Saturday, January 19, 2013

புலவர் மாமா கதைகள் - எஸ்.எல்.எம். ஹனிபா

ஜாஃபர்நானாவுடயத பாத்துட்டு நம்ம ஹனீபாக்காவுக்கும் ரொம்ப சின்னதாயிடுச்சி.. எல்லாம் வயசுதான் காரணம்டு நெனைக்கிறேன். அல்லா போதுமானவன். இன்று காக்கா அனுப்பியிருக்கும் கதைகள் இவை. என்ஜாய்!

***

அன்புள்ள ஆபிதீன்,

நலமாக இருக்கிறீர்களா?

ஜாஃபர் நானாவின் கதைகளைப் படித்த போது ஊரில் உலா வரும் புலவர் மாமாவின் கதைகள் ஞாபகத்திற்கு வந்தன. எனது ஊர் மீராவோடையில் புலவர் மாமாவைத் தெரியாதவர்கள் யாருமில்லை. கருங்காலி போல் உடம்பு வாகு. கட்டை மனிதர். எண்பது வயது வரையிலும் வாழ்ந்தார். அவ்வப்போது அவர் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் எங்களூரில் எல்லோர் மனத்திலும் ஈரங்காயாமல் இன்னும் ஒட்டிக் கிடக்கிறது. அப்படி ஏராளம் கதைகள். இதோ இப்போதைக்கு இரண்டு கதைகள்:

கதை 01:

எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த புலவர் மாமாவுக்கு இடது கால் ஓயாத தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மூட்டு வலி. டாக்டரைப் பார்க்க மாமா போனார். காலைப் பரிசோதித்த டாக்டர், "வயசு போற காலத்தில இப்படியெல்லாம் காலுக்கு வருத்தம் வரும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது" என்றார். உடனே மாமா, "நீங்க சொல்வது பொய், என்ட இடது காலுக்கும் வலது காலுக்கும் ஒரே வயசுதானே" என்றார்.

நான் நம்புகிறேன், சிரித்துக் கொண்டு பதில் சொன்ன நோயாளியை தன் வாழ்நாளில் டாக்டர் அன்றுதான் பார்த்திருப்பார் போலும்.

கதை 02:

புலவர் மாமாவின் வீட்டு முற்றத்தில் தென்னைகள் குலை குலையாய்க் காய்த்துத் தொங்கின. கவனித்திருந்த யாரோ இரவோடிரவாக தேங்காய்களைப் பறித்துப் போய்விட்டார்கள். சுப்ஹு தொழுது விட்டு கடைக்கு சீனி, தேயிலை வாங்கப் போன மாமாவின் முகத்தைப் பார்த்த கடைக்காரர், "என்ன புலவரின் முகம் இப்படிக் கிடக்கிறது?" என்றார். "டே தம்பி, ராவு யாரோ வந்து தேங்காயெல்லாம் ஆஞ்சிட்டுப் பெய்த்தானுகள்". கடைக்காரர், "உங்கட தோட்டத்திலதான் நாலு நாய்கள் கிடக்கிற எண்டு கதைக்கானுகளே" என்று கேட்டார். "கள்ளன் வந்த நேரம் நாய்கள் எங்க போன? தேங்கா பறிக்க உயரம் பத்தாத போது, குறட்டை விட்டுத் தூங்கிய எனது நாய்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி நாய்க்கு மேல் ஏறி நின்று தேங்காயைப் பறித்துக் கொண்டு போயிருக்கான்" என்றார் புலவர்.

கடைக்காரர் வயிறு குலுங்கச் சிரித்திருப்பார் போலும்.


அன்புடன்
ஹனீபாக்கா (E-Mail : slmhanifa22@gmail.com)

1 comment:

  1. ஹனிபா காக்கா,

    ஆழ்ந்த தத்துவத்தைப் உள்பொதித்து சிந்திக்க கதைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete