'

ஒரு செட்டியாருக்கு ஒரு சாபு கடன் கொடுத்திருக்கிறார் (அப்படியும் நடக்குமா?!). இப்போது சாபுவுக்கு பயங்கரமான பணமுடை. செட்டியாரைப் போட்டு நெருக்கினார்.' இந்தோ அந்தோண்டு இழுத்தடிக்கிறியும்.. ரெண்டுல ஒண்ணு ; எப்போ தரப்போறியும்?'

அவர் ஆத்திரம் செட்டியாரின் பதிலால் உடனே வடிந்து விட்டது.

'நாளைக்கு சத்தியமா நிச்சயமா தந்துடுவேன் சாபு. உங்க வேலைதான் முதல்லெ'

சாபு இதைநம்பி மறுகடன் வாங்கி , சோறுகறி ஆக்கி தின்றுவிட்டு , அடுத்தநாள் செட்டியார் வீட்டிற்குப் போனால் செட்டியார் குந்திக்கொண்டு உட்கார்ந்து என்னமோ செய்துகொண்டிருக்கிறார். 'உங்க வேலையைத்தான் பாத்துக்கிருக்காரு' - செட்டியார் மனைவியும் சாபுக்கு குஷி ஏற்படுத்தினாள். 

'உங்க வேலதான்'- செட்டியார் ஒரு எலந்தக்கொட்டையை ஒரு குவளையில் தண்ணீரில் போட்டு அமுக்கிக்கொண்டே சொன்னாராம்.

'என்னா பன்னுறியும் செட்டியாரே.. என்ன இது?' - உற்றுப் பார்த்திருக்கிறார் சாபு.

'வாங்க சாபு, பாருங்க! இது வளர்ந்து, மரமாகி, பழம் வச்சி, பறிச்சி வெட்டுன உடனேயே ஃபர்ஸ்ட் காசு உங்களுக்குதான்'

சாபு விரக்தி சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தாராம்.

'ஏன் சிரிக்க மாட்டீங்க...கடனுக்கு வழி பொறந்திடுச்சில்ல..!' - செட்டியார். செட்டியாரா கொக்கா?

*

'ஜம்' :

'ஜம்' ரொம்ப சிம்பிள். ரொம்ப ஈஸி. அதாவது , தங்க பஸ்பம் மாதிரி. வேற ஒன்னும் வாணாம். அதைமட்டும் கரெக்டா செஞ்சிட்டு வந்தா போதும். நான் இருக்கும்போது என் முன்னால எந்த வேலை செய்யக்கூடாதோ 'ஜம்'முலெ செய்யக்கூடாது. நீங்க என்னை நினைக்கிறதுதான் 'ஜம்'. 'ஜம்' செய்ய முடியலைண்டு சொன்னா எனக்குப் பிடிக்காத வேலையை செஞ்சிக்கிட்டிக்கிறதா அர்த்தம்.'

*

'ஒரு குழந்தைக்கு ஒரு பட்டம் வாங்குறதுக்கு எவ்வளவு கவலைப்படுமோ எவ்வளவு அக்கறைப்படுமோ அதே அக்கறைதான் தஞ்சாவூர் ஜில்லாவை விலைக்கு வாங்குறதுக்கும். அந்தப் பட்டத்தோட மதிப்புதான் இதுவும்டு உங்களால நம்ப முடியனும்'.

*

சாய்பாபாவைப் பற்றிய ஒரு புத்தகம். The Miracle Man என்று. அதைப் படித்த நாகை வக்கீல் ஒருவர் சர்க்காரிடம் கேட்டாராம். 'சாபு, அந்தப் புக்கை ரசிச்சிப் படிச்சிங்களா?' 

'Understand what has not been written.. understand what has been written between the lines' அதாங்க எனக்குப் புடிக்கும். நான் எல்லாத்தையும் ரசிப்பேன். Paralysed attack ஆன ஒரு ஆளை சாய்பாபா குணப்படுத்துறான். அவன் கொண்டு வந்த காணிக்கையா கொட்டும்போது ஒரு வார்த்தை - சாய்பாபா சொல்றான் - 'It is  not me. It is you that cure yourself. இத நான் ரொம்ப மதிக்கிறேன்'
*

நோன்பின் மாண்பு : 

'நோன்பு புடிச்சு பட்டினி கெடந்து இறைவணக்கம்ங்குற பேருல செய்றீங்க. ஏங்க, பெருநாளன்னிக்கு முகம் வாடிப்போயி, வத்திப்போயிலெ இருக்கனும்? control பண்ணுனாதால முகம் தெளிவாவுல இருக்கனும்? ஏங்க உப்பிப்போய் இருக்கீங்க? காலைப்பசியாற, பகலுக்கு சாப்பாடு, நைட்டு சாப்பாடு.. 'சஹரு'க்கு போட்டு வெட்டுறது , நோன்பு தொறந்த உடனே மறுவெட்டு. இதுக்குப்பேரு நோன்புண்டா சொல்றது? நம்ம நோன்புல 'ஒலு'வோட இருக்கனும். Fully concious of yourself. Next, எதுல ஆசை வருதோ, அத திங்கக்கூடாது. அதுதான் நம்ம நோன்பு. இத மாதிரி இருக்க ஆரம்பிச்சா ஊர் ரொம்ப அலஹா இக்கெ ஆரம்பிக்கும்.'

ஒரு Training (1972ல் நடந்தது):

'லைஃப்லெ தவிர்க்க முடிஞ்சது, தவிர்க்க முடியாததுண்டு ரெண்டு இருக்கு. தவிர்க்க முடிஞ்சதை உயிரைவிட்டு தடுக்கனும். தவிர்க்க முடியாததை accept பண்ணிக்கனும். Acceptance  of inevitable is the first step to conquire Happiness.

இதுக்கு ஒரு டிரைனிங். எல்லாரும் 15, 15 ரூவா போட்டு சோறாக்க வேண்டியது. சோறுண்டா டாப் கிளாஸ் மொகல் பிரியாணி. சீட்டுக் குலுக்கிப் போட வேண்டியது. யாரோட பேர் வருதோ அஹலுக்கு சோறு கிடையாது. அவந்தான் பரிமாறனும். சாப்புடுற ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தியா சொல்லனும், அவன் நாக்குல தண்ணி வர்ற மாதிரி. அப்புறம் ஒரு ஆணம் கூட கொடுக்க மாட்டோம். வெறும் தோசை வாங்கித் தருவோம். ஹமீது சாபு சொன்னான்: 'அடுத்த வெள்ளிக்கிழமைதானே? அன்னக்கி எனக்கு காய்ச்சல் வரும் சர்க்கார்!'

*

'பெர்னார்ட் ஷா 200 ரூவா களவு கொடுத்துட்டான். பெர்னார்ட்ஷா தெரியுமுலெ? கை, காலு, நகம், மயிரு, மண்டை எல்லா இடத்துலேயும் மூளை உள்ளவன்.Great Man. 'ஏன் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாமே' என்று அவன் கூட்டாளி கேட்டதுக்கு 'மறு 200 ரூவா செலவாவுறதுக்கா?'ண்டான் அவன். ' ஏன் களவு போனிச்சி? நான் சரியா லாக்கர்லெ வைக்கலே. இனிமேல் சரியா லாக்கர்லெ வச்சிடுவேன்'ண்டான். எவ்வளவு அளஹா சொல்றான் அவன்!' 'எது எது எந்தெந்த காலத்துல எப்படி எப்படி நடக்கனும்டு ஆசைப்பட்டாங்களோ அது அது அந்த அந்த காலத்துலெ அப்படி அப்படி நடக்குறதப் பார்த்து வெறுப்படையிறாங்க' - பெர்னார்ட்ஷா சொன்னது. ஆனால் லைஃபை அளஹாக்குறதுக்கு பெர்னார்ட்ஷா தேவையில்ல'

*

'Becoming & Being' - நாம் தெய்வமாக இருக்கலாம், தெய்வமாக மாற முடியாது'

*

'எந்த அளவுக்கு எதுலெ செலவு பன்றதுண்டு சரியா தெரியனும். சக்திவிலாஸ் பஸ் ஓனர் எவ்வளவு பெரிய பணமுள்ளவன். தூசி மாதிரி பறந்து பொய்ட்டான். கேயார் சரோஜாட்ட போனதுனால தப்பு இல்லே. முழு கவனத்தையும் அவ மேல வச்சதுதான் தப்பு. கடைசில கெடச்சது என்ன அவனுக்கு? ஒரு பொந்தும் ரெண்டு பந்தும்! விந்தை சேமியுங்க , அதுதான் 'ரூஹானியத்' 

*

அக்டோபர்-நவம்பர்'95ல் நான் எடுத்த குறிப்புகள் :

போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்துண்டு நெனைச்சா மயிரைத்தான் புடுங்க முடியும்.

வாழ்க்கை பிரியாணி மசாலா போல (அறிவு, செல்வம், Controlling Force, Understanding etc சேர்த்த மசாலா)

மெழுகுவர்த்தியாக இருக்காதே. TorchLightஆக இரு

சின்ன வெற்றிகளே பெரிய வெற்றியை அடையும் வலிமையைத் தரும் (Similarity)

எண்ணுவதைச் செய், செய்வதை எண்ணு. 

பணத்துக்கு ரோஷம் உண்டு. ரிலாக்ஸ்டாக இருப்பவனிடதான் பணம் வரும். (பணம் வந்ததால் ரிலாக்ஸ்டு Mood என்பது தப்பு)

கோபப்படும்போது கோபப்படுகிறோம் என்று நினைத்தால் சிரிப்பு வரும்.

வெளிக்கிருக்கும்போது எடுக்கும் Decision  சரியாக இருக்கும் (முதுகுத்தண்டு நேராக இருப்பதால்).

காணிக்கைக்கும் அன்பளிப்புக்கும் உள்ள வித்யாஸம் : காணிக்கை : கொடுக்கும் கை தாழும். வாங்கும் கை மேலே இருக்கும். அன்பளிப்பு : வாங்கும் கை தாழும்; கொடுக்கும் கை மேலே இருக்கும். 

அடைவதற்கு முன் இருந்த Personality அடைந்த பின்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் 'Thought Habit' டெவலப் ஆகும். பொருள் மீண்டும் மீண்டும் தேடி வரும்.

ஆண்டவனின் கஜானாவில் பட்டத்துக்கும் RollsRoyce காருக்கும் வித்யாஸமில்லை.

Don't think past Failures. Think Success in the Past.

அவசரம் ஆத்திரம் பொறாமை இந்த மூன்றும் ஹராம்.

***

26.01.1996 வெள்ளி 'செஷன்'

'Secret Symbol'க்கான முன்னோட்டமாக இந்தப்பேச்சு வருகிறது என்று சொல்லி காலையில் ஜெப்பார்நானா கொடுத்த மூன்று கேஸட்களில் முதலாவதை (19.01.95 to 04.02.95) எடுத்துக்கொண்டு உட்காருகிறேன்.

'நாம சுத்தமா இருக்கனும். மத்ததுலாம் தானா துலங்கும். துலங்கிக்கிட்டே வரும்போது துலங்குறனாலத்தான் நாம சுத்தமா இருக்கிறோம் என்று தப்பா நெனைச்சிக்கக் கூடாது. சுத்தம்தான் துலங்க வைக்கிது. அதனால் 'ரியாலத்'ங்குறது உயிர் மாதிரி. 

'சிரமம்ங்குறது நன்மைக்கு First Step.'

''Problem வந்தால் அதே நிமிடத்தில் தீர்ப்பது சிரமம். ஒத்திவைத்து, Focus பண்ணுங்க. ஒத்தி வைக்கிறது, ஒத்திப் போடுறதல்ல. ஒத்தி வச்சா செஞ்சாவனும்'

'லைஃப்ல மல்லாக்கொட்டை மாதிரி இக்கினும். எந்த அளவுக்கு ஆர்ப்பரிச்சி கூத்து போடுவீங்களோ அந்த அளவு Power வீக் ஆகும். வாழ்க்கையைப் பத்தித்தான் 75% நெனைக்கனும், இடையூறுகளை நீக்குறதப் பத்தி 25%தான் நெனைக்கனும்'

'உலகத்துல வர்ற துன்பத்துலெ பெரும்பகுதி எதிர்பாக்குறதுனால வர்றதுதான்.'

'நான் வழிசொல்லித் தர்றேன். இந்த வழியை நீங்க எந்த வழியிலேயும் கண்டுபிடிக்க இயலாது. நான் நெனைக்கிறேன், அல்லாஹூ ஆலம் எப்படியோ, திடீரென்று 'எஜமானுக்கு' அக்கறை வந்து, சியாந்தெருவுக்கு வந்து, 'ஸ்ச்சூ'ண்டு ஓதி ஊதி வுட்டுட்டாஹாண்டா பேச்சு வேற, அப்படி வர்றதுக்கும் வாய்ப்பிருக்குது, வரலாம். நீங்க அதை எதிர்பார்க்கிறதா இருந்தா பாத்துக்கிட்டே இரிங்க. ஆனா 'எஜமானுக்கு' நெறயா வேலை இருக்கு. முதல்லெ, 'எஜமானை' எதிர்பார்க்கிற அளவு உங்களுக்கு பக்குவம் இருக்கா? அதையிலெ பாக்கனும்! கடன் கொடுத்த பக்கிரிசாமியே கனவுலெ வரமாட்டேங்குறான், 'எஜமானா' வருவாஹா? நீங்களா போட்டு உங்கள ஏமாத்திக்கிட்டு அலையிறீங்களே.. ஒண்ணுமில்லே, மௌலுது சபை, ரோஜாப்பூ, கொஞ்சம் பன்னீர் தெளிச்சி வச்சாக்கா ஜனங்க என் காலை நக்கிட்டு அலைஞ்சிக்கிடிருப்பானுவ'

'இந்த அல்லாஹ்வும் ரசூலும் குத்புமார்களும் என்ன சொன்னாங்க? நல்லா வாழச் சொன்னாங்க, நீங்க செய்றதுலாம் அவங்களை வெடைக்கிறதுதான்!'

'கோட்டையைக் கட்டப்போறீங்களா, கோட்டையை யோசனை பண்ண வாணாம். கோட்டையைக் கட்டவுடாம எந்த சின்ன செயல் தடுக்குதுன்னு பாருங்க. successfulஆ வாழுறதுக்கு மிக மிக மிக சிறிய சக்திதான் தேவை. தோல்வியடையத்தான் பெரிய சக்தி தேவை. சிரிக்கிறதுக்கு உள்ள சக்தியைவிட தும்முறதுக்கு, அழுவுறதுக்கு அதிக சக்தி தேவை. மேலே போறவன் செழிப்பா தெரியிறதுக்கு காரணம் மேலே போனதால அல்ல, செழிப்பா இருந்ததுனாலத்தான் மேலே போனான் என்று தெரியனும்'

'எடுத்தா முடிச்சிடனும், இல்லேன்னா எடுக்கக்கூடாது'

'அடையிறதைவிட பாதுகாக்குறதுதான் சிரமம்'

'மருதாணி விசேசம், பாப்பர விளையாட்டு விசேஷம். இதெல்லாம் பொம்பளைங்க விளையாடுவாளுவ. நமக்கும் வெளையாட்டு இக்கிது. But, if.., as if... !'

*

பக்கத்திலுள்ள பள்ளியில் தொழாமல் தூரமாக சென்று தொழுவது சிறப்பு. (Ex. சியாந்தெரு to ஜோலனா பள்ளி) . என்ன காரணம்? சர்க்கார் சொல்கிறார்கள் : 'சுக்கு கண்ட இடத்திலெ புள்ளைய பெக்கக்கூடாதுண்டு அர்த்தம். தொழுகையை நெனைச்சிக்கிட்டு அதுக்காக முயற்சி எடுத்துக்கிட்டு போ, பக்கத்துலேயே முட்டிக்காதே'

*.

'ஆண்டவன் மனுஷனை டெஸ்ட் பண்ண ஒரு வழி கண்டுபுடிச்சான். How to test him-ங்கிறதுக்கு.. காதை ஓபனாவச்சிட்டான். வுளுவத்தான் செய்யிம். நீ controlஆ இரி பாக்கலாம்டு'

'ஒவ்வொரு drawbackம் ஒரு நன்மையை கூடவே வச்சிக்கிட்டிருக்கு. அந்த நன்மை நிச்சயமாக equalஆகவோ greaterஆகவோதான் இக்கிம்' - சர்க்கார் தன் தனிமையைப் பத்தி.

*


'நாக்கூரையே வளைச்சிப் போடுறதுக்குள்ள வழி தெரியும் எனக்கு. ஒரு தாடி, ரெண்டு மாஷா அல்லாஹ், அரைக்கண் மூடுன பார்வை.. போதும்!

'சட்டை மட்டும்தான் நல்லா போட்டுக்குறானுவ.. நல்லா Neatஆ டிரெஸ் பண்ணிக்கிறான். ஷேவ் பண்ணிக்கிறான். ஸ்டேஜ்ல நடக்கிறான், இங்கிலீஸ் வார்த்தையைப் போட்டு பேசிக்கிறான். Actual Lifeலெ பழகும்போது காட்டுமிராண்டிப் பயலுவ. அவனுவள விட மோசம் இவனுவ. மிருகம் தேவலை. ஏன் தெரியலே வெளியிலே? எல்லோரும் மிருகமா இக்கிறானுவல்ல! மாறி நடக்குறவனை பைத்தியம்டு ஒதுக்கி வச்சிடுறானுவ'. (நம் மனிதர்கள் பற்றி)

'What we are today is the result of what we were in the Pastண்டு புரிஞ்சிக்கிறது First Golden Time. இது Practicalityக்கு வரனும். அப்ப, இன்னக்கி நெனைக்கிறது நாளைக்கு நடக்குது, இன்னக்கி நெனைக்கிறதை நாளன்னிக்கு நடத்தி வைக்கலாம் என்று எப்ப Dynamic Belief வருமோ அது  Second Golden Time.. அப்பதான் லைஃப். இதுக்கு பல தியாகங்கள் பண்ணனும்'

'ஒவ்வொருத்தன் கையிலேயும் AK47 வேணும். மத்தவனை சுட அல்ல. நம்மள சுடாம இருக்க. பாரபைத்தியமா ஒத்தவன் இக்கிறானா பைத்தியம் அவண்டு உணர்ந்துக்குங்க. அவன் ஒங்களை அட்டாக் பண்ணாக்கா நீங்க பைத்தியம்டு அர்த்தம், அவனைவிட'. (Self Defence.)

'கெட்டது, நமக்கு மாறுபட்டது, எதிரானது, நம்மள மோதி சிதைக்காத அளவாவது பாத்துக்கனும். இது முக்கியம். Self Defence முக்கியம்.

'Common sense-ஐ  வச்சிப்பாத்தா பலவிஷயம் புரியும். அதெ use பண்ணுறதில்லே. ஏன்? அது துருப்பிடிச்சிரிச்சி, இல்லே, அது இல்லை! இந்தியமூளை ஒசத்திண்டு ஒருத்தன் சொன்னானாம். Use பண்ணலைண்டு அர்த்தம்! '

*

சர்க்கார் , முனீரின் common senseஐ சிலாகிக்கிறார்கள் உயர்வாக இங்கே. Senseஐ விட அவரது பேச்சை. கொத்துப் புராட்டா வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு முட்டை போட்டு, நல்லவிதமாக கைமா போட்டு. முனீர் அதோடு சேர்த்து இரண்டு சிகரெட் பாக்கெட்டும் வாங்கி வருகிறார். 'அப்ப , நூறு ரூவா கொடுத்தா நூறு ரூவாய்க்கும் செலவு பண்ணிப்புடுவீங்களோ?' - சர்க்கார்

'அப்படி இல்லே சர்க்கார், அடுத்து நீங்க என்னா சொல்லுவீங்களோ அதெ வாங்கிட்டு வந்தேன்'

'நான் என்னா சொன்னேனோ அதைச் செய்யனும். ஓஹோ, என்னைய அளக்குறீங்களோ நீங்க?' - சர்க்காருக்கு கோபம்.

'ரொம்ப அளஹா அதுக்கு பதில் சொன்னான் பாருங்க முனீரு....' என்று சொல்லும் சர்க்கார் , முனீர் சொன்னதைச் சொல்கிறார்கள்: ' 'சர்க்கார்.. ஒங்களெ எப்படி சர்க்கார் அளக்க முடியும்? நான் என்னெயெ அளந்துகிட்டேன். அடுத்து நான் என்னா செய்யவேண்டி வரும்டு என்னையெ அளந்துகிட்டேன்'

*

மீராமெய்தீனுக்கும் முனீருக்கும் ஒரு வாக்குவாதம்.

'முனீரு.. அதிகம் பேசாதிங்க.. கற்றது கைமண் அளவு'

'உண்மைதான் மீராமெய்தீன்! நான் கற்றதுலெ உங்களுக்குத் தெரிஞ்சது என் கைமண் அளவு!'

*

'என்மேலே பலபேரு எரிச்சல்படுறான்.. நாம எல்லாருக்கும் சலாம் சொல்றோம், குனியிறோம், சிங்கப்பூருக்கு குண்டாவ தூக்கிட்டுப் போறோம்.. இவன் அலையாம உக்காந்துகிட்டே செஞ்சிடுறாண்டு எரிச்சல்படுறான். இங்கே என்னா பண்ணுறேண்டு தெரியுமா உனக்கு? சேத்தான்பாவா வாஞ்சூருக்குபோனான். தியானம் பண்ணவாம். நான் எண்ணிப்பாக்கலே, ஒரு 250 பருவாச்சும் இக்கிம் மூஞ்சிலே. அங்கே இந்துகிட்டு மனாரடி பொம்பளைய சைட் அடிச்சிக்கிட்டிந்திக்கிறான். உடம்பு எங்கே இக்கிதுங்குறது முக்கியம் அல்ல'

'நஷ்டம்ங்குறது சீக்கு. தோல்விங்குறது சீக்கு. அவமானம். வெட்கக்கேடு. அதனாலெ தலைவலிச்சா 'வலிக்குது'ண்டு சொல்றதுக்கு வெட்கப்படுறமாதிரி படிச்சிக்குங்க'

*

Similarity (ஒரு தோசை சட்னி உதாரணம். சட்னி பிடிக்காதவர்கள் ஆணம் என்று வைத்துக் கொள்க) :

'தோசையை திங்கிறவன் கடைசி தோசையோட சட்டினியும் சரியாக முடிவதுபோல சாப்பிட்டா லைஃப் நார்மலாக இருக்கும். சட்டினியெ முதல் தோசையோடு காலி பண்ணிட்டா லைஃப்லெ ஏங்குவாண்டு அர்த்தம். சட்டினியை மீதி வைக்கிறானா , எல்லா தோசையையும் சாப்பிட்டுப்புட்டு? அவன் வளர்வாண்டு அர்த்தம். இதெ Large Scaleலிலே பாத்தா ஒரு பெரிய பில்டிங் ஆரம்பிச்சி பாதியிலேயே நிப்பான். ஏன்? தோசையெ திண்ட முறைதான் காரணம்!'

'எவன் வாழலையோ - proper execuse இல்லேண்டா - சுட்டுடனும் அவனை. இருந்தால் பத்துபேரை கெடுப்பான் அவன். சமுதாயம் குட்டிச்சுவராகும் - இது தியரி. ப்ராக்டிகலா சரியா வராது. Passport காணோம்டு அலைஞ்சிக்கிட்டு இருக்கும்போதுகூட ஒரு மூட்டைப்பூச்சி ஒரு எலியைப் பார்த்து எப்படி பயப்படுதுண்டு பாக்கனும். இப்படித்தான் வாழனும்' 

'உங்களை உத்துப்பாருங்க. அப்ப தாழ்வு மனப்பான்மை வராது. clarity கிடைக்கும்'

**. 

அந்தக் காலம்... சர்க்காரின் மேல் 'பலாத்தண்ணி'யை (கழிவுநீர்) தவறுதலாக ஊற்றிய பெண்மணியிடம், 'என்னம்மா.. இப்படி செஞ்சிட்டியே.. என்னெட்டெ இக்கிறதே ஒரு சட்டைதானே...இப்ப நான் வெளிலே கிளம்பிக்கிட்டிக்கிறேன். அந்த சைடுலெ ஊத்தியிருக்கலாமே' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே , நடந்த தவறில் அவர்களின் பங்கும் புரிகிறது...தான் வேறொரு பக்கம் போயிருக்கலாமே..!

சர்க்காருக்கு இப்போது நூற்றுக்கணக்கான சட்டைகள், கைக்குட்டைகள்.. ஆனால் , உபயோகிக்கிறார்களா? சட்டையை அவர்கள் உபயோகிப்பது 'புர்தாஷரீஃப்' அன்று, 'பட்டை'க்கு, பிறகு வெளியூர் போகும்போது.. மற்ற சமயங்களில் சட்டை கிடையாது. அவர்கள் ரூமில் அடுக்கி வைத்துள்ள கைக்குட்டைகளைப் பார்த்து அவர்களின் மருமகன், 'மாமா.. மினாரா அளவுக்கு ஒசரமா இக்கிது மாமா' என்றானாம். 'இவருக்கு கைநேஞ்சி ஒண்ணு வேணுமாம், இவர் 'ஹிக்மத்'தை என்னெட்ட காமிக்கிறாரு!' - சர்க்கார். மனதைப் படிப்பது சர்க்காருக்கு மிகவும் சுலபம். ஆனால் இன்று பஸ்ஸில் கூடவந்த நண்பன் பளவூட்டுத்தம்பி (இவனும் சர்க்காரின் சீடன்), சில தகவல்களைச் சொன்னான். மருமகன் தாவுதுகுட்டி அப்படிப்பட்டவரா? அவரை சர்க்கார் படிக்கவில்லையா? ஆனால் மருமகனின் தப்புக்கு மாமா எப்படி பொறுப்பேற்க முடியும்? ஆமாம், எதனால் சர்க்காரின் பழைய சீடர்களில் மிக முக்கியமானவர்களாக இருந்த ஷிட்டகாங்மாலிம், அபுபக்கர் ஆகியோர் இப்போது வருவதேயில்லை?அப்படி அவர்கள் முன்னேறிவிடவும் இல்லைதான். வராமலிருப்பதே முன்னேற்றம் என்று நினைத்துவிட்டார்களா அவர்கள்? யாருக்கு?

(தொடரும்)

http://abedheen.wordpress.com/

குறிப்புகள் :

துஆ பரக்கத் - பிரார்த்தனையின் வலிமை
உலமாக்கள் - ஆலிம்கள் (படித்தவர்கள்)
நியமத் - அருள்
ஹராம் - விலக்கப்பட்டது
அவுலியா - இறைஞானி
இர்ஃபான், மஅரிஃபா - மெய்ஞான நிலைகள்
சாபு - சாஹிப் (சகோதரர்). 'பெரிய எஜமானின்' சந்ததியினரை இப்படி அழைப்பார்கள்
எஜமான், பெரிய எஜமான் - இறைநேசர் ஷாஹூல் ஹமீது பாதுஷா
ஆணம் - குழம்பு
ரூஹானியத் - ஆன்மீக சக்தி
ரியாலத் - பயிற்சி
மௌலுது - புகழ்மாலை
ரசூல் - முகமது நபி (சல்)
குத்புமார்கள் - இறைஞானிகள்
வெடைக்கிறது - கிண்டல் செய்வது
புர்தாஷரீஃப் - பூஷரி இமாம் இயற்றிய பாடல்களை ஓதுதல்
பட்டை - யந்திரம்
கைநேஞ்சி - கைக்குட்டை
ஹிக்மத் - சூழ்ச்சி

No comments:

Post a Comment