Sunday, November 3, 2013

நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....! - -'துக்ளக்' சத்யா



Image Courrtesy : outlookindia
***
நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....!

சத்யா

// நிரா ராடியாவின் டெலிஃபோன் உரையாடல்களில் உள்ள முக்கியமான ஆறு பயங்கர அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என ஸி.பி.ஐ.-க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த ஆறு பயங்கரங்கள் எவை என்று விவரமாக வெளியிடப்படாததால், என்னவோ ஏதோ என்ற கவலையில் ஆழ்ந்தோம். ஆய்வு செய்வதற்கு முன்பாக, அந்த பயங்கரங்கள் குறித்து ஸி.பி.ஐ. நிரா ராடியாவிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தினால் அது இப்படிதான் இருக்குமோ? //

ஸி.பி.ஐ. அதிகாரி :
உங்க டெலிஃபோன் உரையாடல்களிலே இருக்கிற பயங்கரங்களைக் கேட்டு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி அடைந்திருக்குது. அதைப் பத்தி ஆய்வு செய்யணும்னு உத்தரவு போட்டிருக்குது. மொதல்லே உங்களை விசாரிச்சுட்டா ஆய்வைத் தொடர வசதியா இருக்கும்.

நிரா ராடியா :
என்னுடைய 180 நாள் பேச்சைத்தான் வருமான வரித்துறை பதிவு செஞ்சுது. இதுக்கே இவ்வளவு பயங்கரமான்னு குதிக்கிறவங்க, மொத்த பேச்சையும் கேட்டா என்ன சொல்வாங்களோ? உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன? சின்ன
பயங்கரமாயிருந்தாதான் நான் டெலிஃபோன்ல பேசுவேன். பெரிய விசயம்னா, நேராத்தான் பேசுவேன். அது எங்க இண்டஸ்ட்ரியல் பாலிஸி.

ஸி.பி.ஐ. :
நல்லவேளை, உங்க டெலிஃபோன் பேச்சை மட்டும்தான் ஆய்வு பண்றோம். 'அரசு உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறதுக்கே பல கோடி செலவாகிவிடுது.'ன்னு உங்க தோழிகிட்டே சொல்லியிருக்கீங்க.......

நிரா :
இதுலே என்ன பயங்கரம் இருக்குது? அவங்க செய்யற வேலைக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது எங்க கடமை இல்லையா? 'இதுலே சலுகை காட்டுங்க, அதுலே வரியை ரத்து பண்ணுங்க, அந்த வேலையை எங்க நிறுவனத்துக்குக்
கொடுங்க'ன்னு உரிமையா கேக்கிறோம். சொன்னபடி செய்யுறாங்க. அந்த வேலைக்கு சம்பளம் கொடுக்கிறது தப்பா?

ஸி.பி.ஐ. :
அரசு உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் உங்க கிட்டே எப்படி சம்பளம் வாங்கலாம்?

நிரா :
எங்க கிட்டே மட்டுமல்லே, பல தொழிலதிபர்கள் கிட்டேயும் சம்பளம் வாங்கறாங்க. அவங்களை எல்லாம் விசாரிச்சீங்களா? மாட்டிக்கிட்டேன்னு தானே கேள்வி மேலே கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தறீங்க?

ஸி.பி.ஐ. :
சரி, அவுங்க பெயர் பட்டியலைக் கொடுங்க. சுப்ரீம் கோர்ட் ரொம்ப தொந்தரவு பண்ணா, கேஸ் போட உபயோகமா இருக்கும்.

நிரா :
லிஸ்ட் எல்லாம் கொடுக்க முடியாது. பேரை வெளியே சொல்றதில்லைன்னு அக்ரிமெண்ட் போட்டிருக்கோம். இதுவும் ஸ்விஸ் பேங் கறுப்புப் பண ஒப்பந்தம் மாதிரிதான். உயிரே போனாலும் எந்தத் தகவலும் வெளியே வராது. அப்படியொரு தொழில் கூட்டணி தர்மம்.

ஸி.பி.ஐ. :
'சீனாவும் பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதியிலே ஊடுருவ ஆசைப்படுது. அவர்களை இந்தியா தடுக்கக் கூடாது'ன்னு நீங்க ஒரு மத்திய மந்திரி கிட்டே பேசியிருக்கீங்க. அவரும் 'உரிய நடவடிக்கை எடுக்கிறோம்'னு உறுதி
அளிச்சிருக்காரு.

நிரா :
ஆமா, சீனாவிலேயும் பாகிஸ்தானிலேயும் கூட எங்க வியாபாரம் நடக்குது இல்லே? அதுலே லாஸ் வந்தா நீங்கள் ஏத்துப்பீங்களா? இதெல்லாம் பிஸ்னஸ், நீங்க தலையிடாதீங்க. உங்களுக்குத் தெரியாது.

ஸி.பி.ஐ. :
நீங்க சொன்னா மந்திரிகள் எப்படிகேக்கறாங்க?

நிரா :
என்ன கேள்வி கேக்கறீங்க? பிரதமரே கேக்கும்போது மந்திரிகள் கேட்க்க மாட்டாங்களா?

ஸி.பி.ஐ. :
ஆ...! பிரதமரும் கேட்பாரா?

நிரா :
நீங்களும் சுப்ரீம் கோர்ட் மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் ஷாக் ஆகறீங்களே? நான் சொன்னபடி கேக்கலைன்னா, பிரதமர் பத்தி ஒபாமா கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் இல்லே? அந்த பயம் அவருக்கு இருக்காதா?

ஸி.பி.ஐ. :
புரியலை; பிரதமருக்கு நீங்கதான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கறீங்களா?

நிரா :
எல்லாத்தையும் சொல்லித் தரமாட்டேன். பிஸினஸ் மட்டும்தான். உதாரணத்துக்கு, எந்தெந்த நிலக்கரிச் சுரங்கங்களை எந்தெந்த நிறுவனத்துக்கு ஒதுக்கணும்னு அவருக்கு என்ன தெரியும், பாவம்? நான்தானே சொல்லணும்! கோடிக் கணக்கிலே பணம்புரள்ற விசயமாச்சே! கொஞ்சம் ஏமாந்தாக் கூட அநியாயத்துக்கு கவர்மெண்டுக்கு லாபமாயிடுமே.

ஸி.பி.ஐ. :
நிலக்கரிச் சுரங்கங்களை விதி முறைப்படிதானே ஒதுக்கணும்?

நிரா :
கண்டிப்பா, நாம யாருக்கு ஒதுக்கீடு பண்றோமோ, அதுக்குத் தகுந்த மாதிரி நிலக்கரித் துறை அதிகாரிகள் விதிமுறைகளைத் திருத்திடுவாங்க.

ஸி.பி.ஐ. :
தீவிரவாதி ஜெயில்லேர்ந்தும், கோர்ட்லேர்ந்தும் தப்பிக்கப் போற விஷயத்தைக் கூட ஒரு ஜர்னலிஸ்ட்கிட்டே பேசியிருக்கீங்க.

நிரா :
இந்திய முஜாஹ்தீன் தீவிரவாதி தப்பிச்சதைப் பத்தி கேக்கறீங்களான்னு புரியலை. பொதுவா தப்பிக்கிற தேதி, டைம் மட்டும்தான் எங்க லெவல்லே முடிவு பண்ணுவோம். மத்த விஷயங்களை நீங்க ஆஃப்கானிஸ்தானுக்கு ஃபோன் பண்ணிதான் கேக்கணும். லைன் போட்டுத் தரட்டுமா

ஸி.பி.ஐ. :
ஐயையோ வேண்டாம்.

நிரா :
ஒரு தடவை என்ன ஆச்சு தெரியுமா? காஷ்மீரைத் தாக்கறதா, கல்கத்தாவைத் தாக்கறதான்னு தீவிரவாதிகளுக்குள்ளே சண்டை. நான்தான் தலையிட்டு, இந்த மாசம் காஷ்மீர், அடுத்த மாசம் கல்கத்தான்னு சமரசம் பண்ணிவெச்சேன். இதுக்காக பிரதமர் கூட எனக்கு தேங்ஸ் சொன்னாரு.

ஸி.பி.ஐ. :
என்னது? பிரதமர் தேங்ஸ் சொன்னாரா?

நிரா :
ஆமா. விஷயம் தெரிஞ்சுட்டு, அதுக்கேத்த மாதிரி பிரதமர் வெளிநாடு போயிட முடியுது இல்லே? அதை விடுங்க. சட்டீஸ்கர்லே கூட கலெக்டரைக் கடத்தறதா, கமிஷனரைக் கடத்தறதான்ற மாதிரி சமயங்களிலே தீவிரவாதிகளுக்கு நான்தான் கன்ஸல்டண்டா இருக்கேன். கோரிக்கை நிறைவேறினதும், அவங்களை விடுவிக்கறதுக்கும் ஏற்பாடு பண்றேன். அதனாலே ரெண்டு பக்கமும் என் பேர்லே மரியாதை உண்டு.

ஸி.பி.ஐ. :
சரி. பயமாயிருக்குது. தீவிரவாத விஷயத்தை விடுங்க. நிர்வாக ரீதியான நல்ல பயங்கரங்களைப் பத்திப் பேசலாம். 'எக்கச்சக்கமா சொத்து சேர்ந்து போச்சு, பணத்தை எப்படிக் காப்பாத்தறதுன்னே புரியலை, சொத்து கணக்கு வேறே கேக்கிறாங்க'ன்னு ஒரு மத்திய மந்திரி ஃபோன்லே அழுது புலம்பியிருக்காரு. நான் எப்படியாவது ஹெல்ப் பண்றேன்னு நீங்க அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கீங்க.

நிரா :
எல்லா மந்திரிகளுக்கும் இந்த மாதிரி பிரச்னை ஏற்படறது சகஜம்தான். வருமான வரிச் சட்டத்திலேர்ந்து அமைச்சர்களுக்கு விலக்கு வழங்கற அவசர சட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு பண்றேன்னு உறுதி அளிச்சேன். சுப்ரீம் கோர்ட் கவனிக்கிறதாலே கொஞ்சம் டிலே ஆகுது. மத்திய அமைச்சர்கள் ரகசியக் கூட்டத்திலேயும் இந்த சப்ஜெக்ட் வருது.

ஸி.பி.ஐ. :
அமைச்சர்கள் கூட்டத்திலே கூட நீங்க கலந்துக்குவீங்களா?

நிரா :
ஊஹும். அங்கே எதைப் பத்தி விவாதிக்கணும்னு அஜெண்டா தயார் பண்ணிக் குடுக்கறதோட என் வேலை முடிஞ்சுடும்.

ஸி.பி.ஐ. :
மந்திரி சபை கூட்ட அஜெண்டாவை நீங்க தயார் பண்றீங்களா?

நிரா :
எல்லா கூட்டத்துக்கும் நான் தயார் பண்ண மாட்டேன். முக்கியமான கூட்டத்துக்கு மட்டும்தான் 'மத்திய அரசு - தொழிலதிபர்கள் ஒப்பந்த’ப்படி அரசு நடக்கலைனா, அதை சரி செய்ய வேண்டியது என் வேலையாச்சே!

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே ஒரு தடவை ஸி.பி.ஐ. அதிகாரிகள் கிட்டே நீங்க கோபமா பேசினது கூட பதிவாயிருக்குது. இதோ... பேச்சைக் கேளுங்க....

நிரா :
ஓ...... இதைச் சொல்றீங்களா? மத்திய அமைச்சர்களும் அவங்களுக்கு வேண்டிய அதிகாரிகளும் வழக்குலே மாட்டும் போது, ஸி.பி.ஐ. சார்பா அவங்க மேலே எஃப்.ஐ.ஆர். போடறது சட்ட அமைச்சரோட வேலை. ஒரு தடவை சட்ட அமைச்சர் வெளிநாடு போயிருந்தப்போ, ஸி.பி.ஐ.யே எஃப்.ஐ.ஆர். போட்டுடுச்சு. அதான் 'சட்ட மந்திரி இல்லைன்னா என்ன? என் கிட்டே கேட்டிருந்தா நானே எஃப்.ஐ.ஆர். போட்டிருப்பேன் இல்லே? உங்களுக்கு என்ன அதிகாரம்?'ன்னு நல்லா கேட்டேன். அதான் இது.

ஸி.பி.ஐ. :
எஃப்.ஐ.ஆர். நீங்க எப்படிப் போடலாம்?

நிரா :
ஏன்? நான் என்ன புதுசாவா எஃப்.ஐ.ஆர். போடுறேன்? நம்ம ஆளுங்க, வழக்குலேர்ந்து நல்லபடியா தப்பிச்சு வர வேண்டாமா? ஏதாவது பிரச்சனை ஏற்பட்டா, எங்க பாஸ் என்னைத்தானே கேப்பார்?

ஸி.பி.ஐ:
கிரிமினல் எம்.பி.க்கள் பிரதமரை கேரோ பண்ண திட்டம் போட்டிருக்கிறதாக நீங்களும் ஒரு பெண் நிருபரும் பேசியிருக்கீங்க....

நிரா :
ஐயோ... அது பயங்கர ஜோக்! சீனியர் கிரிமினல் எம்.பி.க்கள் மேலே பல வழக்குகள் இன்னும் வாபஸ் ஆகாம இருக்குது. அதை எல்லாம் வாபஸ் வாங்க உடனே நடவடிக்கை எடுக்கணும்னு பிரதமரை ஹவுஸ் அரெஸ்ட் செய்ய திட்டம் போட்ட தகவல் எனக்கு கிடைச்சது. பிரதமரை எப்படியாவது காப்பாத்திட்டா, நமக்கு பெரிய அஸைன்மெண்ட் கிடைக்கும்னு எங்க பாஸ் என்கிட்டே சொன்னார். உடனே நான் கிரிமினல் எம்.பி.க்களோட ஃபோன்லே பேசி, வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா ஃபைல்ஸும் கூடிய சீக்கிரம் காணாமப் போகும்னு உறுதி அளிச்சேன். அப்புறம்தான் பிரச்னை முடிஞ்சது.

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே நீங்க நல்ல விஷயமே பேசினது இல்லையா?

நிரா :
எப்பவாவது அப்படி பேச்சு வரும். உடனே 'ராங் நம்பர்'னு வெச்சுடுவேன்.

***

நன்றி: துக்ளக் (30.10.2013) , சத்யா, 
தட்டச்சு உதவி : தாஜ்

No comments:

Post a Comment