Thursday, December 12, 2013

அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - ஹமீது ஜாஃபர்

முன்னூட்டம்

ஒரு சிறிய பொறி, அது இப்படி காட்டுத் தீயாகும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை ஆம்..., ஏதோ ஆபிதீன் கேள்வி கேட்கப்போய் அதற்கு பதில் தேடப்போய் கட்டுரையாக மலர்ந்து தொடர் கட்டுரையாக வளர்ந்து ஆலமரமாக விழுதுகளுடன் நின்றுகொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சிக்கு முடிவு..?  இல்லை!

அல்பைரூனியில் தொடங்கி ஒவ்வொருவராக அணுகிக்கொண்டிருந்தபோது அவர்களின் அறிவு, ஆற்றல், உழைப்பு, தொண்டு, வெளிப்பாடு அனைத்தும் எனக்கு பிரமிப்பைத் தந்தது. அந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை எனலாம். மனதில் உருவாகும் எண்ணம், சொல்லாக ஒலியாக வெளிவருவதற்குமுன் உலகின் கடைக்கோடியை அடைந்துவிடுகிறது; அண்டத்தை அளக்கிறது; அண்டத்தையும் கடந்து அப்பாலும் செல்கிறது. பெரிய அறையை அடைத்துக்கொண்டிருந்த கணணி இப்போது உள்ளங்கையில் அடக்கமாகிவிட்டது. அறிவியல் வளர வளர மனிதனின் நினைவாற்றல் சுருங்கிக்கொண்டே போகிறது. இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லத்தெரிகிறதே ஒழிய அதற்குமேல் கூட்ட....? கணிப்பான் உதவியைத் தேடுகிறது. மனம் ஒருபக்கம் தடுமாறினாலும் இன்னொருபக்கம் அறிவியல் வளர்ச்சி அசுரவேகத்திலிருக்கிறது. எதையும் துல்லியமாக கணக்கிடும் பேராற்றலைப் பெற்றுக்கொண்டுள்ளது. என்றாலும் பிறை பார்ப்பதில் இன்னும் குடுமிப்பிடி சண்டை நடந்துக்கொண்டிருப்பது (எங்களுக்கு) விதிவிலக்கு.

நவீன தொழிற்நுட்பம், விதவிதமான கருவிகள், கணினிகள், செயற்கைக் கோள்கள் இத்தியாதி இத்தியாதி என பல்வேறு உதவிகளுடன் வெளிவரும் கண்டுபிடிப்புகள் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு எவ்வித கருவிகள் இல்லாமல் கண் பார்த்து மனம் சிந்தித்து சொல்லப்பட்ட அறிவியல் ஆய்வுகள் மிகத்துல்லியமாக இருந்தது எப்படி சாத்தியமானது என்பது கேள்விக்குறி. மருத்துவம், இசை, வான்இயல், சோதிடம், புவிஇயல், தத்துவம், கலை என பல்வேறு அறிவியல்களை ஆய்வு செய்து அவற்றினை எழுதிய நூல்கள் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவைகள்  மறைந்தன. அது எப்படி? காலத்தாலா? கவனமின்மையாலா? இயற்கை சீற்றத்தாலா? என பல கேள்விகள் என்னை துளைத்துக்கொண்டிருந்தபோது சகோதரர் நூருல் அமீன் அவர்கள் ''மனித குல வளர்ச்சிக்கு எல்லா துறையிலும் பங்களித்த இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய தேக்க நிலை எப்போது தொடங்கியது என்பதையும் அதன் மூல காரணங்களையும், தீர்வுகளையும் முன் வைக்கும் கட்டுரையையும் தந்தால் நானாவின் அருட்கொடை இன்னும் முழுமை பெறும்.''  என்ற வேண்டுகோளை 'அல் அஸ்மாயி' கட்டுரையின் பின்னூட்டத்தில் வைத்தார். சகோதரரின் வேண்டுகோளை ஏற்று தோண்டினேன், புதைக்க அல்ல, புதைந்திருப்பதை எடுக்க. எவை காரணமாக இருக்கும் என்று யூகித்தேனோ அவை அல்ல என்பது தெரிந்தது. உண்மைகள் முழுமையாக கிடைக்காவிட்டாலும் கிடைத்தவற்றை சகோதரருக்கு சமர்ப்பிக்கிறேன். மூன்று பாகமாக வரும் இது,  ஓர் ஆய்வல்ல.. என் பார்வை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

பி.கு : கடைசி பாகத்தில்  sources  குறிப்பிடுகிறேன்.
***

பாக்தாதில் தோன்றிய இஸ்லாமிய அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும் 
The Raise and Fall of Islamic Wisdom in Baghdad


பாகம் 1

ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் ஏகத்துவம் என்ற விளக்கு அணைந்துவிட்டது என்றே சொல்லலாம். ஆனால், அதன் திரியின் நுனியில் நெருப்பின் துளி புள்ளியளவு இருந்துக்கொண்டே இருந்தது. அதை தூண்டிவிடுவார் யாருமில்லை.  கி பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெருமானார் அவர்கள் அதனைத் தூண்டிவிட்டு எரியச் செய்தார்கள். அந்த தூண்டல் பெரும் தீபமாக உருவெடுத்து இன்று வரை ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.

அரேபிய தீபகற்பம் முழுவதும் அந்தகாச இருளில் சிக்கி இருந்தபோது அங்கே மனிதம் என்ற நிலை மறைந்து போய் அடிமைத்துவம், கொலை, கொள்ளை, பெண்சிசு கொலை என எண்ணிலடங்கா துயரங்கள் நடந்தேறிக்கொண்டிருந்த சமயத்தில்தான் பெருமானார் அவர்கள் அந்த தீபத்தை ஒளிரவிட்டார்கள். அதன் ஒளியில் தன்னை முழுவதுமாக ஆழ்த்திக்கொண்ட முதல் பெண்மணி அன்னை கதீஜா பிராட்டியார்(ரலி); முதல் மனிதர் ஹஜ்ரத் அபுபக்கர் சித்தீக் (ரலி); முதல் சிறுவர் ஹஜ்ரத் அலி (ரலி) ஆவார்கள்.


முதல் மூன்று பேரில் தொடங்கிய இஸ்லாம், பெருமானார் காலத்தில் அரேபிய தீபகற்பத்தைக் கடந்து பரவத் தொடங்கியது. என்றாலும் ஹஜ்ரத் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் காலத்தில் மிக வேகமாகப் பரவியது. மேற்கே லிபியாவிலிருந்து கிழக்கே துர்க்மெனிஸ்தான் வரை       உமர் காலத்தில்            இஸ்லாமிய அரசு  பரவியது. சுருங்கச் சொன்னால் சிரியா, மெஸபடோமியா, பாரசீகம் முழுவதும் இஸ்லாம் பரவியது. இஸ்லாம் வெறும் மதமாகப் பரவவில்லை. ஒரு விடுதலையாக, ஒரு வழிகாட்டலாக, பாரிய கண்ணோட்டமாகப் பரவியது. கூடவே கல்வி, அரசியல்,  கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் இவை அனைத்தும் தன்னுள் அடக்கிக்கொண்டிருந்தது. கிலாஃபத்துக்குப் பின்  ஹஜ்ரத் உதுமான்(ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட சிரியாவின் கவர்னர் முஆவியா பின் அபுசுஃப்யான் தலமையில் உமையாக்கள் ஆட்சி மலர்ந்தது.

அரசியல் ரீதியாக ஒருபக்கம் இஸ்லாம் பரவியபோது கூடவே கல்வியும் பரவியது. இறைவனிடமிருந்து இறங்கிய முதல் வசனமே கல்வியை மையமாகக் கொண்டிருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. குர்ஆனில் 750 முறை அறிவை (இல்ம்) பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.  "சீன தேசம் சென்றெங்கிலும் சீர்கல்வியைத் தேடு" என்றார்கள் பெருமானார் அவர்கள். வெறும் சொல்லோடு நின்றுவிடவில்லை. போர்க் கைதிகளில் யாரேனும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தால் இங்கு கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்துவிட்டு விடுதலைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தார்கள். தன் நேரடிப் பார்வையில் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களுக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்தார்கள். மற்ற சிறுவர்களுடன் ஒப்பிடுகையில்  ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களும், ஹஜ்ரத் அப்துல்லா பின் அப்பாஸ் அவர்களும் அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.

கி பி 653ல் மதினாவில் பள்ளிவாசலில் முதல் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. மஸ்ஜிதை தொழுகை நேரம் போக மீதி நேரத்தில் கல்வி சாலையாக மாற்றினார்கள். ஐந்து வயதுமுதல் சிறுவரும் சிறுமியரும் கல்வி கற்க தொடங்கினர். முதல் பாடமாக இறைவனின் திருநாமங்களும் எளிமையான வசனங்களும் படிக்க எழுத கற்பிக்கப்பட்டது. பின் குர்ஆன் முழுவதும் கற்பிக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றபின் கணிதம் கற்பிக்கப்பட்டது. உயர்கல்வி கற்பவர்கள் வேறொரு சூழல் ஏற்பட்டது. பள்ளிவாசல் தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகுப்பறையாக மாறியது. தங்கள் ஆசிரியரைச் சுற்றி அமர்ந்து பாடம் கற்றனர்.

இஸ்லாமும் கல்வியும்

கல்வி வளர்ச்சி என்பது தனியாக  நிகழ்ந்துவிடவில்லை. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து அதுவும் வளர்ந்தது என்பதுதான் எதார்த்த உண்மை. இஸ்லாத்தைப் பொருத்தவரை அரபியர், அரபியரல்லாதவர் ஒவ்வொருவரும் குர்ஆனை கற்பது கடமையாகியது. கூடவே நபி போதனையையையும் கற்கும் சூழலும் தனக்குத் தானாக உருவாகியது. எனவே கல்வியின் அவசியத்தை உணரத்தொடங்கினர்.

மதினாவுக்குப் பின் கல்வியின் தலைநகரம் என்று சொல்லப்படும் சரித்திரப்புகழ் வாய்ந்த பஸரா உத்துபா பின் அஜ்வா அவர்களால் கிபி 635/637ல் நிறுவப்பட்டது. சில காலம் பின்பு கூஃபா நகரம் சஅத் பின் வக்காஸ் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

இவ்விரு நகரங்களும் மதினாவுக்குப் பின் இஸ்லாமிய சரித்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் குர்ஆனையும் மார்க்க நெறிமுறைகளை போதிக்கும் நகரங்களாக விளங்கியது. பின்பு அரபு இலக்கணம், சொற்களஞ்சியக்கலை (lexicography) யை போதிக்கத்தொடங்கிய சில காலத்திலேயே ஃபிக்ஹ்/சட்ட இயல் (jurisprudence), மரபியல் கலாச்சாரம், தத்துவம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டது. காலப்போக்கில் அதன் தனித்தன்மை இழந்து கிரேக்க எண்ணங்களின் சாயலை உள்வாங்கியது.

பஸராவில் இஸ்லாம் பரவத்தொடங்கியபோது ஈராக்கில் அரபு தாய்மொழியாக இருக்கவில்லை. நெஸ்தோரிய மொழியும் கிரேக்க மொழியும் பரவலாக இருந்தது. இஸ்லாம் பரவத்தொடங்கியக் காலத்து பஸராவில்  அரபு இலக்கணம் இலக்கியம் சார்ந்த கல்வியைத் தொடங்கிவைத்தார் அலி(ரலி) அவர்களின் தோழர் அபு அல் அஸ்வத் அல் துஆலி. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஈராக்கியர்கள் இளவயது கடந்தபின்னறே அரபியை கற்கத் தொடங்கியதால்  உச்சரிப்பில் பல தவறுகள் நிகழ்வது சாதாரணமானது என்றாலும் அதனை அலி(ரலி) அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தொழுகையில் குர்ஆன் ஓதப்படவேண்டியிருப்பதால்  வசனங்கள் சரியாக உச்சரிக்க வழிவகை செய்யுமாறு தன் நண்பரிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதை அவர்  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

21 ஜனவரி 661ல் அலி(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபிறகு பஸராவில் கவர்னராக பொறுப்பேற்ற ஜாயித் பின் அபிஹி, ஒரு நாள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக்கொண்டார்கள்..." (9-3) என்ற வசனத்தை  அல்லாஹ் அவனுடைய தூதருடனும் இணைவைத்து வணங்குபவர்களுடனும் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக்கொண்டான் என்று பொருள் மாறிய உச்சரிப்பை கேட்கும்படியாக நேர்ந்தது.  இது தொடர்ந்து நீடித்தால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் என்பதால் அரபிமொழியில் உயிரொலி (vowel) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் தக்காஃபியின் (661-714) பங்கு குறிப்பிடத்தக்கது என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

அல் கலீல் பின் அஹமது(இற:786) என்ற பஸராவை சேர்ந்த அறிஞர் 'அல் அய்ன்' என்ற முதல் அரபி அகராதியை உருவாக்கினார். இவரது மாணவர் பாரசீகத்தைச் சேர்ந்த சிபவயஹ்(இ:795) என்று அழைக்கப்பட்ட உஸ்மான் பின் அல்ஹாரிதி என்பவர் 'அல்கித்தாப்' என்ற அரபு இலக்கணத்தை முதன் முறையாக முறைப்படுத்தினார்.

 
கூஃபா எழுத்தில்  குர் ஆன்  

ஒரு நூற்றாண்டிற்கிடையில் கூஃபாவிலும் அபு முஸ்லிம் முஆத் இப்னு முஸ்லிம் அல் ஹர்ரா என்பவரால் அரபிக் கலாசாலைத் தொடங்கப்பட்டு இலக்கண இலக்கியங்கள் கற்பிக்கப்பட்டன. இரண்டு நகரங்களிலும் போட்டியாக ஒரே மொழியைப் போதித்தாலும் விளக்கமளிப்பதில் வேறுபாடும் எதிரும் புதிரும் இருந்தது.  

உமையாக்களின் ஆட்சி (661-750)

முஆவியா  பின் அபு சுஃப்யான் இஸ்லாத்திற்கு வந்த பிறகு முக்கிய பொறுப்புக்களை வகிக்கத் தொடங்கினார். ஹஜ்ரத் அபு பக்கர்(ரலி) அவர்கள் அவரை சிரியாவில் பைசாந்தியரை வெற்றி கொள்வதற்கான பொறுப்பை அளித்தார்கள். ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் அவருக்கு டெமாஸ்கஸின் கவர்னர் பொறுப்பை கொடுத்தார்கள். அதன் பின் ஹஜ்ரத் உதுமான்(ரலி) அவர்கள் இன்றைய சிரியா முழுமைக்கும் வடமேற்கு ஈராக்கிற்கும்  கவர்னராக நியமித்தார்கள். அலி(ரலி) அவர்கள் கிலாஃபத்தை ஏற்ற பிறகு அவர்களுடன் எப்போதுமே உமையா அவர்கள் இணங்கிப்போகவில்லை.

ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் மரணத்திற்குப் பின் முஆவியா(ஆ661-680) ஜெருஸலத்தில் கலிஃபாவாக பதவி ஏற்றார். உடன் கால தாமதமில்லாமல்  டெமாஸ்கஸுக்கு தலைநகர் மாறியது. பல ஆண்டுகள் சிரியாவின் கவர்னராக  முஆவியா இருந்திருந்தது மட்டுமல்லாமல் பலம் வாய்ந்த சிரிய படையை உருவாக்கியிருந்தார். பொறுப்பேற்ற பிறகு இஸ்லாமியப் பேரரசு பாரசீகத்தில் கொரசான் வரையும் வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மெஸபடோமியா வரையும் பரவியது. அதன் முழு நிர்வாகத்தையும் ஒருங்கினைந்த கட்டுப்பாட்டில் வைக்க இரண்டு பெரிய அமைப்புகளை (திவான்) முஆவியா உருவாக்கினார். ஒன்று அரசு நிர்வாக செயலகங்கள். மற்றொன்று தகவல் தொடர்பு ஆணையம். (மூன்று திவான்கள் என்கிறது விக்கிப்பீடியா)

பெருமானார் அவர்களை பின்தொடர்ந்து கலிஃபாக்கள் ஏற்படுத்திய கல்வி முறை பின் பற்றப்பட்டது. குர் ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாக வைத்து சட்டம், சமூகவியல் போதிக்கப்பட்டன. கல்விச்சாலைகள் என்று தனியாக இல்லாமல் பள்ளிவாசல்களே கல்விக்கூடங்களாக விளங்கின. டெமாஸ்கஸ், பெய்ரூத், அண்டியோஷ், முதலான நகரங்களில் கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன. உமையா கலிஃபாக்களான உமர் பின் அப்துல் அஜீஜ் மற்றும் காலித் பின் யஜிதின் ஆட்சி காலத்தில் கல்வி உச்ச நிலையில் இருந்தது.

முஆவியாவுக்குப் பின் வந்த யஜீத்(ஆ680-683) தன் தந்தையை பின்பற்றினார். மூன்றாண்டு ஆட்சி காலத்தில் வரி விதிப்பில் மாற்றமும் டெமாஸ்கஸில் பாசன முறையில் மேம்பாடும் செய்தார்.  அப்துல் மாலிக்(685-705) காலத்தில் ஆட்சிமொழியாக இருந்த கிரேக்க, பரசீக மொழி நீக்கப்பட்டு அரபி ஆட்சிமொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது, பைசாந்திய நாணயங்கள் இஸ்லாமிய அமைப்புடன் திருத்தியமைக்கப்பட்டன. முதலாம் வலீத்(705-715) சுலைமான்(715-717) ஆட்சி காலத்தில் மொராக்கோ, ஸ்பெயின் வரை இஸ்லாமியப் பேரரசு விரிவாகியது. பல பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. புகழ்பெற்ற உமையா பள்ளிவாசல் டெமாஸ்கஸில் உருவாகியது.

இரண்டாம் உமர் (682-720) 

(உலகம் முழுவதும் என் ஆட்சிக்கு வந்தால் முதலாம் உமரைப் போல் ஆட்சி செய்வேன் இல்லாவிட்டால் இரண்டாம் உமரைப் போல் ஆட்சி செய்வேன் - நெப்போலியன்)

இரண்டாம் உமர் என்று சொல்லக்கூடிய உமர் பின் அப்துல் அஜீஜ் அவர்கள் கலிஃபா உமர் பின் ஹத்தாப்(ரலி) அவர்களின் தாய்வழி கொள்ளுப் பேரன். ஆட்சி செய்தது 717 முதல் 720 வரை. இந்த நான்காண்டு காலத்தில் செய்த சாதனைகள் பல. அவர் சிறந்த கல்வியாளர், அவரைச் சுற்றி எப்போதும் அறிஞர்கள் பலர் இருந்துக்கொண்டே இருந்தனர். கல்வியை ஊக்கப்படுத்தியதோடு நின்றுவிடாமல் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார். பெருமானார் அவர்களின் சொல்லும் செயலையும் பற்றிய தகவல்கள் வெகுவாகத் திரட்டினார். நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். பாரசீகம், கொரஸான், வடக்கு ஆப்ரிக்கா ஆகியவற்றில் நீர் வளம் பெருக்க கால்வாய்களும், சீரியப் பாதைகளும், பயணிகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக ஆங்காங்கே விடுதிகளும், கூடவே மருத்துவ நிலையங்களும் கட்டினார். திம்மிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஸ்யா வரியை நீக்கினார். செல்வந்தர்களும் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் பொழுதுபோக்கிற்காக உபயோகப்படுத்திக்கொண்டிருந்த புல்வெளிகளை அரசுடமையாக்கி பின் ஏழைகளுக்கு விவசாயத்திற்காகப் பிரித்துக்கொடுத்தார். அரசுப் பணியில் இருப்பவர்கள் வேறு தொழில் செய்யக்கூடாது என்ற நியமத்தை உருவாக்கினார். அரசு அதிகாரிகள் அனைவரும் மக்களிடம் சென்று குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யவைத்தார்.  முப்பத்தெட்டாம் வயதில் கி.பி. 720 பிப்ரவரியில் கையூட்டுப்பெற்ற பணியாளனால் விஷம் கொடுக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார். அதன்பின் ஆறு கலிஃபாக்கள் ஆட்சிக்கு வந்தனர் இரண்டாம் மார்வானுடன் உமையாக்கள் சகாப்தம் முடிவுற்று அப்பாஸிய சகாப்தம் தொடங்கியது.

 Umaiya dynasty
உமையாக்கள் நிர்வாகம் - ஓர் பார்வை

முதன்முதலில் முஆவியா அவர்களின் கீழ் ஆட்சி வந்தபோது பைசாந்திய பேரரசர்களின் நிர்வாகத்தின்  சில முக்கிய அம்சங்களை பின்பற்றினார். அரசு இயந்திரத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். ஒன்று அரசியல் நிர்வாகம், மற்றொன்று ராணுவம் மற்றும் வரி வசூலிப்பு, மூன்றாவது மார்க்க நிலைப்பாடு. அவற்றின் ஒவ்வொன்றும் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
மாநிலம்: பேரரசை பல மாநிலங்களாகப் பிரித்து அவற்றின் நிர்வாகத்திற்கு ஆளுநர்களை நியமித்தார்.
அரசுப் பணியாளர்கள்: அரசு பணிபுரிய போதுமான அரபியர்கள் இல்லாமையினால் தகுதியும் கல்வியுமுடைய அனைவரையும் பணியாளர்களாக நியமித்து அரபியுடன் கிரேக்கம், காப்டிக்(Coptic), பாரசீக மொழிகளில் ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. பின்பு வந்த கலிஃபா அப்துல் மாலிக் முழுமையாக அரபியில் பதிய வைத்தார்.

நாணயம்:  தொடக்கத்தில் பைசாந்திய, சாஸானிய நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் காலதாமதமின்றி அவற்றின் ஒரு பக்கத்தில் குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்டது. பின்னர் டெமாஸ்கஸில் நாணய ஆலை உருவாக்கப்பட்டு உமையாக்கள் நாணயம் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. தங்க நாணயத்திற்கு 'தினார்' என்று வெள்ளி நாணயத்திற்கு 'திர்ஹம்' என்றும் அழைக்கப்பட்டது.         

உமையாக் கால  நாணயம்
ஆறு ஆணையங்கள்(திவான்): கலிஃபாவின் நிர்வகத்திற்கு உதவியாக  திவான்கள் எனப்படும் ஆணையம் அல்லது துறை உருவாக்கப்பட்டது.
1. திவான் அல் கரஜ்: மத்திய வருவாய் துறை. இதில் வரி மற்றும் இதர வருமானம், செலவினம் போன்ற அனைத்து நிதி நிர்வாகங்கள் இதன் கீழ் வந்தன.
2. திவான் அல் ரஸாயில்: அனைத்து நிர்வாக அதிகாரிகள் மற்றும் துறைகளுக்கும் அனுப்பப்படும் உத்திரவு, தகவல் மற்றும் ஆவணங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலமைச் செயலகம் போன்ற அமைப்பு.
3. திவான் அல் கத்தம்: அனைத்து தகவல்களும் சீல் வைக்கப்பட்டு அனுப்பப்படுவதற்குமுன் நகல் எடுக்கப்பட்டு அவற்றை பாதுகாக்கும் துறை(Bureau of Registry). இது அப்பாஸியர்களின் மத்திய காலம் வரை நீடித்தது.
4. திவான் அல் பரீத்: தபால் துறை. முஆவியாவால் உருவாக்கப்பட்ட இது கலிஃபா அப்துல் மாலிக்கால் விரிவுபடுத்தப்பட்டு தொடர் பயன்பாட்டுக்கு வந்தது. உமர் பின் அப்துல் அஜீஸினால் இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு கொராஸான் பெருவழிச்சாலையில் ஆங்காங்கே நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. முக்கிய பெருவழிகளில் 12 மைலுக்கு ஒன்றாக தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர் மாற்று(relay) முறையில் தபால்கள் எடுத்தச் செல்லப்பட்டன. இதற்கென குதிரை, ஒட்டகம், கழுதை, ஆட்கள் பயன்படுத்தப்பட்டன. விரைவு மற்றும் அதிமுக்கிய தபால்களுக்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது.
5. திவான் அல் குதத்(Qudat): நீதி துறை. பெருமானார் அவர்கள் காலத்திலும் அதன் பின் வந்த கலிஃபாக்களும் நீதி பரிபாலனத்தன் தங்கள் கையிலேயே வைத்திருந்தனர். இஸ்லாம் விரிவடைந்தபின் ஹஜ்ரத் உமர் அல் ஃபாரூக் அவர்கள் கிபி 643ல் எகிப்தில் ஒரு நீதிபதியை நியமித்தார்கள்.  பின்னர் கிபி 661ல் உமையா கலிஃபாக்களான ஹாஷிம், இரண்டாம் வலீத் ஒன்றன்பின் ஒன்றாக பல நீதிபதிகளை நியமனம் செய்தனர்.
6. திவான் அல் ஜுந்த்: ராணுவத்துறை. தனித்துறையானாலும் கலிஃபாவின் நேரடி கண்கானிப்பில் இருந்தது. வீரர்களின் ஊதியம் முதல் பதவி உயர்வு வரை இதன் கீழ் மஞ்சனீக்(Catapult)    இருந்தது. வியூகத்தில் பைசாந்திய முறையை மாற்றியமைத்து இடம், வலம், நடு, முன்னனி, பின்னனி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு தனி தளபதிகள் நியமிக்கப்பட்டனர். இம்முறையே போரின்போதும் பயன்படுத்தினர். பின்னர் வந்த மார்வான் II(740-750) இம்முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு குர்துகளை ராணுவத்தில் சேர்த்தார். தரைப் படை, குதிரைப் படை, பீரங்கிப் படை(artilary) என மூன்றாக அமைத்தனர். அர்ராதா, மஞ்சனீக், dabbabah(canon) முதலியவை பீரங்கிப்படையில் பயன்படுத்தப்பட்டன.

கிரேக்க அறிவின் ஊடுருவல்
அலெக்ஸாந்தர் பேரரசு    மத்திய கிழக்கில் கிரேக்க அறிவின் தாக்கம் நீண்ட பின்னணி கொண்டது. கி.மு. 331ல் அலெக்ஸாண்டர் பாரசீகத்தையும் கடந்து வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் பகுதிவரை தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார். வெற்றிகொண்ட நாடுகளைப் பல காலனிகளாகப் பிரித்து தன் ஆட்சியை நிறுவினார். தூரதிருஷ்டவசமாக இறந்துவிடவே வாரிசு என்று சொல்வதற்கு அவரது பச்சிளம் குழந்தையைத் தவிர வேறு யாருமில்லை. எனவே அந்தந்தப் பகுதிகளை ஆண்ட தளபதிகள் நாட்டைக் கூறுபோட்டுக்கொண்டனர்.

கிமு 323 ல் மகாஅலக்ஸாண்டர் எகிப்தில் அலக்ஸாந்திரியா என்ற நகரை நிறுவியபின் அங்கே கிரேக்க கலாச்சாரம் உட்புகுந்தது. நகரின் நிர்வாகப் பொறுப்பை தாலமி சோட்டர் பெற்றபின் அதை பல அறிஞர்கள் கூடும் நகரமாக மாற்றினார். நூல்களும் ஆய்வுகளும் வரையப்பட்டன. கிரேக்க ஆட்சிக்குட்பட்டிருந்த சிரியாவிலும் மெஸமடோமியாவிலும் கிரேக்க மொழியைவிட அராமைக், ஹீப்ரு மொழிகள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதிகம் பேசப்படும் மொழி அராமைக்காகவே இருந்தது. பாரசீகத்தை ஆண்ட தளபதிகள் கிரேக்க பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் கிரேக்க மொழி பாரசீகம் வரை தன் ஆதிக்கத்தை செலுத்தியது.

அராபிய தொடர்பில் கிரேக்க அறிவு
Euclid (before 300 BC) அலக்ஸாந்திரியாவின் ஆரம்பகால அறிஞர். கணிதவியலை ஆய்வு செய்தவர். இவரது 'Eliments' பல விளக்கங்களைத் தருகிறது. பிற்காலத்தில் அராபியர்கள் இதனை ஆய்வு செய்தனர்.

Ariistarchus (d. 230 BC.) அலக்ஸாந்திரியாவில் ஆசிரியர். வான்இயல் ஆய்வாளர். பிதாகோரஸ் முக்கோணத் தத்துவத்தின் உதவியால் சூரியன், சந்திரன், பூமி இவைகளுக்கிடையேயுள்ள தூரத்தைக் கணக்கிட்டார். இவரது கொள்கையை பைரூனி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மறக்கக்கூடியதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
Eratostkeness (d. 194 BC.) அலக்ஸாந்திரியாவின் சிறந்த அறிஞர். பூமியின் விட்டத்தையும் சுற்றளவையும் அளக்கும் முறையை கண்டுபிடித்தவர். இவரது முறையை கலிஃபா அல் மாஃமூன் 829 ல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.

Archimedes (d. 212 BC) அலக்ஸாண்டிரியாவுடன் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் இவரது தத்துவம் அலக்ஸாண்டிரியாவிலும் பின்பு அரபியர்களாலும் பின்பற்றப்பட்டது.

Hypsicles (125 BC.) பாபிலோனிய வானவியலாரை பின் தொடர்ந்து வான் இயல் ஆய்வுக்காக வட்டத்தை 360° பிரித்து அதனை அறுபது கூறுகளாக பிரித்தார். இவரது ஆய்வை குஸ்தா பின் லுக்கா அரபியில் மொழிபெயர்த்தார் பின்பு அல் கிந்தி திருத்தி எழுதினார்.

Claudius Ptolemy (d. 168 AD) இவர் எழுதிய புகழ் வாய்ந்த Almagest ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபினால் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது.

மருத்துவ வரலாறு ஹிப்போகிரட்ஸ் (d. 257 BC) லிருந்து தொடங்குகிறது. அவரது நூலான Aphorisms பிரபலம் வாய்ந்த மருத்துவப் பாடநூலாக விளங்கியது. இதனை ஹுனைன் பின் இஸ்ஹாக் அரபியில் மொழிபெயர்த்தார். பின்பு அலக்ஸாந்திரியாவின் கேலனின் (d. 200 AD) மருத்துவக் கொள்கை பின்பற்றப்பட்டது. இவரது நூலை ஹுனைன் பின் இஸ்ஹாக் குழுவினர் அரபியில் மொழிபெயர்த்தனர். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த Paul of Aegina என்பவர் மருத்துவ நூல்கள் அனேகம் எழுதியுள்ளார்.  இதில் பிரபலம் வாய்ந்த The Seven Books of Medicine  ஹுனைன் பின் இஸ்ஹாக்கினால் 'அல் கவாபில்' என்ற பெயரில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்தியத் தொடர்பு
சஸ்ஸானிய மன்னன் முதலாம் குஷ்ராவ்(531-578),  ஜுந்திஷாப்பூர்  என்ற நகரை உருவாக்கி அதை குஜிஸ்தானின் தலைநகராக்கினான். ஒரு சில இந்திய மூலிகைகள் கிரேக்க மருத்துவத்தில் சேர்க்கப்படுவதை அறிந்த மன்னன் இந்திய முறைப்படி மருந்துக்கள் தயாரிக்கவும் மருந்துவம் செய்யவும் இந்தியாவிலிருந்து மருத்துவர்களையும் மருத்துவப் பொருட்களையும் சர்க்கரையும் வரவழைத்தான் என அலி பின் ஷஹல் அல் தாபரி தன்னுடைய ஃபிர்தவ்ஸ் அல் ஹிக்மா என்ற நூலில் குறிப்பிடுகிறார். அவை பெரும்பாலும் மாந்திரீகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன என மேலும் குறிப்பிடுகிறார். என்றாலும் அதிக அளவில் இந்திய மருந்துக்களையும் சர்க்கரையையும் தருவித்ததாக சொல்லப்படுகிறது. (கிபி 300 லிருந்தே கரும்புச் சாறிலிருந்து சர்க்கரைத் தயாரிக்கும் முறையை இந்தியர்கள் தெரிந்து வைத்திந்தனர். அப்போது அது மருத்துவப் பொருளாக பயன்படுத்தப்பட்டது பின்னரே உணவில் சேர்க்கும் ஒன்றாக ஆகியது.)

கிபி 638ல் அரபியர்களால் இராக் வெற்றிகொள்ளப்பட்டது அதை தொடர்ந்து 642 ல் பாரசீகம் வீழ்ந்தது. டெமாஸ்கஸிலிருந்தவாறே மெஸபடோமியாவையும் பாரசீகத்தையும் உமையாக்கள் ஆட்சி செய்தனர். என்றாலும் அங்கு வாழ்ந்த நெஸ்தோரிய கிருஸ்தவர்களின் வழிபாட்டுக் கொள்கையிலேயோ அல்லது அரிஸ்டாட்டிலிய போதனை முறைகளிலேயோ தலையிடவில்லை.

கடல் வழி வந்த இந்திய செல்வாக்கு
கி மு இரண்டாம் நூற்றாண்டுகளில் இந்திய வணிகர்கள் ஏடன் வரை சென்று அரபியர்களுடன்  வணிகம் செய்தனர். எகிப்திய வணிகர்கள் செங்கடல் வழியாக ஏடன் வந்து இந்தியப் பொருட்களை அரபியர்களிடமிருந்து பெற்றுச் சென்றனரேயல்லாது  இந்தியாவுடன் நேரடியான வணிகத் தொடர்பு த்திருக்கவில்லை. இந்தியாவுக்கான கடல் வழியை ரகசியமாக வைத்திருந்ததால் எகிப்தியர்களால் அறியமுடியாமல் இருந்தது.

கிபி 50க்குப் பிறகு ரோமானியர்கள் இந்தியா செல்ல தலைப்பட்டனர். பொதுவாக ஆறு மாதங்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் பருவக்காற்றைப் பயன்படுத்தி இந்தியா செல்லவும் மறு ஆறு மாதம் எதிர் திசையில் வீசும் காற்றைப் பயன்படுத்தி திரும்பிவரவும் செய்தனர். குறிப்பாக தென்மேற்கு பருவக்காற்றைப் பயன்படுத்தி செங்கடலின் முகத்துவாரத்திலிருந்து அல்லது ஏடனிலிருந்து மலபார் மற்றும் தென் கடற்கரை நகரங்களுக்கு 40 நாட்களில் வந்தனர். எதிர்புறமாக வீசும் வடமேற்கு பருவக்காற்றை திரும்புவதற்கு ஏதுவாக பயன்படுத்தினர்.  ரோமானியர்கள் இந்தியாவுடன் நேரடி வர்த்தகம் செய்ததற்கான ஆதாரமாக வடமேற்கு இந்தியாவில் கிடைத்த சில நாணயங்களும் தமிழகத்தில் கிடைத்த அதிக அளவிலான தங்க, வெள்ளி நாணனயங்களும் ஆகும். இது வெறும் வர்த்தகப் பரிமாற்றம் என்றில்லாமல் அறிவுப் பரிமாற்றமாகவும் இருந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். இது ஒருபுறமிருக்க சிரியா மற்றும் எகிப்து வழியாக கிரேக்க அறிவு நேரடியாக  அரபியர்களை அடைந்திருந்திருந்தது. இன்னொருபக்கம் அரபிக்கடல் வழியாக இந்திய அறிவு அரபியர்களை அடைந்தது. வேறொரு பக்கம் மறைமுகமாக பாரசீகத்தின் வழியாக இந்திய அறிவு அரபியர்களை அடைந்தது.                                     


இனியும் வரும்.....

***
 நன்றி : ஹமீது ஜாஃபர் (http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

2 comments:

  1. அன்றைய அரபியாவின் பெருவெளி
    சரித்திரித்திர சங்கதிகளை
    நாநா மூலமாக அறிய வருவதில்
    மிகுந்த ம்கிழ்ச்சி.
    பயந்தொக்க எழுதும்
    அவரது பெரிய முயற்ச்சி பாராட்டத்தக்கது.
    நன்றியும், வாழ்த்துக்களும்...
    தாஜ்

    ReplyDelete
  2. நன்றி நானா! மிகவும் கடுமையான உழைப்பு தேவைப்படும் ஆய்வு.. ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete