Saturday, June 23, 2012

ஷாஜஹான் கொடுத்த ஷவர்மா!

தமாஷைக் கேளுங்கள், இலங்கையைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஷாஜஹானின் கதையை அனுப்பிவைத்த ஹனீபாக்கா, கூடவே 'ஹாஜஹான் , தன் மனைவியுடன்' என்ற குறிப்போடு இந்த புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார்! அங்கேயும் 'இது' நடக்கிறதா?! சும்மா வெடைத்தேன், வேறு புகைப்படம் தனியாக வந்தது. அது இங்கே தேவையில்லை. கதையை மட்டும் பதிவிடலாம். அதற்கு முன் , என் குழப்பத்தைப் பார்த்துவிடுங்கள். இந்தப் பக்கங்களில் அவசியம் வெளியிடவேண்டும் என்று சில மாதங்களாக நான் தேடிக்கொண்டிருப்பது முற்போக்கு முகாமைச் சேர்ந்த (மத்தவங்க பிற்போக்கு அல்லது என்னைப்போல பொறம்போக்கு என்று அர்த்தம்) ஷாஜஹான். 'தற்காப்பு என்பது வாழ்வுரிமையோடு தொடர்புடையது'
என்ற கட்டுரை எழுதியவர் அவர்தானே? கருப்புப் பருத்தி? அப்ப, ஜித்தாவில் இருந்த ,  'சொர்க்கத்தின் காலடிகளில் " என்ற சிறுகதைத் தொகுப்பும்  விகடனில் வெளியான  "கனவுகள் காத்திருக்கின்றன " என்ற நாவலும் தந்த - சி ஜே ஷாஜஹான்  வேறா? தம்பி சென்ஷியிடமும் நண்பர் மஜீதிடமும் தேடச்சொன்னபோது கிடைத்ததோ வேறொரு முக்கியமான ஷாஜஹான். புதியவன் என்ற பெயரில் பிரமாதமாக எழுதுபவர். அப்புறம் லக்கி ஷாஜஹான் என்றொருவர் இருக்கிறார் இணையத்தில் . ஒரே குழப்பம் மும்தாஜுஊ...

ஒருவழியாக , நண்பர் மாதவராஜ் தயவில் , 'காட்டாறு' என்ற சிறுகதைத் தொகுதியைத் தந்த ஷாஜஹான்தான் நான் தேடிக்கொண்டிருப்பவர் என்று புரிந்துகொண்டேன்.நிச்சயம் இவராகத்தான் இருக்கும். இவருடைய சிறுகதை ஒன்று இலக்கியச் சிந்தனை பரிசுபெற்றதாகவும் அதை அசோகமித்திரன் தேர்ந்தெடுத்ததாகவும் எங்கோ படித்த நினைவு. தவறாக இருந்தால் திருத்துங்கள். தன்யனாவேன். சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருப்பது கிழக்கு பதிப்பகம் என்று வேறொருவர் சொல்லவே நம்ம ஹரன்பிரசன்னாவை முந்தாநாள் தொடர்பு கொண்டேன்.

யாருக்காவது சந்தேகம் இருந்தால் உடனே 'ஹபி'யைத்தான் தொடர்புகொள்ளவேண்டும். அதிகமாகிவிடும்! 'வம்சி புக்ஸ் வெளியிட்டிருப்பதாக கூகிள் சொல்கிறது. நான் தேடும் ஷாஜகான் இவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.' என்று மீண்டும் எழுதியதற்கு சும்மா இருக்க வேண்டாமா, இல்லையா?
'செங்கை ஆழியான் காட்டாறு என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கவிதா வெளியீடு. இது உங்களை குழப்புவதற்காக மட்டும். :>' என்று தகவல் கொடுத்திருக்கிறது ஃபேஸ்புக்கில். என்ன செய்யலாம் அந்த உருவத்தை?

என் குழப்பம் அப்படியே இருக்கட்டும், ஹனிபாக்காவும் உமா வரதராஜனும் போற்றும் இந்த ஷாஜஹானைப் படியுங்கள். 'ஈழத்து முஸ்லிம் தமிழ் சிறுகதை வரலாற்றில் பத்தாண்டுகளுக்கு ஒரு படைப்பாளி முகம் தருவது எங்கள் அதிர்ஷ்டமே. இந்தப் பத்தாண்டில் அவ்வாறு தரிசனம் தருபவர் ஷாஜஹான். ஷாஜஹான் (35) ஒரு நுண்கலைப் பட்டதாரி. ஆசிரியப் பணி புரிகிறார். ஆபிதீன் பக்க வாசகர்களுக்கு ஷாஜஹானின் முதல் கதையையே அறிமுகப்படுத்துவதில் ஆனந்தமடைகிறோம். தம்பி தாஜ், நல்ல கதை தங்கம், படித்து விட்டு ஒரு பின்னூட்டம் போடுங்களேன். ஷாஜஹான் உஷாராகட்டும்.' என்கிறார் ஹனீபாக்கா.

ஏற்கனவே வேறொரு இடத்தில் வெளியானதை எனக்கு ஏன் ஹனீபாக்கா அனுப்பிவைத்தார் என்று தெரியவில்லை. சரி, கண்ணீர் வரவழைக்கும் இந்த அரபுநாட்டு சபராளி கதையை அவசியம் படித்துப் பாருங்கள்.

மனைவியைத் தவிர திருப்பித் திருப்பி போடுறது மஹா தப்பு என்ற மாபெரும் கொள்கை முடிவின் காரணமாக (என் கதைகளையே இங்கே பதிவிடவில்லையே சார்...) சுட்டி மட்டும் தருகிறேன் :
http://rafifeathers.blogspot.ae/2012/08/blog-post.html
***
நன்றி : ஹனிபாக்கா, ஷாஜஹான்

2 comments:

  1. ஷவர்மா மிகவும் வசீகரம். ஷாஜகான் இன்னும் தருவார் என எதிர்பார்க்கலாம்.

    ஹனிபாக்கா........!ஜஸ்ட் க்ரேட்!!

    (AB: தோசை மெயின் ஐட்டம் திருப்பித் திருப்பிப் போடலாம்; ஷவர்மா சைடுஐட்டம் திருப்பிப் போடக்கூடாதுன்னுல்ல நான் நெனச்சிருந்தேன்...)

    ReplyDelete
  2. மொழியை இலகுவாக கையாளும் திறன்மிக்கவராக ஷாஜகான், தனது கதை முழுக்க அசகாயத் தனமாக விரிந்திருக்கிறார்! இக்கதை அவர் சார்ந்ததோ அல்லது அவர் உருவகப்படுத்துவதோ...எதுவொன்றாக இருப்பினும், உண்மையின் பக்கம் நின்று அவர் எழுதியிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. இந்தக் கதை முழுக்க முழுக்க யதார்த்தம் சார்ந்ததாகவே இருக்க, ஷாஜகான் விருபாததாலோ என்னவோ கதையினை கலைப் பின்னலாக காணவோ, நுட்பத்திற்குள் நுழையவோ அவர் இஸ்டப்படாதது தெரிகிறது.ஓர் நிஜத்தை அப்பட்டமாக காட்டமுனைந்த ஷாஜகான், குறைந்தப் பட்சம் அதனை கவிதையின் நிழலிலாவது நிழலாட விட்டிருக்க வேண்டும்.

    //இந்த இடத்தில் நான் சம்ரியாவை சந்தித்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் இந்தக்கதையை அவளிடமிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் என் குடும்பக் கதையெல்லாம் சொல்லி நேரத்தைப் போக்கடித்து விட்டேன்.//

    தன் வாழ்வின் நிஜத்தை சொல்லப்புகும் கதை வடிவங்களில், எழுதாளன் வரிசைக் கிரமமாக எதையும் விடமனமில்லாது சொல்லித் தீர்க்கத்தான் முனைவானே தவிர கதைக்குள் ஓர் கட்டுமான இருக்கத்தை காண மாட்டான். அவனால் முடியவும் முடியாது. இங்கேயும் அந்த வகை யதார்த்தம்தான் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட நாவலுக்கான சாத்தியக் கூறுகள் கொண்ட ஓர் சிறுகதை என்பது மூச்சுமுட்டவே வைக்கும். அந்த 'குறுகுறு' ஷாஜகானுக்கு இந்திருக்கிறது. அதனால்தான் மேலே கண்டப்படிக்கு அவரே ஒப்புதல் வாக்கு மூலம் தந்திருக்கிறார்.

    எதையுமே நேராக சொறுகுவதைவிட கொஞ்சம்போல சாய்த்து இறக்குவதுதான் பலமான பலனைத் தரும். தவிர, வாசகனின் யோசிப்பு தளத்தையும் எழுத்தாளன் குறைத்து மதிப்பிடவும் கூடாது. கதைக்குள் எழுத்தாளர்கள் செய்யும் நுட்ப வித்தைகளை அவன் உணரக் கூடியவனாகவே இருக்கிறான். அவனது இன்றையப் பார்வையில்..., நவீனத்தின் நவீனமே, நவீனம்.

    இல்லை இல்லையென்றாலும் யோசிப்பு ரீதியாக சில வித்தைகளை ஷாஜகான் நிகழ்த்தவே செய்திருக்கிறார். 'இந்தக்கதையை அவளிடமிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்' என்பது வித்தியாசமான முகமன். சம்ரியாவை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக் கொண்டே போய் அவளது சிதைந்த முகத்தை கோரமில்லாமல் காட்டுவதோர் அழகு! சம்ரியாவின் அண்ணனை கதை நாயகன் சந்திக்கக் கூடும் என்றே நினைக்கையில் சந்திக்காமலேயே போவது போன்ற யுக்திகள் மிக அழகாகவும் வந்திருக்கிறது. கதையில் வரும் அம்மா, அப்பா, மலையாள நண்பன், அரபிகளின் சின்ன வீட்டுகாரிகள் என்று எல்லோருமே குறைவான வரிகளில் நம்மில் பெரிய தாக்கம் கொள்கிறார்கள்.

    ஷாஜகான் அழகான ஓர் கதையை வாசிக்க அளித்தமைக்கு... நன்றியும். வாழ்த்துக்களும். தேர்வு செய்து எங்களுக்கு வாசிக்க உதவிய ஹனிஃபா காக்காவின் இலக்கிய சேவைக்கு தலைச் சாய்க்கும் என் என்றுமான நன்றி.

    ReplyDelete