Saturday, November 16, 2013

முகமது பஷீரின் 'சப்தங்கள்' - குளச்சல் மு. யூசுஃப் முன்னுரை

வைக்கம் முகமது பஷீர் வாசகர்கள் (fb) குழுமத்திற்கு நன்றியுடன்...
**


முன்னுரை (சப்தங்கள்)
குளச்சல் மு. யூசுஃப்

பிரபஞ்சம் பின்னிட்ட கோடானுகோடி தினங்களின் நிலவு போர்த்திய ஓரிரவு. அதன் ஒரு பகுதி முகமிழந்த மனிதர்களை வெறும் ‘சப்தங்க’ளால் சித்திரப்படுத்தியிருக்கிறார் பஷீர். மொழியின் வெறும் ஓசைகளே இதில் மானுட உன்னதங்களைக் குலைத்துப் போடுகின் றன.

விலைமாதர்களையும் பாலியல் நோய்களையும் ஓரின சேர்க்கை யாளர்களையும் கருவாகக் கொண்ட 12 அத்தியாயம் நீண்ட இந்தச் சிறுகதை அல்லது சிறு நாவலின் அர்த்தப்பாடுகள் மானுட விழுமியங்களை மட்டுமல்ல மனிதனின் இருப்பையே நிலைகுலைய வைக்கிறது. அதுவரையிலான இலக்கிய மரபியல் அறிஞர்களையும் கௌரவமான கதைச்சொல்லிகளையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும்புலவர்களும் பேரிலக்கியவாதிகளும் தேவலோகக் காரிகைகளின் அங்க லாவண்யங்களை உவகையுடன் எழுதிக் குவித்துக்கொண்டிருந்த போது காற்றுப் பிரிவது உள்ளிட்ட இயற்கை உபாதைகள் தசையுள்ள தாஜ்மகால்களுக்கும் உண்டு என்று சொன்னவர் பஷீர்.

காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடிய அதே காலகட்டத்தில் தான் பஷீர் பாம்பையும் பூரானையும் நரியையும் பிற உயிரினங்களையும் பூமியின் வாரிசுதாரர்கள் என்றார். நேரடியான வாழ்க்கையனுபவங்களிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் படைப்பையும் வெகுசன இரசனையையும் தீவிரமான வாசக அனுபவத்தையும் ஒன்றிணைவாகப் பயணிக்கச் செய்கிற இந்தத் திசையறிவுதான் பஷீரின் மிகப்பெரிய பலம். கலாச்சாரத்தை வாசனையால் புரிந்துகொள்ள முடியுமென்றால் ஓரினப் புணர்ச்சியாளர்களின் கலாச்சாரத் தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியுமென்பதை மக்களின் மொழியில் சொன்னவர் பஷீர். வார்த்தைகளுக்கு இலக்கணரீதியிலான அழுத்தம் தந்து மனித வாழ்க்கையை வர்ணனை செய்ய முற்படுகிற, சமூகத்தின் வெளியில் நிற்கும் ஒரு பார்வையாளனின் கதைச்சொல் முறையும், இலக்கிய வகை மாதிரி பூடகங்களின் அர்த்தத் தளங்களுக்குள் பயணிக்கும் திறன்படைத்த நுண்மான் நுழைபுலன்கொண்ட வாசகன் பயணிக்கும் திசையும் இதிலிருந்து அடிப்படையாகவும் முற்றிலும் மாறுபாடானதுமாகும்.

புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மொழியின் இலக்கணத் தினுள் வகைப்படுத்தியும் மரபார்ந்த இலக்கிய வடிவத்தை விட்டு விலகி விடாமலும் எழுதும் டேபிள் ஒர்க் பஷீரைப் பொறுத்த வரை அன்னியமானது.

‘உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ எனும் அவரது குறுநாவலின் நாயகி பாடுகிற பாடலின் முதல் வரியே இப்படித்தான் தொடங்கும்: ‘குத்தினி ஹாலிக்க லித்தாப்போ...’ இதற்கான அர்த்தம் உலகிலுள்ள எந்த ஒரு மொழியிலும் கிடையாது.

ஆனால் எழுத்து வடிவிலான இந்த ‘சப்தங்’களுக்கு மலையாள நாட்டின் அரசியலில் அர்த்தமிருக்கிறது. ஆசிரியராக பணியாற்றுகிற அவரது இளைய சகோதரன் அண்ணனுக்கு இலக்கண இத்தியாதிகளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதால், “காக்கா, எதற்கும் கொஞ்சம் இலக்கணம் படிப்பது நல்லது” என்கிறார். பஷீருக்குக் கோபம் வந்தாலுமே இதற்காக அவர், தமையனுடன் இலக்கணம் பற்றிய சர்ச்சைக்குள் இறங்கிவிடவில்லை. “போடா, நீ. வீட்டிலிருந்த நெய்யை எல்லாம் திருடித் தின்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லித் திரிந்தவன்தானே நீ. உன்னுடைய இலக்கணத்தின் இலட்சணம் எனக்கா தெரியாது” என்று பதில் சொல்கிறார். தன்னுடைய படைப்புகள் ஆங்கில நாவல்களிருந்து தழுவப்பட்டவை என்ற விமர்சனத்தையும் பஷீர் இவ்வாறே எதிர்கொண்டார்: “வாய் வழியே சாப்பிடுவதாலும் வட்ட முகமும் ஒரு ஜோடி கை கால்களும் இரண்டு கண் களுமிருப்பதாலும் மேற்படியானை சர்ச்சிலின் மகனென்று சொல்லி விட முடியுமா?”

எழுதுகோலைத் தீட்டி காகிதங்களை எழுதுவதற்குப் பத்திரப்படுத்தி விட்டு அனுபவங் களைத் தேடிப் புறப்பட்டவரில்லை பஷீர். அவர் பயணங்களை நோக்கி துரத்தியடிக்கப் பட்டவர். யாரால் துரத்தப் படுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. மனித மனத்தின் இனம்காண முடியாத சூட்சுமப் பகுதி அது. வாழ்க்கை சுகப்படவில்லையென்பதற்காக பஷீர் யாரை நோக்கியும் தனது சுட்டுவிரலைத் தூண்டவில்லை. ஆகவேதான் தோட்டத்தில் நுழைந்த பாம்பு மனைவி பார்ப்பதற்குள் போய் விட்டால் நல்லது என்று அவர் பதைபதைப்பதுவும் அவரால் எதையுமே வெறுக்க இயலாமல் போனதுவும். வைக்கம் முகம்மது பஷீரின் கனவில் திருச்சூரில் உறையும் வடக்கும் நாதர் வந்து சொல்கிறார்: நன்றாகப் பழுத்தப் பாக்கு கிடைக்காமல் வாயெல்லாம் என்னவோ போலிருக்கிறது என்று. மறுநாள் பாக்குகளை வாங்கிப் பொட்டலமிட்டு கோயில் சுவர்களுக்குள் வீசி யெறிகிறார் பஷீர். மனம் பிறழ்வுபட்ட நிலையில் தான் எதிர்பாராமல் வந்துகிடைத்த இதுபோன்ற ஓராயிரம் அனுபவங்கள். இதைத்தான் மலையாள எழுத்தாளர் எம்.பி. போள், வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிய்த்தெடுத்ததும் ஓரங்களில் இரத்தம் துளிர்த்து நிற்பதுமான படைப்புகள் என்று வர்ணித்திருந்தார்.

பஷீரின் அதிஅற்புதப் படைப்புகளான பாத்துமாவின் ஆடு, பால்யகால தோழி, உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்ததுபோன்ற கதைகளை ஒருவேளை திறமையான கதாசிரியர்கள் யாராவது எப்போதாவது எழுதி விடுவார்களாக இருக்கலாம். ஆனால் மனிதனின் ஈனஸ்வரத்திலான இந்தப் பேரோசையை பஷீரைத் தவிர வேறு யாராலுமே எழுப்ப இயலாது. தமிழ்ச்சூழலில் அண்மைக்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரலை நாற்பதுகளிலேயே பிரதிபலித்து விட்டவர் பஷீர். அன்றுவரை யாரும் சொல்லாததும் அதற்குப் பின்னாலும் யாரும் சொல்லாததுமான ஹூருலீன் (சுவர்க்கலோகத் தாரகை) பெண்ணொருத்தி குசு விடுவதைப் பற்றிய சிறுகதையான பர்ர்ர்... ஐ பஷீர் எழுதி நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.

மலையாளத்தில் ‘பஷீரியம்’ எனும் இலக்கியக் கோட்பாட்டை மொழிசார்ந்தும் வடிவம் சார்ந்தும் ஏற்றுக்கொண்ட மலையாள வாசகர்களில் பெரும்பான்மையினரும் இன்று பஷீரைப் பற்றிய நினைவுபடுத்துதல்களைக்கூட இலக்கியத்தின் மற்றொரு முகமாக வரவேற்கிறார்கள். வாழும்போது மாந்திரீக கதாசிரியராகப் போற்றப் பட்டவரின் ஞாபகங்கள்கூட மாந்திரீகத் தன்மையுடனிருப்பதை அவரது வாழ்க்கையின் அதிசயமாகவே கருதவேண்டியதிருக்கிறது.
***


நன்றி : குளச்சல் மு. யூசுஃப் , காலச்சுவடு பதிப்பகம்
***
ஒரே ஒரு சுட்டி : உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்

4 comments:

  1. வருகைக்கு நன்றி குளச்சல். பஷீரை வரைந்தவர் ஓவியர் ஜோஷ் என்று நினைக்கிறேன். இந்த தளத்திலிருந்து எடுத்தேன் :
    http://www.dcbooks.com/blog/vaikom-muhammad-basheer-thoughts-basheerinte-kazhchakal-dc-books-blog/
    அங்கே என்ன எழுதியிருக்கிறது என்று சொல்லுங்களேன்.

    ReplyDelete
  2. ஓ, இதுதான் அங்கே எழுதியிருக்கா? மண்டன் எனக்கு என்ன தெரியும்? நன்றி குளச்சல்.

    ReplyDelete
  3. இந்த மாதிரி முன்னுரைகளையெல்லாம் யாராவது தொகுத்து ஒரு முன்னுரை தொகுப்பு வெளியிடலாம்....

    ஆனா அதுக்கு யாரு முன்னுரை எழுதுவது?

    - ஃபேஸ்புக்கில் நான்

    ReplyDelete
  4. //தமிழ்ச்சூழலில் அண்மைக்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரலை நாற்பதுகளிலேயே பிரதிபலித்து விட்டவர் பஷீர்// பஷீரின் சிறு கதைகளை நான் படித்த போது இந்த உண்மையை உணர்ந்தேன். நிஜமே அது.
    -தாஜ்

    ReplyDelete