Sunday, June 21, 2015

இசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்

இஸ்லாமிய அரசின் மூன்றாம் கலிஃபாவான உஸ்மான் (ரலி) அவர்களின் பொன்மொழிகளை இணைத்து தம்பி நாகூர் சகீர் ஹூஸைன் எழுதிய இந்தப் பாடல் அற்புதமானது. அதுவும் 'உயர்ந்த ஆடை அணிய நினைத்தால் கஃபனை எண்ணிப் பார் ; உயர்ந்த வீட்டில் வாழ நினைத்தால் கபுரை நினைத்துப் பார்' என்று கடைசியில் வரும் வரிகள் நம்மை உலுக்கி அழ வைத்துவிடும். இசையமைத்துப் பாடிய சகோதரர் A.T. ஷெரீபும் தன் பங்குக்கு அந்த வரிகளை கனத்தோடு இருமுறை சொல்கிறார். வாழ்க. ஆனால் , குர்ஆன் என்று அழகாகச் சொல்லாமல் கம்பீரம் என்று நினைத்துக்கொண்டு 'கெர்ஆவ்ன்' என்று கொட்டாவி விடுவதை மட்டும் அவர் குறைத்துக்கொண்டால் கேட்பதற்கு இன்னும் இதமாக இருக்கும். நல்லது, ஆண்டிற்கு ஒருமுறைதான் இம்மாதிரி ஆன்மிகப் பதிவு போட முடிகிறது (விளக்கம் : பாடலில்!).  இருவருக்கும் இறைவன் நற்பேறு அளிப்பானாக, ஆமீன்.

*


பாடல் வரிகள் :


சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்
குர்ஆனைத் தொகுத்தவர் நாஸிருல் ஃபுர்க்கான்
அமீருல் மூஃமினின் ஹஜ்ரத் உஸ்மான் கனி

இனிமையான குணமும் வசீகரப் பேழகும்
அமைதியும் அடக்கமும் உறுதியும் ஈகையும்
வானவர்கள் நாணமுறும் மென்மையானவர்

சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்

கூர்மையான வாளின் வீச்சு உடலைக் காயமாக்கும்
கூறும் தீய வார்த்தைகள் உயிரைக் காயமாக்கும்
கால்கள் சருகினாலும் நாவு தவறக்கூடாது
- இது போன்ற பொன்மொழிகள் உலக மாந்தர்க்கு
உறுதியோடு சொன்னார்கள் முஸ்ஹபு உஸ்மான்
உறுதியோடு சொன்னார்கள் முஸ்ஹபு உஸ்மான்

ஆண்டிற்கு ஒரு முறையேனும் துன்பம் வரல்லையெனில்
அவனை விட்டு அல்லாஹ் விலகி விட்டான் என்று
உறுதியோடு சொன்னார்கள் உஸ்மான் கனி
உறுதியோடு சொன்னார்கள் உஸ்மான் கனி

உயர்ந்த ஆடை அணிய நினைத்தால் கஃபனை எண்ணிப் பார்
உயர்ந்த வீட்டில் வாழ நினைத்தால் கபுரை நினைத்துப் பார்
மண்ணுக்கு இரையாகும் மனிதா - நீ
சுவையை மறந்திடு

இது போன்ற பொன்மொழிகள் உலக மாந்தர்க்கு
இதமாக எடுத்துரைத்தார் முஸ்ஹபு உஸ்மான்
இதமாக எடுத்துரைத்தார் உஸ்மான் கனி

சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்
*


நன்றி : நாகூர் கவிஞர் சகீர் ஹூசைன்

No comments:

Post a Comment