Thursday, September 13, 2012

அம்மிக்குழவியால் வயிற்றில் இடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது - குளச்சல் மு. யூசுப்

ஃபேஸ்புக்கில் இன்று வாசித்த குளச்சல் மு.யூசுபின் எழுத்தைப் பதிவிடுகிறேன், நன்றியுடன். யாரைச் சொல்கிறார் மனுசன் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனாலும், அழகோ அழகு இந்த 'அம்மிக்குழவி'! - ஆபிதீன்.

***


முக்குண தோஷம் நீங்க சிறுபஞ்சமூலம்

புத்தகத்திலிருக்கும் கருத்தைவிடவும் தான் வாங்கிய நிலப் பத்திரத்திலிருக்கும் எழுத்து சிலரை வசீகரித்து விடுமென்பது இயல்பான விஷயம்தான். நமது கல்வி முறையின் நோக்கமும், இவர்போன்ற சான்றிதழ்க் கல்வியாளர்களின் இலட்சியமும் இதுதானே? மன மெனும் மர்மஸ்தானத்தில் விழுகிற ஐந்திலக்க ஊதியத் தாக்குதல், சிலரது சிந்தனைகளை அப்படியே திசைமாற்றிப் போட்டு விடும். எனவேதான், பொருளாதார ஊறுபாடுற்ற இவரது கண்களுக்கு பட்டா புத்தகத்திற்கும் இலக்கிய புத்தகத்திற்குமிடையிலான உள்ளடக்கத்தின் வண்ணத்தைப் பிரித்தறிய இயலாமல் போயிருக்கிறது. இது, தென்னம் பிள்ளைக்கும் தேசியவினாயகம் பிள்ளைக்குமிடையே வித்தியாசம் தெரியாத ஒரு பார்வை. இவரது அதிகபட்ச வாசிப்பே என்னுடைய மொழியாக்கங்களில் சில மட்டும் தான். இதில், விளவங்கோடு பத்திர எழுத்தாளரின் எழுத்துக்களையும் இவர் உட்படுத்த நினைப்பது நிச்சயமாகவே இவருக்குப் பிறகு, இவரது பெண்டு பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியூட்டும்.

கண்ணுக்குத் தெரியாத ஹர்ஷத் மேத்தாக்கள் உலவும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வணிக நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்; வெறுமனே முகவர்களை மட்டும் நம்பியிருந்தால் காளை முட்டும். வட்டித்தொழிலைப் பொறுத்த மட்டிலும் பாதுகாப்பை யும் ஆபத்தையும் சமதூரத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வணிகம்; சவரக்கத்திக்கே பயப்படுபவனால் வீச்சரிவாள் தூக்க இயலாது. திவால் அறிக்கைக்குப் பயப்பட வேண்டும்; மீட்டர் வட்டிக்காரனென்று எவனும் போட்டுக் கொடுக்காமலிருக்க வேண்டும். மஞ்சள் பிசாசு, பரவாயில்லை. ஆனால், அதன் கொள்ளளவு சார்ந்து, கொள்ளையனுக்குப் பயந்து நித்தமும் சாக வேண்டும்.

மிச்சமிருப்பது, பூமி. இது வளராது, பெருகாது, ஆனால், நிலவுடையாளர்களான முன்னோர்களில் பலரும் செய்ததுபோல், அரிசி வாங்கவும் ஆஸ்பத்திரிச் செலவுக்கும் கொடுத்து ஏழைபாளைகளிடமிருந்து கை நாட்டு வாங்கியும், கொள்ளி முடிஞ்ச சொத்தை யும், புறம்போக்கையும் வளைத்து இதை விரிவு விரிவுபடுத்தலாம். பஞ்சமி நிலமாக இருந்தாலும் பரவாயில்லை. மெக்காலே வமிசாவளியினருக்கு ஏமாற்றச் சொல்லியா தர வேண்டும்? பிறகு, அதில் கிராம்பு, ஏலம், ரப்பர்போன்ற பணப்பயிர்களை விளைவிக் கலாம்; அன்னியச் செலவாணியை அள்ளியெடுத்து தேசிய உற்பத்தியில் பங்கு வகிக்க லாம்; சேதாரத் தேய்மானங்கள் கிடையாது; 2000 மாடல், 40,000 கிலோமீட்டர் ஓடியிருக்கிறது என்று விலை மதிப்பைக் குறைக்க மாட்டார்கள். செகண்ட் ஹாண்ட் என்னும் பிரச்சினையே கிடையாது; ஏக்கரின் விலையை பத்தே ஆண்டுகளில் செண்ட் அலகில் திரும்பப் பெற்று விடலாம்; திருடன்களால் படுத்துத் தூங்குவதைத் தவிர சுருட்டிக்கொண்டு போக இயலாது; இது குறித்து பலருடைய ஆலோசனையின்பேரில், இவர் புதிதாக நிலம் வாங்கியிருக்கிறீர்; இதன் ஆவணம், பக்கத்திலுள்ள விளவங் கோட்டில் பதியப்பட்டிருக்கிறது; வாழ்த்துக்கள்! இதன், மூல ஆவணம், குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தபோது மலையாள மொழியில் பதியப்பட்டது. என்ன பார்க்கிறீர்கள்? இவருடைய நண்பர்கள் எமக்கும் நண்பர்கள் தானே?

இப்படியான இவர் எதையோ எழுதியிருக்கிறார். நிச்சயமாக ‘இறுதி முழக்கம்' இவருக்குக் காசு கொடுக்காது. மிச்சமிருப்பது, புகழ். தமிழ்ச்சூழலில் இன்று பணம் சம்பாதிப்பதுவும் எழுதிப் புகழ்பெறுவதும் ஏக காலத்தில் நடவாதது. வெகு சிலரைத் தவிர! பாலகுமார வாசகராகிய இவர் எல்லாவற்றிற்குமே ஆசைப்படுகிறார். சற்றே விலகியிருந்து சிந்தியும் பிள்ளாய்: நீர் புகழ்‘பெற' ஆசைப்பட்டு, ‘சுவர்முட்டி' விற்ற கையைச் சுட்டுக் கொண்ட பணமிருந்தால் பத்திரச் செலவுக்குப் பயன்பட்டிருக்கும்தானே?

எழுத்து என்பது, பணம் சம்பாதிப்பதுபோன்று சுலபமான காரியமில்லை, ஓய்! பிரபஞ்ச உற்பத்தி, இறைக்கோட்பாடு, வரலாறு, சமூகக் கட்டமைப்பு, மதங்கள், சாதியக் கட்டுமானங்கள், தனிமனித உணர்வுகள், பொருளாதாரம், அரசியல், சட்ட விதிகள், சமூக அவலங்கள் என, நிறைய வாசிக்க வேண்டியதிருக்கும்; இவை, கல்விப் புலத்திற்கு வெளியே நிகழவேண்டும். கண்பேறு, மந்திரவாதம், செய்வினை, குட்டிச்சாத்தான், தலைச்சன் பிள்ளை மண்டையோடு, தீட்டுத்துணி, மையிட்டுப் பார்த்தல்போன்ற மூடத் தனங்களை தொன்மமென்று நம்பாமல் எழுதவேண்டியதிருக்கும். இதற்கு பெரியார், கோவூர்போன்ற நிறைய சமூக சீர்திருத்தவாதிகளின் நூல்களை வாசிக்க வேண்டிய திருக்கும். ஆங்கிலம் தெரியாதென்பதை பாவகாரியமாகக் கருதாமல் - குறிப்பாக, தமிழ்நாட்டில் - கையில் வைத்திருக்கும் ஆங்கில நூலைக் கைவிட வேண்டியதிருக்கும். இதில் ஈகோ பார்க்கக் கூடாது. ஊடே, அறிவிலிகள் எனும் காய்தலை விலக்கி வைத்து விட்டு மக்களோடு மக்களாகக் கலந்து பழக முயற்சி செய்ய வேண்டும். வலைத்தளத்தி லிருந்து இதைப் பதிவிறக்கம் செய்ய ஏலா(தி)து.

நிறைய யோசியும். யோசிப்பதுபோல் பாவலா காட்டாமல் உண்மையாகவே யோசியும். தன்னம்பிக்கையுடன் எழுத முயற்சி செய்யும். இதற்கு, உமக்கு காஃப்மேயர் முதல் அப்துல் கலாம் வரையிலும் தோள் கொடுப்பார்கள். குறைந்தக் கட்டணத்தில் தன்னம்பிக்கை வகுப்புகளும் இப்போது பரவலாக நடைபெறுகின்றன. நீர் ஒரு பேராசிரியராக இருப்பதால், இதை ஒரு கட்டணம் என்றே கூற இயலாது. உமது வீட்டி லிருந்து விளவங்கோட்டிற்குச் செல்லும் சிற்றுந்திற்கான எரி பொருள் செலவுகூட ஆகாது. தன்னம்பிக்கையுடன் எழுதப் பழகும்; எதையாவது எழுதுவோம்; தனிப்பட்ட முறையில் எள்ளி நகையாடினாலும், பழகிய தோஷத்திற்காக எவரேனும் காமுறுவரென்று, ஒட்டுண்ணிபோல் பற்றிப் படராமலும், மனக்கோட்டத்தின் மாமருந்தான காய்தலும் உவத்தலுமின்றியும் சுயமாக முயற்சி செய்யும். தொன்மங்களின் அருளிருந்தால், இந்தியா விலேயே அதிகம்பேர் வாசிக்கிற பிற *மொழிப் பத்திரிகைகளிலும் தமிழின் மிக முக்கியமான பத்திரிகைகளிலும் உம்மையும் பாராட்டி முழுப்பக்கச் செய்திகள் வரக்கூடும்.

முக்கியத் தகவல்: உம்முடைய நூலை ‘காலச்சுவடு' நிராகரிக்கவோ, குமாரசெல்வா, மீரான்மைதீன், என்.டி. ராஜ்குமார்போன்றோரின் நூல்களைப் பதிப்பிக்கவோ நான் காரணம் கிடையாது. இது, படைப்பின் தகுதி அடிப்படையில் பதிப்பாளரால் தேர்வு செய்யப்படுவது. ஒரு வேண்டுகோள்: எதையாவது எழுதி விட்டு திருத்தம்கோரி, சான்றிதழ்க் கல்வியாளர்கள் யாரும் இனி என்னிடம் வராதீர்கள். விளவங்கோடு பத்திர எழுத்தாளரிடம் போங்கள்.

அன்புடன்: குளச்சல் மு. யூசுப்

அடிக்குறிப்பு: அம்மிக்குழவியால் வயிற்றில் இடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது.

***

நன்றி : குளச்சல் மு. யூசுப் | http://www.facebook.com/KulachalMuYoosuf


No comments:

Post a Comment