Tuesday, May 29, 2012

ஜெண்டில்மேன் அப்துல் ஜப்பார்

'அண்ணாச்சி' என்று மாட்சிமை பொருந்திய துபாய் மன்னாரு ஷேக் முஹம்மதால் அழைக்கப்படும் - புரவலர்கள் பொரும வேண்டாம் -
பிரபல பதிவரான ஆசிப்மீரானிடமிருந்து முந்தாநாள் மெயில் : 'நல்லா இருக்கீகளா? வெயில் காலத்துல முட்டைங்க சீக்கிரம் கெட்டுப் போயிடுமாம். பார்த்து நடமாடுங்க :-))'.   ஏற்பாடு செய்துவிட்டு என்னா கரிசணை!

சிலமாதங்களுக்கு முன்பு ஆசிபிடம் கேட்டு வாங்கிய அவருடைய வாப்பாவின் புத்தகத்திலிருந்து டைப் செய்த  சில பக்கங்களை முடிக்க வேண்டுமே.. எழுத்தாளர்களை விட அவர்களின் வாப்பாக்களும் பிள்ளைகளும்தான் பிடிக்கும் என்று பந்தாவாக வேறு சொன்னோமே... எங்கே அந்த புத்தகம்? தேடு! ஆசிபுக்கு ரொம்பவும் கூர்மையான நகையுணர்வு. நண்பரோடு  சொங்கீதா ரெஸ்டாரண்ட்டில் உட்கார்ந்து சொகமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார். நண்பர் அங்கலாய்த்துக்கொண்டாராம் : 'சே, இங்க ரெண்டு அறிவுஜீவிங்க பேசிக்கிட்டிக்கிறோம். துபாயில யாருக்குமே தெரியமாட்டேங்குது'.  உடனே ஆசிப் சொல்லியிருக்கிறார்,  ' நான் இங்கே இருக்கேன். இன்னொரு ஆளு யாரு?!'. (நண்பரின் பெயர் அய்யனார் அல்ல!). எனக்கு எழுதவரவில்லை, ஆசிபிடம் கேட்டுப்பாருங்கள். ஜாலியாக  இருக்கும். எல்லாவற்றையும்விட தமாஷ் , அவர் எனக்கு 'சலாம்' சொல்லும் விதம். அமீரகமே அதிர்ந்துவிடும். ('சாத்தான்குளத்து' வேதத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறதாம்!).  நான் கேட்டிருந்த , அவரது வாப்பாவின் 'மாதர் தம்மை இழிவு செய்யும்.......' கட்டுரையை அனுப்பினார், 'உங்கள் கெட்ட நேரத்துக்கு அது கிடைத்து விட்டது' என்ற குறிப்புடன்! போதுமா கிண்டல்?  'பஞ்சவாடிப்பாலம்' போன்ற அற்புதமான மலையாள சினிமாக்களை அவரது பதிவுகளின் மூலம்தான் அறிந்துகொள்வேன்.

அமீரகத் தமிழ் மன்றத்து 'அண்ணாச்சி'யின் அன்பு வாப்பாவான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் 'காற்று வெளியினிலே' நூலிலிருந்து... - * முதற்பதிப்பு 2003 - எனக்குப் பிடித்த  பக்கங்களைப் (பக் : 41 to 45 ) பதிவிடுகிறேன் .   மட்டைப்பந்து வர்ணனையாளராக எனக்குத் தெரிந்த அப்துல் ஜப்பார் அவர்களின் இலங்கை வானொலித் தொடர்பு , அது குறித்த செய்திகள் எல்லாம் படு சுவாரஸ்யமாக இதில் சொல்லப்பட்டிருக்கிறது.  'உங்கள் அன்பு அறிவிப்பாளன்'  பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு இவர்தான் உந்துசக்தியாக இருந்தவர் என்றும் 'நுனிப்புல் மேய்ந்ததில்' அறிந்தேன்.  

'முற்றும் துறந்த முனிவருக்குக் கூட முக்தி என்கிற லாபநோக்கு உண்டு' என்று முதிர்ச்சியுடன் எழுதுகிற, காதர்பாட்சாவின் ஹார்மோனியத்தையும் நாஞ்சில் நாடனின் எழுத்தையும் குறிப்பிடுகிற இந்த வாப்பாவை , எனக்குப் பிடித்த இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ (இலக்கியப் போலிகளை தோலுரிப்பதால் 'எக்ஸ்போஸ்' என்று இவரை அழைக்கிறார் அப்துல் ஜப்பார். மகனே தேவலை! ) இழுத்துவந்து , தனது மித்ர பதிப்பகம் மூலம் காட்டியிருக்கிறார்.  இதைப் பதிவிடுவதற்கு காரணம், 'மந்தையை விட்டு வெளிவந்த முதல் ஆடு நான். என் ஒழுக்கத்தின் மீது சிறு கீறல் விழுந்தாலும் சமூக ரீதியாக என்னைக் குழிதோண்டி புதைத்து விடுவார்கள்' என்று அப்போதே ஜாக்கிரதையாக இருந்த அப்துல் ஜப்பார் அவர்களின் எழுத்தாற்றலைச் சொல்வது மட்டுமல்ல, கிட்டத்தட்ட அவர்கள் சந்தித்த அதே நிலை எனக்கும் விரைவில் வரப்போகிறது.  நதீம், நான் அப்போது ஜெண்டில்மேனாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். ஜஃபருல்லாநானா அட்வைஸ் செய்யாமலிருக்க வேண்டும்! - ஆபிதீன்

***


காற்று வெளியினிலே..

சாத்தான் குளம் அப்துல் ஜப்பார்

ஒருநாள் மாலை ஒரு 'பேர்த்டே' பார்ட்டிக்கு வருமாறு எனக்கும் (நண்பன்) மக்கீனுக்கும் சேர்த்துக் கடிதம் வந்தது. இருவரும் சென்றோம். வீட்டில் ஆள் ஆரவமே இல்லை. அந்தப் பெண் குறும்பாகச் சொன்னாள் 'பேர்த்டே பார்ட்டி இங்கல்ல, வேறோர் இடத்தில். குடும்பமே போய் இருக்கிறது. நான் மட்டும் தனியே, துணையாக இருக்கத்தான் வரச்சொல்லி எழுதினேன்' என்றபோது இனம் புரியாத ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். ஆனால் எதையோ புரிந்துகொண்டது போல், 'சரி இருவரும் பேசிக்கொண்டிருங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன்' என்று மக்கீன் நைசாக நழுவி விட்டான். ஒரு பெண்ணுடன் - அதிலும் என்னை மிகவும் நேசிக்கும் - நானும் விரும்பும் ஒரு பெண்ணுடன் - என் வாழ்நாளில் முதன் முறையாக யாருமில்லாத தனி வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறேன். இளமைத் துடிப்புடன் வாலிபத்தின் தலைவாயிலில் நிற்பவர்கள் நாங்கள், ஆனால் தவறான ஒரு பார்வையோ, பேச்சோ கூட இல்லை.

என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாகச் சொன்னாள். என்னை மணந்து வாழ விரும்புவதாக விருப்பம் தெரிவித்தாள். எனக்கும் அந்த விருப்பம்
இல்லாமல் இல்லை. என் நிலைமைகளை எடுத்துச் சொன்னேன். என்னைப் போலவே அவருக்கும் பல சகோதரிகள் என்பதை எடுத்துக் காட்டினேன்.
வெவ்வேறு மதம் - இனம், பொருளாதாரத்திலும் என்னை விட உயர்வானது அவர்களுடைய நிலை அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றை எடுத்துச் சொன்னபோது அழுத அழுகை என்னை குலுக்கியது. கண்ணீரைத் துடைத்துவிட்டேன் - கைக்குட்டையால். அப்போதுகூட அந்தப் பெண்ணைத் தொடவில்லை என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியாக இருக்கிறது. சப்தமில்லாமல் குமுறிக் குமுறி அழும் அந்தப் பெண் என் தோளில் அபயம் தேடினால்.. இக்கட்டான நிலை, ஆபத்பாந்தவனாக மக்கீன் வந்து சேர்ந்தான்.  உள்ளே சென்று அந்தப் பெண் முகம் கழுவி பவுடர் போட்டு சிரித்த முகமாக வெளியே வந்தாள். நாங்கள் விடை பெற்றோம்.

வரும் வழியில் மக்கீன் துருவ ஆரம்பித்தான். நூறு நீண்ட நிமிடங்கள் என்னென்னவெல்லாம் நடந்தனவோ  என்று அறிய வாலிபக் குறுகுறுப்புடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் அவன் இருக்கிறான் என்பது எனக்குப் புரிகிறது. என் மௌனமும் முகத்தில் படர்ந்துள்ள சோகமும் அவனை பொறுமை இழக்க வைக்கிறது என்பதையும்  புரிந்துகொண்டு நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொன்னேன். சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான். என் முன்னால் வந்து நின்று இரு கைகளையும் உயர்த்தி நீட்டி விரல்களால் என் தோள்களைப் பற்றிய வண்ணம்  என் முகத்தை கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னான். 'மச்சான் நீ ஒரு உலக மஹா ஜெண்டில் மேன்'. அந்தப் பாராட்டை கிரகித்து அதைப் புன்னகையாக முகத்தில் வெளிப்படுத்தும் முன்பு, முகத்தில் அடித்தாற்போல் அடுத்த வார்த்தைகள் உதிர்ந்தன. 'உலக மஹா பொண்ணையனும் நீதான்.' என் தோள்களை மாத்திரமல்ல, என்னையும்
விட்டு விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான்.
.....

தொடர்ந்து ஒரு நாடகம், நான் காதலன், ஃபிலோமினா சொலமன் காதலி, பிச்சையப்பா அவளைக் கைப்பிடிக்கும் கணவன். ஃபிலோமினா சீரியஸாக
இல்லாமல் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தார். 'உம்மை எப்படியப்பா காதலனாக நினைத்துக்கொண்டு நடிப்பது?' என்றவர் 'சானா கிட்ட சொல்லி
மாற்றச் சொல்லப்போகிறேன்' என்று அவர் கிளம்பும் முன்பு சானாவே உள்ளே வந்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் 'பிச்சையப்பாவை மட்டும் உம்மால் காதலனாக ஏற்றுக்கொள்ள முடியுமோ' என்று சற்று காட்டமாகவே தாட்சண்யம் இல்லாமல் கேட்டார். எனக்கே சங்கடமாகப் போய்விட்டது. ஃபிலோமினா முகம் கறுத்து, கண் கலங்கும் நிலைக்கு வந்துவிட்டார். பெண் என்றும் பார்க்காமல் சற்று ஓவராக 'சானா' பேசிவிட்டதாக நான் பிச்சையப்பாவிடம் சொன்னபோது, 'அவுக அப்பாவும் மகளும் போல, உட்டுடுங்கோ, ஆரம்ப காலத்திலே உரிமையோட செல்லமாக மண்டையில் கூடக் குட்டுவார். வெளையாட்டு சிரிப்பெல்லாம் நிண்ணு போச்சா, இப்பப் பாருங்க அந்தப் பொண்ணு பிச்சி உதறும்' என்றார் - மிக அனுபவ 'பாவத்துடன். அதுதான் நடந்தது. உலகத் தரத்தில் வைத்து எண்ணப்படவேண்டிய அந்த ஒப்பற்ற நடிகை அன்று சில அற்புத உச்சங்களை - உன்னதங்களை எட்டிப் பிடித்தார் - நடிப்பில்! நாடகம் முடிந்து பாராட்டும் பாவனையில் பேச்சை ஆரம்பித்தார் 'சானா' ஒன்டும் சொல்லவேண்டாம்' என்று சீறிவிட்டு செக்கை கூட வாங்க நிற்காமல் போய்விட்டார் , சகோதரி ஃபிலோ!

மறுநாள் அதிகாலை தொழுகைக்குப் பின் என்னைக் கண்ட மக்கீன் 'டேய் கிறுக்குப் பயலே.. ராத்திரி மூணு பேரும் பிச்சி உதறிட்டீங்கடா. அந்தப்
பொண்ணுகிட்டே என்னமா மன்றாடினே.. இழந்தபின் என்னமா துடிச்சே..பொம்பளைங்க அழுதுட்டாங்கடா..பின்னே எப்படிடா அன்னைக்கு மட்டும் அப்படி நடந்துகிட்டே?' என்றான். அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தவன்போல் உடனே பதில் சொன்னேன். 'நாடகத்தில் காதலியிடம் மன்றாடினேன். அவளை இழந்ததால் துடித்தேன். நிஜவாழ்க்கையில் மன்றாடவும் இல்லை. இழப்பும் இல்லை; துடிப்பும் இல்லை.' என்றேன். ஆனால் அது உண்மைதானா? நான் செய்தது சரிதானா? காதலை மதிக்கத் தெரியாமல் போய்விட்டதா? அல்லது ஏற்கத் துணிவில்லாது போய்விட்டதா? அல்லது ஒரு நடுத்தரக் குடும்பத்தின் பொறுப்புள்ள தலைமகனாக நடந்துகொண்டேனா? இன்றுவரை விடை தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் அடித்தளத்தில் மாறாத ஓர் ஊமை வேதனை இருந்துகொண்டே இருந்தது. இறைவனின் அருட்கொடைபோல் ஒரு நல்ல துணை வாய்க்கும்வரை - வாய்த்தாள்!

இன்று நினைத்துப் பார்க்கும்போது என்னை வியக்கவைக்கும் விஷயம் என்னவென்றால், சகோதரி ராஜேஸ்வரி, எழுத்தாளர் சி.சண்முகம், 'மாடசாமி' என். சோமசுந்தரம், மக்கீன், சகோதரி விசாலாட்சி, சகோதரர் பி.எச். என்று காதல் திருமணம் செய்துகொண்ட என் நண்பர்கள் பட்டியல் நீண்டது.

ஆனால் காலத்தின் கோலத்தைப் பாருங்கள். என் தலைமகன் என்னைப் பற்றி, தன் தாயைப் பற்றி, குடும்பம், ஊர், உலகம், ஜாதி, சமயம், ஏன் தேடிவந்த சீதன லட்சங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காதல் திருமணம் செய்துகொண்டிருக்கிறான்*. காதல் என்பது இளமைக்கு கூத்துக்களும் களியாட்டங்களும் என்றில்லாமல் , 'முப்பது நாள் மோகத்துக்கும் அறுபதுநாள் ஆசைக்குப் பிறகும் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது என்பதைப் புரிந்தே இதைச் செய்ய நினைக்கிறேன்' என்று அனுமதியுடன் ஆசியும் வேண்டி நின்றபோது  அதிர்ந்த நான், காரண காரியங்களை எண்ணிப்பார்த்தபோது சம்மதித்தேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைச் சக்கரம் ஒரு முழுச் சுற்று சுற்றி வந்துவிட்டது, இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது.

***


நன்றி : 'பதுருல் மில்லத்' அப்துல் ஜப்பார் அவர்கள், ஆசிப் மீரான், மித்ர பதிப்பகம்
***

படித்துவிட்டீர்களா? வாப்பாதான் ஜெண்டில்மேன்,  மகன் ஆசிப் அல்ல! ஆமாம், அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய 'தவ்பா' (பாவ மன்னிப்பு) என்னும்
பாடலின் MP3 வேண்டுமென்று பலநாளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். தரவே இல்லையே.. ;-)

சென்ஷி,  ஒரு பெண்ணுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் நம்ம  தாஜுக்கு நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். அந்தப்
பெண்ணை நினைத்து அழுகை வந்துவிடும். (கவிதைகள் சொல்லிக்கொண்டிருப்பார் என்று சொல்ல வருகிறேன்!).

சரி, சாக்கோடு சாக்காக ஆசிபுக்கு  ஒரு வேண்டுகோள். எழுதுங்கள். இலக்கியம் வளரட்டும் - அட்லீஸ்ட் அமீரகத்திலாவது.

இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லை, இருந்தாலும் கடைசியாக ஒன்று : 'அண்ணாச்சி' என்று என்னை அழைக்கும் எழுத்தாளர் ஃபிர்தொஸ் ராஜகுமாரன் ஃபேஸ்புக்கில் கேட்டார் என்னிடம் : 'இலக்கிய இதழ்களில் நீங்கள் எழுதாதற்குக் காரணம் என்ன?'

'இலக்கியம்தான் காரணம்' என்றேன்!

***

சில சுட்டிகள்...

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் - விக்கிப்பீடியா

சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் ~ இறைதூதர் முஹம்மத்' (மொழிபெயர்ப்பு நூல்)


சிந்திய பால்....! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

” யதார்த்தங்கள்...! “ - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

அமீரகத் தமிழ் மன்றத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உலகளாவிய கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளர். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி... (வீடியோ)

2 comments:

  1. //நதீம், நான் அப்போது ஜெண்டில்மேனாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்//

    ம்ஹ்ம். இதுல சந்தேகம் வேறயாக்கும்...

    //ஜஃபருல்லாநானா அட்வைஸ் செய்யாமலிருக்க வேண்டும்!//

    ம்ம் - இதுக்குச் சொல்லணும் “ஆமீன்”

    ReplyDelete
  2. "மாதர் தம்மை இழிவு செய்யும்...." கட்டுரை எவ்வளவு அருமையான மனிதர் திரு.அப்துல் ஜப்பார் அவர்கள் என்பதை காட்டுகிறது.

    அருமையான ஆளுமைகளை அறிமுகம் செய்யும் உங்கள் நல்லெண்ணம் பாராட்டத்தக்கது நானா!.

    ReplyDelete