Saturday, August 4, 2012

நோன்புக்காலம் : ஆசிப்மீரான் கதையும் ஹமீதுஜாஃபர் செய்தியும்

ஆசிப் மீரானின் இரவுகள் -  சே.. அப்படி சொன்னா தப்பு - ஆசிப்மீரானின் சிறுகதை (இரவுகள்) சுட்டி : http://asifmeeran.blogspot.com/2006/10/blog-post_03.html

ஜாபர் நானாவின்  செய்தி கீழே வருகிறது.

***

நோன்புக்கால செய்தி - ஹமீது ஜாஃபர்

"அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்" (அல் குர்ஆன் 3:135)

"யாரேனும் தீமையைச் செய்து அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால், அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்" (அல் குர்ஆன் 4:110)

"அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்" (அல் குர்ஆன் 5:74)

இந்த மூன்று வசனங்களையும் எழுதி அதன் கீழே அவ்வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இச்செய்தியை கொடுத்துள்ளார்கள்.

"நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உலக காரியங்களுக்காகவே அதிக நேரத்தை செலவிடுகிறோம். அதில் படைத்த இறைவனை நினைப்பது என்பது மிகக் குறுகிய நேரமே. ஐவேளை தொழுகையில் மட்டுமே இறைவனுடைய நினைப்பு வருகிறது. பள்ளியைவிட்டு வெளியே வந்தால் உலக நினைப்புகளில் மூழ்கிவிடுகிறோம். இந்த அளவுக்கு ஷைத்தானின் சூழ்ச்சி நம்மை இறை நினைப்பைவிட்டு பாராமுகமாக்கிவிடுகிறது. இதனால் வாழ்வில் பல தவறுகளை இழைக்கின்றோம். நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கின்றான். எனவே அவனிடமே பாவமன்னிப்புத் தேடவேண்டும் என்றும், நாளை மறுமையில் அவனிடமே மீளுதல் உண்டு என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடவேண்டும். மேற்கண்ட வசனங்களும் இதையே உணர்த்துகிறது.

மேலும் செய்த தவறை மறுபடியும் செய்யாமல் அல்லாஹ்விற்கு பயந்து அதிலிருந்து முழுமையாக விடுபட்டு நன்மையான காரியங்களின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் இவ்வசனங்கள் உணர்த்துகிறது."

இப்படி எழுதப்பட்ட தவ்ஹீது ஜாமாத்தின் வாராந்திர நோட்டீஸில் என் கண்ணில் பட்டது. மேலே கூறப்பட்ட வசனங்களுக்கு ஏதோ செய்தியை சொல்லவேண்டும் என்ற நோக்கம் தெரிகிறதே ஒழிய வேறு பொருத்தப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

அவ்வசனங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் சொல்லும் செய்தியை ஆராய்ந்தால் எதோ எல்லோரும்  ஐவேளைத் தொழுகையில் மட்டும் இறைவனை நினைப்பது போலவும் மற்ற நேரங்களில் உலக காரியங்களால் இறைவனை மறந்து வாழ்ந்துக்கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது.

நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் இறைத்தன்மை பின்னிப்பிணைந்து கிடக்கிறதே! நாம் யாருக்காக வாழ்கிறோம்? யாருக்காக உழைக்கிறோம்? யாருக்காக நேரத்தை செலவு செய்துகொண்டிருக்கிறோம்? எல்லாமே குடும்பம், சமுதாயத்தைச் சார்ந்தல்லவா நிற்கிறது. தனியாக இறைவனை நினைத்தால்தான் இறை சிந்தனையா? தொழும்போது எங்கே இறை சிந்தனை இருக்கிறது? "அல்லாஹு அக்பர்" என்று தக்பீர் கட்டியபின் இறைவன் எங்கே இருக்கிறான்? இறைவனை அனுப்பிவிட்டு அடுத்து செய்யவேண்டிய வேலையைப் பற்றிய சிந்தனையிலல்லவா சுழன்றுகொண்டிருக்கிறோம். வெறும் இறை சிந்தனை மட்டும் இருந்துகொண்டிருந்தால் வாழ்க்கை என்னாவது? தன்னை நம்பி இருக்கும் குடும்பம் என்னாவது?

இந்த ஆலிம்கள், மார்க்க அறிவு வேறு உலக அறிவு வேறு; மார்க்க வாழ்க்கை வேறு உலக வாழ்க்கை வேறு என்ற கோட்பாட்டில் நிற்பதால் வருகின்ற விளைவு பாமரர்களின் மூளையை மழுங்கச் செய்கின்றது. காலங்காலமாக போதிக்கப்பட்டு வருவதினால் இன்றுவரை முஸ்லிம்கள் பின்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இறைவன், தொழுகையை நிர்ணயித்திருப்பது விழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான். தூங்கும் நேரத்தில் தொழுகை கடமையாக்கப் படவில்லை. அதே நேரத்தில் தொழுதுக்கொண்டே இருங்கள் என்று சொல்லவுமில்லை. "(ஜும்ஆ) தொழுகை முடிவு பெற்றால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள்" (அல் குர்ஆன் 62:10). அருள் என்றால்...? அது வியாபாரமாகவும் இருக்கலாம், விவசாயமாகவும் இருக்கலாம், அவரவர் பணியாகவும் இருக்கலாம், நியாயமாக விதிக்கப்பட்ட எதுவுமாக இருக்கலாம்.

உலக நினைப்பே ஷைத்தானின் சூழ்ச்சி என்கிறார்கள் இந்த ஆலிம்கள்.

அது எப்படி?  "அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான்..." (அல் குர்ஆன் 2:29) என்கிறான் மனிதனைப் பார்த்து, அப்படி இருக்கும்போது உலக நினைப்பு எப்படி ஷைத்தானின் சூழ்ச்சியாகும்?. இவ்வுலகில் பிறந்தபின் உலக நினைவே இல்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமா? நீ எதற்காகப் பிறந்தாய்? இறைவனை சதா நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவா? அதற்குதான் மலாயிக்கத்துக்கள் என்று சொல்லக்கூடிய வானவர்கள் இருக்கிறார்களே! இறைவனின் அனைத்துப் படைப்புகளிலுமிருந்து தனித்தன்மையான 'இறைவனின் பிரதிநிதி' என்ற சிறப்பு மனிதனுக்கு மட்டும்தானே இருக்கிறது. அப்படியானால் நீ இவ்வுலகில் சிறப்பாக வாழவேண்டாமா? உன் வாழ்வு மற்றுள்ளோருக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டாமா? உன் குடும்பம் மட்டுமல்ல உன் சமுதாயமும் பயனடைய வேண்டாமா? தொழுகையில் மட்டுமே இறைவனை சிந்திக்கமுடியும் என்றால்... இது ஏமாற்று வேலையல்லவா? மனிதன் செய்யும் ஒவ்வொரு நற்பணியிலும் இறைவனின் அருள் பின்னிக்கிடக்கிறது. அவனது அருள் இல்லாமல் ஒரு காரியமும் செய்யமுடியாது. "என்னுடைய அருள் இல்லாது ஒரு நன்மையான காரியம் செய்யமுடியுமா?" என்று கேட்கும் இறைவன், தீய வழியில் செல்பவர்கள் குறித்து சொல்லும்போது "அவர்களை அவ்வழியில் விட்டுவிடுகிறேன்" என்கிறான்.

ஷைத்தானின் சூழ்ச்சி என்பது, இது தவறு என்று தெரிந்து அதை வேண்டுமென்றே செய்தால் அது சூழ்ச்சி. அப்படிப்பட்ட நிலைக்கு பாவமன்னிப்பு தேவைப்படுகிறது; தெரியாமல் ஒரு காரியத்தை செய்துவிட்டு அது தவறு என்று தெரிந்தால் அதற்கு பாவமன்னிப்பு தேவைப்படுகிறது; தவறு என்று தெரிந்து மீண்டும் மீண்டும் செய்தால் அதற்கும் பாவமன்னிப்பு தேவைப்படுகிறது. உலக நினைப்பே ஷைத்தானின் சூழ்ச்சி என்று சொல்வது அபத்தமானது. அதே நேரம் உலகில் மலிந்துகிடக்கும் வீணான சிந்தனைகளில் மூழ்கிக்கிடப்பது, வாழ்க்கைக்கு தேவையற்றவைகளில் நேரத்தை செலவழிப்பது, மற்றான் தோட்டத்து மல்லிகைக்கு ஆசைப்படுவது இதல்லாம் நீங்கள் சொல்லும் ஷைத்தானின் வழிகெடுத்தல் ஆகும்.

மனிதனைத் தன்னுடைய பிரதிநிதியாக்கிக்கொண்டிருந்தாலும் "மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்" (அல் குர்ஆன் 4:28). எனவே தவறு செய்வது இயற்கையாகவே அமைந்துவிட்டது. தவறை உணர்ந்து திருந்திக்கொள்வதற்கும், தவறு நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்வதற்கும், தன் மனதை அலையவிடாமல் கட்டுப்படுத்துவதற்கும் இறைவணக்கத்தை ஏற்படுத்தி அதில் ஒன்றான நோன்பை நமக்களித்து, அந்த நோன்பு காலத்தில் உடம்பை, மனதை, ஆசையை, இச்சையை, சுயத்தேவையை கட்டுக்குள் கொண்டுவரும் வாய்ப்பை நமக்களித்துள்ளான். இதுவே நோன்பின் சிறப்புகளில் ஒன்றாகும்.

***

நன்றி : ஹமீது ஜாஃபர் http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com
நன்றி : ஆசிப்மீரான்




1 comment:

  1. நீங்கள் பிஜே-ஜமாலி விவாதத்தினைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தவ்கீத் ஜமாத்தின் கடவுள், வானத்துக்கு "மேலே" எனும் திசையில், எட்டு மலக்குகள் சுமக்கக் கூடிய எடையுடன், "அர்ஷ்" எனும் நாற்காலியில் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர். அவ்வப்போது அந்த நாற்காலியிலிருந்து குதித்து கீழ்வானம் வரை வந்து விழுந்து விட்டு மேலே போய்டுவார். அவரைப் போயி எப்படி அவர்கள் தன்னைச் சுற்றி உணர முடியும்?

    ReplyDelete