Thursday, October 24, 2013

மாஸ்டரின் சிஸ்டர் - ஹமீதுஜாஃபரின் 'ஷோக்கு'

'தி இந்து'வில் வந்த 'சிரித்து வாழ வேண்டும்!' கட்டுரையை சிரிக்காமல் படித்துக்கொண்டிருந்தபோது ஜாஃபர்நானாவின் 'விஷயம்' வெளியில் வந்தது . உலகத்திற்கு உடனே காட்டவேண்டும் என்ற அக்கறையில் பதிவிடுகிறேன். நேத்து பார்த்த 'காமெடி எக்ஸ்பிரஸ்'-ன் விளைவினால் பிறந்ததாம். நாளைக்கு துபாய் ductacக்கு  வரும் ஷிவ்குமார் ஷர்மாவைப் பார்க்க இயலாத கடுப்பில் நான் இருப்பதால் (டிக்கெட் 200 திர்ஹம். எளியோருக்கு கிட்டாத இசை என்ன எழவு இசை?) என்னால் சிரிக்க இயலவில்லை. ஆனால் நீங்கள் சிரிக்கலாம். என் நிலைமைக்காகவே சிரிக்கலாம். தப்பில்லை. முன்னாலேயே சொல்லிவிடுகிறேன். இது சைவ ஜோக். 'நயாகராவுக்கும் வயாகராவுக்கும் என்னங்கய்யா வித்தியாசம்? நயாகரா விழும். ' போன்ற அப்பாவி ஆசிப்மீரான் ஜோக்கல்ல! அப்படியும் சிரிப்பு வரவில்லையென்றால் எனக்குப் பிடித்த இன்னஸண்ட்-ஐ   இங்கே பாருங்கள். உத்தரவாதம். நன்றி. - ஆபிதீன்
**

மாஸ்டரின் சிஸ்டர்

ஹமீதுஜாஃபர்

நேற்று ஏசியா நெட் மிடிலீஸ்ட் சேனலில் 'காமெடி எக்ஸ்பிரஸ்' நிகழ்சி. அதுலெ ஒரு அறுபது வயசு ரிட்டையர்டு கர்னல் தம்பதி வாடகை வீட்டுக்கு குடி வருகிறார்கள். தம்பதி முதலில் குடி வந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகள். அவள் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருப்பதால் ஒரு மாதம் கழித்து வருவதாக கர்னல் சொல்கிறார். இதை கேட்டுக்கொண்டிருந்த எதிர் வீட்டு மூன்று வேலையில்லா வாலிபர்களின் கற்பனை குதிரை வேகத்தில் ஓடுகிறது. நாவில் எச்சில் சொட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியாக அப்பெண்ணை கற்பனை செய்துகொண்டு வரும் தேதியை எதிர்பார்க்கிறார்கள். அந்த நாளும் வந்தது, வந்ததோ ஆறு வயசு சிறுமி, பல வருடங்களுக்குப் பின் வேளங்கண்ணிவேண்டுதலினால் பிறந்த குழந்தை. அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் கர்னல். எப்படி இருந்திருக்கும் அந்த மூவருக்கும்?  இதை பார்த்துக்கொண்டிருந்தபோது பழைய சம்பவம் 1965ல் நடந்தது நினைவுக்கு வந்தது.

எப்போதும் போல தஞ்சாவூரிலிருந்து வரும் 9.30 ரயிலில் ஸ்கூலுக்குப் போகும்போது ஒரு நாள் நாகப்பட்டினம் பெரிய ஸ்டேஷனில் (நாகப்பட்டினத்தில் இரண்டு ஸ்டேஷன் இருந்தது. ஒன்னு பெரிய ஸ்டேஷன். இது ஜங்க்ஷன் அளவுக்கு பெரிசா இருந்துச்சு, இங்கே பதினைஞ்சு இருபது நிமிஷம் வரை ட்ரைன் நிற்கும் அதனாலெ பெரிய ஷ்டேஷன்னு எல்லாரும் சொல்லுவாங்க. இன்னொன்னு நாகப்பட்டினம் பீச் ஸ்டேஷன். இது ஹார்பரை ஒட்டி இருந்துச்சு (இப்போது இல்லை) வெள்ளைக்காரன் காலத்துலேந்து சரக்கு கப்பலும் பாஸஞ்சர் கப்பலும் நெறைய வந்துப் போய்கிட்டிருந்துச்சு. எப்படியும் இரண்டு பாஸஞ்சர் கப்பல் நாலு தரம் மலாயா சிங்கப்பூரிலிருந்து வந்து போகும். ரயில்வே லைன் இரண்டு ஃபர்லாங்கு தூரம் வரை சாலையை ஒட்டி இருந்ததினாலெ ரயில் போகும்போது ஒரு காங்கிமேன் (Gangman) பச்சைக் கொடியெ வீசிக்கிட்டு மணி அடிச்சிக்கிட்டே அந்த ரெண்டு பர்லாங் வரை முன்னாலெ போவார், அவர் பின்னாலெதான் ரயிலும் போவும். இது ப்ராட்கேஜாக மாற்றும் வரை இருந்தது.) சரியான கூட்டம். நாகூர் போற பாஸஞ்சரைவிட பசங்க கூட்டம் ஜாஸ்தியா இருந்துச்சு. எல்லோரும் CSI ஸ்கூல் 11th std பசங்க.

நாங்க ஒரு பத்து பதினஞ்சு பேர் அந்த ட்ரைன்லெதான் தினம் ஸ்கூலுக்கு போவதும் சாயந்திரம் 4.30 ட்ரைன்லெ திரும்புவதும் வழக்கம். என்னைக்குமில்லாமெ அன்னைக்கு நம்ம பசங்க கூட்டமா அலைமோதுவதைப் பார்த்தப்ப எங்களுக்கே ஒரு ஆச்சர்யம். ட்ரைனை விட்டு எறங்கியதுமே எங்களைப் பார்த்துட்டு எங்கேடா First Class இருக்குன்னு கேட்டானுங்க. அதோ அங்கெ செண்டர்லெ இருக்கும்னு சொல்லிட்டு என்ன விஷயம்னு கேட்டப்ப, "வா., வா., வா.... மாஸ்டர்ட சிஸ்டர் வருது ரிஸீவ் பண்ணனும்" அப்டீன்னாங்க. அப்பதான் எங்களுக்கே தெரிஞ்சுச்சு.

விஷயம் என்னான்னா....

மாஸ்டர்னு ஒரு அம்பது வயசு கல்யாணம் ஆகாத வாலிபர் எங்களுக்கு சோசியல் ஸ்டடீஸ் பாடம் நடத்துற வாத்தியார். பேரு ஜோசஃப் டானியல், டபுள் எம் ஏ,. பார்க்க லேசா கருப்பா சித்தானைக்குட்டி மாதிரி இருப்பார். ஏற்கனவே இருந்த தியேடர் சார் மெண்டல் ஆயிட்டதுனாலெ புதுசா ஜாயின் பண்ணியிருந்தார். அவரை "சார்"னு கூப்பிட்டா புடிக்காது. "மாஸ்டர்" னுதான் கூப்பிடனும். அவர் பாடம் நடத்துனார்னா ஃபஸ்ட் ரோவிலெ பசங்க யாரும் உட்கார மாட்டாங்க. ஏன்னு கேட்டாரு "சாரல் அடிக்கிது மாஸ்டர்"னு பதில் சொன்னோம். விஷயம் ஒன்னுமில்லே அவர் பேச ஆரம்பிச்சா எச்சில் தெரிக்கும். அதைதான் நாசூக்கா சாரல்னு சொன்னோம்.

"நாளைக்கு ஹாஃப் டே ஸ்கூலுக்கு வரமாட்டேன், அரட்டையடிக்காமெ ஒளுங்கா படிங்க, காலையிலெ ஒம்பதரை ட்ரைன்லெ என் சிஸ்டர் வாராங்க" அப்டீன்னு மொத நாள் சொல்லிருந்தார். அதன் விளைவு பசங்க எல்லாம் இங்கே கூடி இருந்தாங்க. பத்து மணிக்குத்தானே ஸ்கூல், அதுவும் அஞ்சு நிமிஷ வாக்கிங் டிஸ்டன்ஸ்.

பசங்க எல்லோருக்கும் ஒரே கற்பனை, சிஸ்டர்னு சொன்னதும், ஒரு இருபது இருபத்தஞ்சு வயசு இருக்கும்; கிளி மாதிரி இருக்கும்; கொக்கு, குயில் மாதிரி இருக்கும், அப்படி இருக்கும், இப்படி இருக்கும்; சாரு கருப்பா இருந்தாலும் அது நல்ல நெறமா வகையா இருக்கும், செவப்பா இருக்கும் வெள்ளையா மஞ்சளா அப்படி இப்படீன்ற மயக்கத்திலேயே ஃபஸ்ட்கிளாஸ் காரேஜை நோக்கி ஓடினோம்.

"மாஸ்டர், லக்கேஜை தூக்க போர்டரை கூப்பிடாதிங்க நாங்க தூக்குறோம், ஸ்கூலுக்கு லேட்டானுலும் பரவாயில்லை, மொத பிரீடு உங்கப் பிரீடுதானேன்னு முண்டியடிச்சிக்கிட்டுப் கம்பார்ட்மெண்ட் உள்ளேபோய் லக்கேஜை எடுத்து தலையிலெ சுமந்துக்கிட்டு வந்தான் சுரேஷும் சுல்தானும். பாக்கி பசங்க வாயில் எச்சி ஒழுவுறதுகூட தெரியாம வாசலையே பார்த்துக்கிட்டிருந்தப்பொ...

ஒரு அம்பத்தஞ்சு அறுபது வயசு மதிக்கத்தக்க ஒரு அம்மா மெதுவா எறங்கிச்சு, அவங்களுக்குப் பின்னால் யாருமில்லை.

"மை பாய்ஸ்,  திஸ் ஈஸ் மை சிஸ்டர், மேடம் ரோஸிலின்" அப்டீன்னு அறிமுகப்படுத்தினார்.

அவ்வளவுதான் ஒரு பயலையும் காணோம். எப்படி எஸ்கேப் ஆனானுங்கன்னு தெரியலெ, ஆய் ஊய்னு பெரிசா ரீல் விட்ட  ஹமீதொலி எங்கே போனான்னு தெரியலெ. மறு நாள் கிளாஸ்லெ "ஆல் ஆஃப் மை பாய்ஸ், தேங்க் யு வெரி மச் டு ரிஸீவ் மை சிஸ்டர் அட் ரயில்வே ஸ்டேஷன்" அப்டீன்னு சொல்லிட்டு எங்க எல்லோருக்கும் (திருநெல்வேலி) அல்வா ஒவ்வொரு துண்டு கொடுத்தார்.

****

நன்றி : அன்றும் ஏமாந்த ஹமீதுஜாஃபர்நானாவுக்கு!

No comments:

Post a Comment