Friday, November 1, 2013

நானும், குலாம் ஃப்ரீத் மக்பூல் சாப்ரியும் - சடையன் அமானுல்லா

ஜெதபு என்ற தலைப்பில் ஆபிதீன் நானா குலாம் ஃபரீத் மக்பூல் சாப்ரியின் ஒரு கவ்வால் பாடலை ( எல்லோரையும் போல கவ்வாலி என எழுத பிடிக்கவில்லை, தமிழில் காவாலி என்றால் கெட்ட சகவாசம் உள்ளவன் எனும் அர்த்தமாம்) ப்ளஸ் ல் இட்டிருந்தார்கள்

எனக்கு சாப்ரி பிரதர்ஸ் பரிச்சயமானது 1974 ல், ஊரிலே ஒருமுறை ட்ரான்சிஸ்டர் ரேடியோ வை உருட்டிக் கொண்டிருந்த போது, சாப்ரியின் பாடல் சிற்றலையில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சாப்ரி சகோதரர்களின் குரலே ஆடறுக்க கத்தியை தீட்டும் போது கரகர வென சத்தம் வருமே அதுபோல கரகர குரல், அதுவும் சிற்றலையின் கர கரப்பும் சாப்ரியின் கர கரப்பும் சேர்ந்து, ஒரே கறகற இருந்தாலும் பாடலின் இனிமையில் ஈர்க்கப்ப்ட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். சிற்றலையில் வந்தது குவைத் வானொலி. சொல்லி வைத்தது போல தினமும் இந்திய நேரப்படி 9.30 மணிக்கு சாப்ரி கவ்வால் வந்து கொண்டிருந்தது. அன்றிலிருந்து சாப்ரி யின் பரம ரசிகனாகி விட்டேன்.

அந்தக்காலம் முதுகலை முடித்து விட்டு ஊரில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். முதுகலை படித்துக் கொண்டிருந்த போது என் மாமி , “ எம் மருமொவன் எம்.ஏ படிக்கிறாரு, படிச்சு முடிச்சுட்டா வீட்டு வாசலுக்கு ஜீப் வரும் வேலை கொடுக்க “ என்பார்கள். ஒரு சைக்கிள் கூட வரவில்லை என்பது வேறே விஷயம். கடைசியில் எல்லோரும் போல நானும் துபாய் எனும் பாலைவன ஜோதியில் (1976) ஐக்கியமாகி விட்டேன்.

துபாயில் வேலையில்லாத “ கொமரு” ஆக ஒரு 3 மாதம் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், காலையில் டிபன் சாப்பிட்ட பிறகு காதர் ஹோட்டல் பக்கம் வந்து விடுவேன். அல் மாலிக் நியூஸ் ஏஜன்சியில் நின்று கொண்டே குமுதம் ஆனந்த விகடன் வார இதழ் , அடுத்து தந்தி தினமணி படித்து விடுவேன். அல் மாலிக்கில் தாடி வைத்த பாகிஸ்தானி ஒருவன் ஜாவ், ஜாவ் என்பான் , காதிலேயே வாங்கிக் கொள்ளமல் படித்து விட்டுதான் கிளம்புவேன். அடுத்த படையெடுப்பு, அல் மாலிக்கை சுற்றியுள்ள கேசட் கடைகள் அங்கே சாப்ரி பிரதர்சின் பாடல்களை பெரிய ஸ்பீக்கர் வைத்து ஏதோ தேவர் ஜெயந்தி விழாவில் ஒலிபரப்புவது போல ஒலிபரப்புவான். சாப்ரி பாடல்களை கேட்கும் போதே ஒரு ஜதபு,இஷ்க் ஏற்படும். அப்புறம் வேலை கிடைத்து  சம்பளம் வாங்கிய போது ஒரு நேசனல் தாமரைப்பூ கேசட் பிளேயர் வாங்கி சாப்ரி பிரதர்ஸ் பாடல்கள் எல்லாம் சலிக்க சலிக்க கேட்டேன். ஊருக்கு ஸஃபர் செய்யும் காலங்களில் இந்தக் கேசட்டை வாங்கிவந்து ஊரிலும் கேட்பேன். சாப்ரி பிரதர்சின் பாடல்கள் என் அம்மாவிற்கும் பிடித்துப் போய்விட்டது. அசர் தொழுகைக்குப் பின் " தம்பி அந்த அல்லா பாட்டை போடேன்" எனச் சொல்லும் அளவிற்கு ரசிகையாகி விட்டார்கள். என் மாமி வந்தால் "நாகூர் தர்காவில் இருப்பது போல இரிக்கி அந்த பீர்சா பாட்டை போடு" என்பார்கள்.

1985 களில் PTV 1 , PTV 2  சேனல்களில் ஜுமேராத் (வியாழன் மாலை) சாப்ரி பிரதர்சின் கவ்வால் பாடல்கள் ஒலிபரப்பாகும். நல்ல சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருப்பேன். ரூமுக்கு வரும் நண்பர்கள், துபாயில் பாக்கிஸ்தான் டி.வி பாக்குற ஒரே தமிழன் நீதான் என்பார்கள்.

1990 துபாயில் சாப்ரி பிரதர்சின் லைவ் கச்சேரி, விடுவேனா , முதல் ஆளாக டிக்கட் வாங்கி வைத்து விட்டேன். அல் நாசர் ஐஸ் ரிங்கில் கச்சேரி. பாவிப்பசங்க ஐஸ்தரையின் மேலே ப்ளைவுட் பலகையப் போட்டு அதற்கு மேலே நாற்காலியை போட்டு வைத்திருந்தார்கள்,  குளிர் நடுக்கி எடுத்து விட்டது.   சுமார் 2 மணி நேரக் கச்சேரி, பாக்கிஸ்தானியர்கள் ஜதபு வந்து ஒரே மாதிரி ஆடி ஆடி ரூபாய் நோட்டை சாப்ரி பிரதர்சின் ஆர்மோனியத்தின் மேல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

கச்சேரி முடிந்ததும், எல்லோரும் வரிசையில் நின்று கை கொடுத்து வந்தார்கள். நானும் வரிசையில் நின்று கொண்டேன். என் முறை வந்தது. கை கொடுத்தபோதே “ ஆப் கிதர் கா ஹே “ என்றார். சாப்ரி பிரதர்சின் மூத்தவர். மத்ராசி என்றேன்.

”பஹ்ஹுத் அச்சா மத்ராஸ் மே ப்ரோக்ராம் கியா, மவுண்ட் ரோட் தர்கா மே” என்றார். இன்னும் அதிகம் பேச ஆசை பின்னால் நின்றவன் பஸ் பஸ் ஜாவ் என்றான். நகர்ந்து வந்து விட்டேன். இன்றளவும் சாப்ரி பிரதர்ஸ் கவ்வால் என்றால் ஒரு தனி இஷ்க்  

***

நன்றி : அண்ணன் சடையன் சாபு
***

Thanks to : Kyle Musicbizpro

1 comment:

  1. ச்சும்மா : கவாலியை வெடைக்கும் காமெடிபிரியாணி :))
    http://www.youtube.com/watch?v=xg3rg4YCq6g

    ReplyDelete