Thursday, August 29, 2013

கம்யூனிஸ்டுகளும் சீர்காழியும் - கவிஞர் தாஜ்

'காங்கிரஸ் தலைவர் பெரும் மதிப்பிற்குரிய சோனியா காந்திக்கு... ' என்றொரு தலைப்பில் இரண்டு நாட்களுக்கு முன் என் ஃபேஸ்புக் பக்கத்தில் கடிதமென்று எழுதி இருந்தேன். அதில், வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் இன்னுமான சில விமர்னங்களோடும் எழுதி இருந்தேன்.

அந்தக் கடிதத்தில் பாரதிய ஜனதாவின் ஜரூரையும் காங்கிரஸின் முடக்க நிலையையும் சுட்டி... மதவாதக் கட்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதை பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்றும், ஆனால்..., காங்கிரஸை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்த பெரும்பான்மையோருக்கு இருக்கிறது என்றும் இந்த முறை சோனியாவே பிரதமராக வரவேண்டும் என்றும் எழுதி இருந்தேன். 

இன்றைய மத்திய அரசு வலதுசாரி போக்கு கொண்டது. ஆட்சியில் தோற்றும் போன அரசு.  இதற்கோர் மாற்று அரசு பதவிக்கு வரவேண்டுமென்றால்.. அது இடதுசாரி அரசியல் சிந்தை கொண்ட கம்யூனிஸ்டுகள் வருவதென்பதுதான் சரியான சிந்தனையாக இருக்கும். முதலாளித்துவ அரசுக்கு மாற்றாக, தொழிலாளர்கள் /  விவசாயிகள் மற்றும் ஏழை எளியோர்களை அரவணைக்கும் அரசொன்று பதவியில் அமர்வதென்பது தான் நீதியாகவும்/ சமன்பாடு கொண்டதாகவும்/ சரியான சிந்தனையாகவும் இருக்கும். இதனில் இரண்டு கருத்திருக்க முடியாது. சரியான சிந்தனையாளர்கள் இதன்படிக்கு விரும்புகின்றார்கள் என்றாலும்... இந்தியாவில் உள்ள இடதுசாரி சிந்தைக்கொண்ட கம்யூனிஸ்ட்டு கட்சி மேற்கு வங்கம் / கேரளா நீங்கலாக இந்தியாவில் தங்களது தளத்தை இழந்து காலம் பல ஆகிறது என்பதே... யதார்த்த நிலை! பின் எப்படி அவர்கள் எல்லா மாநிலங்களிலும் பரவலாக எம்.பி.களைப் பெற்று ஆட்சிக்கு வரமுடியும்? அதனால்தான் நான் என் கட்டுரையில் அக் கட்சியினை முன்னிலைப்படுத்தியோ முதன்மைப்படுத்தியோ எழுதவில்லை.

இதன் பொருட்டு நண்பர் சாதிக் தன் ஆதங்கத்தை அக் கட்டுரையின் மறுமொழியில் தீர கொட்டி இருக்கிறார்:

// எரியிற கொள்ளிக்கட்டையில கம்மியா சுடுறதாலே தானே சுட்டுக்க முடியும். நம்ம காம்ரேட்களை, பார்த்த சொல்லுங்கண்ணே, "எல்லாத்துக்கும் பதிலே அவுங்கதான். ஆனா..., ஏன் தூங்குறங்களேன்னு தெரியல!" நம்ம வட்டாரத்தில இருந்த கம்யூனிஸ்டுகளையே இன்றைக்கு காணலேண்ணே! ஆனா கொடிமரம் மட்டும் இருக்கு ! வயித்தரிச்சல் தங்கமுடியல! //
 
*
நண்பர் சாதிக்கின் ஆதங்கம் சரிதான். 1971-ல் இருந்து எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு பிரிந்தது வரை. அல்லது... அதன்பின்னாலான ஓர் பத்து வருடம் வரை நான் நன்கு அறிவேன் சீர்காழி வட்டம் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கம்
கொண்டதாக இருந்தது. எங்கள் வட்டம்... ஓர் விவசாய பூமி! விவசாயத் தொழிலாளர்களின் பூமி. தவிர, தலித்துகள் மெஜாரிட்டி கொண்ட பூமி! (இன்றைக்கும் சீர்காழி... அவர்களுக்கான தனித் தொகுதிதான்!) . அந்தக் காலக்கட்டத்தில் வலது கம்யூனிஸ்டுகளும் இடது கம்யூனிஸ்டுகளும் இங்கே அதிகம்! 'அண்ணங்கார்' (நாயுடு வகுப்பு)என்கிற வலது கம்யூனிஸ்ட் தலைவரும் 'ராமமூர்த்தி' (பிராமண வகுப்பு) என்கிற இடது கம்யூனிஸ்ட் தலைவரும் பொதுவில் நேர்மையானவர்கள். பொது மக்களிடம் நன்மதிப்பு பெற்றவர்கள். அதையெல்லாம் விட கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள்! அவர்களின் நேர்மைக்கு உதாரணமாக இன்றுவரை அவர்களை சீர்காழிப் பகுதி மக்கள் மதிப்புடனேயே நினைவு கூறுகிறார்கள்.
 
*
 
[இதில்... ராமமூர்த்தி, ஒரு தலித் பெண்ணை பெரிய விளம்பரமின்றி திருமணம் செய்துகொண்டவர்! அவருக்குப் பிறந்த பிள்ளையொன்று மகா சிரமத்திற்கிடையில் டாக்டருக்கு படித்து முடித்து பக்கத்து கிராமம் ஒன்றில் அரசு மருத்துவ மனையில் பணிப்புரிகிறார் என்பது சந்தோஷமான செய்தி!]

*
சீர்காழிக்கு... மேற்கே உள்ள கிராமங்களில் வலது கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகம்.! மற்றைய எல்லா திக்கு கிராமங்களிலும் இடது கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கமே அதிகம். கிட்டத்தட்ட திராவிட கட்சிக்கு நிகராக! (அன்றைக்கு திராவிடக் கட்சியென்றால்... அது தி.மு.க.தான்) அந்த அளவில் எங்கள் பகுதியில்  வலதும் இடதுமான கம்யூனிஸ்டுகள் சிறந்திருந்தார்கள். அப்பொழுதெல்லாம்... கம்யூனிஸ்ட் சார்பிலான விவசாய ஊர்வலம் என்றால்.... சீர்காழி திணறிப்போகும்! நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளோடு ஆயிரக் கணக்கான விவசாயப் பெண்கள் ஆண்களென சாரை சாரையாக  அணிவகுத்து வந்து குவிந்துவிடுவார்கள்! மாதம் தவறாமல் இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகள் கூட்டம் ஊரில் கட்டாயம் இருக்கும். இதில் பெரும்பாலும் பாவலர் வரதராஜன் அவர்களின் அரசியல் இசை நிகழ்ச்சிதான். அவரது பாடல்களுக்காகவும் அவரது அரசியல் பேச்சுக்காகவும் எங்க ஊரில் ஏகப்பட்ட ரசிகர்கள்! எல்லா கட்சியிலும் அவருக்கு இங்கு ரசிகர்கள் இருந்தார்கள்!

*
மாதம் தவறாமல் பாவலரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் அந்த நிகழ்ச்சி மேடையின் ஓர் ஓரமாக ஒல்லியான கருத்த ஒரு பையன் கையில் 'கிட்டாரோடு' இருப்பார். பாவலர் 'டீ' குடிக்கும் இடைவெளியில் அந்த கிட்டார் பையன் மைக்கில் கிட்டார் வாசித்து காமிப்பார். அந்தப் பையனை பாவலரின் தம்பி என்பார்கள். பெயர்: இளைய ராஜா! ஆமாம்... அதே இளைய ராஜாதான் இன்றைய திரை இசைச் சக்ரவர்த்தியேதான்! வறுமையின் பிடியில் இருந்தவர்களை இடது கம்யூனிஸ்ட் போற்றி பாதுகாத்தது. இன்றைக்கு நீங்கள் இளைய ராஜாவிடம் 'கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி கேட்டால்... 'கிலோ என்ன விலை?' என்று கேட்பார். தவறாக நினைக்கவேண்டாம். தத்துவ விசாரங்களை யாரும் கேட்காமலேயே  அள்ளி இறைக்கும் அளவிற்கான ஞானி அவர்! ஞானத்தில் முக்தியும் பெற்றுவிட்டவர்! அவர்களை ஒத்தவர்களுக்கு பழசெல்லாம் மறந்து போவது இயற்கை! அதுவோர் நிலை! இது பெரிய விசயமே இல்லை!

*
மீண்டும் சீர்காழி வட்டத்தின் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் போக்கையும் வளர்ச்சியையும் மட்டுமே பார்ப்போம். உப சங்கதிகள் போதும்.

சீர்காழி வட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பதெல்லாம்... எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரியும் வரைதான். அத்தருணத்தில் வலது / இடது கம்யூனிஸ்ட்டுகள் ஒருசேர எம்.ஜி.ஆரை தீவிரமாக ஆதரிக்க... இரண்டு கம்யூனிஸ்ட் தொண்டர்களும் எம்.ஜி.ஆரை விமர்சனம் வைக்காமல் ஏற்று கொண்டார்கள்! பிற்காலத்தில், இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க.வை ஆதரித்த போது... இரண்டு கம்யூனிஸ்ட் தொண்டர்களில் பெரும்பகுதியினர் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்துவர சம்மதிக்கவில்லை. எம்.ஜி.ஆரையே காரல்மார்க்ஸாக/ லெனினாக/ மாசேதுங்காக... கண்டு அ.தி.மு.க.வோடு ஐக்கியமாகிவிட்டார்கள் அவர்கள்! எங்கள் வட்டத்தில் வலது / இடது கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த  அண்ணங்காரும் / ராமமூர்த்தியும் இயற்கையை எய்திவிட... எங்கள் தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சியும் பரிதாபமாகச் செத்துப் போனது!

மேற்கண்ட யதார்த்த சம்பவம் சீர்காழி தொகுதிக்கு மட்டுமல்ல தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் மிகுதியாக இருந்த அத்தனை தொகுதிக்கும் பொருந்தும்.

அதன்பின், கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் உயிர்த்தெழவே இல்லை. எம்.ஜி.ஆரை உன்னத நிலைக்கு உயர்த்திவிட்டு இவர்கள் மாண்டுவிட்டார்கள். அவர்களது கணக்கில்... இன்னொரு 'சரித்திரம் மன்னிக்காத குற்றம் இது!' இதனையொட்டி நண்பர் சாதிக் போன்றோருக்கு மஹா வருத்தம். அதனைவிட, இன்றைய கம்யூனிஸ்டுகள் முன்னைய மாதிரி கிராமம் தோறும் கட்சியை வளர்க்க முனைவதுமில்லை. சாதிக்கின் ஆதங்கத்தில் அர்த்தமிருக்கிறது. அது நமக்குப் புரிவது மாதிரி அவர் நேசம் பாராட்டும் கம்யூனிஸ்டுகளுக்கு புரிவதில்லை. நாம் என்ன செய்ய முடியும்? ஜெயலலிதா, கூட்டணிக் கிடையாது என்றும் அறிவித்து பார்த்துவிட்டார். நாளை பாரதிய ஜனதாவையே பாராளுமன்றத்தில் அவர் ஆதரிப்பார் என்பதும் தமிழக கம்யூனிஸ்டுக்களுக்கு தெரியும். இத்தனைக்குப் பிறகும் கட்சியை வளர்க்காது அவரது வீட்டு புழக்கடைப் பக்கம் வட்டமிட்டுக் கொண்டிருந்தால் எப்படி?

இதில் விசேசமான ஒரு செய்தி அவர்கள் கருணாநிதி வீட்டுப் பக்கம் போகாததுதான்.


சாதிக்கிற்கு நம் அனுதாபங்கள்.
***



நன்றி : தாஜ்   , பாவம் சாதிக்!

***
புகைப்படம்: அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை நடத்திய கல்வி விழா ஒன்றில், பாலுசாமி நாடார் அறக்கட்டளை தலைவர் திரு.ராமர் அவர்களால் பொன்னாடைப் போர்த்தி, முகம்மத் சாதிக் கௌரவிக்கப்படுகிறார்.

2 comments:

  1. நீங்கள் சொன்னது எல்லாமே கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருந்தது, தலைவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது. அதைப்பற்றிப் பேசிப்பயனில்லை. பிரச்சினை அவர்களிடம் மட்டுமே இல்லை. கடந்த 20-25 ஆண்டுகளில் பொருளாதாரக் கொள்கைகள் தொழிற்சங்க உரிமைகளைப் பறித்துவிட்டதும். தொழிற்சங்கங்கள் வலுவிழந்ததும் இடதுசாரிகளின் ஆதரவு வட்டத்தைக் குறைத்துவிட்டது. தவிர, அரசியல் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைந்து விட்டதால் தேர்தல் கூட்டணிசார்ந்த கேலி செய்வதில் மட்டுமே பெரும்பாலோர் ஈடுபடுகிறார்களே அன்றி அவர்களின் கொள்கைகள் என்ன என்பது பற்றி யாரும் சிந்திப்பார் இல்லை.
    மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டதுபோல இடதுசாரிகள் ஆட்சியைப்பிடிப்பது சாத்தியமில்லை. ஆனால் ஆட்சிக்கு கடிவாளமாக இருக்கக்கூடிய சக்தியாகத் திகழ முடியும். யுபிஏ-1 ஆட்சியின்போது அப்படித்தான் இருந்தார்கள் ஓரளவுக்கு. அணுசக்திக் கொள்கை விஷயத்தில் வெளியேறினார்கள். அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற வலு குறைந்தது. ஆக, இப்போது அவர்களும் சரியாகச் சிந்திப்பவர்களும் செய்யக்கூடியது ஒன்றே - நாடாளுமன்றத்தில் இயன்ற அளவுக்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. காங்கிரஸை வீழ்த்த வேண்டும், அதற்காக பாஜக (மோடி) வரட்டுமே என்று பலர் கூறத் தொடங்கி விட்டார்கள். இது மிகமிக ஆபத்தான சிந்தனை.

    ReplyDelete
  2. அவசியம் வாசிக்கவேண்டுமென்று சாதிக் சிபாரிசு செய்கிறார் நண்பர் ந.முத்துமோகனின் கட்டுரையை.. :

    மார்க்சியம், மார்க்கெட் மற்றும் இந்துத்துவம்
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24765

    ReplyDelete