Monday, July 16, 2012

மன்மோகன் அரசும் மதிநுட்ப அரசியலும் - தாஜ்


’உங்களது பாகத்தையும் சிறக்க எழுதுங்கள்’ என்று சொல்லியிருந்தார் நண்பர் தாஜ். அரசியல் கொஞ்சமும் அறியாத ஆபிதீன் என்ன எழுதுவான்?இன்று காலை மலையாள 96.7 FM-ல்-  ஸ்பெஷல் நியூஸ் வாசித்த ஷாபு - ‘ராஜா எங்கே இருந்தாலும் ராஜா அல்ல; ஆனால் ஞானி எங்கிருந்தாலும் ஞானிதான்’ என்று சொல்லிவிட்டு , ‘சொந்த ராஜ்யத்தில் முதலில் ராஜாவாக முயற்சி செய்’ என்று ஒபாமாவுக்கு அட்வைஸ் செய்ததை மட்டும்தான் சொல்ல இயலும். ஒலிம்பிக் செல்லும் அமெரிக்க வீரர்களுக்கான ஆடைகளைத் தயாரித்தது  சீனா!’ என்று வெடைத்ததையா சேர்ப்பது? - ஆபிதீன்

***


மன்மோகன் அரசும் அமெரிக்க மதிநுட்ப அரசியலும்


***

'T I M E'
அமெரிக்காவின் பிரபலமான வார இதழ்.
அந்நாட்டின் மூத்த பத்திரிகை!

முதலாம், இரண்டாம்...
உலக யுத்தத்தின் போதும்
வியட்னாமில்...
அமெரிக்கா படையெடுத்த போதும்
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும்
பனிப்போர் நடைபெற்ற போதும்
இப்பத்திரிகை ஆற்றிய பங்கு பெரிது!

மஹா சுதந்திரமான இதழ்!
அமெரிக்க அரசை தயவு தாட்சணையற்று
எத்தனையோ முறை விமர்சித்தும் இருக்கிறது!

இதனால் என்னவோ இதன் கருத்துக்கள்
உலகப் பார்வையில்
ஓர் தனித்த, உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறது.

இத்தனை புகழ் கொண்டிருந்தும்...
இவ்விதழ் இந்தியாவுக்குள்
காலடியெடுத்து வைத்தபோது
'நம்பர் ஒன்' ஆகமுடியவில்லை.
விற்பனையில்..
பத்தோடு பதினொன்று அவ்வளவுதான்!

சரியாகச் சொல்லணும் என்றால்...
இந்திய ஆங்கில இதழ்களை
இதனால் வெல்ல முடியவில்லை.
நம்மவர்களின் சமர்த்தும் சாதூர்யமும்
எப்பவும் விசேச அந்தஸ்து கொண்டது!

அதனால் என்னவோ...
நம் இதழ்கள் மாதிரி
அலங்காரங்களை மாற்றி கொண்டு
அதிர்ச்சிகளோடு கூடிய தலைப்புகளை தரவும்
இப்போதெல்லாம்...
'T I M E' தயங்குவதேயில்லை.

தயங்காத அப்படியொரு தலைப்பாகத்தான்...
பிரதமர் மன்மோகன் சிங்கை பற்றிய
'இயங்காத பிரதமர்!''தன்னிச்சையாக செயல்படத் தெரியாதவர்''துணிந்து முடிவெடுக்க முடியாதவர்'என்பதான இத்தியாதிகள்.

இச் செய்திக்குப் பின்னால்...
இன்றைய அரசை சீர் குலைக்கும்
அமெரிக்காவின் அரசியல் இருப்பதாகக் கருதுகிறேன்.
அதனையே 'T I M E' வெளிப்படுத்தி இருப்பதாக
நிச்சயமாக நம்புகிறேன்.

வெளுத்ததெல்லாம்...
பால் அல்ல.
தமிழில் ஒரு சொல்லும் இருக்கிறது.

*

கொஞ்ச ஆண்டுகளாகவே
பெரிய எதிர் கட்சியான பி.ஜே.பி.
மக்கள் மத்தியில் தூக்கிப்பிடிக்கும்
செய்திகள் அத்தனையும்
அமெரிக்காவிலிருந்தும், அதன் நேசத்திற்குரிய
மேலை நாடுகளில் இருந்தும்தான் வருகிறது.

நேற்று...
அமெரிக்காவில் உள்ள நாசா கூறியதாக,
இதிகாசத்தில் கூறப்பட்டிருக்கிற
'ராமர் பாலம்' என்பது
மெய்யென்றும்... அது சாஸ்வதமேயென்றும்
மக்கள் மத்தியில் பி.ஜே.பி. அமர்க்களப்படுத்தினார்கள்.
அதனையொட்டி சேது சமூத்திர திட்டத்தை முடக்கி,
நாட்டின் வருவாய்க்கு உலைவைத்து,
தமிழகத்து மூத்த தலைவர்கள் பலரின்
கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை
உருக்குலைய வைத்து
துஷ்பிரயோக சப்த அரசியலை நடத்தினார்கள்.

பின்னர்...
ஸ்விஸ் பேங்கில் உள்ள
இந்தியர்களின்
கருப்புப் பணத்தின் இருப்பைப் பற்றி
'விக்கிலீக்ஸ்' இணைய தளம் சுட்டியிருப்பதாக
ஏழை பரோபகார சிந்தையோடு
பிஜேபி காரர்கள்,
வியக்கவைக்கும் பரிசுத்த அரசியல் நடத்தினார்கள்.

தங்களுடைய அரசு இருந்த காலத்தில்
ஸ்விஸ் பேங்கில்
கருப்பு கணக்கு வைத்திருக்கும்
அந்த யமகாதக இந்திய முதலைகளை...
நாமே துவசம் செய்திருக்கலாமே என்று
அவர்கள் ஒருபோதும் யோசித்தார்கள் இல்லை.

இன்றைக்கு அமெரிக்காவின்
சிந்தைப்படி
T I M E -ல்
முழுக்க முழுக்க அரசியல் உள் நோக்கம் கொண்ட
செய்தியாக...
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
'தன்னிச்சையாக செயல்பட தெரியாதவர்'
'துணிந்து முடிவெடுக்க முடியாதவர்'
என்பதான இத்தியாதிகள்
வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது!

இதே செய்தியினை
இதே பி.ஜே.பி.
முன்பு எத்தனையோ தடவைகள் கூறியிருந்தாலும்...
அமெரிக்காவின்...
''TIME' இதழே சொல்லிவிட்டது என்பதாக
இன்றைக்கு இச் செய்தியினை
மக்கள் மத்தியில் வைத்து
பரபரப்பு அரசியல் நடத்துகிறார்கள்.

ஆக, இந்தியாவின்
பெரிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி.
அவ்வப்போது புது உற்சாகம் கொள்ள
அமெரிக்கா...
இப்படி தொடர்ந்து அடியெடுத்து
கொடுத்து கொண்டேயிருக்கிறது.
இது ஏனென்று யோசிப்பது தகும்.

அப்படியெல்லாம்...
யோசிக்க வேண்டாத அளவுக்கு
உலக அரசியல் நடவடிக்கைகளில்
நேராகவும் மறைமுகமாகவும்
வலிய ஈடுபாடு கொள்ளும்
அமெரிக்காவின் செயல்பாடுகள்
எப்பவுமே யோக்கியம் கொண்டதல்ல.

தன் கட்டுப்பாட்டுக்குள்
அடங்க இணங்காத எவரையும்
அது, நிம்மதியாக விட்டதில்லை.
தயவு தாட்சண்யமற்று வீழ்த்தும்.

இங்கே...
இந்தியா, அமெரிக்காவின் நேசநாடுதானே?
பின் ஏன் இப்படி? யென உங்களுக்கு தோணும்.
நேச நாடுதான். சந்தேகமில்லை. ஆனாலும்..
இன்றைய ஆளும் காங்கிரஸ் அரசு
அதனை இன்றைக்கு பரிபூரணமாக நிரூபணம் செய்யவில்லை.
இப்படியானதோர் வருத்தம்
அமெரிக்காவுக்கு இருப்பதாக கேள்வி.

*
விளங்கவும் விளங்க வராததுமான
மையலான தடம்பிடித்து...
வலைப் பின்னலாய் யோசிக்கிற போது....
அமெரிக்காவின் மறைமுகமான ஆணைகளை
மன்மோகன் சார்ந்த அரசும்
காங்கிரஸின் தலைவரான சோனியாவும்
ஏனோ தட்டிக் கழித்திருப்பதை உணரமுடிகிறது.

பொருளாதார ரீதியாகவும்
அணு பரிசோதனை ரீதியாகவும்
ஆப்கானிஸ்தானில்...
அமெரிக்கா மேற்கொண்டு வரும்
ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா...
ராணுவம் தந்து உதவாததின் ரீதியாகவும்...

மேலும்,
அமெரிக்கா வேண்டாமெனக் கூறியும்
ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல் வணிகத்தை
நிறுத்தாது தொடர்வதின் ரீதியாகவும்....

இன்னும்,
அமெரிக்கா கூறுகிறபடியான பரிபூர்ண
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை
இந்தியா காது கொடுத்து
கேளாதிருப்பதின் ரீதியாகவும்...
இந்திய காங்கிரஸ் அரசு முரண்டு பிடிப்பது
அமெரிக்காவுக்கு பிடிக்காது போயிருக்கிறது.

இதனால்,
இன்றைய காங்கிரஸ் அரசு தொடர்ந்து நீடிப்பதை
அது விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

அதனால்...
இந்தியாவின் பெரிய எதிர்கட்சிக்கு அனுசரணையாக,
அடுத்து ஆட்சியில் அதனை அமர்த்தும் பொருட்டும்
இப்படியான
மறைமுகமாக அரசியல் உதவிகளை செய்ய
அது முன்வந்திருக்கலாம்.
பி.ஜே.பி.யும் அதனை வரவேற்று இருக்கலாம்.

பிஜேபியே ஒருசமயம் தயங்கி இருந்தாலும் கூட
அதன் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ். முன்நின்று
அமெரிக்க நேச உறவுக்கு கரம் நீட்டி இருக்கலாம்.

காங்கிரஸ் அரசு,
அமெரிக்காவுக்கு பரிபூர்ணமாய் போடத் தயங்கிய
'ராயல் சல்யூட்'டை
இனி பிஜேபி தாராளமாகப் போடுமென நம்பலாம்.

எல்லா அரசியல் பேரங்களும்
அரசியல் வட்டத்திற்குள்ளேயே திரைமறைவில் சாத்தியம்!

அடுத்த ஆட்சியை பி.ஜே.பி. அமைக்க
அமெரிக்காவே உதவ முன்வருவதென்பது...
எத்தனை பெரிய விசயம்!
பெரும் அதிர்ஷ்டமல்லவா அது!
சதாம் உசேனும், ஒசாமா பின் லேடன்
முதலான இன்னும் பல நாட்டு தலைவர்களும் கூட
அமெரிக்கா வலுவில் முன்வந்து செய்த உதவியினை
அப்படிதான் முதலில் நினைத்தார்கள்.

உலகின் பல திக்கிலும்
அமெரிக்கா நிகழ்த்தி கொண்டிருக்கும் அரசியலை
அறிந்தவர்கள் அறிவார்கள்
என் கூற்றின் உள்ளார்ந்த நிஜத்தை.

நம்புங்கள், நம்மைச் சுற்றி
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
என்னென்னவோ நடக்கிறது!
என்றாலும், தீர்மானமாக
சொல்ல முடியாமல் போவதென்பது
துரதிர்ஷ்டம்தான்.

*
எனக்குத் தெரிந்து...
பலம் கொண்ட / திறன் கொண்ட/
எதைப் பற்றியும் கவலைப்படாத/
நாலையும் யோசிக்கவும் செய்யாத/
தனது முடிவே இறுதியென
தான்தோன்றித்தனமாக செயல்பட்ட
பிரதமர் ஒருவர் இந்தியாவில் இருந்தார் என்றால்...
அது, இந்திரா காந்திதான்!

அசாத்திய திறன்,
அச்சமற்றத் தன்மை,
அதையொட்டிய துணிந்த செயல்பாடுகளென
பல தகுதிகள் கொண்ட அன்னை இந்திராதான்
நம் நாட்டில்
'எமர்ஜென்ஸி'யை அறிமுகப் படுத்தி,
செயல்படுத்தியும் காட்டினார்.

மொத்த இந்தியாவுமே அன்றைக்கு நடுங்கிய நடுக்கம்
முன் எப்பவும் நடுங்கி இருக்காது!
நான் இங்கே சொல்லியிருப்பது....
இந்தியாவை ஆண்ட
வெள்ளையன் காலத்தையும் சேர்த்து.

பங்களாதேஷை
பாகிஸ்தானில் இருந்து பிரித்தார்.
பாகிஸ்தானோடு ஒன்றுக்கு மேற்பட்டமுறை
யுத்தமும் செய்தார்.

உலக நாடுகளின் பிரச்சனைகளுக்காக
பல நாடுகளுக்கு
நம் ராணுவத்தை அனுப்பிவைத்தார்.

ஈழப் புரட்சியாளர்களுக்கு
இந்தியாவில் தங்கவைத்து ராணுவப் பயிற்சி அளித்தார்.

சுதந்திரம் பெற்ற போது
இந்தியா எழுதிக் கொடுத்த
ஒப்பந்தப் பத்திரங்களை கடாசிவிட்டு,
மன்னர்களுக்குரிய மானியங்களை ஒழித்தார்.

சீக்கியர்களின் புனிதத்தலமான
பொற்கோவிலுக்குள்
தடையின்றி ராணுவம் நுழைய உத்தரவிட்டார்.

இந்தியாவின் மூத்த தலைவர்களையெல்லாம்
சிறைப்படுத்தினார்!

மக்களின்
பேச்சுரிமை, எழுத்துரிமைகளை பறித்தார்.
அவர்களின் சுதந்திர செயல்பாடுகளை முடக்கினார்.

பத்திரிகைகளின் சுதந்திரத்தைப் பறித்து
அவைகளின்  வாயைப் பூட்டினார்.

சொந்தக் கட்சியை உடைத்தார்.
ஆட்சிக்கும் கட்சிக்கும் தானே தலைவரானார்
இப்படி இன்னும் எத்தனையோ
விசேச அட்டகாசங்கள்!

இப்படியான
துணிவுகள் பல கொண்ட, தன்னிச்சையாகவும் இயங்கிய,
பற்பல அரிய செயல்பாடுகளையும் நிகழ்த்திக் காட்டிய
இந்திரா காந்தி மாதிரியானதோர் பிரதமரையா
அமெரிக்காவும், பி.ஜே.பி.யும் விரும்புகிறார்கள்?
நிஜமாலுமே அந்த மாதிரியான பிரதமருக்காகவா இவர்கள் இந்த ஆர்வம் காட்டுகிறார்கள்?
இல்லை.... இல்லவே இல்லை.
சத்தியமாக இருக்காது.
ஒரு காலமும்...
அப்படி அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

குறிப்பாய்...
எமர்ஜென்ஸி காலங்களில்,
இந்த பி.ஜே.பி.காரர்கள் பலர்
சிறைக் கொடுமைகளுக்கு ஆளானவர்கள்!
அவர்களில் இன்னும் பலர்
வெளியே தலைகாட்ட இயலாது
மண் புழுவாய் மண்ணுக்குள் 
நொந்து நெளிந்தவர்கள்!

இன்றைக்கு அவர்கள்,
துரிதமாக செயல்படும் பிரதமர்
வேண்டுமென்பதற்காகவும்
தன்னிச்சையாக முடிவெடுக்கும் பிரதமர்
வேண்டுமென்பதற்காகவும்
விசும்புவதெல்லாம் பக்கா அரசியல் நாடகம்.
அதற்குத்தான்.., அமெரிக்கா
அலுக்காமல் கதை வசனம்
எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அப்படியொரு பிரதமர் இந்தியாவில் கொலுவீற்றால்...
இந்தியாவில் தழைத்து வரும் ஜனநாயகம்
படுகுழிக்குள் தள்ளப்படும் என்பதை
அமெரிக்கா அறிந்திருந்தும்
இப்படியான அரசியல் சூழ்ச்சிகளையும்
அதனை வெற்றி காண
நிகழ்த்தும் குயுக்தியான செயல்பாடுகளையும்
படு ஆர்வமாக
அது செய்து கொண்டிருப்பதென்பதைக் காண ஆச்சரியம்!

அப்போ...
அமெரிக்கா உலகம் முழுக்கவும்
பெருமை பேசும்
ஜனநாயக மதிப்பீடுகள் கொண்ட
பேச்செல்லாம் பொய்யா?
ஜனநாயக அமைப்புகளுக்கு
வக்காலத்து வாங்குவதென்பதும் கூட அரசியல்தானா?
தலைச் சுற்றுகிறதுடா சாமி!

'துரிதமான செயல்பாட்டு பிரதமர்'
'தனிச்சையான செயல்பாடுகள் கொண்ட பிரதமர்'
வேண்டும் என்று
மன்மோகனைச் சுட்டி பி.ஜே.பி. குரல் எழுப்புவதில்
நான் அறிந்து சில அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கிறது..

1. சோனியா இத்தாலியைச் சேர்ந்தவர்
அவர் இங்கே சூப்பர் பிரதமராக இருந்து செயல்படக் கூடாது.

2. ஒரு சமயம் மன்மோகன்
எதிர்க்கட்சி எதிர்பார்ப்பது மாதிரி இயங்கக் கூடுமெனில்
சோனியாவுக்கும் அவருக்கும் லடாய் ஏற்படலாம்.
அதையொட்டி சோனியா தனிமைப் படுத்தப்பட்டால்...
அதனையோர் அரசியல் ஆதாயமாக
பி.ஜே.பி. மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு.

அமெரிக்கா கூட்டிக் கழித்து போடும் கணக்கு வேறு.
அது பல நோக்குகளை கொண்டது.

*
பின்குறிப்பாக சில தகவல்கள்:

ஜனநாயக நெறிமுறைகளை
தனதென வகுத்துச் செயல்படும் ஓர் நாட்டில்...

மக்கள் கோரிக்கைகளை கட்சித் தலைவர்கள்
கட்டாயம் கேட்க வேண்டும்.

மாநில கட்சித் தலைவர்கள் சொல்வதை
பிரதான கட்சித் தலைவர் பரிசீலித்து ஏற்கவேண்டும்.

பிரதான கட்சித் தலைவர் சொல்வதை
பிரதமர் என்கிற ஆட்சித் தலைவர்
கேட்க வேண்டும். கேட்க வேண்டும் மட்டுமல்ல கேட்டே ஆக வேண்டும்!

பிரதமர்,
அப்படி தான் கேட்டதை
தனதின் கீழ் இயங்கும்
மந்திரிசபையில் வைத்துப் பரிசீலித்து, நிறைவேற்றி
அதிகாரிகளின் மூலம் அதை அமுல்படுத்த வேண்டும்.

இதுதான் ஓர் ஜனநாயக நாட்டின்
ஜனநாயக அமைப்புகளோடு இயங்கும்
கட்சி / ஆட்சி முறை.
இந்த மரபினை கட்டிக் காப்பதுதான்
ஜனநாயக விரும்பிகளின் தலையாய பணி.

இந்த மரபின் மாத்திரை குறையும் பட்சம்
அங்கே ஜனநாயகம் செத்துக் கொண்டு
இருப்பதாகவே அர்த்தம்.
தவிர, இன்னொரு புறம் மெல்ல சர்வாதிகாரம் தலைதூக்கவும் தூக்கும்.

கட்சித் தலைமைப் பதவியையும்
ஆட்சித் தலைமைப் பதவியையும்
ஒரே நேரத்தில் இந்திரா காந்தி
தன்னகப்படுத்தி செயல்பட்டதால் வந்த வினைதான்
அவர் காலத்தி அவர் தன்னிஸ்டத்திற்கு
அரங்கேறிய எமர்ஜென்சி
என்பதை
இங்கே மீண்டும் ஒருமுறை நினைவு கொள்ளுதல் வேண்டும்.

*

சோனியாவை கட்சித் தலைவராகப் பார்க்காமல்
தனிப்பட்ட இத்தாலி சோனியா சொல்வதாகவும்
இந்தியாவைச் சேர்ந்த பிரதமர்
கூச்சமற்று அதைக் கேட்டு இயங்குவதாகவும்
இதனை ஓர் கேவலம் என்பது போல
பி.ஜே.பி. ஆரம்பம் தொட்டு
பிரச்சாரம் செய்து வருகிறது.
யோசிக்கத் தெரிந்த எவராலும்
சகிக்க முடியாத அரசியல் இது.

இன்னொரு பக்கம்...
பி.ஜே.பி.யின் தாய் அமைப்பான
ஆர்.எஸ்.எஸ். கிழிக்கும் கோட்டை
பி.ஜே.பி.யில் எவர் ஒருவரும் தாண்ட முடியாது.
அதை மீறும் தைரியம்
அந்தக் கட்சியில் எவருக்குமில்லை.
இவர்கள்தான்
மன்மோகன்சிங் அவர்களை கரி பூசிப் பார்க்கிறார்கள்.

பி.ஜே.பி.காரர்களுக்கு
ஆர்.எஸ்.எஸ். என்பது 'சிண்டிகேட்' என்றால்...
காங்கிரஸ் அரசின்
தலைமைக்கும் (பிரதமருக்கும்) அவரது நிர்வாகத்திற்கும்
அவர்களது கட்சித் தலைமைதான்...
அதாவது.. சோனியாதான்.. 'சிண்டிகேட்'!

ஆக
சிண்டிகேட் எனப்படும் சோனியா சொல்வதை
பிரதம நிர்வாகமான மன்மோகன் சிங்
கேட்டே ஆகவேண்டும்.
தனிச்சையாகவோ,
எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ
ஓர் இந்திய பிரதமர் செயல்படக் கூடாது.
அது ஆகவும் ஆகாது.
அதுதான்
நமதின் ஜனநாயக ரீதியான
கட்சி - ஆட்சி நெறிமுறை.

*
கடைசி... கடைசியாக
மன்மோகன் அரசு செயல்படுகிறேன் என்று
சிலபல திட்டங்களோடு
பாராளுமன்ற ஒப்புதல்களுக்காக
தீர்மானத்தை முன் மொழிகிறபோதே
கத்தி கலாட்டா பண்ணி
மாதக் கணக்கில் பாராளுமன்றத்தை முடக்கும்
பி.ஜே.பி.....
பிரதமரின் தன்னிச்சையான துரிதமான
செயல்பாடுகளுக்காக ஏங்குவதென்பது
வேடிக்கையிலும் வேடிக்கை.
ஓர் முரண் நகை.

எனக்குத் தெரிந்து...
எம்.பி.களின் அதிகப்படியான
நிதி தொகைக் ஒதுக்கீட்டு பணத்திற்கும்/
அவர்களின் அநியாய சம்பள, பேட்டா, மற்றும்
இதர சலுகைகளின் கூடுதல் தொகைக்கான மசோதா
பாராளுமன்றத்தில் நிறைவேற்ற
கொண்டுவரும் தருணங்களில் மட்டும்தான்
பி.ஜே.பி.காரர்கள் பாராளுமன்றத்தை
முடக்க வில்லை என்றே அறிகிறேன்.

என்ன இந்தியாவோ...
என்ன அரசியலோ...

***


நன்றி : தாஜ் | http://www.tamilpukkal.blogspot.com/  | satajdeen@gmail.com
***

மேலும் ஒரு சுட்டி :

‘செயலற்ற பிரதமர்’ - கட்டுரை அல்ல... கட்டளை! : திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் / கீற்று

3 comments:

  1. மிகச் சரியான கணிப்பு;பிஜேபி-யின் கேம்ப்ளான் இதுதான். ஆனாலும் டாக்டர் மன்மோகன் சிங் இல்லையென்றால் ராகுலுக்கு வழி எளிதாகும் என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ற கேள்வி எழலாம். ராகுல் வரும்போது நடத்தப்போகும்(சோனியா வந்தபோது நடத்தியது போன்ற)கேம்ப்ளானும் தயார்தான்.

    பிஏ சங்மாவே தேவலைன்னு பண்ணிட்டாங்க இந்த பிஜேபி தலைவர்கள். ஒரு பத்திரிகைக் கட்டுரைக்கு இந்த அலப்பறையா? நம்ம பவர்ஸ்டார் எவ்வளவோ டீசன்ட்டாக்கும்.

    இதெல்லாம் இருக்கட்டும். ப.சிதம்பரம் ஒரு கேள்வி கேட்டார்; ஒரே ஒரு கேள்வி.

    2002ல் இதே டைம்ஸ் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தூங்கும் பிரதமர்-ங்கிற தொனியில் 'Asleep at The Wheel' னு தலைப்பிட்டு எழுதிய கட்டுரையையும் பிஜேபி தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா என்று கேட்டார். அதற்கு இவர்கள் பதில் சொல்லவே இல்லை.
    http://www.deccanherald.com/content/262985/cong-hits-back-bjp-over.html

    எப்படியும், எதை இழந்தும் ஆட்சியைப் பிடிக்க முயலும் அசிங்கத்தனம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இது கேவலமாக அவர்களுக்குத் தெரியாததும் அருவருப்பான உண்மை.

    (கருத்துக்கள் இந்த ஒருவிஷயம் பற்றியது. காங்கிரஸுக்கு வக்காலத்து அல்ல)

    ReplyDelete
  2. ஆபிதீன்,
    கதையில் வரும் எள்ளல் கட்டுரையிலும் வந்து கலக்குகிறது. ஒரு காலத்தில் அணிசேரா நாடுகளையெல்லாம் அலங்கரித்த பெருமை பாரத தேசத்திற்குண்டு. பாரதமென்றால் அண்ணாந்து பார்த்தோம். இன்று அப்படியல்ல. பச்சைச் சுயநலம். இலங்கையில் சீனாவைக் காட்டி பாரதப் பிரதமர் கூறிய வார்த்தைகள் கொஞ்சம் குமட்டலானது. அல்லாஹ்வைப் புரிந்து கொள்வதிலுள்ள அத்தனை இடர்பாடுகளும் அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்வதிலும் உண்டு. இங்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் வேறு வேறு அறிக்கைகளை எங்கள் அரசியல்வாதிகள் விடுவதற்கான பயிற்சிகளை பாரத தேசத்திலிருந்துதான் கற்றுக் கொண்டார்கள் போலும். பருப்பு, செத்தல் மிளகாய், பஜாஜ் முச்சக்கர வண்டி, பழைய காட் லுங்கி இத்தோடு இந்திய அரசியல்வாதிகளின் குணநலன்களையும் இறக்குமதி செய்து விட்டோம். இதைப்பற்றி புலம்புவதும் எழுதுவதும் வெட்கக் கேடு.
    அன்புடன்
    எஸ்.எல்.எம். ஹனீபா

    ReplyDelete
    Replies
    1. ஹனீஃபாகா...
      அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்திய
      அரசியல்வாதிகளை/ அவர்களின் செயல்பாடுகளை
      என் எழுத்தில் கண்டு
      நீங்கள் மிரண்டுவிட்ட மாதிரி தெரிகிறது.
      நான் என்னதான் எழுதினாலும்
      இதல்லாம் எங்களுக்கு சகஜமானதுதான்!
      இவர்களை
      எப்படி விமர்சனம் செய்தாலும்
      அவர்களின் கணுகால் அளவில் கூட
      அது போய் சேராது.
      அவர்களின் அத்தனை கிறுக்குத்தனமும்
      யாராலும் எவராலும்
      காலத்திற்கும் குறையாது.
      இந்த விளையாட்டு
      எங்களுக்குப் பழகிவிட்டது.
      இன்னும் கூட நாங்கள்
      உங்க நாட்டில் கிட்டாத
      கொஞ்சத்து சுதந்திர காற்றை
      சுவாசிக்கவே செய்கிறோம்!

      இன்றைக்கு
      உங்க நாட்டுக்கார அரசியல்வாதிகள்
      எங்கள் அரசியலையும் சேர்த்து
      இறக்குமதி செய்கிறார்களோ... என்றவொரு
      ஐய்யப்பாட்டை கிளப்பி இருக்கிறீர்கள்.
      உங்களது இக் கணிப்பை
      நான் மறுக்கப் போவதில்லை.
      ஆனால் பாருங்கள்...
      உங்கள் நாட்டு அரசியல்வாதியும்
      முன்னால் ஜனாதிபதியுமான
      ஜெயவர்த்தனாவை போன்ற
      ஓர் கூரிய கிரிமினல் அரசியல்வாதியை
      என் வயதில்
      வேறு எங்கும் நான் கண்டதில்லை.
      என் காலத்தில்...,
      இன்றையவறைக்கும்
      உலக அரசியலில்
      ஓர் அரசியல்வாதியைப் பார்த்து கணித்து மிரண்டேனென்றால்...
      அது ஜெயவர்த்தனாவிடம் மட்டும்தான்!
      இதனை காரண சார்ப்புடன் விளக்கணுமென்றால்...
      அது பெரியதோர் கட்டுரையாக போகும்.

      உலகில்
      எந்த சீதோசண சூழலிலும் வாழ
      மனிதன் கற்பது / பழகுவது எத்தனைக்கு அவசியமோ
      அத்தனைக்கு அவசியம்
      நாட்டின் கிறுக்குப்பிடித்த அரசியல் / அரசியல்வாதிகளோடும் வாழ கற்பதென்பது.
      உகந்த வேறு மார்க்கமும் இல்லை.

      ஹனிஃபாகா...
      நீங்களும் சிக்கிரம் பழகிக் கொள்ளுங்கள்...
      முடிந்தவரை
      உங்கள் மக்களுக்கும் கற்றுதாருங்கள்.
      என் கணிப்பில்
      இன்றைய பர்மா அராஜகம்
      சீக்கிரமே ஸ்ரீலங்காவிலும் அரங்கேறலாம்.
      -தாஜ்

      Delete